பேருந்துகளில் இலவசமாக பயணிக்கும் பெண்களிடம் சாதி உள்ளிட்ட

‘மகளிருக்குக் கட்டணமில்லா பேருந்து சேவை’ என்ற வாக்குறுதியை 2021 சட்டமன்றத் தேர்தலில் வழங்கிய தி.மு.க., அந்தத் திட்டத்தை செயல்படுத்திவருகிறது. அதனால், தி.மு.க அரசு மீது பெண்களிடையே நன்மதிப்பு ஏற்பட்டிருக்கிறது என்றெல்லாம் பேசப்பட்டு வருகிறது.

ஸ்டாலின்

கட்டணமில்லா பேருந்து சேவை மூலமாக தினமும் 49 லட்சம் பெண்கள் பயணம் செய்கிறார்கள். இதற்காக, பட்ஜெட்டில் ரூ.2,800 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாகவும் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. செலவு ஒருபுறம் இருந்தாலும்கூட, இந்தத் திட்டம் பெண்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருப்பதால, இத்திட்டத்தில் எந்தப் பிரச்னையும் வராமல் பார்த்துக்கொள்ளுங்கள் என்று அதிகாரிகளை முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியதாக செய்திகள் தெரிவித்தன.

சில மாதங்களுக்கு முன் திருச்சியில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்றார். அப்போது, மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து சேவைத் திட்டம் குறித்து பல தகவல்களை அவர் பகிர்ந்துகொண்டார். ‘தேர்தல் அறிக்கை தயாரிக்கும்போது, என்னென்ன திட்டங்களை நிறைவேற்றலாம் என்று பல தரப்பினரையும் ஆலோசித்தேன். அப்போது, மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து சேவை வழங்கும் திட்டம் குறித்து ஆலோசித்தோம்.

பெண்கள் பேருந்து பயணம்

ஆனால், இதுபோன்ற திட்டத்தால் போக்குவரத்துத் துறையின் வருமானம் குறையும் என்று சொன்னார்கள். அதற்கு, இந்தத் திட்டத்தை அறிவித்தால் லட்சக்கணக்கான பெண்களின் வாழ்க்கையில் மலர்ச்சி ஏற்படுமே என்று சொன்னேன். தேர்தலில் தி.மு.க வெற்றிபெற்று நான் பதவிப்பிரமாணம் எடுத்துக்கொண்டவுடன், மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து சேவை என்ற திட்டம் தொடர்பான கோப்பில்தான் முதல் கையெழுத்திட்டேன். இந்தத் திட்டத்தின் மூலமாக, பெண்கள் பொருளாதாரத் தன்னிறைவு அடைந்திருக்கிறார்கள். நம்முடைய ஆட்சிக்கு பேரும் புகழும் வாங்கித்தரும் திட்டமாக இது அமைந்திருக்கிறது’ என்று பெருமையுடன் ஸ்டாலின் குறிப்பிட்டார்.

தமிழ்நாடு முழுவதும் எல்லா அரசுப் போக்குவரத்துக் கழகக் கட்டுப்பாட்டில் இயங்கும் சாதாரணக் கட்டண நகரப் பேருந்துகளிலும் கட்டணமில்லாமலும், பேருந்துப் பயண அட்டை இல்லாமலும் பெண்கள் பயணம் செய்துவருகிறார்கள். மாநிலத்தில் இயக்கப்படும் 9,620 நகரப் பேருந்துகளில் 74.46 சதவிகிதப் பேருந்துகளில் கட்டணமில்லாமல் பெண்கள் பயணம் செய்துவருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக பல புள்ளிவிவரங்கள் அரசிடம் இருக்கின்றன.

பெண் பயணிகள்

2023-24ம் நிதியாண்டில், இந்தத் திட்டத்தின் கீழ் நாளொன்றுக்கு 49 லட்சம் பெண்கள் பேருந்துகளில் பயணிக்கின்றனர். மாநிலத் திட்டக் குழு நடத்திய ஓர் ஆய்வில், பெண்கள் தங்கள் மாத வருமானத்தில், கட்டணமில்லா பேருந்து சேவைத் திட்டத்தின் மூலம் மாதம் ஒன்றுக்கு ரூ.756 முதல் ரூ.1,012 வரை சேமிப்பது கண்டறியப்பட்டது. ஒவ்வொரு மாதமும் சராசரியாக பெண்கள் சேமிக்கும் தொகை ரூ.888 என்று கணக்கிடப்பட்டிருக்கிறது. இந்தத் திட்டத்தில் திருநங்கைகளும் பயன்பெறுகிறார்கள்.

நகர்ப்புறங்களைச் சேர்ந்த பெண்களைவிட, கிராமப்புறங்களைச் சேர்ந்த பெண்கள் இதில் அதிகம் பயனடைகிறார்கள் என்பதையும் திட்டக்குழு கண்டறிந்திருக்கிறது. பெண் பயணிகளில் சுமார் 50 சதவிகிதம் பேர் 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தத் திட்டம் குறித்து இவ்வளவு தரவுகளைத் திரட்டிவைத்திருக்கும் தமிழ்நாடு அரசு, தற்போது மேலும் சில தகவல்களை நடத்துநர் மூலமாக பயனாளிகளிடம் கேட்கத் தொடங்கியிருப்பதுதான் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

முதல்வர் ஸ்டாலின்

பெண் பயணிகளிடம், அவர்களின் பெயர், வயது, பாலினம், செல்போன் நம்பர், சாதி ஆகியவை பற்றிய விவரங்களை நடத்துநர்கள் கேட்கிறார்கள். இதனால் அதிர்ச்சியடைந்த பெண்கள், நடத்துநரிடம் வாக்குவாதத்தில் ஈடுபடும் சம்பவங்களும் பல இடங்களில் நிகழ்கின்றன என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பெண் வாக்காளர்களின் சதவிகிதத்தைக் கணக்கிட்டு, அவர்களில் தி.மு.க-வுக்கு ஆதரவாக எத்தனை சதவிகிதம் பெண்கள் வாக்களிப்பார்கள் என்பதை கணிப்பதற்காக இந்த விவரங்கள் கேட்கப்படுகின்றன என்று சொல்லப்படுகிறது.

பேருந்து

பெண் பயணிகளிடம் சாதி போன்ற விவரங்களைக் கேட்பதற்கு அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘பெண்களிடம் தனிப்பட்ட தகவல்களை பொது இடத்தில் கேட்கும்போது, அதனால் அவர்களுக்கு பாதிப்பு ஏற்படும். மேலும், இது தனிநபர் உரிமையைப் பறிக்கும் செயல். தனிப்பட்ட மனிதரிடம் பொது இடத்தில், உங்களுடைய சாதி என்ன என்று கேட்பது உணர்ச்சிகரமான விஷயம். இதுபோன்ற செயல்பாடுகளை அ.தி.மு.க ஆதரிக்காது. இதற்கு என் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், ‘சமுதாயத்தில் எந்தப் பிரிவைச் சேர்ந்த, எந்த வயதிலுள்ள, எவ்வளவு வருமானம் பெறும் பெண்களுக்குக் கட்டணமில்லா பேருந்து பயணத் திட்டம் பயன்படுகிறது என்று ஆய்வு செய்து, அந்தத் திட்டத்தை இன்னும் கூர்மைப்படுத்துவதுதான் இந்தப் படிவங்களுக்கான நோக்கம்’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.

எடப்பாடி பழனிசாமி

ஆனால், பெண்களின் நலன் கருதி ஒரு திட்டத்தைக் கொண்டுவந்துவிட்டு, தற்போது பயனாளிகளான அந்தப் பெண்களிடம் சாதி பற்றிய விவரங்களைக் கேட்பது மிகவும் தவறு என்கிறார்கள் சமூக செயற்பாட்டாளர்கள்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…

Facebook
Facebook
fb-share-icon
Telegram
WhatsApp

TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.

நன்றி
Publisher: www.vikatan.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *