ஜி 20 கூட்டறிக்கை: ரஷ்யா, மேற்கத்திய நாடுகள் மகிழும்படி இந்தியா என்ன செய்தது?

ஜி 20 கூட்டறிக்கை: ரஷ்யா, மேற்கத்திய நாடுகள் மகிழும்படி இந்தியா என்ன செய்தது?

ஜி 20- இந்தியாவின் வெற்றி

பட மூலாதாரம், @G20

படக்குறிப்பு,

மாநாட்டின் இரண்டாவது நாளில் எடுக்கப்பட்ட மோதி மற்றும் ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சரின் இந்த படம் பிரபலமாகி வருகிறது.

இந்தியாவின் தலைமையில் ஜி 20 உச்சி மாநாடு நிறைவடைந்த பின், இந்திய பிரதமர் நரேந்திர மோதியும், ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்கே லாவ்ரோவும் இணைந்து காட்சியளிக்கும் புகைப்படம் ஒன்று ஞாயிறு மாலை முதல் சமூக வலைதளங்களில் வைரலாகத் தொடங்கியது.

இந்த படத்தில், பிரதமர் மோதியும் லாவ்ரோவும் கைகளைப் பற்றிக்கொண்டு மகிழ்ச்சியுடன் சிரித்துக்கொண்டிருக்கும் காட்சி இடம்பெற்றுள்ளது.

ஜி 20- இந்தியாவின் வெற்றி

பட மூலாதாரம், @NARENDRAMODI

படக்குறிப்பு,

ஜி-20 உச்சி மாநாட்டில் ஒரு கூட்டறிக்கை வெளியானது, இந்திய வெளியுறவுக் கொள்கைக்குக் கிடைத்த வெற்றி எனக்கருதப்படுகிறது.

பிரதமர் மோடி மற்றும் லாவ்ரோவ் ஆகியோரின் இந்த படம் குறித்து பல்வேறு கருத்துகள் வெளியாகியுள்ளன. ரஷ்ய அதிபர் புதின் ஜி 20 உச்சிமாநாட்டிற்கு வராத போதிலும் தனது திட்டத்தை நிறைவேற்றுவதில் வெற்றி பெற்றதாக அனைவரும் நம்புகிறார்கள்.

டெல்லியில் நடைபெற்ற உச்சி மாநாடு முடிந்து ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர் சந்திப்பிற்கு ரஷ்ய வெளியுறவு அமைச்சர் லாவ்ரோவ் வந்தபோது, ​​அவர் மிகவும் மகிழ்ச்சியாக காணப்பட்டார்.

டெல்லி உச்சிமாநாட்டின் கூட்டறிக்கையைப் பாராட்டிய லாவ்ரோவ், தெற்கத்திய நாடுகளை ஒருங்கிணைத்து, அதுதொடர்பான இலக்குகளை அடைய ஊக்குவிக்கப் போவதாகக் கூறினார்.

லாவ்ரோவ் பேசியபோது, “இந்த உச்சி மாநாட்டில் ஒருமித்த கருத்து எட்டப்பட்டபோது, ​​அது அனைவரின் மனசாட்சியின் குரல் போல் தோன்றியது,” என்றார்.

“உண்மையைச் சொல்வதானால், நான் இதை எதிர்பார்க்கவில்லை. கூட்டுத் தீர்மானத்தில் எங்கள் நிலைப்பாட்டை பாதுகாக்க நாங்கள் முழுமையாக தயாராக இருந்தோம். இந்நிலையில், டெல்லி உச்சி மாநாட்டில் வெளியிடப்பட்ட தீர்மானம் நேர்மையானது என்பது மட்டுமல்ல, நியாயமானதும் கூட,” என்றார் அவர்.

இந்தியாவுக்கு நன்றி தெரிவித்துள்ள ரஷ்ய வெளியுறவு அமைச்சர், மாநாட்டு அரங்கத்தை யுக்ரேனிய மயமாக்கும் மேற்குலகின் முயற்சி முறியடிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

ஜி 20- இந்தியாவின் வெற்றி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

ஜி 20 கூட்டமைப்பில் புதிய உறுப்பினராக சேர்க்கப்பட்ட பிறகு, ஆப்பிரிக்க யூனியன் தலைவர் அசாலி அஸௌமானி பிரதமர் மோதியைத் தழுவி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

கடந்த ஆண்டு நவம்பரில், இந்தோனீசியாவிடமிருந்து ஜி-20 அமைப்புக்குத் தலைமை தாங்கும் பொறுப்பை இந்தியா பெற்றது.

அதன் தலைமையின்கீழ், செப்டம்பர் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் நடைபெற்ற ஜி-20 உச்சிமாநாட்டிற்கு முன்பு, அமைச்சர்கள் நிலையிலான 11 கூட்டங்களை இந்தியா நடத்தியது.

இந்த அமைச்சர்கள் மட்டத்தில் நடைபெற்ற அனைத்து கூட்டங்களிலும், ஒருமித்த கருத்துடன் பொதுவான தீர்மானம் எதையும் நிறைவேற்ற முடியவில்லை.

இத்தகைய சூழ்நிலையில், உச்சிமாநாட்டிற்குப் பிறகும் கூட, ஒரு மித்த கருத்துடனான கூட்டறிக்கை எதுவும் வெளியிடப்படமுடியாத நிலை ஏற்படுமோ என்ற அச்சமும் நிலவியது.

மாநாட்டின் இறுதியில் ஒரு கூட்டுத் தீர்மானத்தை நிறைவேற்ற சீனாவும் ரஷ்யாவும் இடையூறுகளை ஏற்படுத்துமோ என்று அமெரிக்காவும் அச்சம் தெரிவித்திருந்தது.

சீன அதிபர் ஷி ஜின்பிங் ஜி-20 உச்சி மாநாட்டுக்கு இந்தியா வரமாட்டார் என்று முடிவு செய்தபோது, இந்த அச்சம் மேலும் அதிகரித்தது. ரஷ்ய அதிபர் புதின் இந்த மாநாட்டில் பங்கேற்க மாட்டார் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், இந்தோனீசியாவில் நடந்த பாலி உச்சி மாநாட்டிற்கு கூட புதின் செல்லவில்லை என்பது கவனிக்கத்தக்கது.

இந்தியா தனது தலைமையில் நடைபெற்ற உச்சி மாநாட்டில் ஒரு கூட்டறிக்கையை வெளியிட முடியாத நிலை ஏற்பட்டிருந்தால், அது ராஜதந்திரக் கண்ணோட்டத்தில் பார்க்கும் போது, ஒரு சங்கடமான சூழ்நிலையாக இருந்திருக்கும்.

ஜி 20- இந்தியாவின் வெற்றி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

ஜி-20 உச்சி மாநாட்டில் பங்கேற்ற உலகத் தலைவர்கள் மகாத்மா காந்தி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.

சனிக்கிழமையன்று, ஜி-20 உச்சிமாநாட்டில் ஒரு கூட்டு அறிக்கையை அனைவரும் ஏற்றுக்கொண்டதாக பிரதமர் மோதி அறிவித்தது அனைவருக்கும் ஆச்சரியமாக இருந்தது.

ஆனால் டெல்லி உச்சி மாநாட்டில் வெளியிடப்பட்ட இறுதி அறிக்கையில், யுக்ரேன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் தொடர்பாக பயன்படுத்தப்பட்ட வார்த்தைகள், ஒருமித்த கருத்து ஏன் எட்டப்பட்டது என்பதை தெளிவுபடுத்தியது.

பாலியில் வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில், யுக்ரேன் போர் தொடர்பான பத்தியில் ரஷ்ய ஆக்கிரமிப்பு என எழுதப்பட்டிருந்தது. இது மட்டுமின்றி ரஷ்யாவுக்கு கண்டனமும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் டெல்லியில் நடைபெற்ற மாநாட்டில் யுக்ரேனுக்கு எதிரான போர் என்பதற்குப் பதிலாக யுக்ரேனில் நடைபெறும் போர் என குறிப்பிடப்பட்டிருந்தது.

வெளிப்படையாக, ஜி-20 நாடுகளால் யுக்ரேன் மீதான ரஷ்ய தாக்குதலைக் கண்டிக்க முடியவில்லை என்பதுடன், பாலி பிரகடனம் முதல் டெல்லி பிரகடனம் வரை, யுக்ரேன் மீதான ரஷ்ய தாக்குதல் தொடர்பான மொழி முற்றிலும் மாறிவிட்டது.

டெல்லி தீர்மானத்தில், யுக்ரேனில் நடந்து வரும் போர் தொடர்பாக ரஷ்யாவின் பெயர் கூட குறிப்பிடப்படவில்லை.

