இரண்டாம் கட்ட ஐ.எம்.எஃப். உதவி இலங்கைக்கு என்ன நன்மையை கொடுக்கும்?

இரண்டாம் கட்ட ஐ.எம்.எஃப். உதவி இலங்கைக்கு என்ன நன்மையை கொடுக்கும்?

ரணில் விக்ரமசிங்க

பட மூலாதாரம், Getty Images

இலங்கைக்கு இரண்டாம் கட்ட விரிவாக்கப்பட்ட நிதி வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்கான ஆளணிமட்ட இணக்கப்பாட்டை சர்வதேச நாணய நிதியம் அண்மையில் எட்டியுள்ளது.

பொருளாதார நெருக்கடி காரணமாக பாரிய பின்னடைவுகளை சந்தித்திருந்த இலங்கை, சர்வதேச நாணய நிதியத்தின் இணக்கப்பாட்டுடன் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள ஆரம்பித்தது.

இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியம் 2.9 பில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்க இணக்கம் எட்டியிருந்தது.

முதலாம் கட்ட நிதி வசதி ஏற்கனவே வழங்கப்பட்ட நிலையில், தற்போது இரண்டாம் கட்ட நிதி வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க சர்வதேச நாணய நிதியம் இணக்கம் எட்டியுள்ளது.

டாலர்

பட மூலாதாரம், Getty Images

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று கடந்த செப்டம்பர் மாதம் நாட்டிற்கு வருகைத் தந்து பல்வேறு மட்ட பேச்சுவார்த்தைகளை நடாத்திய போதிலும், ஆளணி மட்ட இணக்கப்பாட்டை எட்டவில்லை.

இந்த நிலையில், சர்வதேச நாணய நிதியத்தினால் இலங்கைக்கு வழங்குவதற்கு இணக்கம் எட்டப்பட்ட 48 மாத கடன் தவணை நிதிவசதியின் இரண்டாம் கட்ட நிதி வசதிகளை வழங்குவதற்கு கால தாமதம் ஏற்பட்டது.

இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியம் 2.9 பில்லியன் அமெரிக்க டொலரை பெற்றுக்கொடுப்பதற்கான அனுமதியை 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 20ம் தேதி வழங்கியிருந்தது.

இலங்கைக்கு இரண்டாம் கட்ட உதவி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

பொருளாதார பிரச்னைகளின் காரணமாக அதிகரிக்கும் விலைவாசியைக் குறைக்கக் கோரில் பொதுமக்கள் நடத்திய போராட்டம்.

சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கை

மைக்ரோ பொருளாதார கொள்கை தற்போது பலனை தர ஆரம்பித்துள்ளதாக சர்வதேச நாணய நிதியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்டையே, பொருளாதாரம் தற்காலிக ஸ்திரதன்மைக்கான அறிகுறிகளை காண்பிப்பதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சீர்திருத்த வேகத்தை நிலைநிறுத்துவது, நிர்வாக பலவீனங்கள் மற்றும் ஊழல் அபாயங்களை நிவர்த்தி செய்வது பொருளாதாரத்தை நிலையான மீட்சி மற்றும் நிலையான வளர்ச்சிக்கான பாதையில் கொண்டு செல்வதற்கு முக்கியமானது என சர்வதேச நாணய நிதியம் கூறியுள்ளது.

எதிர்வரும் காலத்தில் தம்மால் குறிப்பிட்ட அனைத்து பூர்வாங்க நடவடிக்கைகளையும் இலங்கை அதிகாரிகள் முன்னெடுக்க வேண்டும் என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

கடன் மறுசீரமைப்பு உள்ளிட்ட பல வேலைகளை சர்வதேச நாணய நிதியம் சுட்டிக்காட்டியுள்ளது.

2022ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 70 சதவீதமாக காணப்பட்ட பணவீக்கம், இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் 1.3 சதவீதம் வரை வீழ்ச்சி கண்டுள்ளது. இந்த ஆண்டின் மார்ச் மற்றும் ஜுன் மாதத்திற்கு இடைப்பட்ட காலத்தில் 1.5 பில்லியன் டாலர் கையிருப்பு இலங்கையிடம் காணப்பட்டுள்ளது. மேலும், அத்தியாவசிய பொருட்களுக்கான தட்டுப்பாடு குறைவடைந்துள்ளது.

இந்த நிலையில், சர்வதேச நாணய நிதியத்தினால் இணக்கம் எட்டப்பட்டுள்ள இரண்டாம் கட்ட விரிவாக்கப்பட்ட கடன் வசதி இலங்கைக்கு எவ்வாறான நன்மைகளை பெற்றுக்கொடுக்கும் என்பது தொடர்பில் பிபிசி தமிழ், கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறை விரிவுரையாளர் பேராசிரியர் எம்.கணேசமூர்த்தியிடம் வினவியது.

இலங்கைக்கு இரண்டாம் கட்ட உதவி
படக்குறிப்பு,

கடன் சுமையிலிருந்து மீள வருவதற்கான தொகையாக தற்போது வழங்கப்படும் உதவியை எடுத்துக்கொள்ள முடியாது என கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறை விரிவுரையாளர் பேராசிரியர் எம்.கணேசமூர்த்தி கூறுகிறார்.

”இந்த பணத்தை இலங்கை அரசாங்கம் எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பது சம்பந்தமாக அந்த ஒப்பந்தத்தில் சொல்லப்பட்ட விடயங்களுக்கு அமையவே இலங்கை செய்ய வேண்டியிருக்கும். ஆரம்ப கட்டத்தில் வழங்கப்பட்ட பணத்தில் ஒரு பகுதியை நிதி தேவைகளுக்கு அனுமதிக்கப்பட்டிருந்தாலும் கூட, இந்த தடவை வழங்கப்பட்டுள்ள தொகையை செலவிட வேண்டிய விதம் நிச்சயமாக சுட்டிக்காட்டப்பட்டிருக்கும்.” என அவர் கூறினார்.

சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட கடன் வசதி திட்டத்தின் ஊடாக, இலங்கை கடன் சுமையிலிருந்து மீள முடியுமா என அவரிடம் வினவினோம்.

”கடன் சுமையிலிருந்து மீள வருவதற்கான தொகையாக இதனை எடுத்துக்கொள்ள முடியாது. இலங்கையின் கடன் சுமார் 84 பில்லியன் அமெரிக்க டொலராக உள்ளது. அதிலும், தற்போது வழங்கப்பட்டுள்ள 330 மில்லியன் டொலர் போதுமானதாக இல்லை. சர்வதேச நாணய நிதியம், இலங்கையின் கடன் தீர்வு பொறிமுறைகளை அங்கீகரிப்பதற்கான ஒன்றாக பார்க்க முடியும். இலங்கை அரசாங்கம் இந்த தொகையை எதற்காக பயன்படுத்த போகின்றது என்பதை பொருத்திருந்தே பார்க்க வேண்டும்,” என அவர் பதிலளித்தார்.

இதனூடாக ஏற்படும் விளைவுகள் என்ன என்பது தொடர்பிலும் கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறை சிரேஷ்ட விரிவுரையாளர் பேராசிரியர் எம்.கணேசமூர்த்தி விளக்கமளித்தார்.

”இலங்கை தொடர்பாக சர்வதேச நிதி சந்தையில் ஏற்பட்டிருக்கின்ற அந்த தொய்வு நிலை ஓரளவுக்கு அகன்று, மீண்டும் கடன் பெறும் சந்தர்ப்பம் இலங்கைக்கு கிடைக்கும். எனவே அந்த அடிப்படையில் பார்க்கும் போது பணம் என்ற அந்த வழிக்கு அப்பால், இலங்கைக்கு கிடைத்த அங்கீகாரமாக, மேலும் கடன் வாங்குவதற்கான அங்கீகாரமாக இதனை பார்க்க முடியும்.” என அவர் கூறினார்.

இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியத்தினால் வழங்கப்பட்டுள்ள கடன், மீள செலுத்துவதற்கான காலம் குறித்த இணக்கப்பாடு இதுவரை எட்டப்படவில்லை என அவர் குறிப்பிடுகின்றார்.

”இதனை அடைய வேண்டும் என்றால், இரண்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். ஒன்று உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு மேற்கொள்ளப்பட வேண்டும். அது சம்பந்தமாக இலங்கை தற்போது நடவடிக்கைகளை எடுத்துள்ளது. கடன் மறுசீரமைப்பு தொடர்பான உள்நாட்டு நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ளன. வெளிநாட்டு நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடாத்தப்பட்டு வருகின்றது. அந்த பேச்சுவார்த்தைக்கு உகந்ததாகவே சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாம் கட்ட உதவியை பார்க்க முடியும். இரண்டாம் கட்ட நடவடிக்கை வெற்றிகரமாக முன்னெடுக்கப்படும் போது அது சர்வதேச கடன் வழங்குநர்கள் மத்தியில் ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தும். அநேகமாக சீனா உள்ளிட்ட நாடுகள் இதற்கு ஆதரவாக இருக்கும். ” என கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறை சிரேஷ்ட விரிவுரையாளர் பேராசிரியர் எம்.கணேசமூர்த்தி தெரிவித்தார்.

Facebook
Facebook
fb-share-icon
Telegram
WhatsApp
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *