தன்பாலின திருமணம்: உச்ச நீதிமன்ற தீர்ப்பில் LGBTQ+ மகிழும்படி என்ன இருக்கிறது?

தன்பாலின திருமணம்: உச்ச நீதிமன்ற தீர்ப்பில் LGBTQ+ மகிழும்படி என்ன இருக்கிறது?

தன்பாலின ஈர்ப்ப்பாளர்கள் திருமணத்துக்கு உச்சநீதிமன்றம் தடை

பட மூலாதாரம், Getty Images

தன்பாலின திருமணத்துக்கு சட்ட அங்கீகாரம் இல்லை என உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு மிகுந்த மன வருத்தத்தை தந்துவிட்டதாக தன்பாலின ஈர்ப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். பெரிய எதிர்பார்ப்புடன் இருந்ததாகவும், திருமணத்திற்கான உரிமையை அடிப்படை உரிமையாக அரசியலமைப்பு உறுதிப்படுத்தவில்லை என்று ஐந்து நீதிபதிகளும் ஒருமித்த கருத்தாக சொல்லியது, தங்களை சோகத்தில் ஆழ்த்திவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

தன்பாலின திருமணத்தைச் சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கக் கோரிய மனுக்கள் மீதான தீர்ப்பை இந்திய உச்ச நீதிமன்றம் இன்று (செவ்வாய்க்கிழமை, அக்டோபர் 17) வழங்கியது. உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் உட்பட ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு அளித்துள்ள தீர்ப்பு, ஏமாற்றத்தை அளித்துவிட்டதாக தன்பால் ஈர்ப்பாளர்கள் மற்றும் செயற்பாட்டாளர்கள் பிபிசி தமிழிடம் தெரிவித்தனர்.

தீர்ப்பை எதிர்நோக்கிய சமயத்தில் இருந்து தீர்ப்பு வழங்கப்பட்ட பிறகு சில மணி நேரத்தை அவர்களுடன் நாம் செலவிட்டோம். முதலில் ஆரவாரத்துடன் காணப்பட்டவர்கள், பின்னர் சோகத்தில் ஆழ்ந்தனர். ஆனால் தங்களது உரிமைக்காக மீண்டும் குரல் கொடுப்போம் என்று உறுதியாக இருந்தனர்.

அவர்களுடன் செலவிட்ட தருணங்களில் இந்த தீர்ப்பு அவர்கள் மத்தியில் ஏற்படுத்திய தாக்கம் குறித்து அறிந்துகொள்ள முடிந்தது.

உச்ச நீதிமன்ற தீர்ப்பால் தகர்ந்த கனவு

சென்னை நெல்சன் மாணிக்கம் சாலையில் அமைந்துள்ள சகோதரன் அலுவலகத்தில், செவ்வாய் அன்று(அக்டோபர்17 ஆம் தேதி) பல தன்பாலின ஈர்ப்பாளர்கள், திருநங்கை, திருநர் உள்ளிட்ட பால்புதுமையினர் ஆர்வத்துடன் தொலைக்காட்சியை பார்த்துக் கொண்டிருந்தனர். தங்களுக்கு திருமணம் தொடர்பான உரிமைகளை வழங்கப் போகும் முக்கியமான தீர்ப்பு என்று கருதி, ஒரு சிலர் பிரார்த்தனைகளை செய்துகொண்டிருந்தனர்.

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு தங்களது திருமண உரிமை தொடர்பாக சாதகமான தீர்ப்பாக இருக்கும் என்ற எதிர்பார்ப்புடன் இருந்தவர்கள் கேக் ஆர்டர் கொடுக்கலாம், இனிப்புகள் வாங்கலாம் என பட்டியல் போட்டுக்கொண்டே நம்மிடம் பேசினர்.

பால் புதுமையினரை குறிக்கும் வானவில் கொடி மற்றும் வானவில் வண்ணங்கள் கொண்ட ஸ்கிரீன் துணிகளை கொண்டு அலுவலகத்தை அலங்காரம் செய்தனர்.

தன்பாலின ஈர்ப்பாளர்கள் ஜோடி ஒருவரும் அங்கு வந்திருந்தனர். பெற்றோரின் சம்மதம் இல்லை என்பதால், அவர்கள் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி ஒன்றாக வசித்து வருவதாகவும், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை பொறுத்து திருமணம் குறித்து முடிவு செய்துகொள்ளலாம் என்று பேசிக் கொண்டிருந்தனர். ஆனால் தீர்ப்பு அவர்களின் எதிர்பார்ப்பை குலைத்துவிட்டது என்று நம்மிடம் தெரிவித்தனர்.

தன்பாலின ஈர்ப்ப்பாளர்கள் திருமணத்துக்கு உச்சநீதிமன்றம் தடை

பட மூலாதாரம், Getty Images

தன்பாலின ஈர்ப்பாளரான நாகராஜ், தனது துணைவரின் கரங்களை இறுக்கி பிடித்துக்கொண்டு நம்மிடம் பேசினார்.

”நாங்கள் இருவரும் எங்கள் குடும்பத்தினரிடம் மோசமான வசைகளை எதிர்கொண்டவர்கள். சொந்தங்கள், நண்பர்கள் என பலரும் எங்களை கைவிட்ட நிலையில் எங்களுக்கான வாழ்வை நாங்கள் வாழ தொடங்கியிருக்கிறோம். ஆனால் இந்த தீர்ப்பு எங்களை எதிர்ப்பவர்களுக்கு பலம் சேர்த்துள்ளது. எங்களை போன்ற நசுக்கப்பட்டவர்களுக்கு கிடைக்க வேண்டிய நீதிக்காக இன்னும் எத்தனை காலம் தான் காத்திருக்க வேண்டும் என்று தெரியவில்லை,” என வேதனையுடன் அவர் கூறினார்.

தன்பாலின ஈர்ப்ப்பாளர்கள் திருமணத்துக்கு உச்சநீதிமன்றம் தடை
படக்குறிப்பு,

இந்த தீர்ப்பு எங்களை எதிர்ப்பவர்களுக்கு பலம் சேர்த்துள்ளது என தன்பாலின ஈரப்பாளரான நாகராஜ் கூறுகிறார்.

உச்ச நீதிமன்றம் வழங்காததை எப்படி நாடாளுமன்றம் வழங்கும்?

ரோஸ் வெங்கடேசன் என்று அறியப்படும் தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளினி மற்றும் பால் புதுமையினர் உரிமைகள் செயற்பாட்டாளரான ரோஸ், உச்சநீதிமன்ற தீர்ப்பு வருத்தத்தை ஏற்படுத்திவிட்டது என்றார்.

சகோதரன் அலுவலகத்திற்கு அவர் வந்தபோது, உற்சாக மனநிலையில் இருந்தார். ஆனால் சட்டப்பூர்வமான அங்கீகாரம் திருமணத்திற்கு கொடுக்கப்படவில்லை என்றும், திருமணம் செய்வதற்கான உரிமையை நீதிமன்றம் வழங்க முடியாது, நாடாளுமன்றம்தான் முடிவு செய்யவேண்டும் என்றும் நீதிபதிகள் கூறியதை அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

தன்பாலின ஈர்ப்ப்பாளர்கள் திருமணத்துக்கு உச்சநீதிமன்றம் தடை
படக்குறிப்பு,

உச்சநீதிமன்றம் லாவகமாக நாடாளுமன்றத்திடம் பொறுப்பை ஒப்படைத்துவிட்டது என்கிறார் பால்புதுமையினர் செயற்பாட்டாளர் ரோஸ்.

பிபிசி தமிழிடம் பேசிய பால்புதுமையினர் செயற்பாட்டாளர் ரோஸ், ”உச்சநீதிமன்றம் லாவகமாக நாடாளுமன்றத்திடம் பொறுப்பை ஒப்படைத்துவிட்டது. நீதிமன்றத்தில் எங்களுக்கு கிடைக்காத நீதி, நாடாளுமன்றத்தில் கிடைக்குமா என்பது சந்தேகம்தான். ஏனெனில், தற்போது ஆட்சியில் உள்ள பாஜகவை சேர்ந்த பெரும்பாலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் பால் புதுமையினருக்கு எதிராக பேசுகிறார்கள் என்பதால், எங்களுக்கு நம்பிக்கை ஏற்படவில்லை. ஒருவேளை அடுத்த தேர்தலில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால், ஏதாவது வாய்ப்பிருக்கும்,”என வருத்தத்துடன் பேசினார்.

அடுத்ததாக நம்மிடம் பேசிய செயற்பாட்டாளர் ஸ்ரீஜித், தன்பாலின ஈர்ப்பாளர்கள் பிரச்னைகளை களைய ஒரு கமிட்டி அமைக்கப்படும் என உச்சநீதிமன்றம் கூறுவதில் எந்த நம்பிக்கையும் ஏற்படவில்லை என்றார். தன்பாலின ஈர்ப்பாளர் திருமணத்தை ஏற்றுக்கொள்ளாத சமூகத்தில், அவர்களுக்கான அடிப்படை பிரச்னைகளை ஒரு கமிட்டி ஆலோசித்துச் சரிப்படுத்தும் என்ற வாதத்தை அவர் ஏற்றுக்கொள்ளவில்லை.

உச்சநீதிமன்ற தீர்ப்பை நேரலையாக பார்த்துக் கொண்டிருந்த ஸ்ரீஜித், அவ்வப்போது வழக்கறிஞர்களிடம் கேட்டு தனது சந்தேகங்களை தெளிவுபடுத்திக் கொண்டார்.

”ரேஷன் கார்டுகள், ஓய்வூதியம், பணிக்கொடை, மற்றும் வாரிசு ஆகிய விஷயங்கள் குறித்த தன்பாலின ஜோடிகளின் கோரிக்கைகளைப் பரிசீலிக்கவும் அவர்களுக்கு உரிமைகள் மற்றும் சலுகைகளை வழங்குவது குறித்தும் பரிசீலிக்கவும், அமைச்சரவைச் செயலர் தலைமையில் ஒரு நிபுணர் குழுவை அமைப்பதாக சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவின் முன்மொழிவு ஏற்கப்படுகிறது என நீதிபதிகள் சொன்னார்கள். ஆனால் எங்களை சக மனிதர்களாக ஏற்றுக்கொள்ளாத நேரத்தில், மற்ற விஷயங்களில் என்ன முடிவு செய்யப்பட்டாலும், அதில் எங்களுக்கு எந்த நிம்மதியையும் தரப் போவதில்லை,”என அவர் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

தன்பாலின ஈர்ப்ப்பாளர்கள் திருமணத்துக்கு உச்சநீதிமன்றம் தடை

பட மூலாதாரம், Getty Images

‘தன்பால் ஈர்ப்பு என்பது ஒரு மனநோய் அல்ல’

உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பில் பால்புதுமையினர் சந்திக்கும் வன்முறை குறித்து நீதிபதிகள் பேசியது வரவேற்கத்தக்கது என்ற கோணத்தில் பேசிய திருநங்கை சபிதா, “குறைந்தபட்சம் சமூகத்தில் நிலவும் அவல நிலையை நீதிபதிகள் உணர்ந்து கொண்டார்கள் என்பதில் மகிழ்ச்சி” என்கிறார்.

”இந்தியாவில், தற்போது பால்புதுமையினர் பலரும் தங்களை அடையாளப்படுத்திக் கொள்ள முன்வந்துள்ளனர். இந்த நேரத்தில் தன்பாலின ஈர்ப்பாளர்கள் திருமணத்திற்கு அங்கீகாரம் இல்லை என நீதிமன்றம் சொன்னது வருத்தம்தான். ஆனால் இவர்கள் பொது இடங்கள், மருத்துவமனைகள், காவல் நிலையங்களில் சந்திக்கும் பிரச்னைகளை நீதிபதிகள் யோசித்திருக்கிறார்கள்.

LGBTQ+ மக்களுக்கு எதிராகப் பாகுபாடு காட்டப்படக் கூடாது, இதனை உறுதிசெய்ய வேண்டும், தன்பாலீர்ப்பு என்பது ஒரு மனநோய் அல்ல எனும் விழிப்புணர்வை பொதுமக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என நீதிபதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர் என்பது கவனிக்கப்பட வேண்டிய விஷயம்,”என்கிறார்.

உச்சநீதிமன்ற தீர்ப்பு தங்களுக்கு சாதகமான வரவில்லை என்பதை உணர்ந்த தன்பாலின ஈர்ப்பாளர்கள், தங்களது அடுத்தக்கட்ட நகர்வுகள் குறித்து பேச முடிவு செய்தனர். உச்சநீதிமன்றம் கூறியபடி அமைக்கப்படும் கமிட்டியில் தங்களது ஆதரவாளர்கள் இருக்க வேண்டும் என்ற கோரிக்கையை மத்திய அரசிடம் வைத்துள்ளனர். முன்னதாக ஆர்டர் கொடுத்த கேக் மற்றும் இனிப்புகளை ரத்து செய்துவிட்டு, தங்களது அடுத்தக்கட்ட நகர்வு குறித்த ஆலோசனைகளில் அவர்கள் ஈடுபட்டனர்.

Facebook
Facebook
fb-share-icon
Telegram
WhatsApp
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *