
பட மூலாதாரம், ISRO
ஆதித்யா எல்1 தொடர்ந்து ஐந்து ஆண்டுகளுக்கு செயல்படும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.
2023ஆம் ஆண்டில் விண்வெளித் துறையில் இந்தியா பல சாதனைகளைப் படைத்துள்ளது. 2024 ஆம் ஆண்டின் முதல் நாளில் எக்ஸ்போசாட்டை வெற்றிகரமாக விண்ணில் செலுத்திய இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) மற்றொரு மைல்கல்லை எட்ட தயாராகி வருகிறது.
இஸ்ரோவால் ஏவப்பட்ட ஆதித்யா எல்1 அதன் குறிப்பிட்ட இலக்கை இன்று அடையும்.
இந்த வெற்றியின் மூலம் சூரியனைப் பற்றிய ஆராய்ச்சிக்கு ஆய்வுகளை அனுப்பிய நான்காவது நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது.
இதுவரை, அமெரிக்கா, ரஷ்ய மற்றும் ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சி ஆகியவை சூரியனை ஆய்வு செய்வதற்காக தனித்தனியாகவும் சில நேரங்களில் கூட்டாகவும் திட்டங்களை மேற்கொண்டுள்ளன. இப்போது இஸ்ரோ அத்திட்டங்களுக்கு இணையாக ஆதித்யா எல்1 உடன் களமிறங்கியுள்ளது.

பட மூலாதாரம், ISRO
இஸ்ரோவால் ஏவப்பட்ட ஆதித்யா எல்1 அதன் குறிப்பிட்ட இலக்கை இன்று அடையும்.
2023 ஆம் ஆண்டு செப்டம்பர் 2 ஆம் தேதி ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி நிலையத்தில் இருந்து சூரிய ஆராய்ச்சிக்காக ஆதித்யா எல்1 விண்கலத்தை இஸ்ரோ விண்ணில் செலுத்தியது.
இஸ்ரோவின் ஆதித்யா எல்1 திட்டம் சந்திரயான்-3 போன்றே நீள் வட்டப்பாதையில் பூமியைச் சுற்றி வந்து, படிப்படியாக தனது சுற்றுப்பாதையை அதிகரித்து சூரியனை நோக்கி நீண்ட பயணத்தை மேற்கொண்டு, பூமியிலிருந்து 15 லட்சம் கிலோமீட்டர் தொலைவில் உள்ள முதல் லக்ராஞ்சியன் புள்ளியை அடைந்தது.
ஜனவரி 6, 2024 அன்று மாலை முதல் லக்ராஞ்சியன் புள்ளியைச் சுற்றி நிலவும் பூஜ்ஜிய ஈர்ப்பு விசையுள்ள சுற்றுப்பாதையில் நுழையும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.
லக்ராஞ்சியன் புள்ளிக்கு அருகில், பூமி மற்றும் சூரியனின் ஈர்ப்பு விசைகள் பூஜ்ஜியமாக இருக்கின்றன. எனவே எந்த ஒரு பொருளையும் அந்த இடத்தில் எந்த விசையும் இல்லாமல் நிலையாக வைத்திருக்க முடியும்.
அதனால்தான் ஆதித்யா எல்1-யை இஸ்ரோ அங்கு அனுப்பியது. ஆனால் அங்கும் சந்திரன் மற்றும் பிற கோள்களின் ஈர்ப்பு விசைகள் குறைந்த அளவில் இருக்கும். அதனால்தான் இஸ்ரோ ஆதித்யா எல்1 விண்கலத்தை அந்த லக்ராஞ்சியன் புள்ளியைச் சுற்றி பூஜ்ஜியம் ஈர்ப்பு விசையுள்ள சுற்றுப்பாதையில் செலுத்தப் போகிறது.
ஆதித்யா எல்1 பூஜ்ஜிய சுற்றுப்பாதையை அடைந்தவுடன், அது தொடர்ந்து ஐந்து ஆண்டுகளுக்கு செயல்படும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.

பட மூலாதாரம், Getty Images
சூரியனுக்கும் பூமிக்கும் இடையே இருக்கும் லக்ராஞ்சியன் புள்ளி 1 இல் இருந்துகொண்டு ஆதித்யா எல்1 ஆய்வு செய்கிறது.
ஆதித்யா எல்1-ல் உள்ள 7 சாதனங்கள்
இஸ்ரோ வெளியிட்டுள்ள விவரங்களின்படி, சூரியனை ஆய்வு செய்வதற்காக இந்தியாவால் ஏவப்பட்ட முதல் விண்கலம் ஆதித்யா எல்1 ஆகும். ஆனால் இத்திட்டம் ஒரு முழு அளவிலான சூரிய கண்காணிப்பு திட்டம் அல்ல. இருப்பினும் இஸ்ரோ இதனை விண்வெளி அடிப்படையிலான கண்காணிப்பு வகுப்பு ஆரிய ஆய்வு 2 என்று வர்ணித்துள்ளது.
இது சூரியனின் மேற்பரப்புக்கு அருகில் செல்லாது. ஆனால் சூரியனுக்கும் பூமிக்கும் இடையிலான தூரத்தில் நூறில் ஒரு பங்கு வரை சென்று அங்கிருந்து ஆய்வுகளை மேற்கொள்கிறது.
ஆதித்யா எல்1 சூரியனின் மேற்பரப்பில் உள்ள கரோனாவை தொடர்ந்து கண்காணிக்கும். இதற்காக ஆதித்யா எல்1ல் ஏழு கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.
இதில் நான்கு கருவிகள் தொடர்ந்து சூரியனை நோக்கி பார்வையைச் செலுத்தி ஆராய்ச்சி செய்யும். மற்ற மூன்று கருவிகள் லக்ராஞ்சியன் புள்ளி 1க்கு அருகில் உள்ள நிலைமைகளை ஆய்வு செய்து அதில் கிடைக்கும் தகவல்களை இஸ்ரோவுக்கு அனுப்பும்.
இந்த ஏழு கருவிகள் முக்கியமாக கரோனாவின் வெப்பநிலையில் ஏற்படும் மாற்றங்கள், அது வெளிப்படுத்தும் பொருண்மை, ப்ரீ-ஃப்ளேர்ஸ், ஃப்ளேர் செயல்பாடுகள், அவற்றின் பண்புகள், விண்வெளி வளிமண்டலத்தில் ஏற்படும் மாற்றங்கள், மூலக்கூறுகள் மற்றும் அங்குள்ள நிலைமைகளை பகுப்பாய்வு செய்கின்றன. சூரியனில் குரோமோஸ்பியர் மற்றும் கரோனாவில் ஏற்படும் மாற்றங்களை பகுப்பாய்வு செய்வதன் மூலம். அவை அவற்றின் வெப்பம், பிளாஸ்மா, சூரியனின் மேற்பரப்பில் இருந்து சூரிய ஆற்றல் வெளியேற்றம் மற்றும் அவற்றின் எரிப்பு ஆகியவற்றை பகுப்பாய்வு செய்கின்றன.
சூரியனின் கரோனாவின் நிலைமை, அதன் வெப்பமாக்கல் பொறிமுறையை ஆய்வு செய்தல், கரோனாவில் உள்ள பிளாஸ்மாவின் வெப்பநிலை, வேகம் மற்றும் அடர்த்தியை ஆய்வு செய்தல் உள்ளிட்ட பணிகள் இந்த ஆய்வின்போது மேற்கொள்ளப்படும். மேலும், கரோனாவிலிருந்து வெளியேறும் பொருண்மையின் இயக்கவியல், அதன் விளைவுகள், அது உருவாக்கும் கூறுகள், காந்தப் புலம் மற்றும் ஈரப்பின் விளைவை ஆய்வு செய்தல் போன்ற பணிகளை சூரியனைச் சுற்றியுள்ள களம், சூரியக் காற்றின் தோற்றம், அவற்றின் இயக்கம் மற்றும் அவற்றின் நிலை போன்ற பணிகளும் மேற்கொள்ளப்படும்.

பட மூலாதாரம், Getty Images
பூமிக்கு மிக அருகில் உள்ள நட்சத்திரமான சூரியனை ஆராய்வதன் மூலம் பிரபஞ்சத்தைப் பற்றிய கூடுதல் தகவல்களை அறிய முடியும்.
சூரியனைப் பற்றிய தொடர் ஆராய்ச்சி
சூரியனை தொடர்ந்து கண்காணிக்கவும் அதன் நிலைமைகளை ஆய்வு செய்யவும் இஸ்ரோ முக்கியமான ‘பேலோடுகளை’ பயன்படுத்தியுள்ளது. இவற்றில் முதலாவது பேலோடு, சூரியனிலிருந்து வெளியாகும் பிரகாசமான ஒளியைக் கடந்து கரோனாவில் மறைந்திருப்பவற்றைக் கண்டறியும் பணியைச் செய்கிறது. மேலும், இது சூரியனின் கரோனாவைக் கவனித்து, கொரோனா வெளியேற்றும் பொருண்மையின் இயக்கவியலைத் தொடர்ந்து ஆய்வு செய்கிறது.
ஆதித்யா எல்1 போர்டில் உள்ள மற்றொரு கருவி சோலார் அல்ட்ரா வயலட் இமேஜிங் டெலஸ்கோப் ஆகும். இது சூரிய ஒளிக்கோளம், மற்றும் அதன் அருகிலுள்ள புற ஊதாக் கதிர்களில் உள்ள குரோமோஸ்பியர்களைக் கணக்கிடுகிறது. இது சூரிய கதிர்வீச்சு மாறுபாடுகளையும் கணக்கிடுகிறது. கதிர்வீச்சு என்பது ஒரு சதுர மீட்டர் வரம்பில் இருந்து ஒரு நொடியில் எந்த ஒரு பொருளிலிருந்தும் உருவாகும் ஒளி ஆற்றல் ஆகும்.
மற்றொரு சாதனம் ‘சோலார் லோ எனர்ஜி எக்ஸ்ரே ஸ்பெக்ட்ரோமீட்டர்’ என அழைக்கப்படுகிறது. இது ‘சாஃப்ட் எக்ஸ்ரே ஸ்பெக்ட்ரோமீட்டர்’ ஆகும். இது சூரியக் காற்றில் உள்ள சாஃப்ட் எக்ஸ் கதிர்களைப் பற்றி ஆய்வு செய்கிறது. ஆதித்யாவுக்கான நான்காவது பேலோட் பிளாஸ்மா அனலைசர் தொகுப்பு ஆகும். சூரியக் காற்று, அதன் அளவு, சூரியக் காற்றில் உள்ள அயனிகளின் நிலை பற்றிய பகுப்பாய்வு ஆகியவற்றைப் ஆராய்ச்சி செய்ய இது இயக்கப்படுகிறது.
மற்றொரு சாதனம் ‘ஹை எனர்ஜி எல்1 ஆர்பிட்டிங் எக்ஸ்ரே ஸ்பெக்ட்ரோமீட்டர்’ ஆகும். இது முந்தையதைப் போல் அல்லாமல் ஒரு ‘ஹார்ட் எக்ஸ்ரே’ ஸ்பெக்ட்ரோமீட்டர் ஆகும், இது சூரியனில் உற்பத்தி செய்யப்படும் உயர் ஆற்றல் எக்ஸ்-கதிர்களை ஆய்வு செய்கிறது.
மற்றொரு கருவி ‘சோலார் அல்ட்ரா வயலட் இமேஜிங் டெலஸ்கோப்’ ஆகும். அதாவது புற ஊதாக் கதிர்களை ஆய்வு செய்யும் ஒரு தொலைநோக்கி. இது புற ஊதா அலைநீள வரம்பில் உள்ள சூரிய வட்டின் படங்களை எடுத்து இஸ்ரோவுக்கு அனுப்பும்.
மற்றொரு சாதனம், ஆதித்யா ‘சோலார் விண்ட் பார்ட்டிகல் எக்ஸ்பெரிமென்ட்‘ ஆகும். சூரியக் காற்றில் உள்ள புரோட்டான்கள் மற்றும் ஆல்பா துகள்களின் மிகுதியை அளவிட்டு அந்த விவரங்களை இஸ்ரோவுக்கு அனுப்பும்.
ஆதித்யாவுக்கான பிளாஸ்மா அனலைசர் தொகுப்பு சூரியக் காற்று, ஆற்றல் அயனிகள் மற்றும் அவற்றின் ஆற்றல் நிறமாலை ஆகியவற்றை ஆராய்கிறது.
கூடுதலாக, ‘அட்வான்சஸ் ட்ரையாக்ஸியல் ஹை ரிசல்யூஷன் டிஜிட்டல் மேக்னோமீட்டர்’ (Advances Triaxial High Resolution Digital Magnetometer) ஆதித்யா எல் 1க்கு அருகில் உள்ள மற்ற கோள்களின் காந்தப்புல விளைவை அளவிடும். இதில் இரண்டு ‘செட் காந்த உணரிகள்’ உள்ளன. இந்த சென்சார்கள் ஆதித்யா எல்1 இல் இல்லாமல் ஆனால் அதிலிருந்து ஆறு மீட்டர் தொலைவில் உள்ளது. அதாவது ஆதித்யா எல்1 ஆறு மீட்டர் நீளமுள்ள கம்பி போன்ற அமைப்பைக் கொண்டுள்ளது. அந்த கம்பியின் பின்பகுதியில் சென்சார் மற்றும் நடுவில் மற்றொரு மேக்னடோசென்சர் மூன்று மீட்டர் தொலைவில் உள்ளது.
எனவே, ஆதித்யா எல் 1 இல் நிறுவப்பட்ட ஏழு கருவிகள்களில் நான்கு சூரியன், சூரியனின் மேற்பரப்பில் உள்ள கரோனா மற்றும் பிற நிலைமைகளை ஆய்வு செய்யும். மீதமுள்ள மூன்று பேலோடுகள் ஆதித்யா எல்1 இருக்கும் இடத்தில் உள்ள நிலைமைகளை ஆய்வு செய்து, அந்தத் தகவலை இஸ்ரோவுக்கு அனுப்பும்.

பட மூலாதாரம், X/ISRO
சூரியனைப் பற்றிய ஆராய்ச்சியின் தேவை என்ன?
பிரபஞ்சத்தின் தோற்றம் மற்றும் எதிர்காலம் பற்றி அறிய நட்சத்திரங்கள் முக்கிய அடிப்படையாக இருக்கின்றன. பூமிக்கு மிக அருகில் உள்ள நட்சத்திரமான சூரியனை ஆராய்வதன் மூலம் பிரபஞ்சத்தைப் பற்றிய கூடுதல் தகவல்களை அறிய முடியும். பூமியில் சூரியனைப் போன்ற நட்சத்திரங்களின் நிலைமைகளை உருவாக்குவது மற்றும் அவற்றை ஆராய்ச்சி செய்வது கிட்டத்தட்ட சாத்தியமற்றது.
எனவேதான் சூரியனை நேரடியாக ஆய்வு செய்ய விண்வெளி நிறுவனங்கள் முயற்சி செய்து வருகின்றன. சூரியனைப் பற்றிய தகவல்களைத் தெரிந்துகொள்ள மட்டுமின்றி, தொடர்ந்து சூரியனைக் கண்காணிக்கவும் ஆதித்யா எல்1 என்ற விண்கலத்தை இஸ்ரோ அனுப்பிவைத்துள்ளது.
சூரியனின் மேற்பரப்பில் ரசாயன எதிர்வினைகளால் ஏற்படும் சூரிய புயல்களை முன்கூட்டியே கண்டறியவும் இந்த சோதனை உதவும்.
சூரியன் ஒரு மாறும் நட்சத்திரம். அதாவது சூரியனில் தொடர்ச்சியான அணுக்கரு இணைவு மூலம் அதிக அளவு ஆற்றல் வெளியிடப்படுகிறது. எப்போதாவது பெரிய அளவிலான சூரியப் புயல்கள் சூரியனின் மேற்பரப்பில் இருந்து சூரிய மண்டலத்தில் வெளியிடப்படுகின்றன.
அத்தகைய சூரியப் புயல் பூமியை நோக்கி விரைந்தால், அதன் தாக்கம் பல இடையூறுகளை ஏற்படுத்தும்.
பூமியின் வளிமண்டலம் மற்றும் புவியின் காந்தப்புலம் காரணமாக, இந்த சூரியக் காற்று பூமியின் மேற்பரப்பை நேரடியாக அடைய முடியாது. ஆனால் வானத்தில் உள்ள செயற்கைக்கோள்கள், தரையில் உள்ள தகவல் தொடர்பு அமைப்புகள் மற்றும் மின் கட்டுமானங்கள் ஆகியற்றிற்கு ஆபத்து ஏற்படக்கூடும்.
சர்வதேச விண்வெளி நிலையம் போன்றவற்றில் பணிபுரியும் விண்வெளி வீரர்கள் நேரடியாக இத்தகைய சூரியப் புயலினால் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. எனவே, அவற்றை ஆரம்பத்திலேயே அடையாளம் காண்பது அவசியம். ஆதித்யா எல்1 என்ன செய்யப் போகிறது என்பதற்கான பதில் இதுதான்.

பட மூலாதாரம், X/TWITTER
ஆதித்யா எல்1 என்று பெயர் சூட்டப்பட்டது ஏன்?
சூரியனைப் பற்றிய ஆராய்ச்சிக்காக பூமியில் பல சூரிய ஆய்வுக் கூடங்கள் உள்ளன. ஆனால் பூமியின் வளிமண்டலம் என்ற தடுப்பு இருப்பதால் சூரியனின் முழு அளவையும் பூமியில் இருந்தே ஆய்வு செய்ய இயலாது.
குறிப்பாக சூரியனைச் சுற்றி இருக்கும் கரோனாவைப் பற்றி ஆராய்ச்சி செய்ய, பூமியின் வளிமண்டலத்திற்கு அப்பால் செல்லவேண்டும். பூமிக்கும் சூரியனுக்கும் இடையே உள்ள லக்ராஞ்சியன் புள்ளி 1 க்கு அருகில் உள்ள கண்காணிப்பு நிலையங்கள் ஒவ்வொரு கணத்திலும் சூரியனை நேரடியாகப் பார்க்க முடியும். அந்த கண்காணிப்பு நிலையங்களுக்கும் சூரியனுக்கும் இடையில் எந்த தடையும் இல்லை. அதனால்தான் சூரியனில் இருந்து வரும் சூரியப் புயல்களை அவற்றால் முன்கூட்டியே கண்டறிய முடியும்.
சூரியனில் ஆய்வு நடத்தப் போவதால், இந்த ஆய்வுக் கலத்துக்கு ஆதித்யா எனப் பெயரிடப்பட்டது. ஆதித்யா என்றால் சூரியன்.
சூரியன் மற்றும் பூமியின் மையமான லக்ராஞ்சியன் புள்ளி 1க்கு அருகில் ஏவப்பட உள்ளதால், இஸ்ரோ இந்த மிஷனுக்கு ஆதித்யா எல்1 என்று பெயரிட்டுள்ளது.
பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் ஐந்து லக்ராஞ்சியன் புள்ளிகள் உள்ளன. ஆனால் இஸ்ரோ ஆதித்யா எல்1 ஐ லக்ராஞ்சியன் புள்ளி 1க்கு அருகில் அனுப்புகிறது. ஏனெனில் இது பூமிக்கும் சூரியனுக்கும் இடையே பூமியை நோக்கிய தூரத்தில் நூறில் ஒரு பங்காகும். அதாவது 15 லட்சம் கிலோமீட்டர் தூரம். லக்ராஞ்சியன் புள்ளி 2, பூமிக்கு பின்னால் இருப்பதாலும், பூமியின் வடிவம் தடையாக இருப்பதாலும், அங்கிருந்து சூரியனைப் பற்றி ஆராய்ச்சி செய்வது கடினம்.
லக்ராஞ்சியன் புள்ளி 3 சூரியனுக்குப் பின்னால் இருப்பதால் அங்கு செல்வதும் மிகவும் கடினம். லக்ராஞ்சியன் புள்ளி 4 மற்றும் 5 ஆகியவை மிகத் தொலைவில் உள்ளன. எனவே இஸ்ரோ தனது ஆய்வுக் கலத்தை லக்ராஞ்சியன் புள்ளி 1 க்கு அருகில் அனுப்பியுள்ளது.
இந்த ஐந்து புள்ளிகளில், 4 மற்றும் 5 க்கு அருகில் உள்ள கோள்கள் நிலையானவை. ஆனால் மற்ற மூன்று புள்ளிகளுக்கு அருகில் உள்ள விண்பொருள்கள் நிலையற்றவை. அதாவது காலப்போக்கில் இரண்டில் ஒன்று பிரபஞ்சத்தின் ஈர்ப்பு விசையின் கீழ் வரும். அதனால்தான் அவ்வப்போது அவற்றில் சில எரிபொருளை எரித்து தங்கள் நிலையை சரி செய்து கொள்கின்றன.
ஆதித்யா எல்1 தனது பயணத்தின் போது சூரியனைப் பற்றி ஏற்கனவே நிறைய ஆராய்ச்சி செய்து அந்த தகவலை இஸ்ரோவுக்கு அனுப்பியுள்ளது. இது இன்னும் ஐந்து ஆண்டுகளுக்கு அதன் குறிப்பிட்ட சுற்றுப்பாதையில் இருக்கும் என்பதுடன் சூரியனை தொடர்ந்து ஆய்வு செய்து அந்த தகவலை இஸ்ரோவுக்கு அனுப்பும். இந்நிலையில், ஆதித்யா எல்1 வழங்கும் தகவல்கள் மற்ற நாடுகளின் விண்வெளி நிறுவனங்களுக்கும் இந்தியாவுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்தார்.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்