பிரக்ஞானந்தா வெற்றியை நாடே கொண்டாடுவது ஏன்? செஸ் உலகில் இந்தியா கோலோச்சுமா?

பிரக்ஞானந்தா வெற்றியை நாடே கொண்டாடுவது ஏன்? செஸ் உலகில் இந்தியா கோலோச்சுமா?

செஸ் விளையாட்டில் இந்தியாவின் ஆதிக்கம்

பட மூலாதாரம், Thiyagarajan

படக்குறிப்பு,

FIDE செஸ் உலககோப்பை போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த பிரக்ஞானந்தாவின் வெற்றியை இந்தியா கொண்டாடுகிறது.

FIDE செஸ் உலககோப்பை போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த பிரக்ஞானந்தா வெள்ளி பதக்கத்தை வென்று அடுத்த நகர்வான உலக சாம்பியன்ஷிப் போட்டிக்கு தேர்வாகியிருக்கிறார். செஸ் விளையாட்டில் உலக அளவில் நம்பர் 1 ஆக அறியப்படும் நார்வே நாட்டு வீரர் மேக்னஸ் கார்ல்சனுடன் கடினமாக போராடி, இரண்டாம் இடத்தை பெற்றிருக்கிறார் பிரக்ஞானந்தா. இந்த சாதனை தனிப்பட்ட ஒரு நபரின் வெற்றியாக பார்க்காமல், இந்தியாவின் வெற்றியாக கொண்டாடப்படுவதற்கு காரணம் இருக்கிறது.

இந்தியா முழுவதும் கடந்த மூன்று ஆண்டுகளில், குறிப்பாக கொரோனா ஊரடங்கு காலம் தொடங்கி பல நூறு இளம் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை செஸ் விளையாட்டில் ஈடுபடுத்தியிருக்கிறார்கள். இந்த பெற்றோர்களும், ஏழு வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் மற்றும் 15 வயதுக்கு உட்பட்ட இளம் வீரர்கள் பலரும் அசர்பைஜானில் நடைபெற்ற பிடே உலக கோப்பை விளையாட்டை உற்றுநோக்கியிருந்தனர்.

”பிரக்ஞானந்தா அடைந்த வெற்றியும், வெள்ளி பதக்கத்தையும் தாங்களே பெற்றதாக பல இந்திய பெற்றோர்களும், வீரர்களும் நினைக்கிறார்கள். பிரக்ஞானந்தாவின் வெற்றி பெரும் உந்துசக்தியாக மாறியுள்ளது. விஸ்வநாதன் ஆனந்த் எப்படி 20 ஆண்டுகளுக்கு முன்னர் செஸ் விளையாட்டை நோக்கி பலரையும் ஈர்த்தாரோ, அதுபோல இளம் வீரரான பிரக்ஞானந்தா பதின்ம வயதினர் மற்றும் குழந்தைகளிடையே ஈர்ப்பை ஏற்படுத்தியிருக்கிறார்,” என்கிறார் அகில இந்திய செஸ் கூட்டமைப்பின் செயலாளரான பாரத் சிங்.

சமீப காலங்களில் இந்தியாவில் செஸ் விளையாட்டு மிக பெரிய வளர்ச்சியை எட்டியுள்ளது என்பது பாரத் சிங் உள்ளிட்ட பல நிபுணர்களின் கூற்றாக உள்ளது. அதேநேரம், சர்வதேச அரங்கில் இந்தியாவின் ஆதிக்கம் அதிகரிக்கும் காலம் இது என்றும் சொல்லப்படுகிறது. இதன் தொடக்கப் புள்ளி எது?

செஸ் விளையாட்டில் இந்தியாவின் ஆதிக்கம்

பட மூலாதாரம், Thiyagarajan

படக்குறிப்பு,

கொரோனா பாதிப்புக்குப் பின் செஸ் விளையாட்டில் இளைஞர்கள் அதிக ஆர்வம் காட்டிவருகின்றனர்.

இந்தியாவில் கொரோனா ஊரடங்கு காலத்தில் பெரிய உயரத்தை செஸ் விளையாட்டு எட்டியது. பல குழந்தைகள், இளைஞர்கள் செஸ் விளையாட்டை நிதானித்துக் கற்றுக்கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. கடந்த மூன்று ஆண்டுகளில் தேசிய அளவில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 600 போட்டிகள் நடைபெற்றுள்ளன என்ற புள்ளிவிவரத்தைக் குறிப்பிடுகிறார் அவர்.

கொரோனாவுக்கு முன்னர் அதிகபட்சமாக வெறும் 400 முதல் 450 போட்டிகள்தான் தேசிய அளவில் நடைபெற்றன என்கிறார். அதாவது இந்தியாவில் தினமும் எதோ ஒரு மூளையில் தேசிய அளவிலான போட்டி நடைபெற்றுக்கொண்டு இருக்கும் சூழல் இங்கு உருவாகியுள்ளது.

”கொரோனா காலத்தில் எந்த விளையாட்டு போட்டிகளும் நடைபெறவில்லை. ஆனால் செஸ் விளையாட்டை எப்போதும் போல வீரர்கள் மாநில அளவு மற்றும் தேசிய அளவில் தொடர்ந்து பங்குபெற முடிந்தது. புதிதாக பல நூறு வீரர்கள் எல்லா மாநிலத்திலும் உருவானார்கள். இந்த மாற்றத்தை வெறும் எண்ணிக்கையால் சொல்லமுடியாது.

ஆனால் அந்த உணர்வுதான் தற்போது இந்தியாவில் வெளிப்படுகிறது. என் 35 ஆண்டு அனுபவத்தை வைத்து பார்க்கையில், கொரோனாவுக்கு முன்னர் இருந்ததைவிட செஸ் போட்டியாளர்கள் இந்தியாவில் அதிகரித்துள்ளதை என்னால் கண்ணார பார்க்கமுடிகிறது. தேசிய அளவில் பரிசு தொகையும் சுமார் ஒரு கோடி வரை அளிக்கப்படுகிறது,” என்கிறார் பாரத் சிங்.

இந்தியாவின் ஆதிக்கம் நிறைந்த ஆண்டு

பல ஆண்டுகளாக செஸ் உலகக்கோப்பை போட்டியில் பல இந்தியர்கள் விளையாடியுள்ளனர். ஆனால் 2000 மற்றும் 2002ல் விஸ்வநாதன் ஆனந்த் மட்டுமே இறுதிச்சுற்றில் விளையாடி முதல் இடத்தை பிடிக்கமுடிந்தது. அதன்பின்னர், கடந்த 20 ஆண்டுகளில், இறுதிச் சுற்றுக்கு இந்தியர்கள் யாரும் செல்லவில்லை.

எட்டு சுற்றுகள் கொண்ட இந்த போட்டியில் பெரும்பாலான இந்திய வீரர்களால் முதல்-இரண்டாம் சுற்றுக்கு அப்பால் செல்ல முடியவில்லை. ஆனால், இந்த ஆண்டு, உலகக் கோப்பையின் காலிறுதி போட்டியில், எட்டு நபர்கள் தேர்வானார்கள். அதில் நான்கு இந்தியர்கள் இருந்தனர். அதாவது இறுதி எட்டு வீரர்களில் பாதி பேர் ஒரு நாட்டைச் சேர்ந்தவர்கள். சீனா, ரஷ்யா அல்லது போலந்து மற்றும் இங்கிலாந்தில் இருந்து ஒரு வீரர் கூட இல்லை. அதனால் இந்த போட்டியில் இந்தியாவின் ஆதிக்கம் இருப்பதை நம்மால் உணரமுடிந்தது.

மேலும், இந்த போட்டியில் பங்குபெற்ற வீரர்கள் பெரும்பாலும், இருபதுகள் மற்றும் இருபதுகளின் தொடக்கத்தில் உள்ள வீரர்கள். இந்தியாவின் இளம் தலைமுறை செஸ் விளையாட்டை எப்படி உள்வாங்கி உள்ளது என்பதற்கு இந்த இளம் முகங்களே சாட்சி.

FIDE புள்ளிவிவரங்களின்படி, இந்த ஆண்டு இந்தியாவைச் சேர்ந்த 17 விளையாட்டு வீரர்கள் உலக கோப்பை போட்டிக்கு சென்றனர். அதில் 10 ஆண்களும், 7 பெண்களும் அடங்குவர். கடந்த முறை, ரஷியாவில் 2021ல் FIDE உலக கோப்பை போட்டிக்கு நான்கு பெண்கள் உள்பட இந்திய வீரர்கள் பங்குபெற்றனர்.

செஸ் விளையாட்டில் இந்தியாவின் ஆதிக்கம்

பட மூலாதாரம், Thiyagarajan

படக்குறிப்பு,

பயிற்சியாளர் தியாகராஜனுடன் வைஷாலி மற்றும் பிரக்ஞானந்தா ஆகியோர் 2012-ம் ஆண்டில் எடுத்துக்கொண்ட புகைப்படம்.

இளம் வயதில் பயிற்சி

பெரும்பாலும், இந்தியாவில் செஸ் விளையாட்டு பயிற்சி மையங்களில் நான்கு வயதுள்ள குழந்தைகள் சேர்த்துக்கொள்ளப்படுகிறார்கள். அந்த எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது என்றும் சொல்லப்படுகிறது.

பிரக்ஞானந்தா மற்றும் அவரது சகோதரி வைஷாலி ஆகிய இருவருக்கும் பயிற்சி அளித்த தியாகராஜனுடன் பேசியபோது, செஸ் விளையாட்டை பல ஆயிரம் குழந்தைகள் கற்றுக்கொள்ள வருவது குறித்து விளக்கம் கேட்டோம்.

கடந்த சில ஆண்டுகளில் குழந்தைகளை விருப்பத்துடன் பெற்றோர் செஸ் பயிற்சி மையங்களில் சேர்த்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக, தமிழ்நாட்டை பொறுத்தவரை, கடந்த 2022ல் செஸ் ஒலிம்பியாட் சென்னையில் நடைபெற்றது. சர்வதேச அளவில் இருந்து பல செஸ் வீரர்கள் இங்கு குவிந்தார்கள்.

செஸ் விளையாட்டின் பக்கம் மக்களின் கவனத்தை இந்த ஒலிம்பியாட் ஈர்த்தது என்று சொல்லலாம் என்கிறார் அவர். அதேபோல, பல கார்பரேட் நிறுவனங்கள் செஸ் விளையாட்டு வீரர்களுக்கு ஸ்பான்ஸ்பர் கொடுக்க சமீப காலங்களில் முன்வந்துள்ளனர் என்பதால், போட்டியில் பங்குபெறுவதற்கான கட்டணம், பயண செலவுகள் போன்றவற்றை எளிதாக இந்திய வீரர்கள் எடுத்துக்கொள்ள முடிகிறது என்றும் அவர் குறிப்பிடுகிறார்.

வாய்ப்பாட்டு, நடனம் உள்ளிட்ட கலை சார்ந்த பயிற்சிக்கு எவ்வளவு சிரத்தை எடுத்துக்கொள்ளவேண்டுமோ அதேபோல கடும் முயற்சி எடுத்து சிறுவயதில் இருந்து செஸ் கற்றுக்கொள்பவர்களுக்கு அந்த விளையாட்டு அவர்களுக்கான வாழக்கையை அமைத்துக்கொடுக்கும் என்பதை பயிற்சியாளர்கள் பலரும் அறிவுறுத்துகின்றனர்.

தியாகராஜனின் பயிற்சி மையத்தில் இரண்டு மாணவர்கள் செஸ் போட்டிகளில் அடைந்த சாதனைகள் காரணமாக மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ளனர்.

”படிப்பு, வேலைவாய்ப்பு போன்றவற்றில் கிடைக்கும் வாய்ப்புகள் மக்களுக்கு ஒரு உத்தரவாதத்தை தருகிறது. பிரக்ஞானந்தா, வைஷாலி பற்றிச் சொல்ல தேவையில்லை. இதுபோல, மிகவும் நடுத்தர குடும்பங்களைச் சேர்ந்த பல குழந்தைகள் இந்த விளையாட்டில் தடம் பதிக்கும் காலத்தில் நாம் இருக்கிறோம். அதனால்தான் இது பலருக்கும் சாத்தியமான ஒன்று. கடும் உழைப்பு மட்டும்தான் மூலதனம் என்பதை செஸ் உணர்த்திவிட்டது. அதனால், இந்தமுறை பிரக்ஞானந்தாவின் வெற்றியை இந்தியாவே கொண்டாடுகிறது,” என்கிறார் தியாகராஜன்.

முழு நேரமாக செஸ் விளையாடவில்லை எனிலும், படிப்பையும், விளையாட்டையும் தொடர்ந்து எடுத்துச்செல்வதற்கு பல வாய்ப்புகளை செஸ் விளையாட்டு வழங்குவதும் ஒரு முக்கிய காரணமாக விளங்குகிறது.

செஸ் விளையாட்டில் இந்தியாவின் ஆதிக்கம்

பட மூலாதாரம், Thiyagarajan

படக்குறிப்பு,

செஸ் விளையாட்டில் பயிற்சி பெறவும், சாதனை படைக்கவும் படிப்பை நிறுத்திவிடவேண்டும் என்ற ஒரு தேவை எங்கும் எழவில்லை என்கிறார் கிராண்ட்மாஸ்டர் வைஷாலி.

சாதகமான வாய்ப்புகள்

கிராண்ட் மாஸ்டர் வைஷாலி பேசுகையில், பல கல்வி நிறுவனங்களும் செஸ் வீரர்களுக்கு நல்ல ஒத்துழைப்பு வழங்குவதால், போட்டிகளில் பங்குபெறுவது செஸ் போட்டியாளர்களுக்கு ஒரு சுமையாக தெரிவதில்லை என்ற கருத்தை முன்வைத்தார்.

மற்ற விளையாட்டுகளை காட்டிலும், அதிக எண்ணிக்கையில் போட்டிகள் ஆண்டு முழுவதும் நடைபெறுவதால், தங்களது படிப்பிற்கான காலத்தை முடித்துவிட்டு, கல்வி நிறுவனத்தின் ஆதரவுடன் பல போட்டிகளில் பங்குபெற்றதாக அவர் தெரிவித்தார்.

”தற்போது பரவலாக செஸ் குறித்த விழிப்புணர்வு உள்ளது. படிப்பை நிறுத்திவிட்டு விளையாடவேண்டும் என்ற கட்டாயம் இல்லை. நான் எம்.ஏ. இறுதி ஆண்டு படிக்கிறேன். நான் பயிலும் கல்லூரியில் எனக்காக பல மாறுதல்களை செய்வதற்கு ஒப்புக்கொள்கிறார்கள். என்னை போன்ற பிற செஸ் போட்டியாளர்கள் பலரும் இதுபோன்ற அனுபவங்களை பெற்றுள்ளனர். திறமையான நபர்களை கல்வி நிறுவனங்கள் முன்னிறுத்துவதால், பல போட்டிகளுக்கு செல்ல எங்களுக்கும் உத்வேகம் பிறக்கிறது,”என்கிறார் அவர்.

கடந்த ஐந்து ஆண்டுகளில் செஸ் சாப்ட்வேர்கள் பலவும் அறிமுகம் ஆகியுள்ளன என்பதால் விளையாட்டு வீரர்கள் தங்களை தயார்படுத்திக்கொள்ள வாய்ப்புகள் பெருகிவிட்டன என்றும் சுட்டிக்காட்டுகிறார் வைஷாலி.

அதேநேரம், தங்களின் புள்ளிகளை உயர்த்திக்கொள்ள, போட்டியாளர்கள் தங்களை தகவமைத்துக் கொள்ளவும் செஸ் போட்டி அனுமதிக்கிறது. எடுத்துக்காட்டாக, சென்னையை சேர்ந்த பொறியியல் பட்டதாரி அஜய் கிருஷ்ணாவின் அனுபவத்தை சொல்லலாம்.

அவர் படித்து பொறியியல் பட்டம் பெற்றுவிட்டு, தற்போது தீவிரமாக செஸ் பயிற்சியில் இறங்கி, அடுத்தடுத்த தேசிய போட்டிகளில் பங்குபெற திட்டம் வகுக்கிறார் இவர். ”என்னால் முழுநேரத்தையும் செஸ் விளையாட ஒதுக்கமுடியவில்லை. பயிற்சிகளை தொடர்ந்து மேற்கொண்டேன். தற்போது பட்டப்படிப்பை முடித்துவிட்டேன். இனி எனக்கான நேரம், இந்த சுதந்திரத்தை பிற விளையாட்டுகளில் அவ்வளவு எளிதாக நீங்கள் பெற முடியாது. நான் தற்போது இன்டர்நேஷனல் மாஸ்டராக உள்ளேன். அடுத்த இலக்கு கிராண்ட்மாஸ்டர்,” என்கிறார் அஜய் கிருஷ்ணா.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Facebook
Facebook
fb-share-icon
Telegram
WhatsApp
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *