மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் அருகே உள்ள திருவேள்விக்குடி கிராமத்தை சேர்ந்தவர் தங்கசாமி. இவரின் மனைவி மீனாட்சி வயது 62. முன்னாள் தி.மு.க எம்.எல்.ஏ-க்களான குத்தாலம் கல்யாணம் மற்றும் அவருடைய மகன் அன்பழகன், சந்திரசேகர், கோவிந்தராஜ், அறிவழகன், மனோகரன், ரவி உள்ளிட்டோர் கடந்த 2012-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வீடு புகுந்து மீனாட்சியை தாக்கியதாக, அவர் கொடுத்த புகாரின்பேரில் குத்தாலம் காவல் நிலைய போலீஸார் நான்கு பிரிவுகளில் வழக்கு பதிவுசெய்தனர்.

இது குறித்த வழக்கு மயிலாடுதுறை மாவட்ட குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த நிலையில் நீதிபதி கலைவாணி இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கினார். வழக்கில் தொடர்புடைய மனோகரன் இறந்துவிட்ட நிலையில் சந்திரசேகர், குத்தாலம் கல்யாணம், கோவிந்தராஜ், கல்யாணம் மகன் அன்பழகன், அறிவழகன் மற்றும் ரவி ஆகிய ஆறு பேருக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து உத்தரவிட்டார். இதையடுத்து தண்டனையை ஒத்திவைக்கக் கோரி ஆறு பேரும் மனுத்தாக்கல் செய்தனர். இதையடுத்து வழக்கின் மேல்முறையீட்டுக்காக ஒரு மாத காலம் அவகாசம் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது.

இது குறித்து சிலரிடம் பேசினோம், “தங்கசாமி மகன் மகேஷ்வரன் தி.மு.க-வில் இருந்ததாக தெரிகிறது. அவர் கட்சியில் இருந்த சிலர்மீது ஏற்பட்ட அதிருப்தியில் அ.தி.மு.க-வில் இணைய இருந்தார். இது தொடர்பான வாக்குவாதம் தங்கசாமி வீட்டில் நடைபெற்றபோது பிரச்னையாக மாறியது. இதைத் தொடர்ந்து மீனாட்சியை அவர்கள் சேர்ந்து தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த மீனாட்சி, குத்தாலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். 12 வருடங்களுக்கு முன்பு நடைபெற்ற இந்தச் சம்பவம் அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இது தொடர்பான வழக்கில்தான் தற்போது நீதிமன்றம் சிறைத் தண்டனை விதித்துள்ளது. சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் எம்.எல்.ஏ-வான குத்தாலம், கல்யாணம் தற்போது தி.மு.க உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினராகவும், அவருடைய மகனான முன்னாள் எம்.எல்.ஏ அன்பழகன், தி.மு.க-வில் மாநில கொள்கை பரப்பு துணைச் செயலாளராக பொறுப்பு வகிக்கின்றனர்” என்றனர்.
தி.மு.க-வில் முக்கிய பொறுப்பில் உள்ளவர்களுக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது தி.மு.க-வினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நன்றி
Publisher: www.vikatan.com