இந்து – முஸ்லிம் கிரிக்கெட் அணிகள்: மத ரீதியான கிரிக்கெட்டை மகாத்மா காந்தி மாற்றியது எப்படி?

இந்து - முஸ்லிம் கிரிக்கெட் அணிகள்: மத ரீதியான கிரிக்கெட்டை மகாத்மா காந்தி மாற்றியது எப்படி?

இந்திய கிரிக்கெட் வரலாறு

இந்தியாவில் கிரிக்கெட் மீதான ஆர்வம் எல்லோருக்கும் தெரிந்ததே. அதேநேரம், இந்தியாவின் கிரிக்கெட் வரலாறும் மிக சுவாரஸ்யமானது.

இந்தியாவின் தேசிய விளையாட்டு ஹாக்கி என்றாலும், கிரிக்கெட் இங்கு ஆழமாக பின்னிப் பிணைந்துள்ளது. இந்த விளையாட்டின் பின்னணியில் பல கதைகள் உள்ளன. இந்தக் கதைகள் வரலாற்றின் பல அடுக்குகளைப் புரிந்துகொள்ள உதவும்.

இந்தியாவில் மாநிலங்கள் அல்லது பிரதேசங்களின் அடிப்படையில் அணிகள் உருவாக்கப்படாமல், மதங்களின் அடிப்படையில் அணிகள் அமைக்கப்பட்ட காலம் உண்டு என்பது உங்களுக்குத் தெரியுமா?

அந்தக் காலகட்டத்தில் இந்து அணியினர் முஸ்லிம்கள், பார்சிகளுக்கு எதிராகவும், முஸ்லிம் அணியினர் பார்சிகளுக்கு எதிராகவும் போட்டியிட்டனர்.

இந்தப் போட்டிகள் பல ஆண்டுகள் நடைபெற்றன. இதைக் காண ஏராளமான பார்வையாளர்கள் குவிந்தனர். அப்போதைய ஊடகங்களும் தங்கள் பத்திரிகைகளில் இந்தப் போட்டிகளுக்கு நல்ல இடம் கொடுத்தன.

அப்படி, ‘தி பாம்பே பென்டாங்குலர்’ (The Bombay Pentangular) எனப் பிரபலமாக அறியப்படும் கிரிக்கெட் போட்டி குறித்து இக்கட்டுரை உங்களுக்கு விவரிக்கிறது. இந்தப் போட்டி எப்படி ஆரம்பமானது, அது தொடர்பான சர்ச்சைகள் என்ன, பிறகு இந்தப் போட்டிகளுக்கு முடிவுரை எழுதப்பட்டது எப்படி என்பதை இக்கட்டுரையில் பார்ப்போம்.

இந்தியாவில் கிரிக்கெட் ஆரம்பமானது எப்போது?

இந்திய கிரிக்கெட் வரலாறு

பட மூலாதாரம், GETTY IMAGES

படக்குறிப்பு,

இந்தியாவில் பிரிட்டிஷ் கிரிக்கெட் அணி – மகாராஷ்டிரா, இந்தியா, 1882

இந்தியாவில் கிரிக்கெட் பற்றிய ஆரம்பகால குறிப்புகள் 18ஆம் நூற்றாண்டின் மூன்றாம் தசாப்தத்தின் தொடக்கத்தில் உள்ளன.

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தின்படி, இன்றைய குஜராத்தின் கட்ச் பகுதியில் பிரிட்டிஷ் கப்பல் ஒன்று அந்தக் காலகட்டத்தில் நங்கூரமிட்டிருந்தது.

அதன் மாலுமிகள் பொழுதுபோக்குக்காக கிரிக்கெட் விளையாடியதாக எழுத்துபூர்வ குறிப்புகள் கூறுகின்றன. இதன்பிறகு, இந்தியாவில் கிரிக்கெட் சகாப்தம் ஆரம்பமானது. கொல்கத்தா கிரிக்கெட் கிளப் 1792ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. மெட்ராஸ் கிரிக்கெட் கிளப்புக்கு அடுத்தபடியாக உலகின் பழமையான கிரிக்கெட் கிளப் இதுவே.

அப்போது, இந்தியாவில் பார்சி சமூகத்தினர்தான் கிரிக்கெட்டை முதலில் விளையாட ஆரம்பித்தனர். 1848ஆம் ஆண்டில், பார்சி சமூகம் ஓரியண்டல் கிரிக்கெட் கிளப்பை (Oriental Cricket Club) தொடங்கியது. இதற்குப் பிறகு, பார்சி சமூகத்தினர் பல கிரிக்கெட் கிளப்புகளை தொடங்கினர்.

பார்சி சமூகத்தினரின் பொருளாதார பலத்தால், அவர்கள் தங்கள் அணியை பிரிட்டனுக்கு அனுப்பினர். 1889-90ஆம் ஆண்டு ஜி.எஃப்.வெர்னான் தலைமையிலான இங்கிலாந்து அணியை பார்சி அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது. அந்தக் காலகட்டத்தில், எந்தவொரு இந்திய கிரிக்கெட் அணிக்கும் இது மிகப்பெரிய வெற்றி.

மூத்த விளையாட்டு பத்திரிகையாளர், வரலாற்று ஆசிரியர் மற்றும் சச்சின் டெண்டுல்கரின் சுயசரிதையான ’ப்ளேயிங் இட் மை வே’யின் (Playing It My Way) இணை ஆசிரியரான போரியா மஜும்தார், தி பாம்பே பென்டாங்குலர் பற்றி எழுதியுள்ளார். இதை ‘தி இன்டர்நேஷனல் ஜர்னல் ஆஃப் தி ஹிஸ்டரி ஆஃப் ஸ்போர்ட்ஸ்’ வெளியிட்டுள்ளது.

இந்திய கிரிக்கெட் வரலாறு

பட மூலாதாரம், GETTY IMAGES

படக்குறிப்பு,

1878இல் பார்சி அணி கிரிக்கெட் விளையாடியபோது…

போரியா மஜும்தார் தனது கட்டுரையில், “பார்சி சமூகத்தினர் பல கிரிக்கெட் கிளப்புகளை உருவாக்கியுள்ளனர். பம்பாயில், இந்து சமூகம் வணிகத்தில் பார்சி சமூகத்துடன் போட்டியிட்டது. பார்சி சமூகத்திற்குப் பிறகு, இந்துக்களும் கிரிக்கெட் விளையாடத் தொடங்கினர்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.

“முதல் இந்து கிரிக்கெட் கிளப் 1866ஆம் ஆண்டு ’பாம்பே யூனியன்’ என்ற பெயரில் நிறுவப்பட்டது. ஒருபுறம் பார்சி சமூகத்தினர் இடங்களின் பெயரில் கிளப்புகளை உருவாக்க, மறுபுறம் சாதி மற்றும் மதத்தின் பெயரால் இந்துக்கள் கிளப்புகளை உருவாக்கினர்,” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘தி பாம்பே பென்டாங்குலர்’ 1890களில் தொடங்குவதற்கு முன்பு, ஐரோப்பிய மற்றும் பார்சி சமூகங்களுக்கு இடையே ஆண்டு போட்டிகள் நடந்தன. 1907ஆம் ஆண்டில், இந்து சமூகத்தைச் சேர்ந்த அணியும் அதில் இணைந்து முத்தரப்பு போட்டியாக மாறியது.

முஸ்லிம் சமூகத்தின் அணியும் அப்போட்டியில் 1912இல் இணைந்தது. 1937இல், ஆங்கிலோ-இந்திய மற்றும் கிறிஸ்தவ சமூகத்தைச் சேர்ந்த வீரர்கள் அதில் இடம்பெற்றனர்.

கௌசிக் பந்தோபாத்யாய், ‘மகாத்மா ஆன் பிட்ச்’ (Mahatma on Pitch) என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். அதில் ‘தி பாம்பே பென்டாங்குலர்’ போட்டி பற்றி விரிவாக எழுதியுள்ளார்.

இந்தப் போட்டியின் காரணமாக 1912 வரை, எந்தவித பெரிய வகுப்புவாத சம்பவமும் நடக்கவில்லை என்று கௌசிக் எழுதுகிறார். இத்தகைய போட்டிகள் நாட்டின் பிற பகுதிகளான சிந்து, லாகூர், டெல்லி மற்றும் மத்திய மாகாணங்களில் நடத்தப்பட்டன.

அந்தக் காலகட்டத்தில், பல்வேறு சமூகங்களின் போட்டி மனப்பான்மையால் கிரிக்கெட் இந்தியாவில் வளர்ச்சியடைந்தது என்று கௌசிக் எழுதுகிறார்.

இத்துடன் அந்தந்த சமூகத்தினருக்காக போட்டியைக் காண வந்தவர்களே களமிறங்கும் போக்கு இருந்ததாக கௌசிக் கூறுகிறார். 1930களின் ஆரம்பம் வரை, கிரிக்கெட் விளையாட்டில் போட்டி மனப்பான்மை நிலவியது.

“முஸ்லிம் அணி 1924இல் போட்டியில் வென்றபோது, ​​இந்துக்கள் அவர்களின் வெற்றியைக் கொண்டாடினர். முகமது அலி ஜின்னாவும் இந்த மனப்பான்மையைப் பாராட்டினார்,” என கௌசிக் எழுதுகிறார்.

வகுப்புவாதமாக மாறியது ஏன்?

இந்திய கிரிக்கெட் வரலாறு

பட மூலாதாரம், GETTY IMAGES

படக்குறிப்பு,

இந்திய கிரிக்கெட் அணி – 1911

இந்தியா 1920களுக்கு முன்பு, பல்வேறு சமூகங்களின் கூட்டமாக காணப்பட்டது. அதன் கட்டமைப்புக்குள் ‘தி பாம்பே பென்டாங்குலர்’ போன்ற போட்டிகள் பொருந்திப் போனதாக, புகழ்பெற்ற வரலாற்று ஆசிரியர் ஞானேந்திர பாண்டே எழுதியதை கௌசிக் மேற்கோள் காட்டுகிறார்.

இந்தியாவைப் பற்றிய இந்தப் பார்வை 1920களில் மாறத் தொடங்கியது. அப்போது இந்தியா மக்கள் கூட்டமாகப் பார்க்கப்பட்டது.

“இந்தப் போட்டி ஒரு தேசமாக வளர்ந்து வரும் இந்தியாவில் மத அடிப்படையிலான போட்டிகளின் அவசியம் பற்றிய விவாதத்தைத் தூண்டியது,” என கௌசிக் எழுதுகிறார்.

“இந்த விவாதத்தில் இரண்டு பிரிவுகள் இருந்தன. அதில், ஒரு பிரிவினர் இத்தகைய போட்டிகளைப் பல்வேறு சமூகங்களை நெருக்கமாக்கும் முயற்சி என்று கூறியது,” என்கிறார் அவர்.

“மற்றொரு பிரிவினர் இதுபோன்ற போட்டிகள் மோசமான போட்டியுணர்வை உருவாக்குகின்றன. இதனால், ஒரு சமூகத்தினரிடம் இருந்து மற்றொரு சமூகத்தினர் விலகிச் செல்கின்றனர் என கூறினர்,” என்கிறார்.

கௌசிக் கருத்துப்படி, 1928இல் பிசிசிஐ நிறுவப்பட்ட பிறகு இந்தப் போட்டிகளுக்கு எதிராகக் குரல்கள் எழுப்பப்பட்டன. ஆனால், அப்போதும் அத்தகைய போட்டிகளுக்கு ஆதரவாக பல குரல்கள் எழுந்தன.

“1936ஆம் ஆண்டு `பம்பாய் குவாட்ரங்குலர்` போட்டிகளுக்கு முன்பு இந்து-முஸ்லிம் கலவரங்கள் இருந்தன. அப்போது, ​​’தி பாம்பே க்ரானிக்கிள்’ செய்தித்தாள், இந்தப் போட்டியை நிறுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது, இல்லையெனில் அது சமூகங்களுக்கு இடையில் கசப்பையே அதிகரிக்கும் என்று கூறியது.

“1937இல், ஜே.சி.மைத்ரா மற்றும் ஜே.எம்.கங்குலி போன்ற பெரிய ஆளுமைகள் நாட்டின் நலன் கருதி இந்தப் போட்டிகளை நிறுத்த வேண்டும் என்று பரிந்துரைத்தனர்,” என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

காந்தி செய்த உதவி என்ன?

காந்தி

பட மூலாதாரம், GETTY IMAGES

டிசம்பர் 1940 வாக்கில், போட்டி பற்றிய விவாதம் அதிகரித்தது. அப்போது, ​​காந்தியிடம் ஆலோசனையைக் கேட்க இந்து ஜிம்கானா குழு ஒன்று வந்தது. இதுதொடர்பான காந்தியின் கருத்துகள் ‘மகாத்மா காந்தியின் கூட்டுப் பணிகள்’ 79வது தொகுதியில் அச்சிடப்பட்டுள்ளன.

ஐரோப்பாவில் நடந்து வரும் இரண்டாம் உலகப் போர் காரணமாகவும், இந்தியாவில் பல தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டு இருப்பதாலும் இந்தப் போட்டிகளை நிறுத்துமாறு காந்தி அழைப்பு விடுத்தார். இதனுடன், இந்தப் போட்டியின் வகுப்புவாத தன்மை குறித்தும் காந்தி தனது கருத்துகளை வெளிப்படுத்தினார்.

“பம்பாய் மக்கள் தங்கள் விளையாட்டு முறையை மாற்றி, இந்த வகுப்புவாத போட்டிகளை நிறுத்த வேண்டும் என்று நான் அவர்களிடம் கூற விரும்புகிறேன்,” என காந்தி கூறினார்.

“கல்லூரிகளுக்கு இடையே போட்டிகள் நடத்தப்படுவது எனக்குப் புரிகிறது. ஆனால், இந்துக்கள், முஸ்லிம்கள், பார்சிகள் இடையே ஏன் இத்தகைய போட்டிகள் நடத்தப்படுகின்றன என்று எனக்குப் புரியவில்லை,” என காந்தி அப்போது கூறினார்.

“போட்டி மனப்பான்மையற்ற இத்தகைய பிளவு மோசமானதாகக் கருதப்பட வேண்டும் என்று நான் நினைக்கிறேன்,” என காந்தி தெரிவித்தார். காந்தியின் அறிக்கையை ஒரு பிரிவினர் பாராட்டினாலும், ஒரு குழுவினர் விமர்சித்தனர்.

காந்தியின் அறிக்கைக்குப் பிறகும், 1941இல் போட்டிகள் நடத்தப்பட்டன. 1942இல் தவிர, 1946 வரை இந்தப் போட்டிகள் தொடர்ந்தன.

கடந்த 1941ஆம் ஆண்டு வரை இந்தப் போட்டிக்கு எதிரான குரல்கள் மிக அதிகமாக ஒலித்து வருவதையும் பார்க்க முடிந்தது. “பாட்டியாலா, நவநகர், விஜயநகரம் போன்ற சமஸ்தானங்களில் இத்தகைய போட்டிகளுக்கு எதிராகக் குரல் எழத் தொடங்கின,” என்று கௌசிக் எழுதுகிறார்.

“நவான் நகரைச் சேர்ந்த ஜாம் சாஹிப் தனது சமஸ்தானத்தைச் சேர்ந்த அனைத்து வீரர்களுக்கும் இந்தப் போட்டியில் பங்கேற்கத் தடை விதித்தார்,” என அவர் எழுதியுள்ளார்.

“இந்த நடவடிக்கையை பாட்டியாலா சமஸ்தானமும் வரவேற்றது. வகுப்புவாத அடிப்படையில் நடைபெறும் போட்டிகளில் தங்கள் வீரர்கள் யாரும் பங்கேற்க மாட்டார்கள் என்றும் பாட்டியாலா சமஸ்தானம் அறிவித்தது” என எழுதுகிறார்.

இந்தப் போட்டி எப்படி முடிவுக்கு வந்தது?

இந்திய கிரிக்கெட் வரலாறு

பட மூலாதாரம், GETTY IMAGES

படக்குறிப்பு,

1910இல் கிரிக்கெட் போட்டியை ரசிக்கும் பார்சி சமூக பெண்கள்

இந்தப் போட்டி 1943 முதல் 1945 வரை, அதன் முழு வீச்சில் நடத்தப்பட்டது. இந்தப் போட்டியின் மீது மக்கள் எந்தளவுக்கு ஆர்வத்துடன் இருந்தார்கள் என்பதை அப்போதைய பத்திரிகை ஊடகங்கள் காட்டுகின்றன என கௌசிக் கூறுகிறார்.

கௌசிக் கூறுகையில், “கடைசி பென்டாங்குலர் போட்டி பிப்ரவரி 1946இல் நடைபெற்றது. அந்த ஆண்டு இந்தியாவில் பல இடங்களில் பெரும் வகுப்புவாத வன்முறைகள் நடந்தன. இதுபோன்ற சூழலில் கிரிக்கெட் விளையாடுவது சாத்தியமில்லை என்று அப்போது தோன்றியது,” என்கிறார்.

“இந்தப் போட்டியின் முக்கிய ஆதரவாளர்கள்கூட பல்வேறு சமூகங்களுக்கு இடையில் அதிகரித்து வரும் பதற்றங்கள் காரணமாக போட்டி நிறுத்தப்பட வேண்டும் என்று வாதிட்டனர்,” என கௌசிக் குறிப்பிடுகிறார்.

அப்போது பிசிசிஐ தலைவர் அந்தோணி டி மல்லோ, இந்தப் போட்டி நாட்டின் அமைதியைச் சீர்குலைக்கும் என்று கூறியிருந்தார். பின்னர் அதை மீண்டும் தொடங்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன, ஆனால் அது பலனளிக்கவில்லை.

‘தேசிய இயக்கத்திற்கு இடையூறு’

இந்திய கிரிக்கெட் வரலாறு

பட மூலாதாரம், GETTY IMAGES

படக்குறிப்பு,

1932-ல் எடுக்கப்பட்ட புகைப்படம்

பொரியா மஜும்தார் கூறுகையில், இந்த பென்டாங்குலர் போட்டியை அரசியல் மற்றும் பொருளாதார ரீதியாகப் புரிந்துகொள்ள வேண்டும் என்கிறார்.

“இந்தப் போட்டியை நாம் ஆய்வு செய்தால், இந்தப் போட்டியை நிறுத்துவதற்கு உருவாக்கப்பட்ட மதச்சார்பின்மை பிம்பத்தின் பின்னால் அரசியல் மற்றும் பொருளாதார காரணிகளும் இருந்தன என்பதையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும்,” என்று அவர் கூறுகிறார்.

“பென்டாங்குலர் போட்டியின்போது பார்வையாளர்கள் நிரம்பியிருந்த நிலையில், ​​பிசிசிஐயின் ரஞ்சி கோப்பை போட்டியின்போது பார்வையாளர்கள் மாடங்கள் காலியாகவே இருந்தன. இதனால், பென்டாங்குலர் போட்டியை எதிர்த்தவர்கள் பாதிக்கப்பட்டனர்,” என்கிறார் அவர்.

“பிசிசிஐ மற்றும் மாநிலத் தலைவர்கள் இந்தப் போட்டியை தேசிய இயக்கத்திற்கு இடையூறு எனக் கூறி அதை அடக்குவதற்கு தங்களால் இயன்ற வரை முயன்றனர்” என்கிறார் அவர்.

“ஆனால், 1946இல் பென்டாங்குலர் போட்டிகள் முடிவடைந்த பிறகும், ரஞ்சிக் கோப்பைக்கான உற்சாகம் மக்களிடையே காணப்படவில்லை என்பதில் இருந்தே இந்த முயற்சியின் வெற்றியை மதிப்பிட முடியும்,” என்றார் அவர்.

Facebook
Facebook
fb-share-icon
Telegram
WhatsApp
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *