
பட மூலாதாரம், Getty Images
பில்கிஸ் பானு வழக்கில் 11 குற்றவாளிகளை மன்னித்து விடுதலை செய்த உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், Getty Images
பில்கிஸ் பானு வழக்கில் 11 குற்றவாளிகளை மன்னித்து விடுதலை செய்த உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது.
திங்கள்கிழமை காலை உச்சநீதிமன்றத்தின் இரண்டு நீதிபதிகள் அமர்வு பில்கிஸ் பானுவை பாலியல் வல்லுறவு செய்து, அவரது குடும்ப உறுப்பினர்களை கொலை செய்த 11 குற்றவாளிகளை மன்னித்து விடுதலை செய்த உத்தரவை ரத்து செய்துள்ளது. 11 குற்றவாளிகளும் இன்னும் 2 வாரங்களுக்குள் சரணடைய வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
“இது ஒரு நல்ல தீர்ப்பு என்றும், இந்த தீர்ப்பு நீதியை நிலைநாட்டியுள்ளதாகவும், சட்டத்தின் ஆட்சி மற்றும் நாட்டு மக்களுக்கு சட்டத்துறை மீதான நம்பிக்கையை உயர்த்தி பிடித்துள்ளதாகவும், குறிப்பாக பெண்களுக்கு சட்ட அமைப்பின் மீது நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்“ இந்த வழக்கில் செயல்பட்டு வரும் வழக்கறிஞர் வ்ரிந்தா குரோவர்.

பட மூலாதாரம், Getty Images
2008ஆம் ஆண்டு சிறப்பு சிபிஐ நீதிமன்றம் 11 பேருக்கும் ஆயுள்தண்டனை வழங்கியது
வழக்கின் விவரம் என்ன?
2002 குஜராத் கலவரத்தின் போது, குற்றம் சாட்டப்பட்டுள்ள இந்த 11 நபர்களும் அந்த சமயம் கர்ப்பிணியாக இருந்த பில்கிஸ் பானுவை கூட்டு பாலியல் வல்லுறவு செய்துள்ளனர்.
மேலும் அவரின் மூன்று வயது மகள் உட்பட 14 பேரை கொலை செய்துள்ளனர். 2002ஆம் ஆண்டு காவல்துறை புதிய குற்றவாளிகளை கண்டுபிடித்ததால் இந்த வழக்கை முடிக்க வேண்டும் என்று தெரிவித்தது. பின்னர், பில்கிஸ் பானு இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். பின்னர் இந்த வழக்கு குஜராத்திலிருந்து மகாராஷ்டிராவுக்கு அனுப்பப்பட்டது.
2008ஆம் ஆண்டு சிறப்பு சிபிஐ நீதிமன்றம் இந்த 11 பேருக்கும் ஆயுள்தண்டனை வழங்கியது. வாழ்நாள் சிறை என்றாலும் , 14 வருடங்கள் கழித்து நன்னடத்தை அடிப்படையில் அவர்களை விடுதலை செய்ய அரசுக்கு உரிமை உண்டு. அதேபோல், ஒரு கைதி எப்போது விடுவிக்கப் பட வேண்டும் என்று கூட அரசு நிபந்தனை விதிக்கலாம்.
2022ஆம் ஆண்டு ஏப்ரலில், குற்றவாளிகளில் ஒருவரான ராதேஷ்யன் பகவான் ஷா, 1992 கொள்கையின்படி, தனது தண்டனையை குறைப்பது குறித்து குஜராத் அரசு முடிவெடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். ஆனால், உச்ச நீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு தீர்ப்பின்படி, மகாராஷ்டிர அரசுதான் இதில் முடிவெடுக்க வேண்டும் என்று கூறி குஜராத் அரசு அதை மறுத்தது. ஆனாலும் ராதேஷ்யன் பகவான் ஷாவின் மனுவை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.
அதற்கு முன், ராதேஷ்யன் பகவான் ஷா இதேபோன்ற மனுவை குஜராத் உயர்நீதிமன்றத்திலும் தாக்கல் செய்திருந்தார். ஆனால், அப்போதும் தண்டனையை தள்ளுபடி செய்யும் அதிகாரம் மகாராஷ்டிர அரசுக்கே உள்ளது என்று குஜராத் உயர்நீதிமன்றம் கூறியிருந்தது.
இதற்குப் பிறகு, ஆகஸ்ட் 10, 2022 அன்று, குஜராத் அரசு 11 குற்றவாளிகளையும் மன்னித்து விடுதலையும் செய்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பில்கிஸ் பானு மற்றும் மஹுவா மொய்த்ரா, சுபாஷினி அலி உள்ளிட்ட பல பெண்கள் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

பட மூலாதாரம், Getty Images
குஜராத் அரசு மீதும் கடுமையான கருத்துக்களை தெரிவித்துள்ளது உச்சநீதிமன்றம்
நீதிமன்ற முடிவு
இன்றைய நீதிமன்ற முடிவில், குஜராத் நீதிமன்றத்தின் முடிவுகள் தவறு என்று குறிப்பிடப்பட்டுள்ளது. நீதிமன்றத்தின்படி, தண்டனையை தள்ளுபடி செய்வதற்கான முடிவு மகாராஷ்டிரா அரசுடையது. தண்டனையை அறிவித்த அரசே, தண்டனையை ரத்து செய்வது குறித்தும் முடிவு செய்யும் என்று நீதிமன்றம் கூறியுள்ளது.
குஜராத் அரசு மீதும் கடுமையான கருத்துக்களை தெரிவித்துள்ளது நீதிமன்றம். 11 குற்றவாளிகளில் ஒருவருக்கு “உதவி மற்றும் உடந்தையாக” குஜராத் அரசு செயல்பட்டுள்ளது என்று நீதிமன்றம் கூறியுள்ளது. இது தவிர, இதற்கு முன் மூன்று முறை இந்த வழக்குகளில் நீதிமன்றம் தலையிட வேண்டியதாயிற்று என்றும், முதலில் குஜராத் காவல்துறையிடம் இருந்து விசாரணை விலக்கப்பட்டு சிபிஐ-யிடம் ஒப்படைக்கப்பட்டது என்றும், பின்னர் குஜராத்தில் இருந்து மகாராஷ்டிராவிற்கு அனுப்பப்பட்டது என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மேலும் 2022 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட தனது சொந்த முடிவே தவறானது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. இது தவிர, 2022 எடுக்கப்பட்ட முடிவை எதிர்த்து குஜராத் அரசு மறுஆய்வு மனு தாக்கல் செய்திருக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது. இதில் குஜராத் மன்னிப்பு வழங்குவது, மகாராஷ்டிர அரசின் அதிகாரத்தை அபகரிப்பதற்கு சமம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிபிஐ மும்பையின் சிறப்பு நீதிபதி, சிபிஐ கண்காணிப்பாளர், குஜராத் போலீஸ் தாஹோத் போலவே பல அதிகாரிகள் தண்டனையை தள்ளுபடி செய்ய மறுத்துவிட்டனர். ஆனால் அவர்களின் கருத்துக்கு குஜராத் அரசு செவிசாய்க்கவில்லை. எனவே, இவர்களின் கருத்துக்களையும் அரசு பரிசீலிக்க வேண்டும் என்று நீதிமன்றம் கூறியுள்ளது.
11 குற்றவாளிகளுக்கும் தண்டனையை நீக்குவதற்கான உத்தரவு ஒரே மாதிரியாக வழங்கப்பட்டிருப்பதாகவும், “ஒவ்வொரு வழக்கின் உண்மைகளையும் சுயாதீனமாக பரிசீலிக்கவில்லை” என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
அதேபோல், 2022ஆம் ஆண்டு போடப்பட்ட நீதிமன்ற உத்தரவில் சில முக்கிய உண்மைகள் மறைக்கப்பட்டு, நீதிமன்றத்தை தவறாக வழிநடத்தும் முயற்சி மேற்கொள்ளப் பட்டுள்ளதாகவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஏனெனில், மகாராஷ்டிர அரசிடமும் கூட்டு மன்னிப்பு கேட்டதை ராதேஷ்யன் பகவான் ஷா தெரிவிக்கவில்லை. அதன் பிறகு அவரது தண்டனையை குறைக்கக் கூடாது என்றும் பல அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இந்த விஷயத்தை ராதேஷ்யாம் பகவான் ஷாவோ அல்லது குஜராத் அரசோ உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்கவில்லை என்று உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

பட மூலாதாரம், Getty Images
சட்டத்தை சரியாக பயன்படுத்தினால், இந்த வழக்கில் தண்டனை தள்ளுபடி செய்யப்படுவதற்கு வாய்ப்பே இல்லை
இனி என்ன நடக்கும்?
அனைத்து குற்றவாளிகளும் இன்னும் 2 வாரத்தில் சிறைக்கு செல்ல வேண்டும். ஆனால், தற்போது மகாராஷ்டிரா அரசால் அவர்களை மன்னிக்க முடியுமா?
தற்போது தண்டனையிலிருந்து தப்பிப்பது அவ்வளவு எளிதாக நடக்காது என்று கூறுகிறார் பில்கிஸ் பானுவின் வழக்கறிஞர் ஷோபா குப்தா.
“மகாராஷ்டிராவின் மன்னிப்பு கொள்கை என்பது கடுமையானது. என்னை பொறுத்தவரை, சட்டத்தை சரியாக பயன்படுத்தினால், இந்த வழக்கில் தண்டனை தள்ளுபடி செய்யப்படுவதற்கு வாய்ப்பே இல்லை” என்று அவர் கூறியுள்ளார்.
மகாராஷ்டிர அரசின் 11.04.2008 கொள்கையின்படி, பில்கிஸ் பானுவின் வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் குறைந்தது 28 ஆண்டுகளாவது சிறையில் இருக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. இந்த காரணத்தால், அவர்களுக்கு தண்டனையில் இருந்து விலக்கு அளிக்கக் கூடாது என்று சிபிஐ சிறப்பு நீதிபதி முன்பு கூறியிருந்தார்.
மகாராஷ்டிரா அரசு இனி இந்த தண்டனைகளை தள்ளுபடி செய்தாலும் கூட, இன்றைய தீர்ப்பு மக்கள் நீதிமன்றத்தின் கதவுகளை எப்போது வேண்டுமானாலும் தட்டலாம் என்பதை காட்டுவதாக நம்புகிறார் வழக்கறிஞர் வ்ரிந்தா குரோவர்.
“இன்றைய முடிவு தண்டனையை தள்ளுபடி செய்ததற்கு எதிரானது அல்ல, மாறாக இதில் அதிகாரம் எப்படியெல்லாம் பயன்படுத்தப்பட்டுள்ளது? எல்லோரும் சமமாக நடத்தப்படுகிறார்களா? என்ற கேள்விகளை முன்வைப்பது” என்று அவர் தெரிவித்துள்ளார்.
இந்த தண்டனையை ரத்து செய்ய, அனைத்து உண்மைகளையும் மனதில் வைத்து கொண்டு அரசாங்கம் ஒரு முடிவை எடுக்க வேண்டும் என்றும், இந்த முறை குஜராத் அரசு செய்ததை போல அனைத்து அதிகாரிகளின் கருத்தையும் கருத்தில் எடுத்து கொள்ள வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
இன்றைய தீர்ப்பு எதிர்கால பொதுமன்னிப்பு வழக்குகளில் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தும் என்று பாம்பே உயர்நீதிமன்றத்தின் வழக்கறிஞரான விஜய் ஹிரேமத் கூறியுள்ளார்.
“தண்டனை வழங்கப்பட்ட இடத்தில் மட்டுமே தண்டனைக் குறைப்புக்கான முடிவு எடுக்கப்படும் என்பதை இன்றைய நீதிமன்ற முடிவு தெளிவுபடுத்தியுள்ளதாக” கூறுகிறார் அவர்.
மேலும் “குற்றம் நடந்துள்ள இடத்தில் சாதகமான அரசு ஆட்சிக்கு வந்தால் தண்டனை ரத்து செய்யப்படுவதே பல சந்தர்ப்பங்களில் நடக்கும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
நீதிமன்றத்தின் இந்த முடிவு இது போன்ற சம்பவங்களுக்கு முடிவு கட்டும் என்று ஹிரேமத் நம்புகிறார்.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்