சுதந்திரப் போராட்டக் காலத்தில் நான்கு ஆண்டுகள், சுதந்திரத்துக்குப் பிறகு நான்கு ஆண்டுகள் என மொத்தம் எட்டு ஆண்டுகள் சிறைத் தண்டனையும், மூன்று ஆண்டுகள் தலைமறைவு வாழ்க்கையும் வாழ்ந்தவர் சங்கரய்யா. இன்றைய இளைஞர்களுக்கும், வருங்கால சந்ததிக்கும் அவர் விட்டுச் சென்ற செய்திகளும் அறிவுரைகளும் அனுபவங்களும் ஏராளம். ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு சங்கரய்யா விகடனுக்கு நேர்காணல் அளித்தார். அதில், ஒவ்வொரு கேள்விக்கு அவர் அளித்த பதில்கள், முக்கியமானவை.
“எட்டு ஆண்டுகள் சிறை வாழ்க்கை, மூன்று ஆண்டுகள் தலைமறைவு வாழ்க்கை, எண்ணிலடங்கா போராட்டங்கள், இயக்கப்பணிகள் என நீண்டநெடிய அனுபவம் கொண்டவர் நீங்கள். தற்போது, பழைய வாழ்க்கையைத் திரும்பிப் பார்க்கும்போது எப்படி இருக்கிறது?” என்ற கேள்விக்கு,
“பல கஷ்டங்களுடன் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போராடினோம். அப்போது, ஒட்டுமொத்த இந்தியாவும் ஒற்றுமையாக இருந்தது. காங்கிரஸ், கம்யூனிஸ்ட், சோஷலிஸ்ட் தோழர்கள், ஃபார்வர்டு ப்ளாக் பிரிவினர் எனப் பலருடைய நோக்கமும் சுதந்திரத்தை நோக்கியே இருந்தது.
மிகப்பெரிய கூட்டத்துக்கு காந்திதான் தலைமை. இளைஞர் இயக்கத்துக்கு பகத்சிங், சுகதேவ், ராஜகுரு போன்றவர்கள் பெரும் உந்துசக்தியாக இருந்தனர். எல்லாருமே போராடினோம். அந்த ஒற்றுமைதான் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை இங்கிருந்து தூக்கியடித்தது. அதைப் பற்றி பேசவேண்டுமென்றால், பேசிக்கொண்டே இருக்கலாம். கடந்த காலத்தையே பார்த்துக்கொண்டு இருப்பதைவிட, இப்போது என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பதைப் பார்ப்பதுதான் முக்கியம்” என்றார் சங்கரய்யா.
நன்றி
Publisher: www.vikatan.com