டெல்லி உச்சிமாநாட்டில் வெளியிடப்பட்ட அறிக்கையில் யுக்ரேன் போர் தொடர்பான மொழி குறித்து இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கரிடம் கேள்வி கேட்கப்பட்டபோது, ​​“இன்று யுக்ரேன் போர் மிகவும் மாறுபட்ட கண்ணோட்டங்களில் பார்க்கப்படுகிறது என்பது உண்மைதான். இதைப் பற்றி ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு கருத்துகள் உள்ளன. ஒவ்வொருவருக்கும் பலவிதமான பார்வைகள் உள்ளன. எனவே தலைவர்கள் கூடியிருந்த அரங்கத்தில் நிலவிய எதார்த்தத்தைப் பதிவு செய்வதே சிறந்த வழி என்று நான் நினைக்கிறேன்,” என்றார்.

ரஷ்யாவுக்கு எதிரான கண்டனமும், அதன் ஆக்கிரமிப்பு குறித்தும் பாலி தீர்மானத்தில் பதிவாகியுள்ள நிலையில், டெல்லி தீர்மானத்தில் அப்படி எதுவுமே பதிவாகவில்லையே என அவரிடம் கேட்டபோது, ​​“பாலி, வேறு டெல்லி, வேறு” என்றார். “ஒரு வருடத்தில் விஷயங்கள் நிறைய மாறிவிட்டன. நாம் யாரையும் யாருடனும் ஒப்பிட முடியாது,” என்றும் அப்போது அவர் தெரிவித்தார்.

ஜி 20- இந்தியாவின் வெற்றி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரதமர் மோதி மற்றும் பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வா ஆகியோர் ஜி-20 உச்சிமாநாட்டில் ஒற்றுமையை வெளிப்படுத்தினர்.

இதற்கிடையில், யுக்ரேனின் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர், “ரஷ்ய ஆக்கிரமிப்புக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஜி-20 எதுவும் செய்யவில்லை; எனவே கூட்டுத் தீர்மானம் குறித்து பெருமைப்பட ஒன்றும் இல்லை,” என தனது மனவருத்தத்தைப் பதிவு செய்துள்ளார்.

டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் மத்திய ஆசிய மற்றும் ரஷ்ய ஆய்வு மையத்தின் பேராசிரியர் சஞ்சய் குமார் பாண்டே, டெல்லி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது இந்தியாவின் இராஜதந்திரத்திற்கு கிடைத்த வெற்றி என்று கூறுகிறார்.

யுக்ரேன் போரில் அமெரிக்கா தலைமையிலான மேற்கத்திய நாடுகள் வெளிப்படையாக ரஷ்யாவுக்கு எதிராக இருக்கும்போது மேற்குலகம் எப்படி தலைவணங்கத் தயாரானது என்ற கேள்வியும் எழுகிறது.

இந்தோனீசியா, இந்தியா, பிரேசில் மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகள் ஒன்றாக இருந்ததால் டெல்லி தீர்மானம் ஒப்புக் கொள்ளப்பட்டதா என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரிடம் சனிக்கிழமை கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த ஜெய்சங்கர், “உண்மையைச் சொல்லப் போனால், இறுதியில் அனைவரும் உதவினார்கள். ஆனால் வளர்ந்து வரும் நாடுகள் இந்த விஷயத்தில் முன்னணியில் இருந்தன. அந்நாடுகளுடன் இணைந்து பணியாற்றும் வலுவான வரலாறு எங்களிடம் உள்ளது,” என்றார்.

ஜி 20- இந்தியாவின் வெற்றி

பட மூலாதாரம், @NARENDRAMODI

படக்குறிப்பு,

ஜி-20 உச்சி மாநாட்டில் வெற்றிகரமாக ஒரு கூட்டறிக்கை வெளியான நிலையில், அது பிரதமர் நரேந்திர மோதியின் செல்வாக்கை அதிகரிக்கும் என கருதப்படுகிறது.

சிங்கப்பூரில் செயல்படும் ராஜரத்தினம் ஸ்கூல் ஆஃப் இன்டர்நேஷனல் ஸ்டடீஸின் ஆய்வாளர், நாஜியா ஹுசைன் பேசியபோது, டெல்லி உச்சிமாநாட்டின் கூட்டறிக்கை யுக்ரேனில் நடைபெறும் போரைப் பற்றிய அணுகுமுறை மென்மையாகிவிட்டது என்பதை தெளிவாகக் காட்டுகிறது என்று ஏபி செய்தி முகமையிடம் தெரிவித்தார்.

அவர் பேசிய போது, “டெல்லி உச்சிமாநாட்டின் கூட்டறிக்கையில் யுக்ரேன் குறித்து பல சூழல்களில் குறிப்பிடப்பட்டிருந்தாலும், ரஷ்யாவினால் ஏற்பட்ட பாதிப்பு என எங்கும் குறிப்பிடப்படவில்லை என்று கூறலாம் அல்லது யுக்ரேனில் நடந்துவரும் போர் தொடர்பாக அமெரிக்கா தனது மேற்கத்திய கூட்டாளிகள் மற்றும் ரஷ்யாவுடன் பணிந்து செல்ல தயாராக இல்லை என்று கூறலாம்.

டெல்லி உச்சி மாநாட்டில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது இந்தியாவின் வெற்றிக்கு குறைவானது அல்ல,” என்றார்.

டெல்லி தீர்மானத்தால் ரஷ்யா மட்டுமின்றி மேற்கத்திய நாடுகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளன. டெல்லி உச்சி மாநாட்டில் வெளியிடப்பட்ட கூட்டறிக்கை இந்தியாவின் இராஜதந்திர வெற்றி என்று ஜெர்மன் அதிபர் ஓலாஃப் ஷால்ட்ஸ் கூறியுள்ளார்.

ஜெர்மன் சான்ஸ்லர் பத்திரிகையாளர்களிடம் பேசியபோது, “ரஷ்யா இறுதியாக தனது பிடிவாதத்தை கைவிட்டு, யுக்ரேனின் ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மையைப் பாதுகாக்க அழைப்பு விடுக்கும் ஒரு கூட்டு அறிக்கையில் கையெழுத்திட்டது மிகவும் முக்கியம்,” என்றார்.

பிரிட்டிஷ் பிரதமர் ரிஷி சுனக் டெல்லி தீர்மானத்தை பாராட்டியது மட்டுமின்றி ரஷ்யாவிற்கு வலுவான ஒரு செய்தி அளிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

பெயரை வெளியிடவிரும்பாத ஒரு ஐரோப்பிய ஒன்றிய அதிகாரி ஏபி செய்தி முகமையிடம் பேசுகையில், யுக்ரேன் மீதான தன் நிலைப்பாட்டில் ஐரோப்பிய ஒன்றியம் எந்த சமரசமும் செய்யவில்லை என்ற நிலையிலும், டெல்லி தீர்மானத்தில் ரஷ்யா கையெழுத்திட்டது மிகவும் முக்கியமானது என்றார்.

அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜாக் சல்லிவனும் டெல்லி உச்சிமாநாட்டின் கூட்டறிக்கையை பாராட்டியுள்ளார்.

அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “எங்களின் கருத்துப்படி இதுவே போதுமானது. கொள்கை அடிப்படையில் எந்த ஒரு நாட்டின் அரசியல் சுதந்திரம், இறையாண்மை, ஒருமைப்பாடு ஆகியவற்றை பலத்தை பயன்படுத்தி மீற முடியாது. மேலும் இந்த உண்மை டெல்லி உச்சிமாநாட்டின் கூட்டறிக்கையில் உள்ளது,” என்றார்.

ஜி 20- இந்தியாவின் வெற்றி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

ஜி- 20 உச்சி மாநாட்டில் பங்கேற்க டெல்லி வந்த பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக், பிரதமர் மோதியைச் சந்தித்து இருநாட்டு உறவுகள் குறித்துப் பேசினார்.

எல்லாவற்றுக்கும் மேலாக, ரஷ்யாவை கண்டிக்காத ஒரு கூட்டுத் தீர்மானத்தை டெல்லி உச்சி மாநாட்டில் மேற்கத்திய நாடுகள் ஏன் ஆதரித்தன என்பதுதான் விடை தெரியாத கேள்வியாக இருக்கிறது.

ஐரோப்பிய ஒன்றிய அதிகாரி ஒருவர் ஆங்கில நாளிதழான தி இந்துவிடம் பேசுகையில், “டெல்லி உச்சிமாநாட்டில் கூட்டறிக்கை வெளியிடப்பட்டிருக்காவிட்டால், சீனாவின் ஆதிக்கத்தின் ஒரு பகுதியாக சமீபத்தில் தென்னாப்பிரிக்காவில் நடந்த பிரிக்ஸ் மாநாட்டுடன் ஒப்பீடு செய்யும் அளவுக்கு நிலைமை சென்றிருக்கும்.

பிரிக்ஸ் அமைப்பில் சீனாவும் ரஷ்யாவும் இடம்பெற்றுள்ளன. அந்த மாநாட்டில் உறுப்பு நாடுகளின் ஒப்புதலுடன் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதில் உறுப்பு நாடுகள் பல்வேறு கருத்துகளை தெரிவித்திருந்தன. அப்போது ஜி-20 கூட்டமைப்பை விட பிரிக்ஸ் கூட்டமைப்பு தான் சிறந்தது என்று பேசப்பட்டது. இவ்வாறான சூழ்நிலையில், ஜி-20 கூட்டமைப்புக்கு வலுவூட்ட இதுபோன்ற ஒரு கூட்டறிக்கை கட்டாயத் தேவை ஆகிறது,” என்றார்.

பல வளைகுடா நாடுகளுக்கு இந்திய தூதராக இருந்த தல்மீஸ் அகமது பேசியபோது, ​​“பாலி முதல் டெல்லி வரை, ரஷ்யா, சீனாவின் அணுகுமுறை மட்டும் மாறிவிடவில்லை. மேற்குலகின் அணுகுமுறையும் மென்மைனதாக மாறிவிட்டது. மேற்கு நாடுகள் ஒப்புக்கொள்ளவில்லை என்றால், அப்போது இந்தியா இந்த கூட்டறிக்கையை வெளியிட்டிருக்கும் வாய்ப்பு இருந்திருக்காது.

யுக்ரேன் மீதான மேற்கத்திய நாடுகளின் பார்வைக்கு தெற்கத்திய நாடுகளின் ஆதரவு கிடைக்கவில்லை என்பதை மேற்குலகம் கடந்த ஓராண்டில் உணர்ந்துள்ளது. அத்தகைய சூழ்நிலையில் அதன் பிடிவாதம் தொடரவில்லை. இப்போது கூட மேற்கில், யுக்ரேனுக்கு மக்கள் ஆதரவு குறைந்து வருகிறது,” என்றார்.

தல்மீஸ் அகமது மேலும் பேசுகையில், “இரண்டாவது முக்கியமான விஷயம், சுதந்திரமான வெளியுறவுக் கொள்கையில் இந்தியா யாருக்கும் அடிபணியவில்லை. தனது நலன்களுக்கு ஏற்ப செயல்படப் போவதாகவும், யாருடைய கைக்கூலியாகவும் இருக்கப்போவதில்லை என்றும் ஒரு உறுதியான செய்தியைக் கொடுப்பதில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது.

உண்மையில், டெல்லி உச்சி மாநாட்டில் வெளியிடப்பட்ட கூட்டறிக்கை தெற்குலக நாடுகளின் அறிக்கையாகும். வரும் நாட்களில் இந்தியா இதை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல வேண்டும். டெல்லி பிரகடனத்தை நான் யாருடைய வெற்றியாகவோ அல்லது தோல்வியாகவோ பார்க்கவில்லை. ஆனால் அதை ஒரு நடைமுறை உண்மையாகப் பார்க்கிறேன். இதில் இருந்து தான் மேற்குலகம் ஒரு உண்மையை அறியத் தொடங்கியுள்ளது,” என்றார்.

ஜி 20- இந்தியாவின் வெற்றி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

ஜி-20 கூட்டமைப்பு தொடர்ந்து உலகளாவிய பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்க முடியும் என்பதை இந்த ஆண்டு உச்சிமாநாடு காட்டுகிறது என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறுகிறார்.

55 ஆப்பிரிக்க நாடுகளின் அமைப்பான ஆப்பிரிக்க ஒன்றியம், டெல்லி உச்சி மாநாட்டிலேயே ஜி-20 கூட்டமைப்பின் உறுப்பினராக மாறியது.

வெளிப்படையாக, இதுவும் இந்தியாவின் நன்மதிப்பை அதிகரிக்கக்கூடிய வகையிலேயே இருக்கிறது. இந்தியாவுக்குப் பிறகு, ஜி-20 தலைமை பிரேசிலுக்கும், பிரேசிலுக்குப் பிறகு தென்னாப்பிரிக்காவுக்கும் செல்கிறது.

இந்த இரு நாடுகளும் தெற்குலக நாடுகளைச் சேர்ந்தவையாக உள்ளன.

இத்தகைய சூழ்நிலையில், டெல்லி உச்சிமாநாட்டு பிரகடனத்தில் தெற்கத்திய நாடுகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்ட விதத்தை கருத்தில் கொண்டு, பிரேசில் மற்றும் தென்னாப்பிரிக்காவும் அதை ஏற்றுக்கொள்ளலாம். ரஷ்யா மற்றும் யுக்ரேனுக்கு இடையேயான கருங்கடல் துப்பாக்கி ஒப்பந்தம் பற்றியும் டெல்லி தீர்மானத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

டெல்லி உச்சி மாநாட்டில் அனைத்து உறுப்பு நாடுகளின் கூட்டு அறிக்கையின் மீது ஒருமித்த கருத்து எட்டப்பட்டிருப்பது, இந்தியாவின் ராஜதந்திர வெற்றிக்கான கூற்றை வலுப்படுத்துகிறது என்று அமெரிக்க செய்தி இதழான வாஷிங்டன் போஸ்ட் தனது செய்திக்கட்டுரையில் எழுதியுள்ளது.

வாஷிங்டன் போஸ்ட் தனது செய்திக்கட்டுரையில்,”சில வல்லுநர்கள் இதை ரஷ்யாவின் வெற்றி என்று அழைக்கிறார்கள். மற்றவர்கள் இதை மேற்குலகின் சாதனை என்று கருதுகின்றனர்.” ஆனால் இது மோதியின் வெளியுறவுக் கொள்கைக்கு கிடைத்த வெற்றி என்பது மட்டுமல்லாமல், உலக அரங்கில் இந்தியாவின் செல்வாக்கு அதிகரித்துள்ளது,” என்று எழுதியுள்ளது.

ராண்ட் கார்ப்பரேஷனின் இந்தோ-பசிபிக் ஆய்வாளரான டெரெக் கிராஸ்மேன், “தெற்குலக நாடுகள் குறித்து இந்தியா மிகவும் தீவிரமான கவனத்தைக் கொண்டுள்ளது. சீனாவின் வியூக ரீதியிலான போட்டி இருந்தபோதிலும், இந்தியா அதை மாற்றியது,” என்று எழுதியுள்ளார்.

ஜி-20 நாடுகளில் உள்ள பலதரப்பு வளர்ச்சிக்கு வங்கிகள் அளிக்கும் கடன்களின் வரம்பை அதிகரிக்க உலகளாவிய நிதி சார்ந்த அமைப்புகள் ஒப்புக்கொண்டுள்ளன. குறிப்பாக, உலக வங்கியிடம் இருந்து பெறப்படும் உதவிகளை மேலும் அதிகரிக்கும் வழிவகைகளும் செய்யப்பட்டுள்ளன.

வளரும் நாடுகளில், சீனாவின் வளர்ந்து வரும் பொருளாதாரத்துக்கு இது ஒரு எதிர்விளைவாக பார்க்கப்படுகிறது. சீனாவிடம் இருந்து நிதி உதவி பெறும் பெரும்பாலான நாடுகள் கடன் வலையில் சிக்கி வருவதாகவும் கூறப்படும் நிலையில், இந்தக் கருத்து மேலும் வலுப்பெறுகிறது.

ஆசியா நிக்கேய் பத்திரிகை, “வளரும் நாடுகள் சீனாவிடம் கடன்பெற்று, அதன் வலையில் இருந்து தப்புவதைத் தடுக்க, சர்வதேச வங்கிகள் வளரும் நாடுகளுக்குத் தேவையான பொருளாதார உதவிகளை அளிக்குமளவுக்கு வலுவாக இருக்கவேண்டும் என்று அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் விரும்புகின்றன. இதன்மூலம், வளரும் நாடுகள் சீனாவில் தஞ்சம் அடையும் தேவை ஏற்படாது,” என எழுதியுள்ளது.

ஹார்வர்ட் பிசினஸ் ரிவியூ, பிப்ரவரி 2020 இல் சீனா உலகின் மிகப்பெரிய கடன் வழங்கும் நாடாக இருப்பதாகவும், 150 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு 1.5 டிரில்லியன் டாலர் கடன்களை வழங்கியுள்ளது என்றும் கூறியுள்ளது. உலக வங்கி, IMF மற்றும் பிற நிதி நிறுவனங்கள் கூட இவ்வளவு கடன் கொடுக்கவில்லை என்றும் தெரியவந்துள்ளது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Facebook
Facebook
fb-share-icon
Telegram
WhatsApp
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *