டெல்லியில் இன்று இந்தியா கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் நடைபெறவிருக்கிறது. இந்தக் கூட்டத்தில், திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி, ஜே.டி.யூ தலைவரும் பீகார் முதல்வருமான நிதிஷ்குமார், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், ஆர்.ஜே.டி தலைவர் லாலு பிரசாத் யாதவ் உள்ளிட்ட பலரும், காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டோரும் பங்கேற்க உள்ளனர்.

இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ள டெல்லி சென்றிருக்கும் தி.மு.க தலைவரும் தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் இன்று காலை செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, “கடந்த டிசம்பர் 4-ம் தேதி மிக்ஜாம் புயலும், அதைத் தொடர்ந்து கனமழையையும் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்கள் சந்தித்தன.
ஆனால், தமிழ்நாடு அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது. இதனை ஒன்றிய அரசின் ஆய்வுக்குழுவே உறுதி செய்தது. மழையால் ஏற்பட்ட போக்குவரத்து நிறுத்தம் மறுநாளே சீர் செய்யப்பட்டது. 95 சதவிகித மின் இணைப்பு 3 நாள்களுக்குள் சரிசெய்யப்பட்டது. புறநகரில் ஒரு சிலப் பகுதிகள் நீங்கலாக 4 நாள்களுக்குள் மக்கள் இயல்புநிலைக்குத் திரும்பினர். தண்ணீரில் மூழ்கியிருந்த பகுதி மக்களுக்குத் தேவையான, பொருள்களைக் கொடுத்தோம்.

20 அமைச்சர்கள், 50 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள், 20,000-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் களத்திலிருந்தார்கள். புயலுக்கு முன்பும், புயலுக்கு பின்பும் அரசு எடுத்த நடவடிக்கை காரணமாகத்தான் பாதிப்பு குறைந்தது. ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத்சிங் சென்னை வந்திருந்த போது, வெள்ள பாதிப்புகளைப் பார்வையிட்டார். அதைத் தொடர்ந்து, அவரிடம் இந்த பாதிப்பைச் சரிசெய்ய ரூ,5060 கோடி தேவை எனக் கூறினேன்.
இது குறித்து பிரதமரிடம் பேசுவதாகத் தெரிவித்தார். மேலும், பிரதமர் மோடிக்கும் நிவாரணத் தொகை குறித்துக் கடிதம் எழுதினேன். டி.ஆர் பாலு அதைப் பிரதமரிடம் கொடுத்தார். ஒன்றிய அரசு இந்த ஆண்டு வழக்கமாக வழங்க வேண்டிய ரூ.450 கோடியை மட்டுமே வழங்கியிருக்கிறது. இது பேரும் பேரிடர் என்பதால் கூடுதல் நிதியைக் கேட்டிருக்கிறோம். ஒன்றிய அரசின் ஆய்வுக்குழுவிடம், தற்காலிக நிவாரணப் பணிக்காக ரூ7,033 கோடியும், நிரந்தர நிவாரணப் பணிக்காக ரூ12,059 கோடி வழங்க வேண்டும் எனக் கோரினேன்.

மேலும், பாதிக்கப்பட்ட 4 மாவட்ட மக்களுக்கு ரூ.6000 வழங்கப்படும் என அறிவித்திருக்கிறேன். சில பகுதிகளில் நிவாரணத் தொகை வழங்கப்பட்டுவருகிறது. ஒன்றிய அரசின் நிதியை முழுமையாக வழங்கினால்தான் முழுமையான நிவாரணத்தை மேற்கொள்ள முடியும். இதற்கிடையில், தென்மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் கடுமையான மழை பெய்திருக்கிறது. வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்ட அறிவிப்பை விட அதிகளவு, இதுவரை வரலாற்றில் பார்க்காத அளவு மழை பெய்திருக்கிறது.
காயல் பட்டினத்தில் ஓராண்டு பேயவேண்டிய மழை ஒரே நாளில் 95 செ.மீ பெய்து பதிவாகியிருக்கிறது. வானிலை மையம் எச்சரிக்கை தாமதமாக வழங்கப்பட்டது. ஆனாலும் தமிழ்நாடு அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொண்டது. 8 அமைச்சர்கள், 10 ஆட்சிப்பணியாளர்கள் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டார்கள். தீயணைப்பு, காவல்துறை, அதிகாரிகள் களத்தில் இருக்கிறார்கள்.

375 வீரர்கள் கொண்ட தமிழ்நாடு குழுவின் 10 மீட்புக் குழுவினர், 275 பேர் கொண்ட தேசிய மீட்புக் குழுவினர் 10 குழுக்கள் மீட்பு பணியில் ஈடுபட்டுவருகிறாகள். மீட்புப் பணிகளை விரைவு படுத்த தமிழ்நாடு மீட்புப்பணியில் பயிற்சிபெற்ற 230 பேர் ஈடுபட்டிருக்கிறார்கள். ராணுவக்குழுவும் மீட்புப் பணியில் ஈடுபடவிருக்கிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 12,653 பேர் மீட்கப்பட்டு, 141 முகாம்களில் தங்க வைக்கப்பட்டு, அவர்களுக்கு உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.
நீர் சூழ்ந்த பகுதிகளில் ஹெலிகாப்டரிலிருந்து உணவுகள் வழங்கப்பட்டிருக்கிறது. இந்த மீட்புப் பணிகள் குறித்து நானும், தலைமைச் செயலாளரும் சம்பந்தப்பட்ட மாவட்ட அதிகாரிகளிடம் பேசி வருகிறோம். தமிழ்நாட்டின் மிக்ஜாம் புயலின் போது எப்படிச் செயல்பட்டோமோ, அதே போன்று, தென் தமிழகத்தின் இந்த ஆபத்தின் சூழலிலும் செயல்படுவோம்.

இந்த பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பாகப் பிரதமரைச் சந்திக்க நேரம் கேட்டேன். இன்று இரவு 10:30 மணிக்குச் சந்திக்க நேரம் ஒதுக்கியிருக்கிறார்கள். பிரதமரைச் சந்தித்து இந்த பாதிப்புகளை விளக்கமாகக் கூறவிருக்கிறேன். பிரதமரைச் சந்தித்த பிறகு நாளை தூத்துக்குடி, திருநெல்வேலி செல்லவிருக்கிறேன்” எனக் குறிப்பிட்டார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk
நன்றி
Publisher: www.vikatan.com
