ராஜஸ்தானில் வரும் 25-ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இந்தத் தேர்தலுக்கு அரசியல் கட்சியினர் பரபரப்பாகப் பிரசாரம் செய்துகொண்டிருக்கின்றனர். காங்கிரஸ், ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ளப் போராடுகிறது. மத்தியில் ஆட்சியில் இருக்கும் பா.ஜ.க, ராஜஸ்தானிலும் ஆட்சி அமைக்க முயல்கிறது. இந்த நிலையில், மத்தியப் பிரதேச மாநிலம், பெதுல் மாவட்டத்தில் நடந்த பிரசாரத்தின்போது பிரதமர் மோடி, ராகுல் காந்தியின் பெயரைக் குறிப்பிடாமல் வயநாடு எம்.பி., ‘முர்கோன் கே சர்தார்’ (முட்டாள்களின் தலைவர்) எனக் கேலி செய்தார். இது காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

பிரதமர் மோடியின் இத்தகைய பேச்சுக்கு பதிலளித்த சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல், “பிரதமர் திமிர்பிடித்தவராக மாறிவிட்டார். பிரதமரின் ஈகோ அதிகமாகிவிட்டது, இப்போது அவர் பொதுமக்களையும் துஷ்பிரயோகம் செய்கிறார். ராவணனுக்குக்கூட திமிர் இருந்தது. அரசனாக இருந்த அவரால் எதையும் சொல்ல முடியும். ஆனால், அவர் மற்றவர்களைத் துஷ்பிரயோகம் செய்தவிதம், அவரது ஆணவத்தைக் காட்டவில்லை” என விமர்சித்திருந்தார்.
அதைத் தொடர்ந்து, ஜெய்ப்பூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் செய்தியாளர்களிடம் பேசிய ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், “எங்கள் தலைவரைக் கேலி செய்வது மிகவும் துரதிஷ்டவசமானது. பிரதமர் பதவிக்கு என கண்ணியம் உள்ளது.. ஒரு மனிதன் கண்ணியமான பதவியிலிருந்தாலும், இது போன்ற நபர்களிடம் நாம் என்ன எதிர்பார்க்க முடியும்?

இந்திய அரசின் உள்துறை அமைச்சகத்தில் சிவப்பு டைரி சதித் திட்டம் தீட்டப்பட்டதாக நான் உணர்கிறேன். அதற்கு ‘லால் டைரி’ என்று பெயரிடப்பட்டதிலிருந்தே இது தெரியவருகிறது. என்மீது அபிப்பிராயமற்ற அமைச்சருடன் சேர்ந்து, பா.ஜ.க சதி செய்துகொண்டிருக்கிறது” எனக் குறிப்பிட்டார்.
நன்றி
Publisher: www.vikatan.com