`மோடி தமிழ்நாட்டுக்கு வந்து செல்வதால், மக்கள் பாஜக-வுக்கு

புதுக்கோட்டை மேல ராஜா வீதியில் உள்ள வர்த்தக சங்க கட்டடத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில், பொங்கல் விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வருகை தந்த திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், “தொழிற்சங்க தலைவர்களை அழைத்து பேசி இப்பிரச்னைக்கு விரைவில் தீர்வு காண தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். போக்குவரத்து தொழிற்சங்கங்களின் வேலை நிறுத்த போராட்டத்தால் பொதுமக்கள் பாதிக்கப்படுகிறார்கள் என அவர்கள் மனிதாபிமான அடிப்படையில் அரசுடன் பேச்சுவார்த்தைக்கு சென்று போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும். வேலை நிறுத்த போராட்டத்தில் தி.மு.க கூட்டணியில் உள்ள சி.ஐ.டி.யு உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் பங்கேற்றுள்ளதால் கூட்டணிக்குள் எந்தவித குழப்பமும் வராது.

மாநகரப் பேருந்து

தொழிலாளர்களின் பிரச்னை என்பது வேறு, அரசியல் கூட்டணி என்பது வேறு. கடந்த 1991-ம் ஆண்டு ராஜீவ் காந்தி இறந்தபோது அனுதாப அலையால் காங்கிரஸ் வெற்றி பெறக்கூடிய சூழல் இருந்தது. பின்னர், காங்கிரஸூடன் அ.தி.மு.க கட்சி கூட்டணியில் சேர்ந்து, அதன் காரணமாக அ.தி.மு.க வெற்றி பெற்று ஜெயலலிதா முதலமைச்சரானார். அப்போது, பிரதானமான எதிர்க்கட்சித் தலைவராக உட்கார வேண்டியவனே நான்தான். அப்படி, இருக்கக் கூடாது என்பதற்காகத்தான் கே.கே.எஸ்.எஸ்.ஆர்-யை அவர்களது பக்கம் ஜெயலலிதா இழுத்துக் கொண்டார். கூட்டணியில் முக்கிய கட்சிகளுக்கும் கீழ் குறைவான இடங்களை பெற்றுக் கொண்டு ஒரு கட்சி இருக்கிறபோது, கட்சியின் நிலை தேக்கத்தில் இருக்கத்தான் செய்யும். அது காங்கிரஸுக்கு மட்டுமல்ல அனைத்து கட்சிகளுக்கும்தான். பா.ஜ.க, அ.தி.மு.க-வை விட்டு தனித்து நிற்க வேண்டிய அவசியம் என்னவென்றால், தனியாக தேர்தலை சந்தித்து வாக்கு சதவீதத்தை காட்டுவதற்கு முயற்சி செய்கிறார்கள். அது அவர்களது கட்சி வளர்ச்சிக்காக செய்கிறார்கள். தமிழ்நாட்டில் காங்கிரஸ் தனித்து நின்றால் தற்போது ஆட்சிக்கு வரும் சூழல் இல்லை. அதற்கான காங்கிரஸின் வளர்ச்சியும் இல்லை. அதனால், நல்ல கூட்டணியில், தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் உள்ளது. மறைந்த தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் நல்ல மனிதர். ஒரு துணிச்சலான தலைவராக இருந்தார்.

விஜயகாந்த்

காங்கிரஸை பொறுத்தவரை புதிதாக ஒரு கூட்டணியை உருவாக்க முடியாது. ஏனென்றால், தி.மு.க தலைமையில்தான் நாங்கள் கூட்டணியில் உள்ளோம். தி.மு.க தான் சீட்டை பங்கிட்டு கொடுக்கின்றனர். அதனால், புதிது புதிதாக கட்சியை சேர்த்தால் அவர்களுக்கு எவ்வாறு சீட்டு வழங்க முடியும்… அதனால் நாங்கள் வாங்கும் சீட்டை அவர்களுக்கு பகிர்ந்து கொடுக்க முடியுமா… அதனால் அவர்களை கூட்டணியில் சேர்க்க வேண்டுமா, வேண்டாமா என்பதெல்லாம் தமிழ்நாட்டில் கூட்டணிக்கு தலைமை வகிக்கும் தி.மு.க எடுக்க வேண்டிய முடிவு.

பில்கிஸ் பானு வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு வரவேற்புக்குறியது. தமிழ்நாடு அரசு உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தி முதலீடுகளை பெற்றுள்ளது. பாராட்டுக்குரியது, மகிழ்ச்சிக்குரியது,வரவேற்புக்குரியது. ஆனால், அது ஒப்பந்தத்தோடு மட்டும் நின்றுவிடாமல், அரசு நடைமுறைப்படுத்த வேண்டும். அ.தி.மு.க, பா.ஜ.க கூட்டணியிலிருந்து பிரிந்து வந்ததால், சிறுபான்மையினர் வாக்கு கிடைக்கும் என்று எடப்பாடி நம்புகிறார். ஆனால், அவ்வாறு நடப்பதற்கு வாய்ப்பு இல்லை. ஏற்கெனவே, தி.மு.க கூட்டணி சிறுபான்மையினர் வாக்குகளை முழுவதுமாக பெற்று வருகின்றனர் என்பது வெற்றியின் மூலமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

திருநாவுக்கரசர்

ஒரு சில சதவீத வாக்குகள் மட்டும் அ.தி.மு.க கூட்டணிக்கு வருவதற்குண்டான வாய்ப்புகள் உள்ளது. ஆனால், பா.ஜ.க-வை விட்டு அ.தி.மு.க வந்துவிட்டதால் ஒட்டுமொத்த சிறுபான்மையினரும் அவர்களுக்கு வாக்களித்து விடுவார்கள் என்பது இல்லை. பிரதமர் மோடி தமிழ்நாட்டிற்கு வந்த செல்வதால், பா.ஜ.க-விற்கு தமிழ்நாடு மக்கள் வாக்களிப்பார்கள் என்று கருத முடியாது. தமிழ்நாட்டிற்கு ஏதாவது நல்லது நடக்க வேண்டும் என்பதற்காகத்தான், ‘கோ பேக் மோடி’ என்று கூறிய தி.மு.க, தற்போது பிரதமரை பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு அழைக்கின்றனர். ஒன்றிய அரசு என்று கூறுவதால் தவறு இல்லை. காங்கிரஸ் அடுத்த தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தாலும் ஒன்றிய அரசு என்று கூறுவதை நாங்கள் தடுக்க மாட்டோம். ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெள்ள நிவாரண பணிகளை பார்வையிடுவதற்காக வந்தபோது மக்களிடம் அனுசரணையாக நடந்து கொண்டு, ‘இவ்வளவு நிதி நாங்கள் ஒதுக்குகிறோம்’ என்று கூறியிருக்க வேண்டும்.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

அதற்கு மாறாக நாங்கள் இவ்வளவு நிதி ஒதுக்கி உள்ளோம் என்றதோடு, கணக்கு கேட்பது என்பது தவறான செயல். எம்.ஜி.ஆர்-யைப் பற்றி பேசாத கட்சி என்பது கிடையாது. அதே போன்று விஜயகாந்த் பற்றி பேசாதவர்கள் யாரும் கிடையாது. விஜயகாந்த் போன்ற நல்ல மனிதர் யாரும் கிடையாது இதனால் பிரதமர் மோடி அரசு நிகழ்ச்சிகளில் விஜயகாந்த் பற்றி கூறியது தவறு இல்லை. இந்த தேர்தலில் தே.மு.தி.க-விற்கு அனுதாப வாக்குகள் சேருவதற்கு உண்டான வாய்ப்புகள் உள்ளது. தே.மு.தி.க எந்த கூட்டணியில் உள்ளதோ, அந்த கூட்டணிக்கு அனுதாப ஓட்டுகள் போவதற்கும் வாய்ப்புகள் உள்ளது” என்றார்.

Facebook
Facebook
fb-share-icon
Telegram
WhatsApp

TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.

நன்றி
Publisher: www.vikatan.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *