மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவைகளில் பெண்களுக்கு 33 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவை நிறைவேற்ற, 1996-ம் ஆண்டு முதல் பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் அவை அனைத்தும் தோல்வியில் முடிந்தன. 2010-ம் ஆண்டு மீண்டும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு இந்த மசோதாவை மாநிலங்களவையில் நிறைவேற்றியது, ஆனால் அதை மக்களவையில் தாக்கல் செய்ய முடியவில்லை.
இப்படி இழுபறியாகச் சென்றுகொண்டிருந்த இந்த மசோதாவை மீண்டும் சட்டமாக்க நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என வலியுறுத்தி, 2018-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சி, பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதியிருந்தது. இந்த நிலையில், பிரதமர் மோடி தலைமையில் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் நேற்று தொடங்கி 22-ம் தேதி வரை 5 நாள்கள் நடைபெறுகிறது. இதில் பல வருடங்களாக நிலுவையில் இருந்த மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவைகளில் பெண்களுக்கு 33 சதவிகித இட ஒதுக்கீடு வழங்குவதை உறுதி செய்யும் மசோதா தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் நேற்று மாலை இந்த மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.
நன்றி
Publisher: www.vikatan.com