1984-ம் ஆண்டு நடந்த கலவரத்துக்கு போதிய ஆதாரம் இல்லாததால் காங்கிரஸ் முன்னாள் எம்.பி சஜ்ஜன் குமாரை கொலை வழக்கில் இருந்து மட்டும் விடுவிப்பதாக டெல்லி நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது. 1984-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 31-ம் தேதி அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியை, அவரின் பாதுகாவலர்கள் சுட்டுக் கொன்றனர். அதன்பின் டெல்லி உட்பட பல நகரங்களில் சீக்கியர்களுக்கு எதிராக பெரிய அளவில் கலவரம் நடந்தது. இதன் பின்னணியில் காங்கிரஸ் மூத்த தலைவர் சஜ்ஜன் குமார் இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. 1984-ம் ஆண்டு நவம்பர் 1 மற்றும் 2-ம் ஆகிய தேதி நடந்த கலவரத்தில் சோஹன் சிங் மற்றும் அவரது மருமகன் அவதார் சிங் ஆகிய இருவர் கொல்லப்பட்டனர் மற்றும் பலர் காயமடைந்தனர். இதையடுத்து குர்சரண் சிங் என்பவர் மீது பயங்கர தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த கலவரங்களுக்கு காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் மக்களவை உறுப்பினர் சஜ்ஜன் குமார் தலைமை தாங்கியதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இந்த நிலையில், கொடிய ஆயுதங்களுடன் கலவரம் செய்தல், வெவ்வேறு குழுக்களிடையே பகையை ஊக்குவித்தல் உள்ளிட்ட வழக்குகளின் அடிப்படையில் 1991-ம் ஆண்டு இவர் மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டது. இதையடுத்து டெல்லி கீழமை நீதிமன்றம் சஜ்ஜன் குமாருக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது. பாஜக ஆட்சிக்கு வந்தவுடன் 2015-ல் மத்திய உள்துறை அமைச்சகத்தால் சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டது. அதன்பிறகு சிறப்பு புலனாய்வு குழு இந்த வழக்கை கடுமையாக விசாரிக்க ஆரம்பித்தது.


இந்த நிலையில், 2015-ம் ஆண்டு குர்சரண் சிங் என்பவர் அளித்த புகாரின் பேரில் சஜ்ஜன் குமார் மீது எப்.ஐ.ஆர் பதிவுசெய்யப்பட்டு, முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டார். இதையடுத்து 2018-ம் ஆண்டு கைதுசெய்யப்பட்டார். இது தொடர்பான மேல்முறையீடு வழக்கு டெல்லி நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், கடந்த ஜூலை மாதம் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. இது தொடர்பான வழக்கை விசாரித்த டெல்லி நீதிமன்றம், போதிய ஆதாரம் இல்லாததால் சஜ்ஜன் குமாரை கொலை வழக்கில் இருந்து மட்டும் விடுவிப்பதாக தெரிவித்திருக்கிறது. கொடிய ஆயுதங்களுடன் கலவரம் செய்தல், வெவ்வேறு குழுக்களிடையே பகைமையை ஊக்குவித்தல் ஆகிய குற்றச்சாட்டுகளிலிருந்து அவர் விடுவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com