இந்தியாவே வேண்டாம் என்று பாகிஸ்தானில் தஞ்சம் கேட்ட தந்தை, மகன் – என்ன நடந்தது?

இந்தியாவே வேண்டாம் என்று பாகிஸ்தானில் தஞ்சம் கேட்ட தந்தை, மகன் - என்ன நடந்தது?

அடைக்கலம் தேடி வந்த இரண்டு இந்திய குடிமக்கள்

பட மூலாதாரம், SHUMAILA KHAN

படக்குறிப்பு,

முகமது ஹஸ்னைன் மற்றும் அவரது மகன் இஷாக் அமீர் ஆகியோர் சட்டவிரோதமாக பாகிஸ்தானுக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர்.

இந்தியாவை சேர்ந்த அரசியல் மற்றும் சமூக ஆர்வலர் முகமது ஹஸ்னைன், இந்த வாரம் தனது மகன் இஷாக் அமீர் என்பவருடன் பாகிஸ்தானுக்கு அடைக்கலம் தேடி வந்தார். அவர் ஆப்கானிஸ்தான் வழியாக சட்டவிரோதமாக கராச்சி சென்றடைந்துள்ளார்.

அவர் இந்தியாவில் ‘மத வெறுப்பு மற்றும் துன்புறுத்தலை’ எதிர்கொள்கிறார் என்றும், திரும்பிச் செல்வதைவிட பாகிஸ்தானில் ‘இறப்பதே சிறந்தது அல்லது சிறையில் இருப்பேன்’ என்றும் அவர் அறிவித்துள்ளார்.

இந்த இரண்டு இந்திய குடிமக்களும் கராச்சியில் உள்ள எதி இல்லத்தில் வசித்து வருகின்றனர். அவர்கள் இருவரும் அந்த இல்லத்தை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளது மற்றும் அவர்களைக் கண்காணிக்க இரண்டு போலீஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அறுபத்தி ஆறு வயதான முகமது ஹஸ்னைன் மற்றும் 31 வயதான இஷாக் அமீர் இருவரும் பிபிசியிடம் பேசுகையில், இந்த ஆண்டு செப்டம்பர் 5ஆம் தேதி டெல்லியில் இருந்து அபுதாபிக்கு சென்று அங்கிருந்து விசா பெற்று ஆப்கானிஸ்தானுக்கு சென்றதாகத் தெரிவித்தார்.

பின்னர் அங்கிருந்து அவர்கள் இருவரும் காபூலை அடைந்துள்ளனர். அங்கிருந்து காந்தஹாரில் உள்ள ஸ்பின் போல்டாக் சென்று, சிலருக்கு பணம் கொடுத்து அவர்களிடம் உதவிபெற்று சட்டவிரோதமாக அவர்கள் பாகிஸ்தானுக்குள் நுழைந்துள்ளனர்.

சமானில் இருந்து குவெட்டாவுக்கு பத்தாயிரம் ரூபாய்க்கு டாக்சி பிடித்து, ஐம்பதாயிரம் ரூபாய்க்கு அதே டாக்ஸியை செலுத்தி குவெட்டாவிலிருந்து கராச்சியை அடைந்தோம் என்றார் முகமது ஹஸ்னைன்.

அவர் கூறியபடி, ஹோட்டலில் தங்க இடம் கிடைக்காத நிலையில், அவரே காவல்துறை அதிகாரிகளைச் சந்தித்து தனது கதையைச் சொல்லி, எல்லை தாண்டியதாகக் குற்றம் சாட்டப்பட்டு, பின்னர் அடைக்கலம் கோரினார்.

மேலும், போலீசாரே அவரை எதி சென்டருக்கு அழைத்துச் சென்றதாகவும் கூறினார்.

முகமது ஹஸ்னைன் இந்தியாவில் பத்திரிகைத் தொழிலுடன் தொடர்புடையவர் என்றும், டெல்லியில் இருந்து எட்டு பக்க வாராந்திர செய்தித்தாள் ‘சார்ஜ்ஷீட்’ வெளியிடுவது வழக்கம் என்றும், அதன் பெயர் பின்னர் ‘தி மீடியா ப்ரொஃபைல்’ என மாற்றப்பட்டது என்றும் கூறினார்.

இந்தியாவில் எங்கே தொடர்பு?

முகமது ஹஸ்னைன் 1957ஆம் ஆண்டு ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள ஜாம்ஷெட்பூரில் பிறந்தார். ஆனால் அவர் கடந்த பல ஆண்டுகளாக டெல்லியில் வசித்து வந்ததாகக் கூறுகிறார்.

அவர் 1989ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட நிலையில், நான்கரை ஆண்டுகளில் அந்த திருமணம் முடிவுக்கு வந்தது. திருமண உறவின் மூலம் இரண்டு மகன்கள் பிறந்தனர். அதில் ஒரு குழந்தை உயிரிழந்துவிட்டது. தற்போது, இன்னொருவரான இஷாக் அமீர் ஒருவர் மட்டும் அவரது மகனாக உள்ளார்.

முகமது ஹஸ்னைனுக்கு ஜெய்புன்னிசா மற்றும் கௌசர் என்ற இரு சகோதரிகள் உள்ளனர். மூத்த சகோதரி ஜைபுன்னிசா அவரைவிட 21 வயது மூத்தவர். அவர் ஜார்கண்டில் வசிக்கிறார். இளைய சகோதரி கவுசர், லக்னோவில் வசிக்கிறார்.

முப்பத்தொரு வயதான இஷாக் அமீர் கூறுகையில், தான் மதரஸாவுக்கு சென்று அங்கு குர்ஆனை ஓதவும் மனப்பாடம் செய்யவும் கற்றுக்கொண்டதாகத் தெரிவித்தார். அவர் ஒரு ஆலிம்-இ-தின் (மத அறிஞர்) அல்லது வழக்கறிஞர் ஆக வேண்டும் என்று அவரது தந்தை விரும்பினார் என்றும், அவர் தனது வாழ்நாளில் எந்தப் பள்ளிக்கும் சென்றதில்லை என்றும் கூறினார். இருப்பினும், திறந்தநிலைக் கல்வி மூலம் டெல்லியில் உள்ள நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஓபன் ஸ்கூலில் (NIOS) படித்து 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் தேர்ச்சி பெற்றார்.

இஷாக்கின் கூற்றுப்படி, அவர் 2014 முதல் 2019 வரை டீன் பிராட்பேண்ட் என்ற பெயரில் ஒரு நிறுவனத்தில் பணியாற்றினார். அவர் தொழில்துறை பாதுகாப்பு மேலாண்மையில் டிப்ளமோ படித்துள்ளார், மேலும் துபாயில் உள்ள ஒரு நிறுவனத்தில் ஏப்ரல் 2021 முதல் அக்டோபர் 15, 2021 வரை சுமார் ஆறு மாதங்கள் வரை பாதுகாப்பு ஆய்வாளராகவும் பணியாற்றினார். 2021இல் இந்தியாவுக்குத் திரும்பிய பிறகு, NIGO இன்டர்நேஷனல் ஜெனரல் சர்டிபிகேட் படிப்பையும் படித்தார்.

ஒரு அபுதாபி நிறுவனம் தனக்கு நான்காயிரம் திர்ஹாம் சம்பளம் வழங்குவதாகவும், செப்டம்பர் 10, 2023 அன்று வேலையைத் தொடங்குவதாகவும் இஷாக் அமீர் கூறினார். ஆனால் அவரைப் பொறுத்தவரை, “நாங்கள் ஹிஜ்ரத் (இந்தியாவை விட்டு வெளியேற) ஒரு முழுமையான திட்டத்தை உருவாக்கியிருந்தோம்,” என்றார்.

“இந்த நாட்டிலேயே இருக்க வேண்டாம் என முடிவெடுத்து நாங்கள் செப்டெம்பர் 5ஆம் தேதி டிக்கெட் புக் செய்துவிட்டோம். அபுதாபி சென்று அங்கிருந்து ஆப்கானிஸ்தான் சென்று பார்க்கலாம். ஏதாவது நடக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது.”

அடைக்கலம் தேடி வந்த இரண்டு இந்திய குடிமக்கள்
படக்குறிப்பு,

தேர்தலில் போட்டியிட முஹம்மது ஹஸ்னைன் சமர்பித்த சத்திய பிரமாணம்.

பரபரப்பு சுவரொட்டிகளை ஒட்டியதாக குற்றச்சாட்டு

முஹம்மது ஹஸ்னைன், எம்.ஹஸ்னைன் என்ற பெயரில் எழுதி வருகிறார். அவர் கூறுகையில், டெல்லியில் ‘தி மீடியா ப்ரொஃபைல்’ என்ற தனது வாராந்திர செய்தித்தாளை வெளியிடுவதோடு, பயிற்சி மையத்தையும் நடத்தி வந்திருக்கிறார். இதில் இளைஞர்களுக்கு ஆங்கில மொழியைக் கற்றுக் கொடுத்து அவர்களை சட்டக் கல்விக்கு தயார்படுத்தி வந்திருக்கிறார்.

இதனால்தான் அவர் தனது மகன் இஷாக் அமீர் வழக்கறிஞராக வேண்டும் என்று விரும்பினார். ஆனால் அது நடக்கவில்லை.

முகமது ஹஸ்னைன் தன்னை ஒரு சமூக மற்றும் அரசியல் சேவகர் என்றும் கூறிக்கொள்கிறார். மேலும், நாடாளுமன்றம், சட்டமன்றம் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல்களில் போட்டியிட்டாலும், எங்கும் வெற்றி பெற முடியவில்லை. அந்தக் காலக்கட்டத்தில், அவர் மீது ஆத்திரமூட்டும் சுவரொட்டிகளை ஒட்டியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு உட்பட சில வழக்குகளும் அவர் மீது பதியப்பட்டதாகத் தகவல் உள்ளது.

முகமது ஹஸ்னைன் மற்றும் இஷாக் அமீர் ஆகியோரின் கூற்றுப்படி, அவர் கடந்த பதினைந்து இருபது ஆண்டுகளாக டெல்லியின் ஜாஃப்ராபாத் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தார். மேலும் அவர் கடைசியாக வசித்த இடம் கவுதம்புரியில் இருந்தது எனத் தெரிய வருகிறது.

“இந்தியாவில் தெரிந்தவர்கள் ஆச்சரியப்படுகிறார்கள்”

அடைக்கலம் தேடி வந்த இரண்டு இந்திய குடிமக்கள்
படக்குறிப்பு,

பரபரப்பு சுவரொட்டி ஒட்டியதாக முஹம்மது ஹஸ்னைன் மீது குற்றச்சாட்டு எழுந்தது.

பிபிசியிடம் பேசுகையில், இந்தியாவில் அவர்களுடைய நண்பர்கள் இந்த இருவரும் பாகிஸ்தானுக்கு செல்வது குறித்து ஆச்சரியம் தெரிவித்தனர் என்றனர். தான் பாகிஸ்தானுக்கு சென்ற செய்தி பின்னர் ஊடகங்களில் வெளியானதாகவும் அவர் கூறுகிறார்.

எம்.எம்.ஹஷ்மி தன்னை முகமது ஹஸ்னைனின் வழக்கறிஞர் என்று அழைத்துக் கொள்கிறார். பாகிஸ்தான் செல்வது குறித்து தனக்கும் எந்தத் தகவலும் இல்லை என்று ஹஷ்மி கூறுகிறார்.

அதற்கு அவர், “நான் அவருடைய வழக்கறிஞர். எனக்கு தெரிந்ததெல்லாம் அவர் தனது மகனை வேலைக்காக துபாய்க்கு அழைத்துச் சென்றுள்ளார் என்பது மட்டும்தான். அதன் பிறகு எனக்கு எதுவும் தெரியாது. செய்தி வந்ததும்தான் எனக்குத் தெரிய வந்தது,” என்றார்.

பாகிஸ்தானுக்கு செல்வதற்கு முன் அவர் வாழ்ந்த வீட்டுக்கு அருகில் வசிப்பவர்கள்கூட இந்தத் தகவலைக் கேட்டு மிகவும் ஆச்சரியப்படுகின்றனர். ஹஸ்னைனை பற்றி ஊடகங்களும் காவல்துறையினரும் வந்து கேட்டபோதுதான், ​​அவர் பாகிஸ்தானுக்கு சென்றது தங்களுக்குத் தெரிந்ததாக அவர்கள் கூறுகின்றனர்.

பக்கத்து வீட்டுக்காரர் ஒருவர், “அவருடைய மகனுக்கு துபாயில் வேலை கிடைத்திருப்பதாகச் சொன்னார். அவர் அங்கே சென்றிருக்கிறார். இன்னும் பத்து நாட்களில் திரும்பி வந்துவிடுவார்” என்றார்.

முகமது ஹஸ்னைன் பெரும்பாலும் தனியாகவும் அமைதியாகவும் வாழ்ந்ததாக அவரது வீட்டு உரிமையாளர் மற்றும் அண்டை வீட்டினர்கள் தெரிவிக்கின்றனர். “யாராவது அவருக்கு வணக்கம் சொன்னால் அவர் பதிலளிப்பார் என்பதைத் தவிர அவர் வேறு யாருடனும் நெருங்கிப் பழகவில்லை”

கடந்த 2017ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளூராட்சி தேர்தலில் ஹஸ்னைன் தொடங்கிய அரசியல் கட்சியின் ஆதரவுடன் தான் போட்டியிட்டதாகக் கூறும் உள்ளூர் தலைவர் ஒருவர், அவர் பாகிஸ்தான் சென்றது தனக்கும் செய்தித்தாள் மூலமாகத்தான் தெரிய வந்ததாகக் கூறுகிறார்.

“அவர் வெளியேறியதால் நாங்களே அதிர்ச்சியடைந்தோம்” என்கிறார்.

தேர்தலில் போட்டியிட்டதில் இருந்து ஹஸ்னைனுடன் தனக்கு நெருங்கிய தொடர்பு எதுவும் இல்லை என்றும், ஆனால் சமீபத்தில் அவருடன் ஒரு சிறிது நேர சந்திப்பை மேற்கொண்டதாகவும் அவர் கூறுகிறார்.

நிதிப் பற்றாக்குறையால் அவரது பத்திரிகையும் சுமார் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு மூடப்பட்டதை உள்ளூர் தலைவர் உறுதிப்படுத்தினார்.

ஹஸ்னைனின் அரசியல் கட்சி அலுவலகமும் சில ஆண்டுகளுக்கு முன்பே மூடப்பட்டதாக அப்பகுதி மக்கள் சிலர் தெரிவிக்கின்றனர்.

தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்கப்பட்ட முகவரியில் உள்ள கட்சியின் பெயரையும், அவர்களின் பத்திரிகையின் பழைய பெயரின் பேனரையும் ‘கூகுள் ஸ்ட்ரீட் வியூ’வில் காணலாம்.

ஃபேஸ்புக்கில் கிடைக்கும் உருது மற்றும் ஹிந்தி மொழிகளில் வெளியான அவரது வாரப் பத்திரிகையின் பக்கங்களின் பிரதிகள், இந்தியாவில் உள்ள முஸ்லிம்களின் குறைகளையும் வேதனைகளையும் எடுத்துக்காட்டுகின்றன.

அடைக்கலம் தேடி வந்த இரண்டு இந்திய குடிமக்கள்
படக்குறிப்பு,

ஒரு வீடியோவில், முகமது ஹஸ்னைன் ‘மகேஷ் பட் உடன் மும்பை வகுப்புவாத முகங்கள்’ என்ற நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். இந்த வீடியோ எட்டு ஆண்டுகளுக்கு முன்பு The Media Profile இன் YouTube சேனலில் வெளியிடப்பட்டது.

“பலமுறை தேர்தலில் போட்டியிட்டார்”

அவர் 2013 டெல்லி சட்டமன்றம் ( சீலம்பூர் தொகுதி ) மற்றும் 2014 நாடாளுமன்றத் தேர்தல்களில் (வடகிழக்கு டெல்லியிலிருந்து சுயேட்சை வேட்பாளராக) போட்டியிட்டது தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்கப்பட்ட பிரமாணப் பத்திரத்தில் இருந்து தெளிவாகிறது. இதில் அவர் 571 மற்றும் 879 வாக்குகள் பெற்றார்.

தேர்தல் வெளிப்படைத்தன்மையை ஆதரிக்கும் அமைப்பான ஜனநாயக சீர்திருத்த சங்கத்தின் (ADR) பதிவுகள், அவர் 2004 மற்றும் 2009 நாடாளுமன்றத் தேர்தல்களிலும் போட்டியிட்டதைக் காட்டுகின்றன.

அவர் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அவரது தேர்தல் பிரமாணப் பத்திரம் காட்டுகிறது. மியான்மரில் ரோஹிஞ்சா முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து சுவரொட்டிகளை ஒட்டியதால் அவர் சிறைக்கு அனுப்பப்பட்டதாக உள்ளூர் மக்கள் கூறுகின்றனர். அவர் எவ்வளவு காலம் சிறையில் இருந்தார் என்பது தெரியவில்லை.

அவர் மீது மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக வழக்கறிஞர் எம்.எம்.ஹஷ்மி உறுதிப்படுத்துகிறார்.

ஒரு வழக்கில் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார். ஒரு வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை. ஒரு வழக்கில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்படவில்லை.

இவை அனைத்தும் அரசியல் வழக்குகள், கிரிமினல் வழக்குகள் அல்ல என்று அவர் கூறுகிறார். இது குறித்து மேலும் தகவல் தெரிவிக்க மறுத்துவிட்டார்.

அடைக்கலம் தேடி வந்த இரண்டு இந்திய குடிமக்கள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

2020இல் டெல்லி கலவரத்தில் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். வகுப்புவாத கலவரம் நடந்த டெல்லி பகுதியில் முகமது ஹஸ்னைன் மக்களவை தேர்தலில் போட்டியிட்ட இடமும் அடங்கும்.

ஏன் பாகிஸ்தானை தேர்ந்தெடுத்தனர்?

முகமது ஹஸ்னைன் பிபிசியிடம் பேசியபோது, “இது திடீரென்று அல்லது ஏதாவது நடக்க வேண்டும் என்று யோசிக்காமல் எடுத்த முடிவு அல்ல. நாங்கள் இப்போது இங்கிருந்து புறப்படுவோம் என்பது நன்றாக ஆராய்ந்து எடுத்த முடிவுதான்,” என்றார்.

பாபர் மசூதி தொடர்பான நீதிமன்றத்தின் தீர்ப்பை மேற்கோள் காட்டிய அவர், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள தேர்தலில் நரேந்திர மோதி மற்றும் அவரது கட்சியான பாஜகவின் வெற்றியைச் சுட்டிக்காட்டி அச்சம் தெரிவித்தார்.

“முகமது ஹஸ்னைன் போட்டியிட்ட நாடாளுமன்றத் தொகுதியான டெல்லியில் 2020ஆம் ஆண்டில் வகுப்புவாதக் கலவரங்கள் நடந்தன. அதில் ஐம்பதுக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர், அவர்களில் பெரும்பாலோர் முஸ்லிம்கள்.”

தொடர்ந்து பேசிய முகமது ஹஸ்னைன், “பண்டிகை நாள் என்றால், நமது இந்து சகோதரர்கள் திலகம் அணிந்து வந்தால், அவர்கள் இந்துக்களா அல்லது முஸ்லிம்களா என்பதை எளிதில் அடையாளம் காணலாம். ஒரு சிறிய பிரச்னை எழும்போது, அது பெரிதாகி, மக்கள் அதைக் கலவரமாக மாற்றினர்,” என்று கூறினார்.

“எங்கள் மகனுக்கும் இது இரண்டு அல்லது மூன்று முறை நடந்தது, எனவே அந்த சூழ்நிலைகளால் வருத்தப்பட்ட நாங்கள் நாட்டைவிட்டு வெளியேற வேண்டும் என்று முடிவெடுத்தோம்.”

ரோட்டில் போனாலும், ஆபீஸ் போனாலும், ரயிலில் போனாலும், ஏதாவது வேலை விஷயமாக வெளியே போனாலும், ஏதாவது நடக்குமோ என்ற பயம்தான் இருக்கிறது. இது கொள்ளையடிப்பது போன்ற பிரச்னை இல்லை. முழக்கங்களை எழுப்பி, மதத்தை இலக்காக மாற்றி, மக்களைக் கொலை செய்தல் என பிரச்னைகள் நீளுகின்றன.”

ஆனால் இந்த தந்தையும் மகனும் வேறு எந்த நாட்டிற்கும் செல்லாமல் பாகிஸ்தானை தேர்ந்தெடுத்தது ஏன்?

எங்களின் கேள்விக்கு முகமது ஹஸ்னைன், “நாங்கள் எந்த நாட்டிற்கும் சென்று 5 அல்லது 10 கோடி ரூபாய் செலவு செய்து குடியுரிமை வாங்கியிருப்போம் என்ற அளவுக்கான பணக்காரர்கள் இல்லை,” என்றார்.

“எங்களுக்கு பாகிஸ்தானின் விருப்பம் மட்டுமே இருந்தது. அங்கு மக்கள் எங்களைப் போலவே பேசுகிறார்கள். அதை உருவாக்குவதில் எங்கள் முன்னோர்களுக்கும் பங்கு இருந்தது.”

பாகிஸ்தானில் தனக்கு உறவினர்கள் யாரும் இல்லை என்பதால் அவர்களால் விசா பெறவும் முடியவில்லை என்று அவர் கூறினார்.

“சுற்றுலாப் பயணிகள் விசாவுடன் சென்று பின்னர் அங்கு தஞ்சம் அடைவது சரியாக இருக்கும் என்று யோசனை இருந்தது. ஆனால், அங்கிருந்து (பாகிஸ்தான் தூதரகம்) மறுப்பு தெரிவித்தால், என்ன நடக்கும் என்று நாங்கள் ஆராயத் தொடங்கினோம்.

இப்படியே இரண்டு-மூன்று ஆண்டுகள் கடந்தன. பின்னர் திடீரென்று எங்களுக்கு அது கிடைத்தது. நீங்கள் துபாய் சென்று அங்கிருந்து ஆப்கானிஸ்தானுக்கு விசா பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிந்தது.”

அடைக்கலம் தேடி வந்த இரண்டு இந்திய குடிமக்கள்
படக்குறிப்பு,

முகம்மது ஹஸ்னைன் நடத்தி வந்த செய்தி இதழ்.

மகேஷ் பட் உடன் ஹஸ்னைன் இருக்கும் வீடியோ

ஹஸ்னைனின் செய்தித்தாள் நிறுவன பெயருடன் இணைக்கப்பட்ட கணக்கிலிருந்து 2016இல் ஒரு வீடியோ ஆன்லைனில் பதிவேற்றப்பட்டது. இந்த வீடியோவில் அவர் தனது பகுதியில் காவல்துறையின் அட்டூழியங்களுக்கு எதிராகப் போராட்டம் நடத்துவதைக் காணலாம்.

கடந்த 2017இல் பதிவேற்றப்பட்ட மற்றொரு வீடியோவில், அவர் முஸ்லிம்களுக்கு எதிரான சுரண்டல் குறித்து உரை நிகழ்த்துவதைக் காணலாம். அதில் அவர் மதச்சார்பற்றவர்கள் என்று கூறும் அரசியல் கட்சிகளும் தலைவர்களும்கூட முஸ்லிம்களை ஏமாற்றமடையச் செய்ததாகக் கூறுகிறார்.

இது தவிர, 2015இல் பதிவேற்றப்பட்ட ஒரு வீடியோவில், அவர் திரைப்பட இயக்குநர் மகேஷ் பட் உடன் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். அதில் அவர் மதச்சார்பின்மை மற்றும் வகுப்புவாதத்தைப் பற்றி பேசுவதைக் காணலாம்.

இந்த வீடியோவில், மகேஷ் பட்டை புகழ்ந்து, இரு மதத்தினரின் மனநிலையை நன்றாகப் புரிந்து கொண்டதாகவும், ஆனால் அவர் மிகவும் கவனமாக வேலை செய்யவேண்டிய கட்டாயத்தில் இருப்பதாகவும் கூறுகிறார். இதற்குப் பதிலளிக்கும் விதமாக, மகேஷ் பட் சிரித்துக்கொண்டே அவரைக் கவனித்துக் கொண்டிருந்தது கேமராவில் பதிவாகியுள்ளது.

