
பட மூலாதாரம், Getty Images
திராவிடம் குறித்தும் தமிழ்நாட்டில் உள்ள கட்சிகள் குறித்தும் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி பேசியிருப்பது மீண்டும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. ஆளுநர் மீண்டும் மீண்டும் இப்படிப் பேசுவது ஏன்?
தற்போதைய தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி பல்வேறு நிகழ்ச்சிகளில் பேசும் கருத்துகள் அவ்வப்போது சர்ச்சையை ஏற்படுத்திவருகிறது. இப்போது இரு நாட்களுக்கு முன்பாக திருச்சியில் நடந்த ஒரு விழாவில் அவர் பேசிய பேச்சு, மறுபடியும் ஒரு பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
திருச்சியில் உள்ள தனியார் ஐ.ஏ.எஸ். பயிற்சி மையத்தின் சார்பில் மருது பாண்டியர்களின் நினைவு தினம் அக்டோபர் 23ஆம் தேதி நடைபெற்றது. இந்த விழாவில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி பங்கேற்றுப் பேசினார். திராவிட இயக்கம், இந்திய சுதந்திர இயக்கத்திற்கு எதிரானது என்பதையே அவரது பேச்சின் மையக் கருத்தாக இருந்தது.
“நான் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக தமிழ்நாட்டிற்கு வந்தபோது, தமிழகத்திலிருந்து சுதந்திரத்திற்குப் பாடுபட்ட வீரர்களின் பட்டியலைக் கேட்டேன். மாநில அரசிடமிருந்து வந்த பட்டியலில் 40க்கும் குறைவான பெயர்களே இருந்தன. அந்தப் பட்டியலில் மருது சகோதரர்களின் பெயர்கள் இல்லை. சிறிய மாநிலமான நாகாலாந்திலேயே ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுதந்திரப் போராட்ட வீரர்கள் இருந்தார்கள். ஆனால், எப்படி தமிழ்நாட்டில் மட்டும் குறைவாக இருக்க முடியும் என ஆராய்ந்தேன். அப்படி ஆராய்ந்தபோது பல ஆயிரம் சுதந்திரப் போராட்ட வீரர்கள் இருந்தார்கள்.
சிவகங்கை மாவட்டம்தான் சுதந்திரத்திற்கான சிந்தனையும் வீரர்களும் உருவான இடம். இந்த இடத்தில் மக்கள் கூடக்கூடாது என ஆணை பிறப்பிக்கப்படுகிறது. ஆகஸ்ட் 24 முதல் அக்டோபர் 31வரை இந்த ஆணை அமலில் இருக்கிறது. 2012ல், சில சட்டம் – ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டு சிலர் கொல்லப்பட்டார்கள். அதனால்தான், இந்த நாயகர்களை, அவர்களது தியாகத்தை ஒட்டுமொத்தமாக கொண்டாட தடை விதிக்கப்படுகிறது.

பட மூலாதாரம், TNDIPR
சட்டம் – ஒழுங்கு பிரச்சனை ஏற்படலாம். அந்த பதற்றத்தை குறைக்க வேண்டியது மாநில அரசின் கடமை. மாறாக, 11 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவத்திற்காக இப்போதும் தடை விதிக்கப்படுகிறது. எந்த ஒரு அரசியல் கட்சியின் தலைவர்களின் நினைவு நாளிலாவது இது போன்ற பிரச்னை ஏற்பட்டால், இப்படித் தடை விதிக்கப்படுமா? இல்லை.
ஆனால், சுதந்திரப் போராட்ட வீரர்கள் என்றால் இப்படிச் செய்யப்படுகிறது. இன்று இந்தத் தலைவர்கள் ஜாதி தலைவர்களாக சுருக்கப்பட்டிருப்பது வருத்தத்தை தருகிறது. எப்படி, ஏன்? இந்தத் தலைவர்களை மாநில அரசு கொண்டாடியிருந்தால் மக்களும் சேர்ந்து கொண்டாடியிருப்பார்கள். பள்ளி பாடப் புத்தகங்களில் அவர்களைப் பற்றி இல்லை.
இந்தியாவின் எந்த மாநிலத்திலும் மாணவர்கள் ஜாதிக் கயிறு அணிந்துகொண்டு பள்ளிக்கூடத்திற்கு சென்றதில்லை. சமூகம் ஜாதியாக பிரிந்துகிடக்கிறது. தேசிய தலைவர்கள் மறக்கப்பட்டுவிட்டார்கள். அவர்கள் ஏன் மக்களின் மனதிலிருந்து மறக்கடிக்கப்பட்டார்கள்? விடை எளிதானது.
சுதந்திரப் போராட்ட இயக்கத்தைப் பற்றி பேச இங்குள்ள ஆட்சியாளர்கள் பயப்படுகிறார்கள். வெட்கப்படுகிறார்கள். அதைப் பற்றிப் பேசினால், அவர்கள் அம்பலப்பட்டு போவார்கள். இவர்கள் இந்திய சுதந்திரத்திற்கு எதிராகப் பேசியவர்கள். இவர்கள் பிரிட்டிஷாருடன் சேர்ந்துகொண்டு சுந்திரத்திற்கு எதிராகச் செயல்பட்டவர்கள். ” என்று அவர் கூறினார்.

பட மூலாதாரம், Getty Images
மேலும் பேசிய அவர், “கடந்த ஆண்டு காந்தி பிறந்த நாள் வந்தபோது, அவருடைய புகைப்படக் கண்காட்சி நடத்தப்பட்டது. அவர் தமிழ்நாட்டிற்கு 18 முறை வந்திருக்கிறார். அவருடைய நிறைய புகைப்படங்கள் இருக்கின்றன. ஆனால், திராவிடத் தலைவர்களோடு ஒரு புகைப்படமும் இல்லை. அது அவர்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தியதால் இந்த ஆண்டு புகைப்பட கண்காட்சியே நடத்தப்படவில்லை.
மகாத்மா காந்தி, சர்தார் படேல், சுபாஷ் சந்திர போஸ், பகத் சிங் ஆகியோர் இங்கு பிறந்திருந்தால், அவர்களும் ஜாதித் தலைவர்களாக மாற்றப்பட்டிருப்பார்கள். அந்த நிலைதான் தமிழ்நாட்டில் இருக்கிறது. இதை ஏற்க முடியாது.
இந்த நிலத்தின் வரலாற்றை அழித்து வேறொரு வரலாற்றை எழுதும் முயற்சி நடக்கிறது. ஆரியம் – திராவிடம் என்ற இனவாத வரலாற்றை எழுதும் முயற்சி நடக்கிறது. இந்தக் கருத்தாக்கத்தின் தந்தை யார்? தென்னிந்திய மொழிகளின் ஒப்பிலக்கியத்தை எழுதியவர் ராபர்ட் கால்டுவெல்.
இவர் யார் தெரியுமா? 1813ல் இந்திய சார்ட்டர் சட்டத்தை பிரிட்டிஷ் அரசு உருவாக்கியது. அந்தச் சட்டத்தின்படி, இந்தியாவை கிறிஸ்தவமயமாக்குவதும் ஒரு நோக்கமாக இருந்தது. இதற்காக தன்னார்வலர்களைச் சேர்த்தார்கள். இதற்காக பள்ளிப் படிப்பை பாதியில் விட்டவர்களைச் சேர்த்தார்கள். அப்படி ஒருவர்தான் ராபர்ட் கால்டுவெல். அவர்தான் இலக்கணத்தை எழுதி, இது வேறு மொழி, அது வேறு மொழி என்றார்.
இது பிரிட்டிஷாரின் சதி. சுதந்திரப் போராட்டம் தீவிரமடைந்த போது அவர்கள் இங்கே கூட்டாளிகளைச் சேர்த்துக் கொண்டார்கள். இங்கே இப்போது வழிபடப்படுபவர்கள், லண்டனுக்குச் சென்று இந்தியாவுக்கு சுதந்திரம் கொடுக்கக் கூடாது என்றார்கள். சுதந்திரத்திற்கு எதிரான இயக்கம், ஆரிய – திராவிட பிரிவை வைத்து உருவாக்கப்பட்டது.
ஆகஸ்ட் 15ஆம் தேதியை கருப்பு நாளாக அனுஷ்டித்தார்கள். அதனால்தான் சுதந்திர இயக்கத்தைப் பற்றிப் பேசவே பயப்படுகிறார்கள்” என்றார்.

தமிழகம், தமிழ்நாடு சர்ச்சை
ஆளுநரின் இந்தப் பேச்சு சமூக வலைதளங்களில் விவாதத்தை எழுப்பியது. அவரது பேச்சு முழுவதும் திராவிட இயக்கத்தைப் பற்றியதாகவே இருந்ததால், எதிர்பார்த்ததைப் போலவே ஆளும் தி.மு.க. தரப்பிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர். பாலுவை வைத்து ஒரு பதில் அறிக்கை வெளியிடப்பட்டது.
“சட்ட முன்வடிவுகளுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டிய ஆளுநர் ஆர்.என்.ரவி தன் பொறுப்பை நிறைவேற்றாமல், மக்கள் வரிப்பணத்தில் ஊர்ஊராகச் சுற்றி, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிராகவும், தமிழ்நாட்டு மக்களின் உணர்வுக்கு எதிராகவும் தொடர்ந்து பேசி வருவது, அரசியல் சாசனத்திற்கு அவர் செய்கின்ற துரோகம்.
ஆளுநர் பொறுப்பேற்பவர்கள் அரசியல்வாதி போல செயல்படவோ பரப்புரை செய்யவோ மாட்டார்கள். அந்த மரபுக்கு மாறாக, அப்பட்டமான ஆர்.எஸ்.எஸ். பிரதிநிதியாக, ஒன்றிய பா.ஜ.க. அரசின் ஊதுகுழலாக ஆளுநர் ஆர்.என்.ரவி செயல்படுவதோடு, தமிழ்நாட்டின் பண்பாடு, வரலாறு, தமிழ்மொழியின் உயர்வு இவற்றுக்கு எதிராகத் தொடர்ந்து உளறிக் கொண்டிருக்கிறார்.
தமிழ்நாடு என்று சொல்லாதீர்கள், தமிழகம் என்றுதான் சொல்ல வேண்டும் என்று உளறினார். சமஸ்கிருதத்தை முன்வைத்து தமிழைப் பின் தள்ளினார். வேதங்களைப் பார்த்து திருக்குறள் எழுதப்பட்டதாகச் சொன்னார். எவ்வித ஆதாரமுமின்றி இப்படி பச்சைப் பொய்களைச் சொல்வதுடன், திராவிடம் என்ற கருத்தியல் பற்றி அவர் உளறிக் கொட்டுவது ஒவ்வொரு மேடையிலும் வழக்கமாக இருக்கிறது.
பா.ஜ.க. தலைவர்கள் எப்படி அன்றாடம் பொய் பேசி, வதந்தி பரப்புகிறார்களோ, அவர்களுக்குப் போட்டியாக, தமிழ்நாட்டின் பா.ஜ.க. தலைவராக வேண்டும் என்ற ஆசையில் ஆளுநரும் பொய்யாகவே பேசுகிறார்.
மருது பாண்டியர் உள்ளிட்ட தமிழ்நாட்டின் சுதந்திரப் போராட்டத் தியாகிகளின் வரலாற்றை சித்தரிக்கும் ஊர்திகளை டெல்லி குடியரசு தின விழா அணிவகுப்பில் சேர்க்க முடியாது என மறுத்து ஒன்றிய பா.ஜ.க. அரசு திருப்பி அனுப்பிய போது இந்த ஆளுநர் ரவி எங்கே போனார்? அலுவலகத்தில் தேசியக் கொடியையே ஏற்றாமல் இருந்த ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பிரச்சாரகராக பவனி வரும் ரவி தனது திருவாயை ஏன் அப்போது திறக்கவில்லை?
பா.ஜ.க.வின் ஊதுகுழலாகப் பச்சைப் பொய்களை மட்டுமே பேசும் ஆளுநர் ரவியின் அடிவயிற்று எரிச்சல், ‘திராவிடம்’ என்ற சொல். அந்த வயிற்றெரிச்சலில், திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணத்தை எழுதிய இராபர்ட் கால்டுவெல் அதிகம் படிக்காதவர் என்று விமர்சித்திருக்கிறார். ஆளுநர் ரவியின் பார்வைப்படி, அவர் பெருந்தலைவர் காமராசரையும் கொச்சைப்படுத்தி இருக்கிறார்.
திராவிட இயக்கம் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்குச் சாதகமாக இருந்தது என்று கூவுவது ஆளுநர் மாளிகையில் தயாரிக்கப்படும் உரைகளில் அடிக்கடி இடம்பெறுகிறது. பிரிட்டிஷ் ஆட்சியாளர்களிடம் மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்தவர்கள் யார், குடிஅரசு ஏட்டில் ‘இந்த ஆட்சி ஏன் ஒழிய வேண்டும்’ எனத் தலையங்கம் எழுதிச் சிறை சென்றவர்கள் யார் என்பதும் வரலாற்றுப் பக்கங்களைப் புரட்டினால் புரியும்” என டி.ஆர். பாலுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
அதேபோல முதலமைச்சர் மு.க. ஸ்டாலினும் “நஞ்சு தோய்ந்த எண்ணங்களோடு நயமாகப் பேசும் திடீர் குபீர் நாட்டுப் பற்றாளர்களின் வரலாற்றைத் தேசத் தந்தை காந்தியாரின் இறுதி நாட்கள் சொல்லும். இந்த கோட்சே கூட்டத்தைத்தான் மகாகவி பாரதியார் ‘நடிப்புச் சுதேசிகள்’ எனப் பாடினார்” என்று ஆளுநருக்குப் பதில் சொல்வதைப் போல அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

பட மூலாதாரம், @ANAMALAI_K TWITTER
ஆளுநர் பேச்சு பற்றிய பா.ஜ.க. கருத்து மாறுகிறது
ஆளுநரின் பேச்சு குறித்த பா.ஜ.கவின் மாநிலத் தலைமையின் கருத்தும் மாறியிருப்பது கவனிக்கத்தக்கதாக இருக்கிறது. கடந்த ஜூலை மாதம் செய்தியாளர்களிடம் பேசிய பா.ஜ.க. மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை, ஆளுநர் அரசியல் பேசக்கூடாது என்று குறிப்பிட்டார். “ஆளுநர் செய்தியாளர்களை சந்திக்கக் கூடாது, அரசியல் பேசக்கூடாது என்பதே எங்கள் நிலைப்பாடு. மத்தியில் ஆளும் கட்சியின் மாநில முதல்வராக நான் இருந்தாலும், அது தவறான முன்னுதாரணமாக அமையும் என்பதே எனது கருத்து” என்றார்.
ஆனால், இப்போது இந்த விவகாரம் சர்ச்சையாகியிருக்கும் நிலையில், ஆளுநருக்கு ஆதரவாகவே கருத்துகளை அண்ணாமலை தெரிவித்திருக்கிறார். இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தி.மு.க. அரசு எல்லாவற்றையும் சாதியாக மாற்றி வைத்திருக்கிறது. அதனால்தான் ஒவ்வொரு குரு பூஜைக்கும் செல்வது ஒரு போர்க்களத்துக்கு செல்வது போன்று உள்ளது. இப்படி தலைவர்களுக்கு சாதி முத்திரை குத்தி, சாதி கலவரம் ஏற்படும் நிலையை ஏற்படுத்தியது தி.மு.கதான். ஆளுநர் இப்படி கூறியதில் என்ன தவறு இருக்கிறது? தமிழகத்தைச் சேர்ந்த எத்தனை சுதந்திரப் போராட்ட வீரர்களின் பெயர்கள் பாடப் புத்தகத்தில் இருக்கிறது என்று தி.மு.க. அரசு ஒரு வெள்ளை அறிக்கை கொடுக்க வேண்டும்” என்று கூறியிருக்கிறார் அவர்.
ஆளுநரும் பா.ஜ.கவும் ஒன்றாக இணைந்திருக்கும் நிலையில், இந்த விவகாரத்தை தி.மு.க. சரியாக எதிர்கொள்ளவில்லை என்கிறார் மூத்த பத்திரிகையாளரான குபேந்திரன். “திராவிடக் கட்சிகள் சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு ஏதும் செய்யவில்லை எனப் பேசுகிறார் ஆளுநர். ஆனால், துரதிர்ஷ்டவசமாக தி.மு.க. ஆளும் கட்சியாக இருக்கிறது. ஆகவே அவர்கள் ஆளுநரை சரியாக கையாளவில்லை. இப்போது மு. கருணாநிதி முதலமைச்சராக இருந்திருந்தால், இதனை வேறு விதமாக எதிர்கொண்டிருப்பார். தினமும் போராட்டங்களை நடத்தியிருப்பார். ஆனால், இப்போது தி.மு.க. மிக மென்மையாக இதனை அணுகுகிறது. இது அக்கட்சிக்கு பாதகமாக முடியும்” என்கிறார் குபேந்திரன்.
“ஒரு திட்டத்தோடுதான் ஆளுநர் பேசுகிறார். தமிழ்நாட்டில் பா.ஜ.கவை அனைத்து மட்டங்களிலும் வளர்க்க ஆட்கள் இறக்கப்பட்டுள்ளனர். அந்தப் பணியில் பா.ஜ.க. மட்டுமல்லாமல், அரசு நிர்வாகம், ஆளுநர் ஆகிய எல்லோருக்கும் இணைந்து தி.மு.கவுக்கு நெருக்கடி கொடுக்கப்பார்க்கிறார்கள். ஜாதி பிரச்னைகளை ஏற்படுத்தி, அதில் ஏதாவது கலவரம் வெடிக்காதா என்று பார்க்கிறார் ஆளுநர்.
மருது பாண்டியர் நிகழ்வுக்கு தி.மு.க. ஆட்சியில் தடை விதிக்கப்பட்டதைப் போல பேசுகிறார். 2011ஆம் ஆண்டில் பரமக்குடியில் கலவரம் வெடித்து பலர் சுட்டுக்கொல்லப்பட்டார்கள். தேவர் குரு பூஜை நிகழ்ச்சியிலும் கலவரம் வெடித்தது. அதற்கு அடுத்த ஆண்டில், மருது பாண்டியர் குரு பூஜை நிகழ்ச்சியிலும் கலவரம் வெடித்ததை ஒட்டி, பல கட்டுப்பாடுகளை அரசு விதித்தது. 11 ஆண்டுகளுக்கு முன்பு ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது இந்தக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அந்தக் கட்டுப்பாடுகளை நேற்று விதிக்கப்பட்டதைப் போல பேசுவது சரியல்ல” என்கிறார் அவர்.
சர்ச்சையாகும் ஆளுநர் ஆர்.என். ரவியின் பேச்சுகள்
ஆர்.என். ரவி தமிழ்நாட்டின் ஆளுநராகப் பொறுப்பேற்ற பிறகு, இது போலப் பேசுவது, அந்தப் பேச்சு சர்சையாவதும் தொடர்ந்து நடந்து வருகிறது.
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் 22ஆவது பட்டமளிப்பு விழாவில் பேசியபோது, பிறரை பின்னுக்குத் தள்ளிவிட்டு பலன்களை ஓரங்கட்டச் செய்த சில அறிவுஜீவிகள் கடைப்பிடித்த முந்தைய வளர்ச்சி மாடலை `டார்வீனியன் மாடல்’ என்று அழைத்தார். ஒரு சில மாநிலங்கள் மட்டும் வளர்வது நாட்டுக்கு நல்லதல்ல என்றும் பேசினார். ஆளுநர் ஒரு சில மாநிலங்கள் என்று குறிப்பிடுவது தமிழ்நாட்டைத்தான் குறிப்பிடுகிறது என, அவருடைய பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியது.
அதே ஆண்டு மே மாதம், பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியாவை பயங்கரவாத இயக்கம் என்று குறிப்பிட்டது பெரும் சர்ச்சையானது. அதற்கு இஸ்லாமிய அமைப்புகள் கடும் கண்டனத்தைத் தெரிவித்தன.
அதே ஆண்டு ஜூன் மாதம் அவர் சென்னையில் ராமகிருஷ்ண மடம் சார்பில் நடந்த நிகழ்ச்சியில் பேசியபோது, ஒரு கடவுளை மட்டுமே வணங்க வேண்டும் என்பது சனாதன தர்மம் இல்லை என்று கூறினார். அதற்கான விளக்கத்தையும் அவர் கொடுத்தார். இதுவும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
பிறகு, அதே ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ஜி.யு. போப் மொழி பெயர்த்த திருக்குறள் குறித்தும் திருவள்ளுவர் குறித்தும் அவர் பேசிய பேச்சுகள்பெரும் விவாதத்தை ஏற்படுத்தின.
இதற்குப் பிறகு இந்த ஆண்டு ஜனவரி மாதம், காசி தமிழ்ச் சங்ககம் தொடர்பான ஒரு நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர், தமிழ்நாடு என்ற பெயருக்கு பதில் தமிழகம் என்பதே சரியாக இருக்கும் என்றும், ஆங்கிலேயர்கள் காலத்தில்தான் மாநிலங்கள் உருவாக்கப்பட்டன என்பதால் பாரதத்தின் பகுதி தமிழகம் என்பதுதான் சரி என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கூறினார். இதுவும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பிறகு, இதற்கு ஆளுநர் மாளிகையிலிருந்து விளக்கம் அளிக்கப்பட்டு சர்ச்சை முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது.
இந்த ஆண்டின் துவக்கத்தில் தமிழ்நாடு சட்டப்பேரவையில், ஆளுநர் உரையை வாசிக்கும்போது சில பகுதிகளைத் தவிர்த்துவிட்டு வாசித்தது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அதற்கு எதிராக முதலமைச்சர் ஒரு பதிலுரையை வாசித்தார்.
இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆளுநர் மாளிகையில் நடந்த Think to Dare என்ற நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர் ஆர்.என். ரவி, “நீட் தேர்வுக்கு எதிரான மசோதாவுக்கு ஒருபோதும் ஒப்புதல் அளிக்க மாட்டேன். அறிவில் பிரகாசமான நமது மக்கள் அறிவுசார் குறைபாடு கொண்டவர்களாக உணர்வதை நான் விரும்பவில்லை” என்று குறிப்பிட்டார். இந்த விழாவில் பங்கேற்றுப் பேசிய, அம்மாசையப்பன் என்பவரை அங்கிருந்த தனியார் பயிற்சிப் பள்ளி நிர்வாகிகள் மிரட்டியதாகவும் புகார் எழுந்தது.
2012ல் சிவகங்கையில் நடந்தது என்ன?
2012ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் மருதுபாண்டியர் குரு பூஜை தினத்தின்போது சிவகங்கை மாவட்டம் வேம்பத்தூரில் இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டு அதில் ஒரு போலீஸ் உதவி ஆய்வாளர் கொல்லப்பட்டார்.
சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த செல்லப்பாண்டி என்பவர் மருதுபாண்டியர் குருபூஜையையொட்டி அருகில் உள்ள புதுக்குளம் கிராம பேருந்து நிறுத்தத்தில் மருதுபாண்டியர் படத்தை வைத்து மாலை அணிவித்திருந்தார்.
அப்போது அந்தப் பகுதியைச் சேர்ந்த பிரபு, பாரதி, குமார் ஆகியோருக்கும் செல்லப்பாண்டிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றியதில் திடீரென பிரபுவும் அவருடன் வந்தவர்களும் செல்லப்பாண்டியை கத்தியால் குத்தி விட்டு அங்கிருந்து காரில் தப்பினர்.
காயம் அடைந்த செல்லப்பாண்டி, அந்த பகுதியில் பாதுகாப்புக்கு நின்ற மானாமதுரை டி.எஸ்.பி. கருணாநிதியிடம் புகார் செய்தார். இதையடுத்து பிரபுவை பிடிப்பதற்காக டி.எஸ்.பி. கருணாநிதி, திருப்பாச்சேத்தி ஆய்வாளர் விஜயகுமார், உதவி ஆய்வாளர் ஆல்வின் சுதன், ஏட்டுகள் சிவகுமார், கர்ணன் ஆகியோர் புதுக்குளம் சென்றனர்.
ஆனால், அதற்குள் பிரபு தரப்பினர் அருகில் உள்ள வேம்பத்தூருக்கு சென்றுவிட்டனர். அங்கே ஒரு காரில் பிரபுவும், அவருடன் வந்தவர்களும் இருந்ததைப் பார்த்த காவல்துறையினர் அவர்களை பிடிக்க முயன்றனர்.
அப்போது பிரபுவும் அவருடன் இருந்தவர்களும் காவல்துறையினரைத் தாக்கினர். இதில் உதவி ஆய்வாளர் ஆல்வின் சுதன், தலைமைக் காவலர்கள் சிவகுமார், கர்ணன் ஆகியோர் கத்தியால் குத்துப்பட்டனர். இதில் ஆல்வின் சுதன் இறந்துபோனார்.
இதற்குப் பிறகு இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய பிரபுவும் பாரதியும் காவல்துறையினரால் மானாமதுரை தீர்த்தான் பேட்டை அருகே சுட்டுக்கொல்லப்பட்டனர்.
இந்தச் சம்பவத்திற்குப் பிறகு, மருதுபாண்டியர் குரு பூஜை நிகழ்வை ஒட்டி சிவகங்கை மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்