
பட மூலாதாரம், Getty Images
2023 உலகக் கோப்பையில், ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் இந்தியா- நியூசிலாந்து இடையிலான லீக் போட்டி தரம்சாலாவில் இன்று மதியம் 2 மணிக்கு தொடங்கியது.
டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பந்து வீச்சை தேர்வு செய்தார்.
நியூசிலாந்து அணி சார்பில் தொடக்க வீரர்களாக டெவோன் கான்வே – வில் யங் ஜோடி களமிறங்கியது. இந்தியா சார்பில் வழக்கம் போல் வேகப்பந்து வீச்சாளர்களான ஜஸ்பிரித் பும்ரா – முகமது சிராஜ் ஆகியோர் தாக்குதலைத் தொடுத்தனர்.
ஜஸ்பிரித் பும்ரா சிறப்பாக பந்து வீசி முதல் ஓவரை மெய்டனாக வீசினார். நியூசிலாந்து வீரர் டெவோன் கான்வேயால் ஒரு ரன் கூட எடுக்க முடியவில்லை.
நியூசிலாந்து அணி வீரர்கள் ரன் சேர்ப்பதை கட்டுப்படுத்தி தொடக்க விக்கெட்டுகளை சிறிது நேரத்திலேயே வீழ்த்தி அந்த அணிக்கு இருவரும் நெருக்கடி கொடுத்தனர்.
நியூசிலாந்து அணிக்காக நடப்புத் தொடரில் அதிக ரன்களை குவித்துள்ள டெவோன் கான்வே, நான்காவது ஓவரில் முகமது சிராஜ் பந்தில் ரன் ஏதும் எடுக்கா நிலையிலேயே ஆட்டமிழந்துவெளியேறினார். நியூசிலாந்து அணி 9 ரன்களில் முதல் விக்கெட்டை பறிகொடுத்தது.

பட மூலாதாரம், Getty Images
கான்வே ரன் எடுக்காமலேயே வெளியேறும் நிலை ஏற்பட்டது.
பும்ரா, சிராஜ் பந்துகளில் ரன் சேர்க்க நியூசிலாந்து வீரர்கள் மிகவும் சிரமப்பட்டனர். இதனால், முதல் 4 ஓவர்களில் 19 பந்துகளில் நியூசிலாந்து அணி ரன் ஏதும் எடுக்கவில்லை.
பும்ராவும் சிராஜும் தொடர்ந்து மிகத் துல்லியமாக பந்துவீச, நியூசிலாந்து அணி முதல் 6 ஓவர்களில் 13 ரன்கள் மட்டுமே எடுத்தது.
எட்டாவது ஓவரை வீச வந்த முகமது ஷமி, தன் பங்கிற்கு தொடக்க வீரர் வில் யங்கை ஆட்டமிழக்கச் செய்தார். யங் 27 பந்துகளில் 17 ரன்களை எடுத்தார். 10 ஓவர்கள் வரை நியூசிலாந்து அணி 2 விக்கெட்டுக்கு 34 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது.

பட மூலாதாரம், Getty Images
டேரல் மிட்செல் 130 ரன்களை எடுத்தார்.
ரச்சின் ரவீந்திரா கேட்சை தவறவிட்ட ஜடேஜா
11வது ஓவரில், ரச்சின் ரவீந்திரா ஷமியின் ‘அருமையான’ பந்தை பேக்வர்ட் பாயிண்டில் ஆட, பந்து நேராக அங்கு நின்றிருந்த இந்தியாவின் மிகச்சிறந்த பீல்டர் ரவீந்திர ஜடேஜாவின் கைகளுக்குச் சென்றது. ஆனால் அவரால் அதைப் பிடிக்க முடியவில்லை. ரச்சின் அந்த வாய்ப்பை நன்றாகப் பயன்படுத்திக்கொண்டார்.
டேரல் மிட்செல் – ரவீந்திரா ஜோடி களத்தில் நன்றாக நிலைத்துவிட்ட பிறகு தங்களது ஆட்டத்தில் வேகத்தை படிப்படியாக அதிகரித்தனர். 21 ஓவரில்தான் நியூசிலாந்து அணி 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 100 ரன்களை கடந்தது.
8 வது ஓவரில் 2 வது விக்கெட்டை எடுத்த இந்திய அணி பந்துவீச்சாளர்கள் ரச்சின் ரவீந்திரா – மிட்செல் ஜோடியை பிரிக்க முடியாமல் திணறிவிட்டனர்.

பட மூலாதாரம், Getty Images
ஷமியின் அருமையான பந்தை ரச்சின் ரவீந்திரா சிறப்பாகக் கையாண்டார்.
ஆட்டத்தின் 23வது ஓவரில் ரச்சின் ரவீந்திரன் அரை சதத்தை பூர்த்தி செய்தார். நியூசிலாந்து வீரர் ரச்சின் ரவீந்திரா 6 பந்துகளில் 5 பவுண்டரிகள் 1 சிக்ஸருடன் அரைசதம் அடித்தார். 25-வது ஓவரில் இந்த ஜோடி சதம் அடித்தது.
நிதானமாக ஆடிய டேரல் மிட்செல் 27வது ஓவரில் அரை சதத்தை பூர்த்தி செய்தார். 60 பந்துகளில் 3 பவுண்டரிகள் 2 சிக்ஸர்களுடன் அவர் இந்த ரன்களை சேர்த்தார்.
இந்திய பந்துவீச்சாளர்களை கலங்கடித்து, நியூசிலாந்து அணியை வலுவான நிலைக்கு இட்டுச் சென்ற ரச்சின் ரவீந்திரா – மிட்செல் ஜோடியை ஒருவழியாக முகமது ஷமி பிரித்தார். அவர் வீசிய ஆட்டத்தின் 34-வது ஓவரில், லாக் ஆனில் ஷுப்மான் கில்லிடம் கேட்ச் கொடுத்து ரச்சின் ரவீந்திரா ஆட்டமிழந்தார். அவர், 87 பந்துகளில் 75 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார்.
ரச்சின் ரவீந்திரா – மிட்செல் ஜோடி மூன்றாவது விக்கெட்டுக்கு 159 ரன்கள் சேர்த்தது. இதனால் நியூசிலாந்து அணி வலுவான நிலையை எட்டியது.

பட மூலாதாரம், Getty Images
உலகக்கோப்பையில் மிட்செல் முதல் சதம்
37வது ஓவரில் நியூசிலாந்து அணி கேப்டன் டாம் லாதமை எல்பிடபிள்யூ முறையில் குல்தீப் யாதவ் அவுட்டாக்கினார். குல்தீப் ஒருநாள் போட்டியில் மூன்றாவது முறையாக லதாமின் விக்கெட்டை வீழ்த்தினார். ஏழு பந்துகளை சந்தித்த அவர் 5 ரன்கள் எடுத்தார்.
மறுபுறம் தொடர்ந்து அபாரமாக ஆடிக் கொண்டிருந்த மிட்செல் உலகக்கோப்பையில் தனது முதல் சதத்தை பூர்த்தி செய்தார்.
இந்த உலகக் கோப்பையில் டேரன் மிட்செல் தனது முதல் சதத்தை 41வது ஓவரில் அடித்தார். 42 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 243 ரன்கள் எடுத்திருந்தது. கைவசம் 6 விக்கெட்டுகள் இருந்ததால் அந்த அணி 300 ரன்களுக்கும் மேலாக குவிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

பட மூலாதாரம், Getty Images
முகமது ஷமி அபாரம்
ஆனால், கடைசிக் கட்டத்தில் நியூசிலாந்து அணியால் எதிர்பார்க்கப்பட்டபடி ரன்களை குவிக்க முடியவில்லை. இந்திய வீரர்கள் சிறப்பான பந்துவீச்சால் அவர்களை கட்டிப் போட்டனர். குறிப்பாக முகமது ஷமி தனது துல்லியமான பந்துவீச்சால் நியூசிலாந்து வீரர்களை ஸ்டம்புகளை எகிறச் செய்தார்.
அவரது பந்துவீச்சில் சாண்ட்னர், ஹென்றி ஆகியோர் அடுத்தடுத்து கிளீன் போல்டாயினர். டெரில் மிட்செலையும் அவரே காலி செய்தார். மிட்செல் 127 பந்துகளில் 9 பவுண்டரிகள் 5 சிக்ர்களுடன் 130 ரன்களைக் குவித்தார்.
நியூசிலாந்து அணி சரியாக 50 ஓவர்களில் 273 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்தியா தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி 10 ஓவர்கள் வீசி 54 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகளையும், பும்ரா, சிராஜ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

பட மூலாதாரம், Getty Images
இந்திய அணி தொடக்கம் முதலே அதிரடி
274 ரன் என்ற வெற்றி இலக்கை நோக்கி இந்திய அணி களமிறங்கியது. நல்ல பார்மில் இருந்த கேப்டன் ரோகித் சர்மாவும், சுப்மான் கில்லும் தொடக்கம் முதலே அதிரடியில் இறங்கினர்.
ரோகித் வாண வேடிக்கை காட்ட, சுப்மான் கில் பவுண்டரிகளை விளாசினார். இதனால், இந்திய அணியின் ரன் ரேட் ஓவருக்கு 6 ரன் என்ற விகிதத்திற்கு மேலேயே தொடர்ந்து இருந்தது.
எட்டாவது ஓவரில் ஹென்றி வீசிய பந்தில் பவுண்டரி அடித்ததன் மூலம் ஒருநாள் போட்டிகளில் புதிய மைல்கல்லை சுப்மான் கில் தொட்டார். அதாவது, குறைந்த இன்னிங்ஸ்களில் 2 ஆயிரம் ரன்களை கடந்த வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார்.
இருவரும் தொடர்ந்து அதிரடி காட்டியதால் இந்திய அணி 11 ஓவர்களிலேயே 71 ரன்னை தொட்டது. அப்போதுதான், இந்திய அணி முதல் விக்கெட்டையும் இழந்தது. கேப்டன் ரோகித் சர்மா 40 பந்துகளில் 46 ரன்கள் எடுத்த நிலையில் பெர்குசன் வீசிய பந்தில் அவுட்டானார்.
இதையடுத்து, சேஸிங் கிங் என்று வர்ணிக்கப்படும் நட்சத்திர வீரர் விராட் கோலி ரசிகர்களின் கரகோஷங்களுக்கு இடையே களமிறங்கினார். ஆனால், அடுத்த சிறிது நேரத்திலேயே மற்றொரு தொடக்க வீரர் சுப்மான் கில்லும் வீழ்ந்தார். பெர்குசன் வீசிய அடுத்த ஓவரில் அப்பர் கட் ஆடி தேர்ட் மேன் திசையில் கேட்ச் கொடுத்து அவர் பெவிலியன் திரும்பினார். அவர் 31 பந்துகளில் 26 ரன்கள் எடுத்தார்.

பட மூலாதாரம், Getty Images
பனிமூட்டத்தால் ஆட்டத்தில் பாதிப்பு – கோலி, ஸ்ரேயாஸ் அதிரடி
இதையடுத்து, கோலியுடன் ஸ்ரேயாஸ் இணைந்தார். இருவரும் நிலைத்து ஆடியதுடன் அவ்வப்போது பவுண்டரிகளை விளாசி ரன் ரேட்டை குறையாமல் பார்த்துக் கொண்டனர். இதனால், 15 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 91 ரன்கள் எடுத்தது. 16-வது ஓவரில் இந்திய அணி ஃ100 ரன்களை எட்டிய நிலையில் பனி மூட்டத்தால் ஆட்டம் சிறிது நேரம் தடைபட்டது. பின்னர் சிறிது நேரத்தில் ஆட்டம் மீண்டும் தொடங்கியது.
கோலி – ஸ்ரேயாஸ் ஆகிய இருவருமே துரிதமாக ரன் சேர்ப்பதில் கவனம் செலுத்தியதால், இந்திய அணி 20 ஓவர்கலேயே121 ரன்களை கடந்துவிட்டது. முதல் 20 ஓவர்களில் இந்திய அணி 21 பவுண்டரிகளை விளாசியிருந்தது.
ஆனால், அடுத்த சிறிது நேரத்தில் 29 பந்துகளில் 33 ரன்கள் எடுத்திருந்த ஸ்ரேயாஸ் அவுட் ஆனார். அவர் டிரென்ட் போல்ட் பந்துவீச்சில் கான்வேயிடம் கேட்ச் கொடுத்தார். அடுத்தபடியாக, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் இந்தியாவுக்கு கைகொடுத்த கே.எல்.ராகுல் களமிறங்கி கோலியுடன் ஜோடி சேர்ந்தார். இருவரும் சற்று நிதானம் காட்ட 25 ஓவர்கள் முடிவடைந்த நிலையில் இந்திய அணி 140 ரன்கள் எடுத்திருந்தது.

பட மூலாதாரம், Getty Images
சிக்கலின்றி முன்னேறிய இந்தியா
மிகுந்த எச்சரிக்கையுடன் ஆடிய கோலி – ராகுல் ஜோடி இந்திய அணியின் ரன் ரேட்டையும் தேவையான அளவுக்கும் மேல் தொடர்ந்து பராமரிப்பதில் கண்ணும் கருத்துமாக இருந்தது. இதனால், இந்திய அணிக்கு சிக்கல் எழவே இல்லை. இந்திய அணி வெற்றியை நோக்கி சீராக முன்னேறிக் கொண்டிருந்த வேளையில் கே.எல்.ராகுல் 35 பந்துகளில் 27 ரன்கள் எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தார்.
ராகுலுக்குப் பதிலாக சூர்யகுமார் யாதவ் களம் காண, மறுபுறம் விராட் கோலி அரைசதம் அடித்தார். 60 பந்துகளில் 5 பவுண்டரிகள் 1 சிக்ஸருடன் அவர் இந்த ரன்களை எட்டினார். முதல் 47 பந்துகளில் 28 ரன்களை மட்டுமே எடுத்த கோலி அடுத்த 13 பந்துகளில் 28 ரன்களை குவித்தார்.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சூர்ய குமார் யாதவ் 4 பந்துகளில் 2 ரன்கள் எடுத்த நிலையில் துரதிர்ஷ்வசமாக ரன் அவுட் ஆனார். ஆனால், கோலி களத்தில் இருந்ததால் இந்திய அணி நெருக்கடி எதையும் எதிர்கொள்ளவில்லை.
35 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 192 ரன்களை இந்திய அணி எடுத்திருந்தது. அடுத்த 15 ஓவர்களில் இந்திய அணியின் வெற்றிக்கு 82 ரன்கள் தேவைப்பட்டன. களத்தில் கோலி – ரவீந்திர ஜடேஜா ஜோடி இருந்தது. 36-வது ஓவரில் அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாசி ஜடேஜா அசத்தினார்.
40 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 225 ரன்கள் எடுத்தது. விராட் கோலி 71 ரன்களும் ஜடேஜா 17 ரனகளுடனும் களத்தில் நின்றனர்.
இருவரும் களத்தில் நிலைத்து அதேநேரத்தில், அதிரடியாகவும் விளையாடியதால் இந்திய அணியின் வெற்றி கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. கடைசி 4 ஓவர்களில் இந்திய அணியின் வெற்றிக்கு 15 ரன்களே தேவைப்பட்டன. விராட் கோலி 82 மற்றும் ஜடேஜா 35 ரன்களுடன் களத்தில் இருந்தனர். இதனால், விராட் கோலி மீண்டும் சதம் அடிக்க வாய்ப்பு இருந்தது.

பட மூலாதாரம், Getty Images
சதத்தை எட்ட முடியால் கோலி ஏமாற்றம்
விராட் கோலி 90 ரன்கள் கடந்த உடன் வெற்றிக்கான இலக்கு ஏழு ரன்கள் இருந்தது. அப்போது ஆட்டத்தின் 47வது ஓவரில் கடைசி பந்தை எதிர்கொண்ட ஜடேஜா அடித்தாட முற்படாமல் பந்தை தடுத்துவிட்டார். அந்த பந்தில் பவுண்டரியோ இல்லை சிங்கிளோ எடுத்திருந்தால் இந்தியாவின் வெற்றி இன்னும் விரைவில் கிடைத்திருக்கும். ஆனால் விராட் கோலி சதம் அடிக்க வேண்டும் என்பதற்காக அவர் ரன்களை ஓடாமல் தடுப்பாட்டத்தில் ஈடுபட்டார்.
இந்தியாவின் வெற்றிக்கும் கோலியின் சதத்திற்கும் ஏழு ரன்கள் தான் இருந்தது. இதன் பிறகு 48வது ஓவர் தொடக்கத்தில் விராட் கோலி இரண்டு ரன்கள் அடித்தார். இரண்டாவது பந்து ரன் எதும் எடுக்கவில்லை. மூன்றாவது ஓவரில் பந்து பவுண்டரிக்கு அருகே சென்றபோதும் விராட் கோலி ரன் ஓடாமல் நின்று விட்டார். கடைசியில் விராட் கோலி சதம் அடிக்க வேண்டும் என்பதற்காக 95 ரன்கள் இருந்த போது தூக்கி அடித்து எல்லைக்கோடு அருகே கேட்ச் ஆனார். இதனால், வங்கதேசத்திற்கு எதிரான முநதைய போட்டியில் செய்ததைப் போல சதம் அடிக்க வேண்டும் என்ற கோலியின் எண்ணம் ஈடேறவில்லை.
அடுத்து முகமது ஷமி களமிறங்க, இந்திய அணி அந்த ஓவரின் கடைசிப் பந்தில் வெற்றி இலக்கை எட்டியது. ஷமி ஒரு ரன்னுடனும், ஜடேஜா 39 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

பட மூலாதாரம், Getty Images
கோலி – ஜடேஜா செயல் நியாயமா?
கோலி 90 ரன்களை எட்டிய பிறகு அவரும் ஜடேஜாவும் ஆடிய விதம் அணியின் வெற்றியை விட தனிநபர் சாதனைகளே முக்கியமானதாக மாறிவிட்டதோ என்ற சந்தேகத்தை ரசிகர்களிடையே எழுப்பியுள்ளது. உலகக்கோப்பை போன்ற முக்கியமான தொடரில் சதத்தை விட அணியின் அணியின் வெற்றியும் ரன் ரேட்டும் தான் முக்கியம் என்பதை எந்த ஒரு வீரர்களும் புரிந்து கொள்ளாமல் இருக்கிறார்களா என்று ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் விமர்சனங்களை முன்வைத்துள்ளனர்.
கோலியின் இந்த செயல் நியாயமா என்றும் சிலர் கேள்வி எழுப்பியுள்ளனர். இருவரும் இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தால் இந்திய அணியின் வெற்றி சற்று முன்னதாகவே கிடைத்திருக்கும் என்று அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
கோலி எட்டிய மைல்கற்கள்
- நடப்பு உலகக் கோப்பையில் அதிக ரன் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார் விராட் கோலி. 5 ஆட்டங்களில் 313 ரன்கள் எடுத்து அவர் முதல் இடத்தில் இருக்கிறார்.
- ஐசிசி 50 ஓவர் போட்டிகளில் 3,000 ரன்களை கடந்த முதல் வீரர் என்ற சாதனையை விராட் கோலி படைத்துள்ளார். நடப்புத் தொடரில் 4 போட்டிகளில் அரை சதம் கடந்த வீரர் என்ற பெருமையையும் அவர் பெற்றார்.

பட மூலாதாரம், Getty Images
சுப்மான் கில் புதிய சாதனை
சுப்மான் கில் 14 ரன்களை எட்டிய போது ஒருநாள் போட்டிகளில் 2 ஆயிரம் ரன்களை குறைந்த இன்னிங்ஸ்களில் எட்டிய வீரர் என்ற சாதனையை படைத்தார். அதாவது, தனது 38-வது இன்னிங்சில் அவர் 2 ஆயிரம் ரன்களை கடந்துள்ளார். தென் ஆப்ரிக்க வீரர் ஹாஷிம் ஆம்லா 40 போட்டிகளில் 2 ஆயிரம் ரன்கள் எட்டியதே இதுவரை சாதனையாக இருந்து வந்தது.

பட மூலாதாரம், Getty Images
திருப்பம் தந்த ஷமி
இந்த உலகக் கோப்பையில் முதன்முறையாக விளையாடும் வாய்ப்பைப் பெற்ற முகமது ஷமி, இந்தப் போட்டியில் இந்தியாவின் வெற்றிகரமான பந்துவீச்சாளராகத் திகழ்ந்தார். அவரது பந்து வீச்சில் மீண்டும் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
சரியாக ஒரு மாதத்திற்கு முன்பு (செப்டம்பர் 22, 2023 அன்று), அவர் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தினார் என்பது நினைவுகூரத்தக்கது.
ஒருநாள் போட்டிகளில் முகமது ஷமி 5 விக்கெட்டுகளை வீழ்த்துவது இது மூன்றாவது முறையாகும்.
95வது ஒருநாள் போட்டியில் விளையாடிய முகமது ஷமி 176 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
இந்த இன்னிங்ஸின் போது, ஒரு நாள் போட்டிகளில் 173 விக்கெட்டுகளை இர்பான் பதானின் சாதனையை ஷமி விட்டுச் சென்றார்.
தற்போது ஒருநாள் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இந்தியாவின் 9வது பந்துவீச்சாளர் என்ற பெருமையை ஷமி பெற்றுள்ளார். அவரே ஆட்டநாயகன் விருதையும் பெற்றார்.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்