தொடர்ந்து பேசிய முகமது ஹஸ்னைன், “உங்கள் நோக்கத்தில் எந்த சந்தேகமும் இல்லை. அது (உங்கள்) நிர்ப்பந்தம். இந்த நாட்டின் இந்து அறிவுஜீவிகள் இதுவொரு கட்டாயம் என அறிந்து அச்சப்படுகின்றனர்,” என்றார்.

இந்த பதினைந்து நிமிட வீடியோவில், இந்திய முஸ்லிம்களின் குறைகளை அவர் விரிவாகப் பேசுகிறார்.

செப்டம்பர் 25 அன்று, இந்த இரண்டு இந்திய குடிமக்களும் கராச்சி பிரஸ் கிளப்பை அடைந்து, இந்தியாவில் முஸ்லிம்கள் மீதான அடக்குமுறைகள் இருப்பதாகத் தெரிவித்து, ஆர்ப்பாட்டம் செய்தனர். அதன் பிறகுதான் அவர்கள் பாகிஸ்தானுக்கு வந்த செய்தி பெரும் பேசுபொருளானது.

அடைக்கலம் தேடி வந்த இரண்டு இந்திய குடிமக்கள்

பட மூலாதாரம், GOOGLE STREET VIEW

படக்குறிப்பு,

கூகுள் ஸ்ட்ரீட் வியூவில் முகமது ஹஸ்னைனின் அலுவலகம் இருந்த இடம்.

பாகிஸ்தானில் குடியுரிமை பெறவில்லை என்றால்?

முகமது ஹஸ்னைன் மற்றும் இஷாக் ஆகிய இருவரும் இந்தியாவுக்கு திரும்பிச் செல்ல விரும்பவில்லை என்று தெளிவாகக் கூறியுள்ளனர். ஆனால் பாகிஸ்தான் அவர்களுக்கு அடைக்கலம் மற்றும் குடியுரிமை வழங்காவிட்டால் அவர்கள் என்ன செய்வார்கள்?

இஷாக் அமீர் பேசியபோது, “நாங்கள் தங்குமிடம் தேடுகிறோம். எங்கள் நோக்கம் இங்கே வீடு அல்லது வேலை கேட்பது அல்ல. நான் இன்னும் இளமையாக இருக்கிறேன். நான் தொடர்ந்து உழைக்க முடியும், எனக்கு ரொட்டி சமைக்க முடியும். தொழிலாளர்கள் செய்யக்கூடிய அளவில் வெளியில் பல வேலைகள் உள்ளன. அதை என்னால் செய்ய முடியும்,” என்றார்.

“வாலித் சாஹேப் கல்வி கற்றுக்கொடுக்க முடியும். நானும் கற்பிக்க முடியும். என்னால் குர்ஆனை கற்பிக்க முடியும். குர்ஆனை மனப்பாடம் செய்துவிட்டேன். எனவே எனக்கு அடைக்கலம் வேண்டும், திரும்பிச் செல்ல விரும்பவில்லை.”

“என்னைக் கைது செய்து சிறையில் அடைத்தாலும் எந்த பிரச்னையும் இல்லை. எங்களை இங்கே வைத்திருக்க விரும்பவில்லை என்றாலும்கூட, தயவுசெய்து திருப்பி அனுப்பவேண்டாம். ஆனால் எங்களை உங்கள் அருகில் உள்ள சிறைச்சாலையின் ஒரு மூலையில் வைத்து, ஒரு கூண்டில் அடைத்து விடுங்கள். அதையும் ஏற்கத் தயாராக இருக்கிறோம்.”

முகமது ஹஸ்னைன் பேசியபோது, “நான் இந்த நாட்டிற்கு வாழ்வதற்காக வரவில்லை. நிம்மதியாக இறப்பதற்காக வந்துள்ளேன். எனக்கு இப்போது வாழ விருப்பம் இல்லை,” என்றார்.

சீமா ஹைதர் வழக்கை உதாரணம் காட்டி, அங்குள்ள அரசால் சீமாவை ஏற்றுக்கொள்ள முடியும் என்றால், உலகில் உள்ள எந்த சக்தி பாகிஸ்தான் அரசை எங்களை ஏற்க விடாமல் தடுக்கும் என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Facebook
Facebook
fb-share-icon
Telegram
WhatsApp
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *