
பட மூலாதாரம், Getty Images
தமிழ்நாடு முழுவதும் கடந்த மாதம் அரிசிக்குக் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டதால், அதன் விலை உயரத் தொடங்கியது. இது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியது. ஒரு கிலோ அரிசியின் விலை 3 முதல் 6 ரூபாய் வரை உயர்ந்தது. வரும் மாதங்களில் அரிசி விலை குறையும் என அரிசி உரிமையாளர் சங்கத்தினர் கூறுகின்றனர்.
தமிழ்நாட்டில் அரிசியின் விலை ஏற்றம் கண்டது ஏன்?
வரும் நாட்களில் அரிசியின் விலை குறையுமா?
இந்தியா உலக சந்தைக்கு 40% அரிசியை ஏற்றுமதி செய்து அரிசி ஏற்றுமதியில் முதலிடம் வகிக்கிறது. இந்தியாவில் கடந்த ஆண்டு அரிசியின் விலை மெல்ல மெல்ல உயரத் தொடங்கியது. இதனைக் கட்டுப்படுத்துவதற்காக மத்திய அரசு கடந்த ஜூலை மாதம், அரிசி விலை ஏற்றத்தைத் தடுக்க பாஸ்மதி அரிசி அல்லாத மற்ற அரிசி வகைகளை ஏற்றுமதி செய்யத் தடை விதித்தது.
இந்தியாவிலிருந்து 25% மட்டுமே பாஸ்மதி அரிசி ஏற்றுமதி செய்யப்படுகிறது. மீதி 75% மற்ற இந்திய ரக அரிசி வகைகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
தமிழ்நாட்டு மக்களின் அரிசி தேவையை அந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களும் பூர்த்தி செய்கின்றன. கடந்த ஆண்டு வட மாநிலகள், கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் போதிய மழைப் பொழிவு இல்லாததால் நெல் விளைச்சல் பாதியாக சரிந்தது. இதனால் அரிசியின் தேவை அதிகரித்து விலை ஏற்றம் கண்டது.
தமிழ்நாட்டில் நெல் உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கும் டெல்டா மாவட்டங்களிலும் கடந்த ஜூன் மாதத்தில் மேட்டூர் அணையிலிருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் அனைத்து விவசாயிகளுக்கும் சென்று சேரவில்லை.
பருவமழையும் போதிய அளவு பெய்யாததால் குறுவைக்காக பயிரிடப்பட்டிருந்த 2 லட்சம் ஏக்கர் பயிர் பாதிப்பைச் சந்தித்து மகசூல் பாதியாக குறைந்தது என்கின்றனர், அந்த பகுதியைச் சேர்ந்த விவசாயிகள்.
‘விளைச்சல் குறைந்தாலும் அரிசி விலை ஏற்றத்தால் லாபம்’

திருச்சியில் போதுமான நீர் கிடைக்காததால் சில பகுதிகளில் மகசூல் குறைந்தது. மேலும், அரிசியின் தேவை அதிகரித்ததால் குறைந்த மகசூல் கிடைத்த விவசாயிகளுக்கும் அதிக லாபம் கிடைத்துள்ளது.
குறுவை, சம்பா இரண்டையும் சேர்த்து 15,000 ரூபாய் வரை லாபம் கிடைத்ததாக கூறுகிறார், லால்குடியைச் சேர்ந்த சுந்தர்ராஜன் என்ற விவசாயி.
இதுகுறித்து பேசிய அவர், “22 ஏக்கர் நிலத்தில் 15 ஏக்கர் பரப்பளவில் ஆந்திரா பொன்னி, ஆடுதுறை 36 (ADT-36) ரக நெல்லை நடவு செய்து குறுவை, சம்பா காலங்களில் விவசாயம் செய்து வருகிறேன். இதில், கடந்த ஆண்டு ஏக்கருக்கு 10,000-12,000 வரை லாபம் கிடைத்தது. ஆனால், இந்த ஆண்டு ஏக்கருக்கு 4,000 வரை கூடுதலாக கிடைத்திருக்கிறது,” என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், “விவசாயிகளுக்கு ஜனவரி மாத அறுவடை காலத்தில் ஏக்கருக்கு 25 முதல் 30 மூட்டை மகசூல் மட்டுமே கிடைத்தது. ஆனால், பிப்ரவரி மாதத்தில் அறுவடை மேற்கொண்ட விவசாயிகளுக்கு கூடுதலாக 10 மூட்டை வரை மகசூல் கிடைத்தது,” என்றார்
விவசாயிகளுக்கு லாபம் கிடைத்தாலும், நெல்லை அதிக விலை கொடுத்து வாங்குவது, அரிசி அரவை ஆலைகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ள கூடுதல் மின் கட்டணம் அரிசி விலை ஏற்றத்திற்கு மற்றொரு காரணமாக அமைந்துள்ளது.

‘மூன்று மூட்டை நெல் வாங்கிய இடத்தில் இரண்டு மூட்டையே வாங்க முடிந்தது ‘

நடேசன்
திருச்சியில் 30 வருடங்களுக்கு மேலாக அரிசி ஆலை வைத்திருக்கும் நடேசன் பிபிசியிடம் பேசும்போது, “தமிழ்நாட்டில் நெல் விளைச்சல் பாதியாக குறைந்து இருக்கிறது. கடந்த ஆண்டு ஒரு மூட்டை நெல்லை 1,300 ரூபாய்க்கு விவசாயிகளிடமிருந்து வாங்கினோம். ஆனால், இந்த ஆண்டு நெல் கொள்முதல் நிலையத்தில் நெல் குவிண்டாலுக்கு 250 ரூபாய் கூடுதலாக விலை நிர்ணயம் செய்திருக்கிறது. எனவே, 62 கிலோ எடையுள்ள நெல் மூட்டையை நாங்கள் 500 ரூபாய் கூடுதலாக கொடுத்து 1,800 ரூபாய்க்கு வாங்கி வருகிறோம்,” என்றார்.
மேலும், “கடந்த ஆண்டு 30,000 மூட்டைகள் நெல் வாங்கிய இடத்தில் இப்போது 20,000 மட்டுமே வாங்க முடிகிறது. இதனால், அரிசி ஆலை வைத்திருப்போர் நெருக்கடியை சந்தித்து வருகின்றனர்.
“கடந்தாண்டு தமிழ்நாடு அரசு மின் கட்டண விகிதங்களை மாற்றியது. அதன்படி, ஒரு அரிசி ஆலை இயங்கினாலும் இயங்காவிட்டாலும் 50,000 ரூபாய் வரை செலுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டது. இதுவும் உற்பத்தி செலவில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது,” என்றார்.
ஜிஎஸ்டி வரி விதிப்பால் விலையேற்றம்

“மத்திய அரசு கடந்த ஆண்டு 25 கிலோ எடைக்கு கீழ் உள்ள அரிசி பைகளுக்கு 5% ஜிஎஸ்டி வரி விதித்தது. இதுவும் அரிசி விலை உயர்வுக்கு ஒரு காரணமாக மாறிவிட்டது. இதனால் அரிசி ஆலை வியாபாரிகள் 26 கிலோ அரிசி பைகளை விற்பனைக்கு அறிமுகம் செய்தனர். சென்ற ஆண்டு ரூ. 1,200-க்கு அரிசி மொத்த வியாபாரிகளுக்கு விற்பனை செய்த நாங்கள் விலையேற்றத்தால் 1,400 ரூபாய்க்கு கொடுத்து வருகிறோம். இது மக்களைச் சென்றடையும் போது 1,600 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது,” என்றார் நடேசன்.
‘30% அறுவடை பாதிப்பு’

சடகோபன்
“தமிழ்நாட்டில் போதிய அளவு மழை இல்லாத காரணத்தால் நெல் விளைச்சல் 30% குறைந்தது. இதன் காரணமாகவே அரிசி விலை ஏற்றம் கண்டு இருக்கிறது. மக்கள் அரிசியை மட்டுமே நம்பி இருக்காமல் மற்ற சிறுதானிய வகைகளை பயன்படுத்த வேண்டும்,” என்கிறார் தமிழ்நாடு அரிசி விலைக் கண்காணிப்பு குழு உறுப்பினர் சடகோபன்.
மேலும் பேசிய அவர், “தற்போது மத்திய அரசு அரிசியின் விலையை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக ‘பாரத் அரிசி’யை 29 ரூபாய்க்கு அறிமுகப்படுத்தி இருக்கிறது. அது எங்கெங்கு கிடைக்கும் என்பது குறித்த தகவலையும் வெளியிட்டு இருக்கிறது.
“இதனைப் பயன்படுத்தி குறைந்த விலைக்கு மக்கள் அரிசியை வாங்கிக் கொள்ளலாம்”, என்கிறார்.
ஜனவரி பிற்பகுதியில் அறுவடை செய்யப்பட்ட நிலங்களிலிருந்து மகசூல் அதிகமாக வருவதால் அரிசியின் விலை மொத்த விலை சந்தையில் குறையத்தொடங்கி இருக்கிறது.
‘அரிசி விலை மொத்த விலையில் குறைந்தது’

எ.சி மோகன்
இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய தமிழ்நாடு அரிசி உரிமையாளர் மற்றும் நெல், அரிசி சம்மேளனத்தின் தலைவர் டாக்டர் எ.சி மோகன் கூறும்போது, “இந்திய அளவில் கடந்த ஆண்டு வெள்ளம், வறட்சி உள்ளிட்ட பல்வேறு காரணங்களா 3.7% நெல் உற்பத்தி குறைந்தது. இதனால் கடந்த டிசம்பர் மாதம் அரிசி தேவை அதிகரித்து உற்பத்தி குறைந்ததால் அதன் விலை கிடுகிடுவென உயர்ந்தது. சன்ன ரக அரிசி 26 கிலோ மூட்டை 200 ரூபாய் அதிகரித்து 1,620 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. புது அரிசி 1,500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
இட்லி அரிசி 1,100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. தற்போது சாகுபடியில் விவசாயிகளிடமிருந்து நெல் வரத் துவங்கி இருப்பதால் மொத்த விலையில் அனைத்து அரிசியிலும் 100-150 ரூபாய் குறைந்து இருக்கிறது.
5, 10 கிலோ அரிசி பைகளுக்கு ஜிஎஸ்டி வரி விதிப்பு இருப்பதால் சில்லரை விலை அரிசியின் விற்பனை வரும் மாதங்களில் 3 முதல் 4 ரூபாய் வரை படிப்படியாக குறையும்” என்றார்.
அதிகாரிகள் கூறுவது என்ன?
இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய தமிழ்நாடு உணவு மற்றும் நுகர்வு பாதுகாப்புத்துறை அதிகாரிகள், தமிழ்நாட்டிலிருக்கும் அரிசி ஆலையின் உரிமையாளர்களிடம் ஆலோசனைகள் நடத்தி இருப்பதாகக் கூறினர். “நெல் வரத்து அதிகரிக்க தொடங்கியிருப்பதால் மொத்த சந்தையில் அரிசியின் விலை இறங்கி இருக்கிறது. அரிசி விற்பனை ஆலைகளிலும் ஆய்வு நடத்தி விலை நிலவரத்தை கண்காணித்து வருகிறோம். இன்னும் சில மாதங்களுக்குள் அரிசியின் விலையின் குறையும்,” என்றனர்.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்