தொடர்ந்து பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, “சனாதன எதிர்ப்பை இன்று இவர்கள் தவறாக கூறுகிறார்கள். சனாதனத்தை பற்றி பேசினால் இந்து மதத்துக்கு எதிராக பேசுவதாக கூறுகிறார்கள். அது தவறு. காங்கிரஸ் கட்சி கடவுள் நம்பிக்கை, மத நம்பிக்கை உடைய கட்சி. அதற்காக மதம், சாதி, மொழியின் பெயரால் காங்கிரஸ் அரசியல் செய்யாது. என்னை சனாதன எதிர்ப்பை பேசாதீர்கள் என்கிறார்கள். அதற்கு நான் 25 ஆண்டுகளாக பேசுகிறேன். அண்ணாமலை பல்கலையில் படித்த பொழுதே நான் இதை பேசினேன். அன்றும் பேசினேன்… இன்றும் பேசுகிறேன்… நாளைக்கும் பேசுவேன்… நாங்கள் பேசுவோம்… பேசுவோம்… பேசிக்கொண்டே இருப்போம்… சீர்திருத்தப்பட்ட, பரிசுத்தமான இந்து மதத்தை நாங்கள் முன்னிறுத்துகிறோம். மக்களை, மக்களாக நேசிக்கக்கூடிய இந்து மதத்தை நாங்கள் முன்னிறுத்துகிறோம்” என்றார்.


பின்னர் இந்த கூட்டம் தொடர்பாக நம்மிடம் பேசிய சீனியர் கதர்கள், “தண்டவாளத்தை போல தமிழ்நாடு காங்கிரஸையும், சர்ச்சையும் பிரிக்க முடியாததாகி விட்டது. திருவள்ளூரில் சமீபத்தில் நடந்த கூட்டத்தை, வழக்கம் போல புறக்கணித்திருக்கிறார்கள், முக்கிய தலைவர்கள். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு ஈவிகேஎஸ் இளங்கோவன், செல்வப்பெருந்தகை, செல்லகுமார் என தலைவர்கள் பலருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனால் அவர்கள் வழக்கம் போல் ஆப்சென்ட். ஆர்ப்பாட்டம், பொதுக்கூட்டம், ஆலோசனை கூட்டம் என அனைத்திற்கும் தாமதமாக வரும் கே.எஸ். அழகிரியும், தனது வழக்கமான பாணியை மாற்றிக்கொள்ளவில்லை. இதேநிலை நீடித்தால் நாடாளுமன்ற தேர்தலில் பின்னடைவு ஏற்படும். எனவே அனைவரும் ஒன்றிணைத்து பணியாற்ற வேண்டும். மாநில தலைவர் விவகாரத்தில் காங்கிரஸ் டெல்லி தலைமை முடிவெடுக்காமல் இருப்பதும் இங்கு சர்ச்சைகளுக்கு காரணம். அனைத்து நிர்வாகிகளும் ஏற்கும் வகையில் தலைமை குறித்த முடிவை அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழத் தொடங்கியுள்ளது” என்றனர் வேதனையாக.
நன்றி
Publisher: www.vikatan.com