தமிழ்நாட்டில் இறந்தவர்களின் உடலை வீட்டின் அருகிலேயே புதைக்கும் குடும்பங்கள் – என்ன காரணம்?

தமிழ்நாட்டில் இறந்தவர்களின் உடலை வீட்டின் அருகிலேயே புதைக்கும் குடும்பங்கள் - என்ன காரணம்?

மயானத்துக்கு செல்ல சாலை வசதி இல்லை

திருப்பத்தூர் மாவட்டத்தில் மயானத்துக்கு செல்ல வழி இல்லாததால் இறந்தவர்களின் உடல்களை தங்கள் வீட்டின் அருகிலேயே புதைக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட மக்கள் கூறுகின்றனர்.

சாலை அமைக்க நிலம் கையகப்படுத்தப்பட்டும் இதுவரை சாலை அமைக்கப்படாது ஏன்? இது குறித்து அதிகாரிகள் கூறுவது என்ன?

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி தாலுகாவில் அமைந்துள்ளது வேட்டப்பட்டு பகுதி. இங்குள்ள கூரான் வட்டத்தில் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த 12 குடும்பங்களும் மாற்று சாதியைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட குடும்பங்களும் வசித்து வருகின்றன.

பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியில் மாற்று சாதியினருக்கு இடம் உள்ளதால் வரப்பு வேலி வெட்டப்பட்டு 41 அடியாக இருந்த இடம் தற்பொழுது 2 அடியாக சுருங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் பட்டியலின மக்கள் மயானத்துக்கு செல்ல சாலை வசதி இல்லாமல் உள்ளது.

மயானத்துக்கு செல்ல சாலை வசதி இல்லை
படக்குறிப்பு,

குறுகிய சாலை வழியாக பயணிக்கும் சிறுவர்கள்

அவர்களுக்கு சாலை வசதியை ஏற்படுத்தி தருவதற்காக மாற்று சமூகத்தினருக்கு சொந்தமான 41 சென்ட் நிலத்தை கடந்த 1997 ஆம் ஆண்டு ஆதிதிராவிடர் நலத்துறை கையகப்படுத்தியது.

இதற்கிடையே, தங்களின் அனுமதியின்றி நிலத்தை ஆதி திராவிடர் நலத்துறை கையகப்படுத்தியதாக நிலத்தின் உரிமையாளர்களான மாற்று சமூகத்தினர் கூறி வருகின்றனர். இது தொடர்பாக அவர்கள் திருப்பத்தூர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் அவர்களுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கப்பட்டது. இதனால் சாலை அமைப்பதில் முட்டுக்கட்டை ஏற்பட்டது.

இந்நிலையில், 10 ஆண்டுகளுக்கு முன்பு கோவிந்தன் என்பவர் 2 அடி சாலை வழியாக பயணிக்கும்போது அருகே இருந்த கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்தார். இதுபோன்ற உயிரிழப்புகளை தவிர்க்க முறையான சாலை வசதியை ஏற்படுத்தி தர வேண்டும் என்று பட்டியலின மக்கள் கூறி வருகின்றனர். மயானத்திற்கு செல்ல சாலை வசதி இல்லாததால், இறந்தவர்களின் சடலங்களை மயானத்திற்கு எடுத்து செல்ல முடியாமல் தங்களின் வீடுகளுக்கு அருகே உள்ள நிலத்திலேயே புதைத்து வருவதாக அவர்கள் கூறுகின்றனர்.

தற்போது மாற்று சமூகத்தைச் சேர்ந்தவர் அப்பகுதியின் ஊராட்சி மன்ற தலைவராக உள்ள நிலையில், தங்களுக்கு எவ்வித அடிப்படை வசதிகளும் கிடைப்பதில்லை என்று பட்டியலின மக்கள் கூறுகின்றனர். குடிநீர் வருவதில்லை, தெருவிளக்கு இல்லை, அரசு தரக்கூடிய எந்த சலுகையும் தங்களுக்கு கிடைப்பதில்லை என்றும் அவர் தெரிவிக்கின்றனர்.

மயானத்துக்கு செல்ல சாலை வசதி இல்லை
படக்குறிப்பு,

சடலங்கள் புதைக்கப்படும் பகுதி

‘அச்சத்துடன் பயணிக்கிறோம்’

2 அடி மட்டுமே உள்ள சாலையில் அச்சத்துடன் பயணிக்கும் நிலை உள்ளதாக கூரான் பகுதியைச் சேர்ந்த மூதாட்டி ஒருவர் பிபிசி தமிழிடம் பேசும்போது குறிப்பிட்டார்.

“நடக்கக்கூட வழியில்லாத பாதையில் சென்று கொண்டு இருக்கும் பொழுது அருகாமையில் உள்ள கிணத்தில் தவறி விழுந்து என்னுடைய மூத்தார் உயிர் இழந்து விட்டார். தற்பொழுது என்னுடைய கணவருக்கும் வயதாகி விட்டதால் அவரும் அவ்வழியாக செல்லும் போது தடுமாறி விழுந்து காலை உடைத்துக் கொண்டார். பள்ளி கல்லூரிகளுக்கு சென்று வரும் பிள்ளைகளும் சிரமத்துடன் சென்று வருகின்றனர். பந்தாரப்பள்ளி வேட்டப்பட்டிற்கு சென்று ஏரியில் தான் பிணங்களை எடுத்துச் சென்று புதைக்க வேண்டும். இங்கிருந்து எடுத்துச் செல்வதற்கு வழி இல்லை. எங்களுக்கு என்று தனியான சுடுகாடும் இதுவரை கொடுக்கவில்லை ” என்றார்.

‘நோய்வாய்ப்பட்டவர்களை கைகளில் தூக்கி செல்கிறோம்’

“எனக்கு திருமணம் ஆகி 30 ஆண்டுகளாகின்றது. அன்றாட நடை பயணங்களுக்கும் சுடுகாடு செல்வதற்கு இருந்த வழியை மாற்று சமூகத்தைச் சேர்ந்த ஒரு சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். நாங்கள் போய் இதைக் கேட்டால் , ஆயுதங்களுடன் மிரட்டுகின்றனர்” என்கிறார் அப்பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர்.

பள்ளி மாணவி ஒருவர் பிபிசியிடம் பேசும்போது, “நாங்கள் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இவ்வழியாக செல்ல முடியாமல் தவித்து வருகிறோம். மேலும் உடல்நிலை பாதிக்கப்பட்டவர்களை வாகனம் மூலம் மருத்துவமனைக்கு அழைத்து செல்ல முடியாததால் கைகளில் தூக்கிச் செல்கிறோம்” என்றார்.

தன் மீது பொய்யான வழக்குகளை போட்டு சிறைக்கு அனுப்பிவிட்டு தனது நிலத்தை ஆக்கிரமித்ததாக நிலம் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த கோவிந்தசாமி கூறுகிறார்.

இது தொடர்பாக பிபிசியிடம் பேசிய அவர், “என் மீது பொய்யான வழக்குகள் போட்டு வேலூர் ஜெயிலில் 10 நாட்கள் சிறையில் வைத்தனர். இதற்கு காரணம் பத்து ஆண்டுகளுக்கு முன்பு அப்பகுதியில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றிய பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த மாணிக்கம்தான். பத்து நாட்களுக்குப் பிறகு ஜாமினில் வெளியே வந்து என்னுடைய இடத்தை ஆக்கிரமிப்பு செய்கின்றனர் என்று நீதிமன்ரத்தில் வழக்கு தொடர்ந்தேன். இதில் எனக்கு சாதகமாக தீர்ப்பு வந்தது” என்றார்.

ஊராட்சி மன்றத் தலைவரின் பதில் என்ன?

இந்த விவகாரம் குறித்து ஊராட்சி மன்ற தலைவர் அனுமந்தனிடம் பேசினோம்.

“வேட்டப்பட்டு கூரான் வட்ட மக்களுக்கான சாலை வசதி குறித்த நிலவரைபடம்(FMB) உள்ளது. பட்டியலினத்தவருக்கும் மாற்று சமூகத்தினருக்கும் நீண்ட ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட விரோதத்தால் நீதிமன்றத்தில் மாற்று சமூகத்தைச் சேர்ந்த கோவிந்தசாமி உள்ளிட்டோர் வழக்கு தொடுத்துள்ளார். வட்டாட்சியர் இரண்டு முறை சாலை போடுவதற்கு இடத்தினை ஆய்வு செய்தார். இரு ஜாதியினருக்கும் இடையே உள்ள முன் விரோதம் காரணமாக இதுவரை சாலை அமைக்க முடியாத சூழல் நிலவி வருகிறது.” என்றார்.

தன் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்கும் அவர் மறுப்பு தெரிவித்தார்.

மயானத்துக்கு செல்ல சாலை வசதி இல்லை
படக்குறிப்பு,

கோவிந்தசாமி

ஆதிதிராவிட தனி வட்டாட்சியர் நவநீதன் பிபிசியிடம் இந்த விவகாரம் குறித்து பேசுகையில், “ஆதிதிராவிட மக்கள் மயானத்துக்கு செல்ல பாதை அமைப்பதற்காக 1997-ம் ஆண்டு மாற்று சமூகத்தினரிடம் இருந்து 41 சென்ட் நிலம் கையகப்படுத்தப்பட்டது. இதற்காக ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் ரூ.18,400க்கு டிடி எடுத்து நீதிமன்றத்தின் மூலம் தொகை செலுத்தப்பட்டது. ராஜ், கோவிந்தன், கண்ணு, கோவிந்தராஜ், கங்கம்மாள், மணிகண்டன், பட்டம்மாள், கோவிந்தசாமி ஆகியோரிடம் இருந்து இந்த நிலம் வாங்கப்பட்டது. இதில், ராஜ் மற்றும் கோவிந்தசாமி இருவரும் தங்களுடைய நிலம் தங்களுக்கு வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இதில் அவருக்கு சாதகமான தீர்ப்பு வழங்கப்பட்டது. இதை எதிர்த்து ஆதிதிராவிடர் நலத்துறையின் சார்பில் மேல் முறையீடும் செய்யப்பட்டு தற்பொழுது வழக்கு நிலுவையில் உள்ளது” என்றார்.

இது நில சம்பந்தப்பட்ட பிரச்னை இல்லை, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு மயானத்துக்கு வழி விடாமல் சடலங்களை புதைக்க இடம் இல்லாமல் அலைகழிப்பு செய்ய வேண்டும் என்ற எண்ணம்தான் இதற்கு காரணம் என்கிறார் தலீத் செயற்பாட்டாளரான ‘எவிடன்ஸ்’ கதிர்.

“தாழ்த்தப்பட்ட மக்கள் சுடுகாட்டிற்கு செல்லும் வழியை தடுப்பது, ஆக்கிரமிப்பது, சுடுகாட்டிற்கு இடம் விடாமல் இருப்பது இவை அனைத்தும் வன்கொடுமை தான். எஸ்சி, எஸ்டி சட்டம் 2015-ல் இதற்கான தனி சட்டம் உண்டு. அரசாங்கமே சாதி ரீதியான சுடுகாட்டிற்கு நிதி அளிப்பதாக ஊக்குவிக்கின்றது. நகரங்களில் சுடுகாடு தனித்தனியாக கிடையாது காசு கொடுத்தால் எரித்து விடக் கூடிய எரிமேடைகள் தான் காணப்படுகிறது. கிராமப்புறங்களில் மட்டும் இந்த மாதிரியான கட்டுப்பாடுகளை வைத்து வருகின்றனர். தமிழக அரசு சுடுகாடு என்பது பொது தான் என்ற ஒரு அறிவிப்பை வெளியிட வேண்டும். ஒவ்வொரு பஞ்சாயத்துக்கும் பொதுவான ஒரு சுடுகாட்டை அரசாங்கத்தால் கட்டினால் இந்த பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும்.”

Facebook
Facebook
fb-share-icon
Telegram
WhatsApp
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *