
நீலகிரி மலைப் பகுதிகளில் பல நூறு ஆண்டுகளாக வசித்துவரும் தோடர் இன பழங்குடி மக்கள், சமீப ஆண்டுகளில் மோசமானசமிக்ஞை ஒன்றை பார்த்து வருகிறார்கள்.
தங்களது புனித விலங்கான நீளமான, வளைந்த கொம்புகளை கொண்ட சாம்பல் நிற எருமைகளின் எண்ணிக்கை மிகவும் குறைந்துவிட்டதால் அவர்களது இனத்தின் அழிவும் ஆரம்பம் ஆகிவிட்டதாக அவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
இந்தியாவில் அழிந்துவரும் கால்நடை பட்டியலிலும் தோடர் இன எருமை சேர்க்கப்பட்டுள்ளது. அதனால், எதிர்காலத்தில் தோடர் இன எருமையின் இனவிருத்தி தேவையை கருத்தில்கொண்டு, தமிழ்நாடு அரசின் கால்நடை அமைச்சகம், இந்த எருமைகளின் கருமுட்டைகள் மற்றும் விந்தணுக்களை உறையவைத்து பாதுகாத்து வருகின்றது.

தோடர் எருமைகள் இந்தியாவின் பிற பகுதிகளில் காணப்படுவதில்லை. தமிழ்நாட்டில் கூட, நீலகிரி மலையை தவிர பிற மாவட்டங்களில் இந்த இனம் வளர்வதற்கு உகந்த சூழல் இல்லை
கல்யாண சீதனமாக வழங்கப்படும் எருமை
தோடர் எருமைகள் இந்தியாவின் பிற பகுதிகளில் காணப்படுவதில்லை. தமிழ்நாட்டில் கூட, நீலகிரி மலையை தவிர பிற மாவட்டங்களில் இந்த இனம் வளர்வதற்கு உகந்த சூழல் இல்லை என்பதால் இந்த மலையில் மட்டுமே இவை வாழமுடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
கல்யாண சீதனமாக எருமையை மணப்பெண்களுக்கு கொடுப்பது தோடர்களின் வழக்கம். திருமணத்தின்போது கொடுக்கப்படும் எருமைகளை, தங்கத்தைவிட விலைமதிப்பான பொருளாக தோடர் இன பெண்கள் கருதுகின்றனர். ஆனால் எருமைகளின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருவதால், அந்த வழக்கம் மறைந்துவிடுமோ என்ற வேதனை அவர்களிடம் குடிகொண்டுள்ளது.
‘தோடர் எருமை’ இனம் அழிய என்ன காரணம் என்று தெரிந்துகொள்ள நாம் தோடர் மக்களை நேரடியாக அவர்களின் வசிப்பிடத்தில் சென்று சந்தித்தோம்.

தோடர்கள் கலாசாரத்தில் எருமைகள் பிறப்பில் இருந்து இறப்பு வரை பல சடங்குகளில் தேவைப்படுகின்றன என்றார் சுசித்ரா
”எருமை இல்லாத வீட்டை மோசமான வீடு என்பார்கள்”
24 வயது பட்டதாரி சுசித்ராவை சந்தித்தோம். நீர்காசி மந்த் என்ற பகுதியில் அமைந்துள்ளது அவர் வீடு. அவரது வீட்டுக்கு அருகில் எருமைகளுக்காக ஒரு கொட்டகை இருந்தது. எருமைகளை யாரும் கட்டி வைப்பதில்லை. தானாகவே மேய்ந்துவிட்டு, மாலையில் வீடு திரும்புகின்றன.
ஒவ்வொரு எருமைக்கும் பெயர்கள் வைத்துள்ளனர். சுசித்ராவின் தந்தையிடம் தற்போது ஐந்து எருமைகள் உள்ளன. தோடர்கள் கலாசாரத்தில் எருமைகள் பிறப்பில் இருந்து இறப்பு வரை பல சடங்குகளில் தேவைப்படுகின்றன என்றார் சுசித்ரா.
”எருமை என்பது நாங்கள் பிறந்ததில் இருந்து எங்களுடன் பயணித்து வருகின்றது. ஒரு குழந்தை பிறந்தால், தாய்மாமா அந்த குழந்தைக்கு எருமையை பரிசாக கொடுக்க வேண்டும். திருமணத்தின்போது பெண் வீட்டார் எருமையை சீதனமாக கொடுக்க வேண்டும். உப்பு பண்டிகை என்பது எங்களுக்கு முக்கியமான பண்டிகை. அப்போது எருமைக்கு உப்பு நீர் கொடுப்பது எங்களின் வழக்கம்.
“துக்க நிகழ்வில் எருமைக்கு முக்கியத்துவம் கொடுத்து நாங்கள் வணங்கி பூசை செய்வோம். எருமைகள் பற்றிய பாடலை நாங்கள் கோவிலில் பாடுவோம். எங்கள் கோவிலில் எருமை நெய்யில்தான் விளக்கு போடுவோம். எருமை இல்லாத வீடு மோசமான வீடு என்பது எங்கள் முன்னோர்களின் நம்பிக்கை,” என்றார் அவர்.

தோடர் இனப் பெண்கள் எருமையை மிகவும் விலைமதிக்கமுடியாத பொருளாகக் கருதுகிறார்கள்
தாய் வீட்டு சீதனம்
தோடர் இன பெண்கள் மிகவும் விலைமதிக்கமுடியாத பொருளாக எருமையை ஏன் கருதுகிறார்கள் என்று கேட்டோம். அவரது பாட்டி, தாய் மற்றும் அவரது சொந்தத்தில் உள்ள பலரும் எருமையை சீதனமாக பெற்றுள்ளதை சுட்டிக்காட்டி விவரிக்கிறார் சுசித்ரா.
”என் பாட்டிக்கு அவரது திருமணத்தின்போது 25 எருமைகள் சீதனமாக கிடைத்தது. என் அம்மாவுக்கு 10 முதல் 15 எருமைகள் வரை கொடுத்தார்கள்.
“எனக்கு இரண்டு சகோதரிகள் உள்ளனர். ஆனால் அவர்களின் திருமணத்தின்போது எங்கள் அப்பா ஆளுக்கு ஒரு எருமை என்ற கணக்கில் இரண்டு எருமைகளை மட்டுமே சீதனமாக கொடுக்க முடிந்தது. அடுத்து என் கல்யாணத்திற்கு ஒரு எருமை தருவார்களா என்று தெரியவில்லை.
“ஒரு பெண் எத்தனை எருமைகளை கொண்டுவருகிறாளோ அந்த அளவு புகுந்தவீட்டில் செல்வம் சேரும் என்பது நம்பிக்கை. எருமைகள் வளர்வதுபோலவே அந்த குடும்பம் செழிக்கும்,” என்கிறார் சுசித்ரா.

நீலகிரி மலையில் பொது இடங்களில் இருந்த பல புல்வெளிகள் ஆக்கிரமிக்கப்பட்டதுதான் எருமைகள் குறைந்துபோனதற்கு முக்கிய காரணம் என்கிறார் தோடர் இன செயற்பாட்டாளர் வாசமல்லி
எருமைகளின் எண்ணிக்கை குறைந்தது ஏன்?
எருமைகளின் எண்ணிக்கை கடந்த 20 ஆண்டுகளில் வேகமாக குறைந்துவிட்டதாக தமிழ்நாடு அரசின் கால்நடை அமைச்சகத்தின் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.
கால்நடைகள் எண்ணிக்கை தொடர்பான அறிக்கையின்படி, 1994ல் தோடர் இன எருமைகள், 3,531ஆக இருந்தன. அந்த எண்ணிக்கை, 2023ல் வெறும் 1,600ஆக குறைந்துள்ளது. அதாவது பாதி அளவு எருமைகள் குறைந்துள்ளன.
நீலகிரி மலையில் பொது இடங்களில் இருந்த பல புல்வெளிகள் ஆக்கிரமிக்கப்பட்டதுதான் எருமைகள் குறைந்துபோனதற்கு முக்கிய காரணம் என்கிறார் தோடர் இன செயற்பாட்டாளர் வாசமல்லி.
”நாங்கள் சிறுவயதில் பல இடங்களில் எருமைகளை மேய்த்துவிட்டு விளையாடிவிட்டு வருவோம். தற்போது புல்வெளிகள் மிகவும் சுருங்கிவிட்டன. சில எருமைகள் காட்டு பகுதிகளுக்கு சென்று மேயும் போது, வனவிலங்குகளின் தாக்குதலில் சிக்கி இறந்து போகின்றன.
நாங்கள் வசிக்கும் இடங்களுக்கு அருகிலேயே கேளிக்கை விடுதிகள் வந்துவிட்டன. மேய்ச்சலுக்கு தேவையான புல் இல்லாமல், எங்கள் எருமைகளுக்கு போதுமான உணவு கிடைப்பதில் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. நீலகிரி மலை இப்போது சுற்றுலாவாசிகளுக்கான இடமாக முற்றிலும் மாறிவிட்டது. எங்கள் வாழ்விடங்கள் அழிந்துவருகின்றன,” என்கிறார் வாசமல்லி.
எருமைகளின் எண்ணிக்கை குறைந்துவிட்டது ஒரு மோசமான சமிக்ஞையாக தோடர் சமூகம் கருதுவதால், இந்த ஆண்டு எருமைகளுக்கான பிரத்யேக பிரார்த்தனை ஒன்றை தோடர்கள் ஒருங்கிணைத்தனர் என்றும் அவர் தெரிவித்தார்.
கருவுறும் விகிதத்தில் சரிவு

தோடர்கள் பலரும் மேய்ச்சல் தொழிலில் இருந்து விலகி விவசாயத்திற்கு சென்றுவிட்டதும் எகுமைகளின் எண்ணிக்கை குறைந்துள்ளதற்கு ஒரு முக்கிய காரணம்
கால்நடை துறை உயரதிகாரிகளிடம் பேசியபோது, புல்வெளிகள் ஆக்கிரமிப்பாளர்களிடம் சிக்கியது போலவே, தோடர்கள் பலரும் மேய்ச்சல் தொழிலில் இருந்து விலகி விவசாயத்திற்கு சென்றுவிட்டதும் எகுமைகளின் எண்ணிக்கை குறைந்துள்ளதற்கு ஒரு முக்கிய காரணம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
நீலகிரியில் பிரதானமாக 256 மந்த்களில் தோடர்கள் வசித்து வருகின்றனர். இவர்களின் ஒட்டுமொத்த மக்கள்தொகை அதிகபட்சமாக 2,000 ஆக உள்ளது. அதிலும் பல இளைஞர்கள் முற்றிலுமாக மேய்ச்சல் தொழில் இருந்து விலகி, கார் ஓட்டுநர் உள்ளிட்ட சுற்றுலா துறை சார்ந்த வேலைகளும் செல்ல தொடங்கிவிட்டதால், எருமைகளை பராமரிப்பது என்பது குறைந்துவிட்டது என்றும் அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர்.
”புல்வெளிகள் குறைந்தால், எருமைகளுக்கு தேவையான ஊட்டச்சத்தான உணவு கிடைக்காது. ஆரோக்கியமான எருமைகள் இருந்தால்தான் இனவிருத்தி சாத்தியம், அதாவது கருவுறுதல் நடக்கும். கரு வளர்வதற்கும், கன்று ஆரோக்கியமான முறையில் பிறப்பதற்கும் தாய் எருமைக்கு ஊட்டச்சத்து அவசியம்.
புல்வெளிகள் குறைந்துபோனதால் எருமைகள் கருவுறுதல் விகிதத்தில் பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது. எங்களிடம் உள்ள புள்ளிவிவரங்களின்படி, எருமைகள் கருவுறுதல் சதவிகிதம் சுமார் 50 சதவீதம்வரை குறைந்துள்ளது.
தற்போது ஊட்டச்சத்து உணவு கொடுப்பது பற்றி தோடர் இன இளைஞர்கள், தொழில் முனைவோருக்கு பயிற்சிகள் தருகிறோம். எருமைகளுக்கு தேவையான முதல் உதவி தருவதற்கும் பயிற்சி அளித்துள்ளோம்,” என்கிறார் கால்நடை மருத்துவர் பிரேமா.
உறைய வைக்கப்பட்டுள்ள கருமுட்டை, விந்தணுக்கள்
நீலகிரி மாவட்ட ஆட்சியர் அமிரித்திடம் பேசியபோது, ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட புல்வெளிகளை கையகப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
தோடர் எருமைகளை பாதுகாக்க சிறப்பு நிதி ஒதுக்கப்பட்டு, இனவிருத்தி திட்டத்திற்காக 30 எருமைகள் வளர்க்கப்பட்டு வருகின்றன என்று அவர் தெரிவித்தார்.
”தோடர் இன எருமைகள் இந்திய அளவில் அருகிவரும் கால்நடை இனங்களின் பட்டியலில் இடம்பெற்றுளளது வருத்தம் தரும் செய்தி. தற்போது, 30 தோடர் எருமைகளை பண்ணையில் வளர்த்து வருகிறோம்.
அதோடு, அந்த எருமைகளின் விந்தணுக்கள் மற்றும் கருமுட்டைகள் உறைந்த நிலையில், பாதுகாக்கப்பட்டுள்ளது. குறைந்தது அடுத்த 20 ஆண்டுகளில் இந்த எருமை அழியும் தருவாயில் இருந்தால், இனத்தை விருத்திசெய்ய இந்த முட்டைகள் பயன்படுத்தப்படும்,” என்றார் அம்ரித்.

சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் தருண் சாப்ரா இதுவரை சுமார் பத்து ஏக்கர் நிலத்தில் புல் செடிகளை வளர்த்துள்ளார்
புல்வளர்ப்பின் அவசியம்
தோடர் இன எருமைகளுக்கு தேவையான புல்வெளிகளை அதிகரிக்க நீலகிரியில் உள்ள சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர்கள் சேர்ந்து பண்ணை அமைத்து புல் செடிகளை வளர்த்து வருகின்றனர். சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் தருண் சாப்ரா இதுவரை சுமார் பத்து ஏக்கர் நிலத்தில் புல் செடிகளை வளர்த்துள்ளார்.
நீலகிரி முழுவதும் பசுமையாக இருப்பதை பார்க்கலாம். ஆனால், பசுமையாக தெரியும் எல்லா புல்வெளிகள் நீலகிரி மலையைச் சேர்ந்த உள்ளூர் புல் வகை இல்லை; வெளிநாட்டு புல்வகைகள் படர்ந்து வளர்வதால் சுற்றுச்சூழலுக்கும், தோடர் எருமைகளுக்கும் எந்த பயனும் இல்லை என்கிறார் தருண் சாப்ரா.
“பெரும்பாலும் பசுமையாக தெரியும் புல் என்பது கிக்கியூ. ஆப்பிரிக்காவைச் சேர்ந்த புல் வகையை சேர்ந்தது. இதுபோன்ற வெளிநாட்டு புல் வகை படர்வதால், எந்த நன்மையும் இல்லை.
இதேபோல, செஸ்ட்ரம் என்ற மஞ்சள்நிற பூ பூக்கும் செடியும் நீலகிரி மலை முழுவதும் காணப்படுகிறது. இந்த செடியும் தேவையற்ற ஒரு வெளிநாட்டு தாவரம்தான்.
இந்த செடிகள் மற்றும் புல் வகை, உள்ளூர் வகை தாவரங்களை போல, மழை நீரை தேக்கிவைப்பதும் இல்லை, எருமைகளுக்கு ஊட்டச்சத்து மிக்க உணவாக இருப்பதும் இல்லை,” என்கிறார் தருண் சாப்ரா.

“எருமைகள் இல்லை என்றால், தோடர்கள் என்ற அடையாளத்தை நாங்கள் இழந்துவிடுவோம்,” என்கிறார் சுசித்ராவின் தந்தை தேவராஜ்
ஏற்கெனவே, எருமைகளின் எண்ணிக்கை குறைந்துவிட்டதால், தோடர் சமூகத்தில், இறந்தவர்களுக்காக எருமையை பலி கொடுக்கும் சடங்கு பெரும்பாலும் மறைந்துவிட்டது. தற்போது, குறைந்தபட்சம் தங்களது அடையாளத்தை காட்டுவதற்காக எருமைகள் பாதுகாக்கபடவேண்டும் என்று தோடர் இன மக்கள் கூறுகின்றனர்.
சுசித்ராவின் தந்தை, தேவராஜ்,பேசுகையில், ”ஒரு வீட்டில் எருமை இல்லை எனில், சொந்தங்கள் யாரிடமாவது வாங்கி வளர்க்கவேண்டும் என்ற நிலையில் பல குடும்பங்கள் உள்ளன. ஒருவர் வீட்டில் எருமை இல்லை என்றால் மற்றவர்கள் அவனை மிகவும் ‘சீப்பான மனிதன்’ என்று எடை போடுவார்கள். எருமைகள் இல்லை என்றால், தோடர்கள் என்ற அடையாளத்தை நாங்கள் இழந்துவிடுவோம்,”என்கிறார் தேவராஜ்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
நன்றி
Publisher: பிபிசிதமிழ்