
பட மூலாதாரம், Getty Images
சுரங்கத்திலிருந்து லித்தியம் எடுப்பது தொடர்பாக இந்தியா மற்றும் அர்ஜெண்டினா இடையே மிக முக்கியமான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையே கடந்த திங்கள் கிழமை ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ள இந்த திட்டத்துக்கான மொத்த செலவு ரூ.200 கோடி என இந்திய அரசின் சுரங்க அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
இதன் கீழ், அரசு நிறுவனமான ‘மினரல் பிதேஷ் இந்தியா லிமிடெட் (கேபில்)’ அர்ஜெண்டினாவின் கேடமர்கா மாகாணத்தில் ஐந்து சுரங்கங்களை உருவாக்கி லித்தியம் எடுக்கும்.
கேபில், காடமார்காவின் அரசாங்க எரிசக்தி நிறுவனமான கேமியனுடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
இந்த ஐந்து சுரங்கங்களின் மொத்த பரப்பளவு 15,703 ஹெக்டேர் என்றும், அர்ஜெண்டினாவின் கேடமர்காவில் கேபில் கிளை அலுவலகத்தையும் அமைக்கும் என்றும் அமைச்சகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தத்தின் கீழ், கேபில் நிறுவனம் இந்த சுரங்கங்களை வணிக ரீதியான உற்பத்திக்கு பயன்படுத்தும்.
இந்த ஒப்பந்தம் இந்தியாவின் லித்தியம் தேவையை பூர்த்தி செய்வது மட்டுமல்லாமல், உப்பு வகை லித்தியம் சுரங்கத்திற்கான தொழில்நுட்ப மற்றும் செயல்பாட்டு அனுபவத்திற்கும் உதவும் என்று சுரங்க அமைச்சகம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

பட மூலாதாரம், @PIB_INDIA
புதிதாக நிறைவேற்றப்பட்டுள்ள உடன்படிக்கை சீனாவுக்கு ஒரு போட்டியை ஏற்படுத்தும் என நம்பப்படுகிறது.
லித்தியம் என்றால் என்ன?
லித்தியம் மின் ஆற்றல் சேமிப்பிற்கான மிக முக்கியமான கனிமம் என்பதுடன் அது மட்டுமே இப்போது கிடைக்கும் கனிமமாக அறியப்படுகிறது.
மின்சார வாகனங்கள் மற்றும் பேட்டரி ஆற்றல் சேமிப்பு அமைப்புகளில் பயன்படுத்தப்படும் லித்தியம்-அயன் பேட்டரிகளில் இது மிக முக்கியமான பகுதியாகும்.
எளிமையான வார்த்தைகளில் சொன்னால், லித்தியம் என்பது ஒரு வகை கனிமமாகும். இது மின்சார வாகனங்கள், மொபைல் போன்கள் மற்றும் மடிக்கணினிகளில் பொருத்தப்படும் பேட்டரிகளில் பயன்படுத்தப்படுகிறது.
ரீசார்ஜபிள் பேட்டரிகளில் லித்தியம் பயன்படுத்தப்படுகிறது. இந்த பேட்டரிகள் ஸ்மார்ட்போன்கள் மற்றும் மடிக்கணினிகள் முதல் மின்சார கார்கள் வரை அனைத்திலும் பயன்படுத்தப்படுகின்றன.
டீசல் மற்றும் பெட்ரோல் வாகனங்களால் ஏற்படும் மாசுபாட்டைக் குறைப்பதில் இது மிகவும் முக்கியமானது என்று நம்பப்படுகிறது.
உலகின் பாதிக்கும் மேற்பட்ட லித்தியம், மூன்று தென் அமெரிக்க நாடுகளில்தான் உள்ளன. சிலி, பொலிவியா மற்றும் அர்ஜெண்டினா ஆகிய இந்த மூன்று நாடுகளும் ‘லித்தியம் முக்கோணம்’ என்று அழைக்கப்படுகின்றன.
அர்ஜெண்டினா உலகின் இரண்டாவது பெரிய லித்தியம் இருப்பு நாடு என்பதுடன் நான்காவது பெரிய உற்பத்தி வசதியைக் கொண்டுள்ள நாடாக அறியப்படுகிறது.
இந்த ஒப்பந்தத்திற்குப் பிறகு, மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத் துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி பேசுகையில், “இந்தியா மற்றும் அர்ஜெண்டினாவுக்கு இது ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நாள். ஏனெனில் கேபில் மற்றும் கேமியன் இடையேயான ஒப்பந்தத்தின் மூலம், இருதரப்பு உறவுகளில் ஒரு புதிய அத்தியாயம் எழுதப்படுகிறது,” என்றார்.
“இந்த நடவடிக்கை ஒரு நிலையான எதிர்காலத்தை நோக்கி ஆற்றல் சேமிப்பில் முக்கிய பங்கு வகிக்கும். ஆனால் இந்தியாவில் உள்ள பல்வேறு தொழில்களுக்கு அத்தியாவசிய கனிமங்கள் கிடைப்பதையும் உறுதி செய்யும்.”

பட மூலாதாரம், Getty Images
லித்தியம் பிரித்தெடுக்கும் சுரங்கத்திற்காக இந்தியா மற்றும் அர்ஜெண்டினா இடையே மிக முக்கியமான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
இந்தியாவில் லித்தியம் இருப்பு
கடந்த ஆண்டு பிப்ரவரியில், ஜம்மு காஷ்மீரில் முதல் லித்தியம் இருப்பு கண்டுபிடிக்கப்பட்டதாக இந்திய அரசு அறிவித்தது.
முன்னதாக 2021ஆம் ஆண்டு இதேபோன்ற லித்தியம் இருப்பு கர்நாடகாவில் கண்டறியப்பட்டது. அளவு அடிப்படையில் அது மிகவும் சிறியது.
ஜம்மு காஷ்மீரில் 59 லட்சம் டன் லித்தியம் இருப்பை இந்திய புவியியல் ஆய்வு மையம் கண்டுபிடித்துள்ளதாக பிப்ரவரி 2023 இல் அரசாங்கம் அறிவித்தது. இந்த இருப்புகள் ரியாசி மாவட்டத்தில் கண்டறியப்பட்டுள்ளன.
இந்த பகுதி செனாப் ஆற்றின் மீது கட்டப்பட்ட 690 மெகாவாட் சலால் மின் நிலையத்திலிருந்து சுமார் 8 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
லித்தியம் இருப்புகள் காணப்பட்ட சலால் பகுதியைச் சுற்றியுள்ள பகுதியில் தற்போது குடியிருப்புகள் எவையும் இல்லை. இந்தப் பகுதியைச் சுற்றி சுமார் ஐந்து வார்டுகள் உள்ளன.
இதுவரை லித்தியம் தேவைக்காக சீனா, ஆஸ்திரேலியா, அர்ஜெண்டினா போன்ற நாடுகளையே இந்தியா நம்பியிருக்கிறது.

பட மூலாதாரம், MOHIT KANDHARI
இந்தியாவின் ஜம்மு காஷ்மீரில் லித்தியம் அதிக அளவில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஜம்மு மற்றும் காஷ்மீரில் மிகப்பெரிய லித்தியம் இருப்பு இருப்பது புவி வெப்பமடைதலுக்கு காரணமான கார்பன் வெளியேற்றத்தை குறைக்கும் இந்தியாவின் முயற்சிகளுக்கு ஒரு பெரிய ஊக்கத்தை அளிக்கும் என்று நிபுணர்கள் நம்புகின்றனர்.
இதன் காரணமாக, 2030ஆம் ஆண்டுக்குள் நாட்டில் மின்சார வாகனங்களின் உற்பத்தி 30 சதவீதம் உயரக்கூடும்.
ஜூலை 2023 இல், இந்திய அரசு அதன் சுரங்க விதிகளைத் தளர்த்தியது என்பதுடன் கனிமங்களை ஆய்வு செய்வதற்காக தனியார் சுரங்க நிறுவனங்களுக்கும் அனுமதி அளிக்கும் நடவடிக்கையை மேற்கொண்டது.
அர்ஜெண்டினாவைச் சேர்ந்த கேமியனுடன் இணைந்து இரண்டு பகுதிகளில் லித்தியம் சுரங்கத்தில் பணிகளைத் தொடங்க கேபில் ஆர்வமாக இருப்பதாக இந்திய அரசு முன்னதாக அறிவித்தது.
கேபில் நிறுவனம் நால்கோ, ஹெச்.சி.எல். மற்றும் எம்.ஈ.சி.எல். ஆகியவற்றின் கூட்டு நிறுவனமாகும். இது 2019 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்த நிறுவனத்தின் நோக்கம் முக்கியத்துவம் வாய்ந்த கனிமங்களான லித்தியம் மற்றும் கோபால்ட் ஆகியவற்றை வெளிநாட்டிலிருந்து வாங்குவதே ஆகும்.

பட மூலாதாரம், Getty Images
லித்தியம் எடுக்கும் தொழிலில் மேற்கொள்ளப்படும் வேதிவினைகளால் சுற்றுச் சூழல் மாசு அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
தென் அமெரிக்காவில் சீனாவுடன் இந்தியா போட்டியா?
சீனாவும் தொடர்ந்து லித்தியம் அகழ்விற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. மற்றொரு தென் அமெரிக்க நாடான பொலிவியாவுடன் அதற்காக கடந்த ஆண்டு ஒப்பந்தம் ஒன்றை சீனா செய்துள்ளது.
இது ஒரு பில்லியன் டாலர் ஒப்பந்தம் ஆகும். பொலிவியாவில் 21 மில்லியன் டன் லித்தியம் இருப்பதாக நம்பப்படுகிறது. இது உலகின் மிகப்பெரிய லித்தியம் இருப்பு என்று கருதப்படுகிறது.
இந்தியாவின் புதிய ஒப்பந்தத்திற்குப் பிறகு, இந்த முக்கியமான கனிமத்தின் மீது சீனா மட்டுமே கட்டுப்பாட்டைக் கொண்டிருக்காது என்றும், லித்தியம் சுரங்கத்தில் இந்தியாவும் அதனுடன் போட்டியிட முடியும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
2020-21 ஆம் ஆண்டில், இந்தியா சீனாவிலிருந்து சுமார் 54 சதவீத லித்தியத்தை இறக்குமதி செய்தது. அந்த ஆண்டு மொத்தம் ரூ.6,000 கோடி மதிப்புள்ள லித்தியம் இறக்குமதி செய்யப்பட்டதாகவும், அதில் ரூ.3,500 கோடி மதிப்புள்ள லித்தியம் சீனாவில் இருந்துதான் வந்ததாகவும் ஒரு புள்ளிவிவரம் காட்டுகிறது.
நிலையான ஆற்றலுக்குத் தேவையான கனிமங்களைப் பெறுவதில் இந்தியா தொடர்ந்து சமரசம் செய்து வருகிறது. அமெரிக்கா தலைமையிலான கனிம பாதுகாப்பு கூட்டாண்மையிலும் (MSP) இந்தியா ஒரு அங்கமாக இருக்கிறது.
இந்த ஒப்பந்தத்தின் கீழ், முக்கியமான கனிமங்களின் விநியோகச் சங்கிலியைப் பாதுகாப்பதில் இந்தியா உதவி பெறும். 2021 ஆம் ஆண்டில், விநியோகச் சங்கிலியில் ஏகபோகக் கட்டுப்பாட்டைக் கொண்டிருந்ததால் சீனாவுக்கு எதிராக இந்த கூட்டாண்மை உருவாக்கப்பட்டது.
ஆஸ்திரேலியா, கனடா, பின்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, ஜப்பான், கொரியா, சுவீடன், பிரிட்டன், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவை இந்த ஒப்பந்தத்தில் உறுப்பினர்களாக உள்ளன.

பட மூலாதாரம், Getty Images
இந்தியாவின் புதிய உடன்படிக்கை காரணமாக பாட்டரி உற்பத்தித் துறையில் கணிசமான முன்னேற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
லித்தியம் சுரங்கம் பற்றிய கவலைகள் என்ன?
மின்சார வாகனங்கள் சுற்றுச்சூழலுக்கு சிறந்தவையாகக் கருதப்பட்டாலும், சில வல்லுநர்கள் லித்தியம் சுரங்க செயல்முறை சுற்றுச்சூழலுக்கு உகந்தது இல்லை என்று நம்புகின்றனர்.
உப்பு நீர்த்தேக்கங்கள் மற்றும் பூமியில் உள்ள கடினமான பாறைகளில் இருந்து லித்தியம் பிரித்தெடுக்கப்படுகிறது. இது ஆஸ்திரேலியா, சிலி மற்றும் அர்ஜெண்டினா போன்ற நாடுகளில் அதிக அளவில் காணப்படுகிறது.
லித்தியம் எடுக்கப்படும் போது, அது கனிம எண்ணெயைப் பயன்படுத்தி எரிக்கப்படுகிறது. இதனால் அந்த பகுதி முற்றிலும் எரிந்து காய்ந்து கரும்புள்ளிகள் உருவாகின்றன.
இது தவிர, சுரங்கத்தில் இருந்து லித்தியத்தைப் பிரித்தெடுக்கும் செயல்பாட்டில் நிறைய தண்ணீர் பயன்படுத்தப்படுகிறது என்பதுடன் கார்பன் டை ஆக்சைடு அதிக அளவில் வளிமண்டலத்தில் வெளியேற்றப்படுகிறது.
அர்ஜெண்டினாவில் லித்தியம் சுரங்கத்தில் அதிக அளவு தண்ணீர் பயன்படுத்தப்படுவதால், உள்ளூர்வாசிகள் லித்தியம் எடுக்கும் சுரங்கத் தொழிலை எதிர்த்து வருகின்றனர்.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்