ஆந்திர கிராமத்தில் தொடரும் குழந்தைகள் மரணம்: கர்ப்பம் தரிக்கவே அஞ்சும் பெண்கள் – என்ன நடக்கிறது?

ஆந்திர கிராமத்தில் தொடரும் குழந்தைகள் மரணம்: கர்ப்பம் தரிக்கவே அஞ்சும் பெண்கள் - என்ன நடக்கிறது?

ஆந்திரா குழந்தைகள் மரணம்
படக்குறிப்பு,

தங்கள் இரண்டு குழந்தைகள் இறப்பதைக் கண்ட பாலு-சந்தியாராணி தம்பதி, இனி குழந்தைகளே வேண்டாம் என்ற முடிவுக்கு வந்ததாகச் சொல்கின்றனர்.

ஆந்திர மாநிலத்தின் ரூடகோட்டா கிராமத்தில் பிறந்து சில மாதங்களே ஆன குழந்தைகள் இறப்பது தொடர் நிகழ்வாகியுள்ளது. ஆனால் இதற்கான காரணம் என்னவென்று இதுவரை கண்டறியப்படவில்லை. அங்கே என்ன நடக்கிறது?

ரூடகோட்டா கிராமத்தில் வேன் டிரைவராக பணிபுரியும் அசோக், ஆகஸ்ட் மாதம் 11ஆம் தேதி மதியம் 12 மணியளவில் வீட்டுக்கு வந்து தனது மூன்று மாத குழந்தையுடன் விளையாடிக் கொண்டிருந்தார். சிறிது நேரத்தில் இருவரும் தூங்கிவிட்டனர்.

சில நிமிடங்களில், குழந்தை தன் முஷ்டிகளை இறுக்கி, தலையை பின்னால் வீசி அழுதது. மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல நேரமில்லை. அதற்குள் குழந்தை இறந்துவிட்டது.

இதுபோல் குழந்தையை இழப்பது அசோக் தம்பதிக்கு இது இரண்டாவது முறை.

இரண்டு ஆண்டுகளுக்கு முன், 2021ஆம் அண்டு ஆகஸ்ட் மாதம், அசோக்-மத்ஸ்யம்மா தம்பதிக்குப் பிறந்த முதல் குழந்தைக்கு இரண்டு வயதான போது, ஒரு நாள் தாய் மத்ஸ்யம்மா பால் கொடுத்த சிறிது நேரத்திலேயே குழந்தை இறந்தது.

மத்ஸ்யம்மா மற்றும் அசோக் வீட்டில் நடந்தது போலவே, ஆந்திர மாநிலம் அல்லூரி சீதாராமராஜு மாவட்டம், ரூடகோட்டா கிராமத்தில் கடந்த 3 ஆண்டுகளில் 20 குழந்தைகள் இறந்திருக்கின்றன.

இந்தக் குழந்தை மரணங்களுக்கான காரணத்தைக் கண்டறிய மருத்துவக் குழுக்கள் முயன்றபோதும் சரியான காரணம் இன்னும் தெரியவில்லை.

இறந்த குழந்தைகள் அனைத்தும் மூன்று முதல் ஆறு மாதங்களுக்கு இடைப்பட்டவை.

‘எங்களுக்கு இனி குழந்தைகளே வேண்டாம்’

அசோக்-மத்ஸ்யம்மா தம்பதியைப் போலவே மூன்று மாதமே ஆன தங்கள் இரண்டு குழந்தைகள் இறப்பதைக் கண்ட பாலு-சந்தியாராணி தம்பதி, இனி குழந்தையே வேண்டாம் என்ற முடிவுக்கு வந்ததாகச் சொல்கின்றனர்.

“நம் கைகளில் வந்து இறப்பதற்காக ஏன் குழந்தைகளைப் பெற்றெடுக்க வேண்டும்? எங்களுக்கு குழந்தைகள் வேண்டாம், கிராமத்தில் நிலைமை சீரடைந்தால்தான் குழந்தை பெற்றுக்கொள்வோம். இல்லையேல் எங்களுக்கு குழந்தைகள் வேண்டாம்,” என்கின்றனர் அவர்கள்.

“நான் ஏற்கெனவே இரண்டு குழந்தைகளை இழந்துவிட்டேன். ஆனால் அதற்கான காரணம் தெரியவில்லை. குழந்தைகள் ஆரோக்கியமாகத் தான் இருந்தார்கள். எங்களுடன் நன்றாக விளையாடிக் கொண்டிருந்தனர். என்ன நடந்தது என்று தெரியவில்லை.

திடீரென அவர்கள் தங்கள் முஷ்டிகளை இறுக்கி, தலையைக் குனிந்து சில நொடிகளில் இறந்துவிட்டனர். ஆரம்ப சுகாதார மையம் அருகில்தான் உள்ளது. ஆனால் அங்கு எடுத்துச் செல்லக்கூட நேரமில்லை. என்ன செய்வது என்றே தெரியவில்லை,” என்று தனது துயரத்தைக் கூறுகிறார் சந்தியாராணி.

மேலும் அவர் கூறுகையில், “இம்முறை கர்ப்பம் தரித்தாலும் இந்த கிராமத்தில் இருக்க மாட்டேன். வேற ஊர் போய் அங்கேயே குழந்தை பிறந்து கொஞ்சம் வயசான பிறகுதான் ஊருக்கு வருவேன்,” என்கிறார்.

ரூடகோட்டாவிற்கு திருமணம் செய்து வந்த ஒரு பெண் கருவுற்றதும் 35 கி.மீ தொலைவில் இருக்கும் தனது சொந்த ஊரான ஹூக்கும்பேட்டாவிற்கு சென்றுள்ளார். அவருக்கு அங்கு குழந்தை பிறந்தது. ஆனால், அந்தக் குழந்தையும் இந்த ஆண்டு மே மாதம், மூன்று மாதமே ஆனபோது இறந்துவிட்டது.

இந்த விஷயத்தை ரூடகோட்டாவின் ஆரம்ப சுகாதார மைய அதிகாரி ஆய்வு செய்தார்.

ஆந்திரா குழந்தைகள் மரணம்

‘கிராமத்தில் ஆறு மாதங்களாக யாரும் கர்ப்பம் தரிக்கவில்லை’

ரூடகோட்டாவில் 2019 முதல் 2022 மே வரை 17 குழந்தைகள் இறந்துள்ளன. அடுத்த ஆறு மாதங்களுக்கு எந்த உயிரிழப்பும் நிகழவில்லை.

மீண்டும் இந்த ஆண்டு ஜனவரி, மே மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் மூன்று குழந்தைகள் இறந்திருக்கின்றன.

ரூடகோட்டா கிராமத்தில் இதுவரை 20 குழந்தைகள் இறந்துள்ளதாக அந்தக் கிராமத்தின் ஆரம்ப சுகாதார மையத்தின் மருத்துவ அதிகாரியான மருத்துவர் சத்யா ராவ் பிபிசியிடம் தெரிவித்தார்.

ரூடகோட்டாவிற்கு கருத்தரிக்கும் பெண்களின் சில குழந்தைகள், அவர்கள் கிராமத்தில் இருந்தாலும் சரி, வெளியில் இருந்தாலும் சரி, வீட்டிலேயே பிறந்தாலும் மருத்துவமனையில் பிறந்தாலும், இறந்து போகிறார்கள். இதற்கான காரணங்கள் இன்னும் தெளிவாகவில்லை என்று மருத்துவர் சத்யா ராவ் கூறினார்.

“குழந்தைகள் ஒன்றன் பின் ஒன்றாக இறந்து கொண்டிருப்பதால் எங்கள் கிராமத்தில் குழந்தைகளைப் பெற்றெடுக்க நாங்கள் பயந்து போய் இருக்கிறோம். அதனால்தான் 2022 மே மற்றும் ஜூன் மாதத்திற்குப் பிறகு எங்கள் கிராமத்தில் யாரும் கருத்தரிக்கவில்லை.

ஆறு மாதங்களாக கிராமத்தில் உயிரிழப்புகள் ஏற்படவில்லை என மகிழ்ச்சி அடைந்தோம். ஆனால் ஜனவரி 2023இல், ஒரு குழந்தை இறந்தது. அதன்பின் மீண்டும் குழந்தைகள் இறக்கத் துவங்கின. இங்கு என்ன நடக்கிறது என்றே எனக்குப் புரியவில்லை,” என்கிறார் ரூடகோட்டாவை சேர்ந்த சுபத்ரா. ஆகஸ்ட் 2021இல் பிறந்த சுபத்ராவின் மகன் நான்கு மாதங்களில் இறந்தார்.

ரூடகோட்டாவை சேர்ந்த 64 வயதான ராமுலம்மா என்ற பெண் பிபிசியிடம் கூறுகையில், தங்கள் கிராமத்தில் இதற்குமுன் இதுபோல் பச்சிளம் குழந்தைகள் வரிசையாக இறந்ததில்லை என்று கூறினார்.

ஆந்திரா குழந்தைகள் மரணம்
படக்குறிப்பு,

ரூடகோட்டா கிராமத்தில் இதுவரை 20 குழந்தைகள் இறந்துள்ளதாக அக்கிராமத்தின் ஆரம்ப சுகாதார மையத்தின் மருத்துவ அதிகாரியான மருத்துவர் சத்யா ராவ் பிபிசியிடம் தெரிவித்தார்

ஆய்வு செய்யச் சென்ற அரசு குழு

நவம்பர் 2021இல் ரூடகோட்டாவில் குழந்தைகள் தொடர்ச்சியாக இறந்தபோது அந்தச் சம்பவத்தைப் பற்றி அறிந்துகொள்ள பிபிசி ரூடகோட்டாவிற்குச் சென்றது.

அங்கு நடக்கும் பிரச்னைகள் மற்றும் கிராம மக்களின் குறைகள் குறித்து அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

சுமார் 970 மக்கள் வசிக்கும் ரூடகோட்டா கிராமத்தில் படித்தவர்களே அதிகம் காணப்பட்டனர். பட்டப்படிப்பு வரை படித்தவர்களும் உண்டு. கிராமத்தில் உள்ள பெரும்பாலான மக்கள் ஒருவருக்கொருவர் உறவினர்களாகத் தோன்றினர்.

பின்னர் 2022ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் வாரத்தில், இந்த இறப்புகளுக்கான காரணங்களைக் கண்டறிய விசாகப்பட்டினத்தில் உள்ள ஆந்திரா மருத்துவக் கல்லூரியின் மருத்துவர்களைக் கொண்ட ஒரு குழுவை அரசாங்கம் நியமித்தது.

இந்தக் குழு 2022 ஜனவரி 12 அன்று ஜனவரி ரூடகோட்டா கிராமத்திற்குச் சென்றது.

ஆந்திரா குழந்தைகள் மரணம்
படக்குறிப்பு,

ரூடகோட்டாவில் உள்ள ஆரம்ப சுகதார மையத்தை பலப்படுத்த பரிந்துரைக்கப்பட்டுள்ளது

மருத்துவக் குழுவின் அறிக்கையில் என்ன சொல்லப்பட்டது?

அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்த விஷயங்கள்:

  • குழந்தைகள் வாந்தியெடுத்து, அழுது இறந்தனர்.
  • இறந்த அனைத்து குழந்தைகளும் போதுமான எடையுடன் இருந்தன.
  • மூன்று முதல் 6 மாத குழந்தைகளின் இறப்புக்கான பொதுவான காரணங்களான, நாட்டு மருந்துகள் பயன்படுத்துவது, சரியான நேரத்தில் பால் கொடுக்காதது, அளவைவிட அதிகமாகப் பால் கொடுப்பது, மூச்சுத் திணறல் மற்றும் வயிற்றுப்போக்கு போன்றவை இறப்பிற்குக் காரணம் அல்ல என்று கண்டறியப்பட்டுள்ளது.
  • இறப்பதற்கு முன்னரோ அல்லது உடனடியாகவோ குழந்தை இறப்புக்கான தெளிவான காரணங்களைக் குழுவால் கண்டறிய முடியவில்லை.

அதே அறிக்கையில், ரூடகோட்டாவில் உள்ள ஆரம்ப சுகதார மையத்தை பலப்படுத்தவும், அருகில் உள்ள மருத்துவமனைகள், அங்கன்வாடி மற்றும் மருத்துவ பணியாளர்கள் அடிக்கடி ரூடகோட்டா கிராமத்திற்குச் சென்று அங்குள்ள அனைத்து குழந்தைகளின் உடல்நிலையையும், உடல் நலக்குறைவு உள்ள குழந்தைகளைப் பரிசோதனை செய்யவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

அப்படியிருந்த குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட வேண்டும். கடந்த ஆண்டு, ரூடகோட்டாவில் இருந்து 60கி.மீ. தொலைவில் உள்ள குர்கராரு கிராமத்தில் மூன்று குழந்தைகள் இறந்தன. அதன்பிறகு மீண்டும் 2023இல் ரூடகோட்டாவில் இதுவரை மூன்று குழந்தைகள் இறந்துள்ளனர்.

அரசு நியமித்த மருத்துவக் குழுவின் அறிக்கையில் அல்லூரி சீதாராமராஜு மாவட்டத்தில் தொடர் சிசு மரணங்களுக்கான காரணங்கள் குறித்த எந்தத் தெளிவும் இல்லை.

ஆந்திரா குழந்தைகள் மரணம்
படக்குறிப்பு,

கடந்த ஆண்டு, ரூடகோட்டாவில் இருந்து 60கி.மீ. தொலைவில் உள்ள குர்கராரு கிராமத்தில் மூன்று குழந்தைகள் இறந்தன

மாநிலத்தில் குழந்தை இறப்பு குறைந்துள்ளது

மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டு அமைச்சகத்தின் அறிக்கைப்படி, ஆந்திர மாநிலத்தில் குழந்தை இறப்பு கணிசமாக குறைந்துள்ளது. தேசிய சராசரியுடன் ஒப்பிடும்போது, ஆந்திர மாநிலத்தில் குழந்தை இறப்பு விகிதம் குறைவாக உள்ளது.

ஆந்திர பிரதேசத்தில் குழந்தை இறப்பு விகிதம் 2018ஆம் ஆண்டு 29 ஆக இருந்து. 2019ஆம் ஆண்டு 25 ஆகவும், 2020இல் 24 ஆகவும் குறைந்துள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், கடந்த 3 ஆண்டுகளாக ரூடகோட்டாவில் குழந்தை மரணங்கள் நிகழ்ந்து வந்தாலும், அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று பழங்குடியினர் குற்றம் சாட்டுகின்றனர்.

மரணங்கள் நிகழும்போது மட்டும் சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு பிறகு கைவிடப்பட்டு விடுவதாகக் கூறுகின்றனர்.

“இப்போது, ரூடகோட்டாவில் நிகழும் குழந்தை மரணங்களுக்குத் தெளிவான காரணங்கள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. ரூடகோட்டா மற்றும் குர்கராரு போன்ற கிராமங்களில் சுகாதார அவசர நிலை அறிவிக்கப்பட வேண்டும்,” என்கிறார் பழங்குடியின சமூகத்தின் தலைவரான புச்சிபாபு.

ஆந்திரா குழந்தைகள் மரணம்
படக்குறிப்பு,

அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று பழங்குடியினர் குற்றம் சாட்டுகின்றனர்.

அதிகாரிகள் சொல்வது என்ன?

ரூடகோட்டாவில் குழந்தைகள் தொடர்ந்து இறப்பது குறித்து பழங்குடியினர் மேம்பாட்டு அதிகாரியான அபிஷேக்கிடம் பிபிசி பேசியது.

“ரூடகோட்டாவில் குழந்தைகள் இறப்பது குறித்து ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. மறுபுறம், கிராமத்தில் மருத்துவ பணியாளர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

இறப்புக்கான சரியான காரணங்கள் தெரியவில்லை என்றாலும், முதற்கட்ட அறிக்கைகளின்படி, கிராமத்தில் சுத்தமான குடிநீர் விநியோகம் மற்றும் பிரசவக் கூடம் கட்டப்பட்டுள்ளன.

போதைப்பொருள், மது அருந்துதல் போன்றவை நல்லதல்ல என விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்,” என்றார் அபிஷேக்.

தற்போது, பிபிசி ரூடகோட்டாவிற்கு சென்றபோது, கிராமத்தில் மூன்று கர்ப்பிணிப் பெண்கள் காணப்பட்டனர். மேலும் இருவர் பிரசவத்திற்காக வேறு இடங்களுக்குச் சென்றதாக உள்ளூர்வாசிகள் தெரிவித்தனர்.

கிராமத்தில் குழந்தைகளை இழந்தவர்கள் செல்போனில் குழந்தைகளின் படங்களைப் பார்த்துவிட்டு தங்கள் நினைவுகளை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்கின்றனர்.

கிராமத்தில் குழந்தை மரணங்களைத் தடுக்க அனைத்து அதிகாரிகளும், மருத்துவ ஊழியர்களும் இணைந்து செயல்பட்டால்தான் முடியும் என்கின்றனர் ரூடகோட்டா கிராமத்தின் இளம் தம்பதிகள்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Facebook
Facebook
fb-share-icon
Telegram
WhatsApp
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *