சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு பெங்களூரு தனி நீதிமன்றம் தலா 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது. அதோடு, ஜெயலலிதாவுக்கு ரூ.100 கோடியும், மற்ற மூன்று பேருக்கும் தலா ரூ.10 கோடியும் அபராதம் விதித்தது. இந்த தீர்ப்பை கர்நாடக உயர் நீதிமன்றம் ரத்துசெய்து, அவர்கள் 4 பேரையும் விடுதலை செய்து உத்தரவிட்டது. ஆனால் மேல்முறையீட்டு வழக்கில் உச்ச நீதிமன்றம், தனி நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உறுதிசெய்து உத்தரவிட்டது. இந்த தீர்ப்பு வந்தபோது, ஜெயலலிதா மரணமடைந்துவிட்ட காரணத்தால், அவரது பெயர் தீர்ப்பிலிருந்து கைவிடப்பட்டது.

சசிகலா உட்பட மற்ற 3 பேரும் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் தண்டனையை அனுபவித்தனர். சசிகலாவும், இளவரசியும் அபராதத் தொகையைச் செலுத்தினர். ஆனால், சுதாகரன் அபராதத் தொகையைச் செலுத்தாததால், கூடுதலாக ஓராண்டு சிறைத் தண்டனையை அனுபவித்தார். இதற்கிடையே தாங்கள் ஜெயலலிதாவின் வாரிசுகள் என்பதால், அவரது சொத்துகளை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கோரி, தனி நீதிமன்றத்தில் ஜெ.தீபா, ஜெ.தீபக் ஆகியோர் தாக்கல் செய்த மனு, சமீபத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்த நிலையில், சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட சொத்துகளை விரைவில் ஏலம் விட வலியுறுத்தி, பெங்களூருவைச் சேர்ந்த ஆர்.டி.ஐ ஆர்வலரும், வழக்கறிஞருமான நரசிம்மமூர்த்தி, பெங்களூரு தனி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், இந்த வழக்கில் ஆஜராக கர்நாடக அரசு தரப்பு வழக்கறிஞர் கிரண் எஸ்.ஜவுளியை நியமனம் செய்தது. இதையடுத்து சொத்துகளை ஏலம்விடும் பணியை பெங்களூரு சொத்துக்குவிப்பு வழக்கு சிறப்பு நீதிமன்ற நீதிபதி எச்.ஏ.மோகன் அமர்வு துரிதப்படுத்தியது. கடந்த முறை வழக்கு விசாரணைக்கு வந்தபோது ஏலம்விட வேண்டிய முழு சொத்துகளின் பட்டியலை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யும்படி நீதிபதி உத்தரவிட்டார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY
அதன்படி நேற்று (ஆகஸ்ட் 28) வழக்கு விசாரணைக்கு வந்தபோது, கர்நாடக அரசு சிறப்பு வழக்கறிஞர் கிரண் எஸ்.ஜவுளி சார்பில் அவரின் இளநிலை வழக்கறிஞரும், தமிழக லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிகாரியும் ஆஜரானார்கள். அப்போது, கர்நாடக அரசு சிறப்பு வழக்கறிஞர் இந்த வழக்கில் சோ்க்கப்பட்டிருக்கும் நிறுவனங்கள் மற்றும் ஏலம்விடப்படக்கூடிய சொத்துகள் குறித்த பட்டியலை சீல்செய்யப்பட்ட கவரில் தாக்கல் செய்தார்.

அதில், கர்நாடக அரசு கருவூலத்திலுள்ள ஜெயலலிதாவின் தங்கம், வெள்ளி, வைரம் ஆகிய நகைகளின் பட்டியல் மற்றும் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் பெயரில் வங்கிகளில் முடக்கிவைக்கப்பட்டிருக்கும் பணத்தின் பட்டியல் மற்றும் லெக்ஸ் ப்ராபர்ட்டி டெவலப்மென்ட் பிரைவேட் லிமிடெட், சிக்னோரா என்டர்பிரைசஸ் பிரைவேட் லிமிடெட், மெடோ அக்ரோ ஃபார்ம்ஸ் பிரைவேட் லிமிடெட், ராம்ராஜ் அக்ரோ மில்ஸ் பிரைவேட் லிமிடெட், ரிவர் வே அக்ரோ பிரைவேட் லிமிடெட், இந்தோ டோதா கெமிக்கல் மற்றும் பார்மா லிமிடெட் ஆகிய 6 பினாமி நிறுவனங்களின் சொத்துப் பட்டியலும் நீதிமன்றத்தில் வழங்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து நீதிபதி மோகன், சொத்துக்குவிப்பு வழக்கில் தொடர்புடைய சொத்துகளை மட்டுமே ஏலம்விட முடியும் என்றும், புடவைகள், செருப்புகள் உள்ளிட்ட 28 வகையான பொருள்களை ஏலம்விட முடியாது என்றும் கூறினார். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய முடக்கப்பட்டிருக்கும் வங்கிக் கணக்குகளிலுள்ள டெபாசிட் தொகை குறித்த விவரங்களை சம்பந்தப்பட்ட வங்கிகளுக்கு கடிதமாக எழுதி, அவற்றின் டெபாசிட் விவரங்களைப் பெற வேண்டும் என்று, நீதிமன்ற அதிகாரிக்கு நீதிபதி உத்தரவிட்டார். மேலும் அந்த 30 கிலோ தங்க, வைர நகைகள் உள்ளிட்ட நிறுவனங்களின் சொத்துகளின் இன்றைய மதிப்பு குறித்தும் தெரிவிக்கும்படி அரசு வழக்கறிஞருக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

தீர்ப்பில் கூறியுள்ளபடி 30 கிலோ தங்க, வைர நகைகள் உள்ளிட்ட பொருள்களை ஏலம்விட்டு, அதில் கிடைக்கும் தொகையில் ரூ.100 கோடியை அபராதமாகச் செலுத்த வேண்டும் என்றும், மீதமுள்ள தொகையில் ரூ.5 கோடியை கர்நாடக அரசுக்கு தமிழக அரசு வழக்கு செலவாக வழங்க வேண்டும் என்றும், நீதிபதி கூறினார். இதைத் தொடர்ந்து இந்த வழக்கின் அடுத்த விசாரணையை வருகிற 31-ம் தேதிக்கு ஒத்திவைத்து, நீதிபதி உத்தரவிட்டார்.

இதற்கு முன்னதாக சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா உட்பட நான்கு பேரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட 29 வகையான பொருள்கள் குறித்து, தமிழக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு எழுதியிருக்கும் கடிதத்தில் பட்டியலிட்டிருக்கிறார் ஆர்.டி.ஐ ஆர்வலர் நரசிம்ம மூர்த்தி.
பட்டியல் பின்வருமாறு:-
1. பட்டுப்புடவைகள் -11,344
2. குளிர்சாதன இயந்திரங்கள் – 44
3. தொலைபேசிகள் – 33
4. சூட்கேஸ்கள் – 131
5. கைக்கடிகாரங்கள் – 91
6. சுவர்கடிகாரங்கள் – 27
7. மின்விசிறிகள் – 86
8. அலங்கரிக்கப்பட்ட நாற்காலிகள் – 146
9. டீப்பாய்கள் – 34
10. மேஜைகள் – 31
11. மெத்தைகள் – 24
12. உடை அலங்கார டேபிள்கள் – 9
13. அலங்கார தொங்கும் மின்விளக்குகள் – 81
14. ஷோபா செட்டுகள் – 20
15. செருப்புகள் – 750 ஜோடிகள்
16. உடை அலங்கார டேபிள் கண்ணாடிகள் – 31
17. மதுபானம் அருந்தும் கண்ணாடி டம்ளர்கள் – 215
18. இரும்பு பெட்டகங்கள் – 3
19. சால்வைகள் – 250
20. குளிர்பதனப் பெட்டிகள் – 12

21. டி.வி-க்கள் -10
22. வி.சி.ஆர்-கள் – 8
23. வீடியோ கேமரா -1
24. சி.டி பிளேயர்கள் – 4
25. ஆடியோ பிளேயர்கள் – 2
26. ரேடியோ பெட்டிகள் – 24
27. வீடியோ கேசட்டுகள் – 1,040
28. 700 கிலோ வெள்ளி பொருள்கள்.
29. தங்கம், வைரம், வெள்ளி, நவரத்தின கற்கள், முத்து, பவளம் கொண்ட நெக்லஸ், மூக்குத்தி, வளையல் உள்ளிட்ட ஆபரணங்கள்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY
நன்றி
Publisher: www.vikatan.com