
பட மூலாதாரம், CPL PHIL DYE RAF / CROWN COPYRIGHT
30 ஆண்டுகளுக்கும் மேலாகக் கடலில் தரைதட்டி நின்றிருந்த உலகின் மிகப்பெரிய பனிப்பாறை இப்போது நகரத் துவங்கியிருக்கிறது.
A23a என்று அழைக்கப்படும் இந்தப் பனிப்பாறை, 1986-இல் அண்டார்டிக் கடற்கரையிலிருந்து பிரிந்தது. ஆனால் அது விரைவாக வெட்டல் கடலில் தரைதட்டியது., அடிப்படையில், ஒரு பனித் தீவாக மாறியது.
கிட்டத்தட்ட 4,000சதுர கி.மீ. பரப்பளவுகொண்ட இந்தப் பனிப்பாறை, ஒருங்கிணைந்த லண்டன் நகரத்தைவிட இரண்டு மடங்கு பெரியது. சென்னையைப் போல 4 மடங்கு என்று கூறலாம்.
கடந்த ஆண்டு அது வேகமாக நகரத் துவங்கியது. இப்போது அது அண்டார்டிக் கடற்பரப்பைக் கடக்கவிருக்கிறது.
A23a ஒரு ராட்சதப் பனிப்பறை.
அதன் அகலம் மட்டும் பிரமாண்டமானதல்ல, அதன் தடிமன் 400மீ (1,312 அடி). ஒப்பிடுகையில், ஐரோப்பாவின் மிக உயரமான அடுக்குமாடுக் கட்டிடமான லண்டன் ஷார்டின் (London Shard) உயரம் வெறும் 310மீ தான்.
A23a, அண்டார்டிகாவின் ஃபில்ச்னர் பனிப்பரப்பிலிருந்து பிர்ந்த பனிப்பாறைகளின் ஒரு பகுதியாகும்.
அது பிரிந்த சமயத்தில், அதன்மீது ஒரு சோவியத் ஆராய்ச்சி நிலையம் இருந்தது. அதுவே இது எவ்வளவு காலத்திற்கு முன்பு பிரிந்தது என்பதற்கான சான்று.
‘ட்ருஷ்னயா 1’ எனும் அந்த ஆராய்ச்சி நிலையத்திலிருந்து உபகரணங்களை அகற்ற சோவியத் அரசு ஒரு குழுவை அனுப்பியது. ஆனால் அப்போது இந்தப் பனிப்பாறை கடற்கரையிலிருந்து வெகுதூரம் நகர்ந்திருக்கவில்லை. அதன் ஆழமான அடிப்பகுதி, அதை வெட்டல் கடலின் அடிமட்டச் சேற்றில் நங்கூரம் போல அதனை நிலைப்படுத்தியது.

அப்படியானால், கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்குப் பிறகு, A23a இப்போது ஏன் நகரத்துவங்கியிருக்கிறது?
பிரிட்டிஷ் அண்டார்டிக் ஆய்வு மையத்தின் ரிமோட் சென்சிங் நிபுணர் முனைவர் ஆண்ட்ரூ ஃப்ளெமிங், இதுபற்றி சக ஊழியர்களிடம் பேசியதாகக் கூறினார். “நீரின் வெப்பநிலையில் மாற்றத்தால் இது ஏற்பட்டிருக்குமா என்று யோசித்தேன். ஆனால் ஒருமித்த கருத்து, இது நகர்வதற்கான நேரம் வந்துவிட்டது என்பதுதான்,” என்கிறார்.
“இது 1986-ஆம் ஆண்டிலிருந்து தரைதட்டி நின்றிருந்தது. ஆனால் இறுதியில் அது பிடியை இழந்து நகரத் தொடங்கும் வகையில், அதன் அளவு சிறியதாகப் போகிறது. 2020-இல் நான் அதன் முதல் அசைவைக் கண்டேன்,” என்கிறார்.
A23a, சமீபத்திய மாதங்களில் காற்று மற்றும் நீரோட்டங்களால் உந்தப்பட்டு, அண்டார்டிக் தீபகற்பத்தின் வடக்கு முனையைக் கடந்து செல்கிறது.

வெட்டல் கடலில் இருந்து வரும் பெரும்பாலான பனிப்பாறைகளைப் போலவே, A23a அண்டார்டிக் துருவமுனையைச் சுற்றும் நீரோட்டத்தை அடையும். இது ‘பனிப்பாறைச் சாலை’ என அறியப்படுகிறது. இங்கிருந்து அது தெற்கு அட்லாண்டிக்கை நோக்கி நகரும்.
இறுதியில், எல்லா பாறைகளும், எவ்வளவு பெரியதாக இருந்தாலும், உருகி மறையும்.

விஞ்ஞானிகள் A23a இன் நகர்வை நெருக்கமாகக் கண்காணிக்கிறார்கள்.
இது தெற்கு ஜார்ஜியாவில் தரைதட்டினால், அது அத்தீவில் இனப்பெருக்கம் செய்யும் பல லட்சம் சீல்கள், பெங்குவின் மற்றும் பிற கடற்பறவைகளுக்கு சிக்கல்களை ஏற்படுத்தக்கூடும். A23a-இன் பெரும் பகுதி விலங்குகளின் இயல்பான உணவுப் பாதையை சீர்குலைத்து, அவற்றின் குஞ்சுகளுக்கு முறையாக உணவளிப்பதைத் தடுக்கும்.
ஆனால் பனிப்பாறைகள் என்றாலே ஆபத்தானவை என்று நினைப்பது தவறு. இது டைட்டானிக் கப்பலின் கதையைக் கேட்பதால் உண்டாகும் மனநிலை. பனிப்பாறைகள் சுற்றுச்சூழலுக்கு எவ்வளவு முக்கியம் என்பது பற்றிய புரிதல் இப்போது அதிகரித்து வருகிறது.

இந்த பெரிய பனிப்பாறைகள் உருகும்போது, அவை தம்முள்ளிருக்கும் கனிமங்களை வெளியிடுகின்றன. இவை கடல் உணவு சங்கிலியில் முக்கியமான உயிரினங்களுக்கு ஆதாரமாக உள்ளது.
“பல வழிகளில் இந்த பனிப்பாறைகள் உயிர்களுக்கு முக்கியமானவை. அவை பல உயிரியல் செயல்பாடுகளுக்கு மூலப் புள்ளியாக இருக்கின்றன,” என்கிறார் வூட்ஸ் ஹோல் கடலியல் ஆராய்ச்சி நிறுவனத்தைச் சேர்ந்த கேத்தரின் வாக்கர் கூறுகிறார்.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்