குஜராத்: பில்கிஸ் பானு வழக்கில் 11 குற்றவாளிகள் விடுதலை ரத்து பா.ஜ.க.வுக்கு எதிராக திரும்புமா?

குஜராத்: பில்கிஸ் பானு வழக்கில் 11 குற்றவாளிகள் விடுதலை ரத்து பா.ஜ.க.வுக்கு எதிராக திரும்புமா?

பில்கிஸ் பானு வழக்கு

பட மூலாதாரம், Getty Images

2022ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி இந்தியாவின் சுதந்திர தினமாக மட்டும் விவாதிக்கப்படவில்லை.

அதே நாளில், 2002 குஜராத் கலவரத்தின் போது பில்கிஸ் பானு கூட்டுப் பாலியல் வன்முறை மற்றும் அவரது குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் கொல்லப்பட்டது தொடர்பான வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த 11 பேர், தண்டனைக் காலம் குறைக்கப்பட்டு குஜராத்தில் உள்ள கோத்ரா சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.

இந்நிலையில், நேற்று (திங்கள் கிழமை), உச்ச நீதிமன்றம் இந்த 11 குற்றவாளிகளின் தண்டனையை மன்னிப்பதற்கான குஜராத் அரசின் முடிவை ரத்து செய்து, இரண்டு வாரங்களுக்குள் சிறை அதிகாரிகளிடம் சரணடையுமா உத்தரவிட்டது.

குற்றவாளிகளின் தண்டனையை ரத்து செய்வதற்கான மனுவை பரிசீலிப்பது குஜராத் அரசின் அதிகார வரம்பிற்கு அப்பாற்பட்டது என்றும், அந்த வழக்கில் விசாரணை நடைபெற்ற மாநிலமான மகாராஷ்டிராவில் மட்டுமே முடிவெடுக்க முடியும் என்றும், குற்றம் நடைபெற்ற குஜராத் மாநில அரசு அல்ல என்றும் உச்ச நீதிமன்றம் கூறியது.

பில்கிஸ் பானு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

குற்றவாளிகளின் தண்டனையை ரத்து செய்வதற்கான மனுவை பரிசீலிப்பது குஜராத் அரசின் அதிகார வரம்பிற்கு அப்பாற்பட்டது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

குஜராத் அரசு மீது எழுந்துள்ள கேள்வி

திங்கள்கிழமை வெளியான தீர்ப்பில், பில்கிஸ் பானு வழக்கில் தண்டனை அனுபவித்து வந்த 11 குற்றவாளிகளின் தண்டனையை ரத்து செய்வதற்கான கோரிக்கை மனுவை பரிசீலிக்க மகாராஷ்டிரா அரசுதான் பொருத்தமான அரசு என்று உச்ச நீதிமன்றம் கூறியது.

இதற்குக் காரணம், ஜனவரி 21, 2008 அன்று, மும்பையில் உள்ள சிறப்பு சிபிஐ நீதிமன்றம், பில்கிஸ் பானு கூட்டுப் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டு, ஏழு குடும்ப உறுப்பினர்கள் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 11 பேருக்கு மரண தண்டனை விதித்து, பின்னர் மும்பை உயர்நீதிமன்றம் அவர்களின் தண்டனையை குறைத்தது. இந்த இரண்டு முடிவுகளும் மகாராஷ்டிராவில் எடுக்கப்பட்டன.

15 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைத்தண்டனை அனுபவித்த பிறகு, குற்றவாளிகளில் ஒருவரான ராதேஷ்யாம் ஷா, தண்டனையை குறைக்க உச்ச நீதிமன்றத்தை அணுகினார். மேலும் 13 மே 2022 அன்று, உச்ச நீதிமன்றம் நிவாரணம் அளிப்பது குறித்து ஆராய குஜராத் அரசுக்கு உத்தரவிட்டது.

இதற்குப் பிறகு, குஜராத் அரசு ஒரு குழுவை உருவாக்கியது. இந்த குழு, வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 11 பேரின் தண்டனையை மன்னிக்க ஆதரவாக ஒருமனதாக முடிவெடுத்து அவர்களை விடுவிக்க பரிந்துரைத்தது.

இறுதியாக, ஆகஸ்ட் 15, 2022 அன்று, இந்த வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்த 11 குற்றவாளிகள் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.

திங்களன்று, உச்ச நீதிமன்றம், குற்றவாளிகளின் மன்னிப்பு மற்றும் விடுதலையை உறுதி செய்வதில், குஜராத் அரசு 11 குற்றவாளிகளில் ஒருவருக்கு (ராதேஷ்யாம் ஷா) ஒத்துழைப்பு அளிப்பதாகக் கூறியது. அவர் குஜராத் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தோல்வியடைந்த பின்னர் உச்ச நீதிமன்றத்தை ரகசியமாக அணுகி சிறை தண்டனையிலிருந்து விடுவிக்கக் கோரினார். நீதிமன்றத்தில் ஒரு ரிட் மனு தாக்கல் செய்து, உண்மைகள் எவற்றையும் முன்வைக்காமல் தண்டனையை ரத்து செய்யக் கோரினார்.

உண்மைகளை மறைத்தது தொடர்பாக இந்த குற்றவாளிக்கு உச்சநீதிமன்றம் நிவாரணம் வழங்கியபோது, ​​மீதமுள்ள 10 குற்றவாளிகளும் இந்த சூழ்நிலையைப் பயன்படுத்திக் கொண்டு குஜராத் அரசு தங்களுக்கு வழங்கிய அதே நிவாரணத்தை கோரினர் என்று உச்ச நீதிமன்றம் கூறியது.

உச்சநீதிமன்றத்தின் கூற்றுப்படி, குஜராத் அரசின் இந்த நடவடிக்கை சட்டத்தின் அடிப்படைக்கு எதிரானது.

பில்கிஸ் பானு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

தனக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக பில்கிஸ் பானு கடுமையான சட்டப் போராட்டங்களை நடத்திவந்தார்.

பா.ஜ.க.வுக்கு எதிராக திரும்புமா? குஜராத்தில் என்ன நடக்கிறது?

பில்கிஸ் பானு வழக்கில், இந்த 11 குற்றவாளிகளும் மீண்டும் சிறைக்கு செல்வது உறுதி. எனவே இந்த முடிவு பாஜகவுக்கு ஒரு அடியாக இருக்குமோ என்ற கேள்வி எழுவது இயல்பானதே.

உச்ச நீதிமன்றத்தில் மன்னிப்பு ரத்து செய்யப்பட்டது ஒரு பெரிய விஷயம் என்று மூத்த பத்திரிகையாளரும் அரசியல் ஆய்வாளருமான நீரஜா சவுத்ரி கூறுகிறார்.

“மன்னிப்பு கிடைத்த போது, ​​மக்கள் திகைத்துப் போனார்கள். இன்று மத்தியிலும் குஜராத்திலும் பாஜக அரசு உள்ளது. எனவே உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு குஜராத் அரசுக்கு அடியாகும்,” என்கிறார்.

எனவே இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் பாஜகவுக்கு எதிராக முட்டுக்கட்டை போடுமா? நீரஜா சவுத்ரி இது குறித்துப் பேசுகையில், “எதிர்க்கட்சிகள் அரசாங்கத்துக்கு எதிராக முட்டுக்கட்டை போடுவதற்கு பல வாய்ப்புகள் உள்ளன. ஆனால் கிடைத்த வாய்ப்புகளை அவர்களால் சாதகமாக்கிக் கொள்ள முடியவில்லை. குஜராத்தில், எதிர்க்கட்சிகள் அதை ஒரு பிரச்னையாக மாற்றலாம். ஆனால் அங்கு பாஜக மிகவும் வலுவாக இருப்பதால், அது எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தாது,” என்றார்.

இருப்பினும் இதுகுறித்து இப்போது விவாதிப்பது மிகவும் முன்கூட்டியே விவாதிப்பதைப் போன்றது என்றும், ஆனால் நரேந்திர மோதி மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வருகிறாரா என்பதைப் பார்ப்பது சுவாரஸ்யமாக இருக்கும் என்றும் அவர் கூறினார். மேலும், முஸ்லிம்கள் மற்றும் சிறுபான்மையினரை புதிய வழியில் சென்றடைய பிரதமர் மோதி முயற்சிப்பாரா என்பது பற்றியெல்லாம் இப்போது தெரியாது என்றார்.

“அவர் உயர் மட்ட முஸ்லிம்களின் ஆதரவைப் பெற முயற்சிப்பதற்குப் பதிலாக என்ன செய்யப்போகிறார் என கவனிக்க வேண்டும். ஏழை மற்றும் பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களுக்கு அவர் என்ன செய்ய முடியும் என்பதைப் பார்க்க வேண்டும். அவரது மூன்றாவது பதவிக்காலத்தில் அவரது போக்கு எப்படி இருக்கும்?” என்று அவர் கூறினார்.

பில்கிஸ் பானு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

பெண்கள் மீது பரிவு காட்டுவதைப் போல் நடிக்கும் பாஜகவின் முகமூடி கிழிக்கப்பட்டுள்ளது என காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது.

பாஜகவை குறிவைக்கும் எதிர்க்கட்சிகள்

உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்குப் பின் அதுகுறித்து கருத்து தெரிவித்த காங்கிரஸ் கட்சி, பெண்களின் மீதான பாஜகவின் நிலைப்பாட்டைச் சாடியிருக்கிறது.

“பில்கிஸ் பானு பாலியல் வன்முறைக் குற்றவாளிகளை விடுவித்த குஜராத் பாஜக அரசின் பெண்களுக்கு எதிரான நிலைப்பாட்டை உச்ச நீதிமன்றத் தீர்ப்பு அம்பலப்படுத்துகிறது. பெண்களைப் பற்றிய பாஜகவின் சிந்தனை எவ்வளவு கேவலமானது என்பதை இது காட்டுகிறது,” என எக்ஸ் பக்கத்தில் காங்கிரஸ் எழுதியுள்ளது.

மற்றொரு ட்வீட்டில், “தேர்தல் ஆதாயங்களுக்காக நீதியைக் கொல்லும் போக்கு ஜனநாயக அமைப்பிற்கு ஆபத்தானது. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு குற்றவாளிகளின் ஆதரவாளர் யார் என்பதை மீண்டும் நாட்டுக்கு எடுத்துரைத்துள்ளது. பில்கிஸ் பானுவின் அயராத போராட்டம், பாஜக அரசின் ஆணவப் போக்குக்கு எதிராக நீதி வெற்றி பெற்றுள்ளதன் அடையாளம்.” எனத்தெரிவித்துள்ளது.

ஏஐஎம்ஐஎம் (AIMIM) எம்பி அசாதுதீன் ஒவைசி பிடிஐ (PTI) செய்தி நிறுவனத்திடம் பேசுகையில், “பில்கிஸ் பானுவை பாலியல் வன்முறை செய்தவர்களுக்கு பாஜக என்ற ஒரு கட்சி உதவி செய்கிறது என்று நான் முதல் நாளிலிருந்தே கூறி வருகிறேன். தற்போது உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் மூலம் இது மீண்டும் உண்மை என நிரூபிக்கப்பட்டுள்ளது,” எனத்தெரிவித்துள்ளார்.

“பில்கிஸ் பானுவின் துணிச்சலுக்கு நான் தலை வணங்குகிறேன். கொந்தளிப்பான காலங்களை கடந்து சென்றபோது, அவர் எவ்வளவு பயத்தையும் வேதனையையும் அனுபவித்தார் என்பதை அல்லாஹ் மட்டுமே அறிவான்.” என்றார் அவர்.

பாஜகவை குறி வைத்து பேசிய ஓவைசி, “பேட்டி பச்சாவோ, பேட்டி பதாவோ என பெண்கள் அதிகாரம் குறித்து பாஜக பேசுவது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. பில்கிஸ் பானுவுக்கு ஆதரவாக பாஜக நின்றிருக்க வேண்டும். அதற்கு நேதெதிராக அவர்கள் செயல்பட்டுள்ளனர். முதலில் குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டனர். அவர்கள் விடுவிக்கப்பட்ட தவறான முடிவுக்குப் பின்னால் இரண்டு பாஜக எம்எல்ஏக்கள் உள்ளனர். ஒரு பாஜக எம்எல்ஏ இந்த குற்றவாளிகளை பண்பட்டவர்கள் என்று கூறினார்,” எனத் தெரிவித்தார்.

பில்கிஸ் பானு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

குஜராத்தில் பாஜக மிகப்பலமான கட்சியாக இருப்பதால் உச்ச நீதிமன்றத்தின் தற்போதைய உத்தரவு எந்த தாக்கத்தையும் ஏற்படாது என அரசியல் வல்லுனர்கள் கருதுகின்றனர்.

அரசியல் செயல்பாடுகள் மற்றும் விவாதங்கள் அதிகரிக்குமா?

ராஜீவ் ஷா குஜராத்தைச் சேர்ந்த மூத்த பத்திரிக்கையாளர் மற்றும் தற்போது ‘கவுன்டர்வியூ’ என்ற செய்தி இணையதளத்தின் தலைமை ஆசிரியராக உள்ளார்.

பில்கிஸ் பானு வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் அரசியல் தாக்கம் குறித்துப் பேசிய அவர், “இந்த விஷயத்தில் காங்கிரஸ் எவ்வாறு எதிர்வினையாற்றுகிறது என்பதைப் பொறுத்து நிறைய விவாதங்கள் எழ வாய்ப்பிருக்கிறது,” என்று கூறினார்.

மேலும், “இந்த முடிவின் காரணமாக, ஆர்எஸ்எஸ் இதை ஒரு அடி என்று உணர்ந்திருக்க வேண்டும். ஆனால் குஜராத்தில் பாஜக மிகவும் வலுவாக உள்ளது. இதுமட்டுமின்றி அந்த மாநிலத்தில் இருந்து காங்கிரஸ் கிட்டத்தட்ட அழிக்கப்பட்டுள்ளது. சுமார் 13 சதவீத வாக்குகளுடன் ஆம் ஆத்மி கட்சி உருவானது. பிரதமர் மோதியால் எதிர்க்கட்சிகள் பிளவுபட்டு, பாஜக வலுவாக இருக்கும் சூழ்நிலையில், இந்த விவகாரம் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நான் நினைக்கவில்லை,” என்றார் அவர்.

“2017 தேர்தலில் 182 இடங்கள் கொண்ட சட்டப் பேரவையில் பாஜக 99 இடங்களையும் காங்கிரஸுக்கு 77 இடங்களையும் பெற்றதை நினைவில் கொள்ளுங்கள். ஆனால், 2022ல் நடந்த சட்டப் பேரவையில், காங்கிரஸ் 17 இடங்களாக குறைந்த நிலையில், பாஜக 156 இடங்களைக் கைப்பற்றியது.”

குஜராத்தில் பா.ஜ.க, மிகவும் வலுவான நிலையில் இருப்பதாகவும், எந்த ஒரு பிரச்னையாக இருந்தாலும் அதற்கு எதிராக மக்கள் ஆதரவைப் பெறுவது எதிர்க்கட்சிகளுக்கு மிகவும் கடினமாகிவிட்டது என்றும் அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

இந்த விவகாரத்தை காங்கிரஸ் பெரிய பிரச்னையாக்கிப் பிரசாரம் செய்யுமா என்பது உறுதியாகத் தெரியவில்லை என்கிறார் ராஜீவ் ஷா. “இந்த விவகாரத்தில் காங்கிரஸ் பிரசாரம் செய்தாலும், அதை இந்துத்துவாவுக்கு எதிரான நடவடிக்கையாக பாஜக பயன்படுத்த முயற்சிக்கும். எனவே இந்த விவகாரத்தை காங்கிரஸ் கட்சி அரசியல் ரீதியாக பயன்படுத்த முயற்சிக்கும் என்று நான் நினைக்கவில்லை.”

நாடாளும்ன்ற தேர்தலுக்கு முன், இது தேர்தல் பிரச்னையாக மாறும் என்றோ, நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பால், குஜராத் அரசியலில் பரபரப்பு ஏற்படும் என்றோ, தான் நினைக்கவில்லை என, ஷா கூறுகிறார்.

பில்கிஸ் பானு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

பில்கிஸ் பானுவுக்கு ஆதரவாக பல மகளிர் அமைப்புக்களும் களத்தில் இறங்கிப் போராட்டம் நடத்தின.

‘இந்த பிரச்னையை பொதுமக்களிடம் கொண்டு செல்வோம்’

குஜராத் பாஜக செய்தித் தொடர்பாளர் ரித்விஜ் படேலிடம் பிபிசி பேசியது. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு கட்சியின் எதிர்வினையை அறிய விரும்புவதாக அவரிடம் தெரிவித்தபோது, அவர் இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார்.

அதே நேரம், குஜராத் மாநில காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் மணீஷ் தோஷி கூறுகையில், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்குப் பிறகு, பாஜகவின் முகமூடி அவிழ்ந்துவிட்டது எனத்தெரிவித்தார்.

“பாதிக்கப்பட்டவர்களுக்குப் பாதுகாப்பு அளிப்பதும், அவர்களுக்கு நீதி வழங்குவதும்தான் அரசு மற்றும் சட்டத்தின் பொறுப்பு. மாறாக, தவறு செய்தவர்களுக்கு சட்டப் பாதுகாப்பு வழங்குவதுதான் பாஜக அரசின் அணுகுமுறை. குஜராத்தில் அதுதான் நடக்கிறது. குஜராத்தில் இந்த பிரச்னை பெரிதும் அரசியலாக்கப்படுகிறது. நீதிமன்றத்தால் அவர்கள் விடுவிக்கப்பட்ட போது, பெரிய அளவில் தேசத்தைக் கட்டியெழுப்பும் பணிகளைச் செய்துவிட்டு திரும்பி வந்தவர்களைப் போல் வரவேற்கப்பட்டார்கள்.” என்றார் அவர்.

“இதை பாஜக பெரிதும் ஊக்குவித்தது. அரசியல் ஆதாயத்திற்காக ஆடிய ஆட்டத்துக்கு இன்று உச்ச நீதிமன்றம் பாஜகவுக்கு பலத்த சாட்டையடியைக் கொடுத்துள்ளது. இந்த தீர்ப்பு, நடந்தது தவறு என்ற செய்தியை கொடுத்துள்ளது. பாஜகவின் முகமூடி கழற்றப்பட்டு அதன் உண்மை முகம் வெளிப்பட்டு விட்டது.” என்று கூறிய தோஷி, இந்த விவகாரத்தை காங்கிரஸ் கட்சி கண்டிப்பாக மக்கள் முன் கொண்டு செல்லும் என்றார்.

Facebook
Facebook
fb-share-icon
Telegram
WhatsApp
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *