
பட மூலாதாரம், Getty Images
பாரத் மண்டபத்தில் ஐக்கிய அரபு அமிரேட்ஸ் அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நயானை வரவேற்ற பிரதமர் மோதி
சர்வதேச அளவில் மிக முக்கிய பொருளாதார அமைப்பான ஜி20 கூட்டமைப்பின் மாநாடு டெல்லியில் நடக்கிறது. இந்தியா தலைமை தாங்கியுள்ள இந்த மாநாட்டில் அமெரிக்கா, சீனா, ஜப்பான், ஜெர்மனி, ரஷ்யா, பிரிட்டன், பிரேசில் உள்பட 20 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர்.
ஜி20 மாநாடு நடைபெறும் பிரகதி மைதானத்தில் உள்ள பாரத் மண்டபத்திற்கு பிரதமர் மோதி பலத்த பாதுகாப்புடன் வந்திறங்கினார். அவரைத் தொடர்ந்து மாநாட்டில் பங்கேற்கும் மற்ற நாடுகளின் தலைவர்கள் வருகை தர தொடங்கினர்.
பின்னர் மாநாட்டிற்கு வருகை தந்த மற்ற நாட்டு தலைவர்கள் அவரை வரவேற்றார். ஐ.நா. பொதுச் செயலாளர் ஆன்டனியோ குடேரஸ், உலக வங்கி தலைவர் அஜய் பாங்கா, உலக வர்த்தக கூட்டமைப்பு தலைமை இயக்குநர் நிகோஸி ஓகான்ஜோ, சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ, ஐக்கிய அரபு அமிரேட்ஸ் அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நாயான் உள்ளிட்டோர் வருகை தந்தனர். அவர்களை பிரதமர் மோதி நேரில் வரவேற்றார்.

பட மூலாதாரம், Getty Images
பாரத் மண்டபத்தில் ஐ.நா.பொதுச் செயலாளர் ஆன்டனியோ குடேரஸ் உடன் இந்திய பிரதமர் மோதி
புதுடெல்லியில் பிரகதி மைதானத்தில் உள்ள பாரத் மண்டபத்தில் இந்த மாநாடு நடைபெறுகிறது. மாநாட்டுக்கு வரும் உலக நாடுகளின் தலைவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிப்பதில் தமிழ்நாட்டின் பங்கும் உள்ளது. தமிழ்நாட்டில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள சுவாமி மலையைச் சேர்ந்த ராதாகிருஷ்ண ஸ்தபதி, ஸ்ரீகந்த ஸ்தபதி மற்றும் சுவாமிநாத ஸ்தபதி ஆகிய மூன்று சகோதரர்கள் வடித்த 27 அடி உயர நடராஜர் சிலை ஜி20 மாநாடு நடைபெறும் பாரத் மண்டபத்தில் நிறுவப்பட்டுள்ளது.
அஷ்ட தாது எனப்படும் எட்டு உலோகங்களால், காவிரி ஆற்றின் வண்டல் மண் கொண்டு செதுக்கப்பட்டிருப்பது இந்தச் சிலையின் சிறப்பு.
கடந்த ஓராண்டாக இத்தகைய விளம்பரங்களுக்கு பதிலாக நாடு முழுவதும் ஜி-20 மாநாடு தொடர்பான விளம்பரங்கள் இடம் பெற்றுள்ளன. மின் கம்பங்கள் முதல் இ-ரிக்ஷாக்கள் வரை எதிலும் ஜி-20 தொடர்பான விளம்பரங்கள் காணப்படுகின்றன. பெரிய எல்.இ.டி. திரைகளிலும் ஜி-20 விளம்பரங்கள் காட்டப்படுகின்றன.
இந்த சுவரொட்டிகளில் இந்தியாவின் அதிகாரப்பூர்வ ஜி-20 லோகோ பிரதானமாக தெரிகிறது. அதனுடன், பூமிப் பந்து, மலர்ந்த தாமரையும் அதில் இடம் பெற்றுள்ளன. மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா தேர்தல் சின்னமாகவும் தாமரை உள்ளது. இந்த விளம்பரங்களில் பிரதமர் மோடியின் புகைப்படமும் இடம் பெற்றுள்ளது.
யுக்ரேன் விவகாரம் டெல்லியில் எதிரொலிக்குமா?
ரஷ்யா- யுக்ரேன் இடையேயான விவகாரம் டெல்லியில் நடைபெறும் ஜி-20 மாநாட்டில் முக்கிய இடத்தை பிடிக்கும் என்று கூறப்படுகிறது. இது குறித்து முன்னாள் இந்திய தூதர் ஜிதேந்திர நாத் மிஸ்ரா கூறுகையில், “வெளிநாட்டு விவகாரங்களுக்கும் உள்நாட்டு அரசியலுக்கும் இடையிலான எல்லையை மங்கலாக்க இந்தியா முயற்சிக்கிறது” என்றார். இதை அடைய ஜி-20 மிக முக்கியமான மன்றமாகும். இது இந்திய அரசுக்கு நன்றாக தெரியும்.
கடந்த ஆண்டு இந்தோனீசியாவின் பாலியில் நடந்த ஜி-20 உச்சிமாநாட்டின் போது நடந்தது போல, திருவிழா போன்ற சூழ்நிலையில் கூட, யுக்ரைன் போர் போன்ற பிரச்சினைகள் மாநாட்டின் லட்சியங்களை சிதைக்காமல் இருப்பதை உறுதிசெய்யும் நுட்பமான பணி இந்தியாவுக்கு இருக்கும்.
“யுக்ரைன் போன்ற பிளவுபடுத்தும் பிரச்சினைகளை விவாதிப்பதை விட ஒருமித்த பிரச்சினைகளில் கவனம் செலுத்த வேண்டும் என்று இந்தியா நினைக்கிறது. ஆனால், இதுவரை இதைச் செய்ய முடியவில்லை, தற்போது இந்தியா இதனை சிறப்பாக கையாளும் என நினைக்கிறேன்” என்று ஜிதேந்திர நாத் மிஸ்ரா கூறுகிறார்.
ஜி-20 என்றால் என்ன, அது ஏன் உருவாக்கப்பட்டது?
‘ஜி-20’ என்ற பெயரிலிருந்தே தெளிவாகத் தெரிவதுபோல, இது 20 நாடுகளின் குழுவாகும்.
கடந்த 1999ஆம் ஆண்டு ஆசியாவில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டபோது, அனைத்து நாடுகளின் நிதி அமைச்சர்களும் மத்திய வங்கி ஆளுநர்களும் ஒன்றிணைந்து உலகப் பொருளாதாரம் மற்றும் நிதி விவகாரங்கள் குறித்து விவாதிக்கக்கூடிய ஒரு மன்றத்தை உருவாக்க நினைத்தனர்.
அதற்குச் சில ஆண்டுகளுக்குப் பிறகு, 2007-இல், பொருளாதார மந்தநிலையின் நிழல் உலகம் முழுவதும் பரவியது. அத்தகைய சூழ்நிலையில், நிதியமைச்சர்கள் மட்டத்தில் இருந்த ஜி-20 குழு மேம்படுத்தப்பட்டு, அது நாடுகளின் தலைவர்களை உள்ளடக்கியக் குழுவாக மாற்றப்பட்டது.
அனைத்து நாடுகளின் தலைவர்களும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்பார்கள்.
இந்த வகையில், ஜி-20 அமைப்பின் முதல் கூட்டம், 2008ல், அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் நடந்தது. இதுவரை மொத்தம் 17 கூட்டங்கள் நடந்துள்ளன. இதன் 18வது கூட்டத்தைதான் இந்தியா நடத்த உள்ளது.
இந்தக் குழுவின் கவனம் பொருளாதாரம் தொடர்பான பிரச்சினைகளை விவாதிப்பதாக இருந்தாலும், காலப்போக்கில் அதன் நோக்கம் விரிவடைந்து, நிலையான வளர்ச்சி, சுகாதாரம், விவசாயம், எரிசக்தி, சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் ஊழல் எதிர்ப்பு போன்ற விஷயங்களும் இதில் சேர்க்கப்பட்டன.

ஜி-20 எவ்வாறு செயல்படுகிறது?
எந்த நாடு ஜி-20யின் தலைவர் பதவியில் இருக்கிறதோ, அந்த ஆண்டில் அந்நாடு ஜி-20 கூட்டங்களை ஏற்பாடு செய்கிறது.
ஜி-20 இரண்டு தடங்களில் செயல்படுகிறது.
ஒன்று அனைத்து நாடுகளின் நிதி அமைச்சர்களும் மத்திய வங்கி ஆளுநர்களும் இணைந்து செயல்படும் நிதித் தடம் – Finance Track.
இரண்டாவது ஷெர்பா டிராக் – Sherpa Track. இதில் உறுப்பினர் நாடுகளின் தலைவர்கள் இடம்பெறுவர். இதில் விவசாயம், ஊழல் எதிர்ப்பு, காலநிலை, டிஜிட்டல் வர்த்தகம், கல்வி, வேலைவாய்ப்பு, ஆற்றல், சுற்றுச்சூழல், ஆரோக்கியம், சுற்றுலா, வர்த்தகம், மற்றும் முதலீடு ஆகியவை பற்றி விவாதிக்கப்படும்.
ஜி20 தலைவர் பதவியை ஒரு நாடு எப்படிப் பெறும்?
இது Troika எனப்படும் குழுவால் தீர்மானிக்கப்படுகிறது. இது உறுப்பினர் நாடுகளின் கடந்த, தற்போதைய மற்றும் எதிர்கால ஜனாதிபதிகளை உள்ளடக்கியது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
நன்றி
Publisher: பிபிசிதமிழ்