ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சி 300 தொகுதிகளில் 223இல் வெற்றி கண்டுள்ளது.
வங்கதேசத்தில் ஷேக் ஹசீனா மீண்டும் பிரதமர் – அமெரிக்கா எதிர்க்கையில் இந்தியா ஆதரிப்பது ஏன்?
வங்கதேசத்தின் பிரதமராக தொடர்ந்து 4வது முறையாக ஷேக் ஹசீனா தேர்வாகியுள்ளார். நடந்து முடிந்த பொதுத்தேர்தல் பல சர்ச்சைகளுக்கு வித்திட்ட நிலையில், ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சி 300 தொகுதிகளில் 223இல் வெற்றி கண்டுள்ளது.
பிரதான எதிர்கட்சியான வங்கதேச தேசியவாத கட்சி வாக்குப்பதிவை புறக்கணித்த நிலையில், அவாமி லீக்கும் அதன் கூட்டணி கட்சிகளும் எஞ்சிய இடங்களையும் கைப்பற்றலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த தேர்தல் ஒரு ஏமாற்று வேலை என வங்கதேச தேசியவாத கட்சி குற்றம்சாட்டியுள்ளது. பொதுத்தேர்தலில் 40% வாக்குகள் மட்டுமே பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்தது. ஆனால் இந்த எண்ணிக்கை உயர்த்தப்படலாம் என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
2018 பொதுத்தேர்தலில் 80 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகள் பதிவானது கவனிக்கத்தக்கது. ஊடகங்கள் மற்றும் இதர தரவுகளுடன் ஒப்பிடுகையில் தேர்தல் ஆணையம் வெளியிட்ட வாக்குப்பதிவு சதவீதம் பொருந்தவில்லை என அரசியல் பகுப்பாய்வாளர் பதியுல் ஆலம் மஜூம்தர் பிபிசியிடம் கூறினார்.
அதிக முறை வங்கதேசத்தின் பிரதமராக தேர்வானவர்

பட மூலாதாரம், Getty Images
ஷேக் ஹசீனா எட்டாவது முறையாக கோபால்கஞ்ச்-3 தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார். 1986இல் இருந்து இத்தொகுதியில் போட்டியிட்டு வரும் அவர், இந்த முறை 2,49,965 வாக்குகள் பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பங்களாதேஷ் சுப்ரீம் கட்சியைச் சேர்ந்த நிஜாம் உதின் லஷ்கர் வெறும் 469 வாக்குகள் மட்டுமே வென்றார்.
ஷேக் ஹசீனா 1996இல் வங்கதேசத்தின் பிரதமராக முதல்முறையாக தேர்வானார். அதன் பிறகு 2009 முதல் தற்போது வரை 4 முறை வங்கதேச பிரதமராக பணியாற்றியுள்ளார். இந்த தேர்தல் வெற்றியின் மூலம் 5வது முறையாக அவர் பிரதமராக தொடர்கிறார். இதன் மூலம் வங்கதேசத்தின் பிரதமராக அதிக முறை தேர்வானவர் என்கிற வரலாறையும் படைத்திருக்கிறார்.
திங்கட்கிழமை மாலையில் செய்தியாளர்களிடம் பேசிய ஷேக் ஹசீனா, “தாயுள்ளத்தோடு என் நாட்டு மக்களுக்கு சேவை செய்து வருகிறேன். மக்கள் மீண்டும்மீண்டும் என்னையே வாக்களித்து தேர்வு செய்கின்றனர். அதனால்தான் நான் இங்கு இருக்கிறேன். நான் ஒரு சாதாரண நபர்தான். மக்களின் வாழ்வை மேம்படுத்த தொடர்ந்து பாடுபடுவேன்” என்றார்.
இந்தியா ஒரு சிறந்த நட்பு நாடாக திகழ்கிறது எனப் பேசிய ஷேக் ஹசீனா, “அண்டை வீட்டுக்காரர்களை போல இந்தியா பழகி வருகிறது. விடுதலைப் போரின் போது இந்தியா ஆதரவளித்து அடைக்கலம் தந்தது. இந்தியாவுடன் சிறந்த நட்புறவை கொண்டிருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்” என பேசினார்.
ஒரே கட்சி ஆட்சி

பட மூலாதாரம், Getty Images
வங்கதேசத்தில் பொதுத்தேர்தலுக்கு முன்பாக எதிர்க்கட்சிகள் நடத்திய பிரமாண்ட பேரணியில் வன்முறை வெடித்தது. இதில் குறைந்தது 16 பேர் உயிரிழந்த நிலையில் 5 ஆயிரத்திற்கும் அதிகமானோர் காயம் அடைந்தனர். இந்த வன்முறைச் சம்வத்தைத் தொடர்ந்து சுமார் 10,000 செயற்பாட்டாளர்கள் வங்கதேசத்தில் கைது நடவடிக்கைக்கு ஆளாகியிருக்கலாம் என மனித உரிமைகள் கண்காணிப்பகம் கணித்துள்ளது.
வங்கதேச சிறைச்சாலைகளை எதிர்க்கட்சித் தலைவர்களைக் கொண்டு நிரப்பி வருவதாக ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சியை மனித உரிமைகள் கண்காணிப்பகம் குற்றம்சாட்டியது. ஆனால் இந்த குற்றச்சாட்டை அவாமி லீக் கட்சி மறுத்துவிட்டது.
இந்த நிலையில் ஷேக் ஹசீனாவின் தற்போதையை வெற்றி, வங்கதேசத்தில் ஒரே கட்சி மட்டுமே ஆட்சி செய்ய வழிவகுக்கும் என்கிற அச்சத்தை எழுப்பியுள்ளதாக அரசியல் வல்லுநர்கள் கருதுகின்றனர்.
அதேசமயம், ஹசீனாவின் தலைமையின் கீழ் வங்கதேசத்திற்கு மாறுபட்ட தோற்றமும் கிடைத்திருக்கிறது. முஸ்லிம் பெரும்பான்மை நாடான வங்கதேசம் ஒரு காலத்தில் ஏழ்மையான நாடுகளில் ஒன்றாக இருந்தது. ஆனால் 2009இல் ஷேக் ஹசீனா பொறுப்பேற்றதில் இருந்து அந்த நாடு நம்பகமான பொருளாதார வளர்ச்சியை அடைந்துள்ளது.
தற்போது வங்கதேசம் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார நாடாக குறிப்பாக அண்டை நாடான இந்தியாவையே விஞ்சும் அளவுக்கு வேகமாக வளரும் பொருளாதார நாடாக மாறியிருக்கிறது.
கடந்த 10 ஆண்டுகளில் வங்கதேசத்தில் தனிநபர் வருமானம் மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. மேலும் கடந்த 20 ஆண்டுகளில் இரண்டரை கோடிக்கும் அதிகமான மக்கள் வறுமையின் பிடியில் இருந்து விடுபட்டிருப்பதாக உலக வங்கி கூறுகிறது. உலகின் ஆடை உற்பத்தி செய்யும் நாடுகளில் சீனாவுக்கு அடுத்தபடியாக 2வது இடத்தில் வங்கதேசம் உள்ளது.
ஆனால் 2022-ல் கொரோனா பெருந்தொற்று மற்றும் உலகலாளவிய பொருளாதார மந்தநிலை காரணமாக வங்கதேசத்தில் பொருளாதார நெருக்கடி எழுந்தது. அதிகரித்து வரும் பண வீக்கம் மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் கடன் விதிமுறைகளால் வங்கதேசத்திற்கு கூடுதல் நெருக்கடி ஏற்பட்டது. இதுதவிர, சர்வதேச அழுத்தமும் வங்கதேசத்திற்கு ஏற்பட்டது. வங்கதேச அதிகாரிகள் மீது அமெரிக்கா விசா கட்டுப்பாடுகளை விதிக்கத் துவங்கியது.
ஐநா மற்றும் பிற சர்வதேச அமைப்புகளும் மனித உரிமை மீறல்கள் மற்றும் கருத்து வேறுபாடுகளை ஒடுக்குவது தொடர்பாக வங்கதேசத்தை எச்சரித்தன. ஆனால், இந்தியாவின் ஆதரவு இருக்கும் வரை மேற்குலக நாடுகளின் பொருளாதார அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள முடியும் என ஷேக் ஹசீனா நம்புகிறார்.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்