சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தவேண்டும் என்பது இன்னும் பல மாநிலங்களில் வெறும் கோரிக்கையாகவே இருந்துவரும் சூழலில், எதிர்க்கட்சிகளின் `இந்தியா’ கூட்டணியிலிருக்கும் பீகார் முதல்வர் நிதிஷ் குமார், இந்தியாவில் 97 ஆண்டுகளில் முதன்முறையாகச் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தி முடித்து அதனை வெளியிட்டிருக்கிறார். இந்தக் கணக்கெடுப்பின் மூலம் பீகாரில், `பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (BC) 27.13 சதவிகிதம், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (EBC) 36.01 சதவிகிதம், பட்டியலினத்தவர் (SC) 19.65 சதவிகிதம், பழங்குடியினர் (ST) 1.69 சதவிகிதம், முற்பட்ட வகுப்பினர் (FC) 15.52 சதவிகிதம்’ பேர் இருப்பதாக அரசு தரப்பில் அதிகாரபூர்வமாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

பீகார் மாநில அரசின் இந்த சாதனையால், நாடு முழுவதிலும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என காங்கிரஸ் கூறிவருகிறது. அந்தந்த மாநிலங்களிலும் இதற்கான அழுத்தம் எழுப்பப்பட்டு வருகிறது. ஆனால், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவோம் அல்லது நடத்தமாட்டோம் என இரண்டில் எதுவும் கூறாமல், வாய் மூடி மௌனம் காக்கிறது பா.ஜ.க.
போதாகுறைக்கு, சாதியின் பெயரால் நாட்டைப் பிளவுபடுத்த எதிர்க்கட்சிகள் முயல்வதாக, பிரதமர் மோடி மறைமுகமாக விமர்சித்தும் வருகிறார். இந்த நிலையில், சாதிவாரி கணக்கெடுப்பை ஒருமனதாக ஆதரிக்க காங்கிரஸ் செயற்குழு முடிவெடுத்திருப்பதாக ராகுல் காந்தி தெரிவித்திருக்கிறார். டெல்லியிலுள்ள அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில், காங்கிரஸ் செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. இதில், தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி, சித்தராமையா, பிரியங்கா காந்தி உட்பட முக்கிய தலைவர்கள் கலந்துகொண்டனர்.

கூட்டம் முடிந்த பிறகு, சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, “இன்றைய செயற்குழுக் கூட்டத்தில் மிகப்பெரிய முடிவெடுக்கப்பட்டிருக்கிறது. நாட்டில், சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு யோசனையை காங்கிரஸ் செயற்குழு ஒருமனதாக ஆதரிக்கிறது. இது, நாட்டிலுள்ள ஏழை மக்களின் விடுதலைக்கான, சக்திவாய்ந்த முற்போக்கான வரலாற்று நடவடிக்கையாகும். மேலும், இது அரசியல் முடிவல்ல. நீதியின் அடிப்படையில் எடுக்கப்பட்ட முடிவு. எங்கள் முதல்வர்களும் (கர்நாடகா, சத்தீஸ்கர், ராஜஸ்தான், இமாச்சலப் பிரதேசம்), இதனை முக்கியமான நடவடிக்கை என்று நம்புகிறார்கள். அதனை பரிசீலித்து நடவடிக்கை எடுக்கிறார்கள்.

ஆனால், பிரதமர் மோடியால் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தவே முடியாது. எங்களின் நான்கு முதல்வர்களில் மூன்று பேர் ஓ.பி.சி-யைச் சேர்ந்தவர். ஆனால், பா.ஜ.க-வின் 10 முதல்வர்களில் ஒருவர் மட்டுமே ஓ.பி.சி. மோடி, ஓ.பி.சி-க்களுக்காக வேலை செய்யவில்லை. ஆனால், முக்கியப் பிரச்னைகளிலிருந்து ஓ.பி.சி-யினரை திசை திருப்புகிறார். அவரின் நோக்கமே திசை திருப்புவதுதான். இனிவரும் காலங்களிலும் பல திசை திருப்பும் முயற்சிகளை அவர் மேற்கொண்டு வருவார்” என்று கூறினார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk
நன்றி
Publisher: www.vikatan.com