காவிரி தீர்மானம்: கூட்டணியில் இருப்பதால் காங்கிரசை வற்புறுத்த திமுக தயங்குகிறதா?

காவிரி தீர்மானம்: கூட்டணியில் இருப்பதால் காங்கிரசை வற்புறுத்த திமுக தயங்குகிறதா?

காவிரி தொடர்பான தீர்மானம்: தேசிய அளவிலான கூட்டணிகளில் இருப்பது மாநிலக் கட்சிகளுக்கு பாதிப்பா?
படக்குறிப்பு,

தமிழ்நாட்டிற்குத் தண்ணீரைத் திறந்துவிடுமாறு கர்நாடக அரசுக்கு உத்தரவிட மத்திய அரசை வலியுறுத்தும் தீர்மானம் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.

காவிரி நதி நீர் தொடர்பான தீர்மானம் மீதான விவாதம், கடுமையான வாதங்களுக்கு நடுவில் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இது தொடர்பான விவாதத்தின்போது காங்கிரஸ் கூட்டணியில் தி.மு.க. இருப்பது குறித்து பா.ஜ.க., அ.தி.மு.க. ஆகிய கட்சிகள் கேள்வி எழுப்பின.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று காவிரி நதி நீர் தொடர்பான தனித் தீர்மானம் ஒன்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலினால் கொண்டுவரப்பட்டு எதிர்க்கட்சிகளின் வாதப் பிரதிவாதங்களுக்கு நடுவில் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

தமிழ்நாடு சட்டப்பேரவையின் கூட்டத் தொடர் இன்று துவங்கியது. முதலில் முக்கியப் பிரமுகர்களின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதற்குப் பிறகு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காவிரி நீர் விவகாரம் தொடர்பாக தனித் தீர்மானம் ஒன்றைக் கொண்டுவந்தார். அந்தத் தீர்மானத்தைக் கொண்டுவருவதற்கு முன்பாக, காவிரி நீர் விவகாரத்தின் பின்னணி, அதில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளைப் பட்டியலிட்டார்.

இதற்குப் பிறகு முதலமைச்சர் தனித் தீர்மானத்தை வாசித்தார். “தமிழ்நாட்டின் விவசாயத்திற்கு அடித்தளமாக விளங்கும் காவிரி டெல்டா பாசன விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாத்திட, மாண்பமை உச்ச நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பில் வரையறுக்கப்பட்டுள்ளபடி தமிழ்நாட்டிற்குத் தண்ணீரைத் திறந்துவிடுமாறு கர்நாடக அரசுக்கு உத்தரவிட மத்திய அரசை வலியுறுத்துகிறோம்” என அந்தத் தீர்மானத்தில் கூறப்பட்டிருந்தது.

காவிரி தொடர்பான தீர்மானம்: தேசிய அளவிலான கூட்டணிகளில் இருப்பது மாநிலக் கட்சிகளுக்கு பாதிப்பா?

பட மூலாதாரம், Facebook

இந்தத் தீர்மானத்தின் மீது உறுப்பினர்கள் தங்கள் கருத்துகளைத் தெரிவிக்க அழைக்கப்பட்டனர். அப்போது குறுக்கிட்டுப் பேசிய அவை முன்னவரும் நீர்வளத் துறை அமைச்சருமான துரைமுருகன், காவிரி விவகாரத்தைப் பொறுத்தவரை கர்நாடக மாநிலத்தில் அரசியல் கட்சிகள் ஒற்றுமையுடன் இருப்பதைப் போல, தமிழ்நாட்டிலும் இந்த விவகாரத்தில் அனைத்து அரசியல் கட்சிகளும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டுமெனக் கேட்டுக்கொண்டார்.

இதற்குப் பிறகு, ஒவ்வொரு உறுப்பினராகப் பேசிவந்தனர். இந்த விவகாரத்தில் பேசிய பா.ஜ.க. உறுப்பினர் வானதி ஸ்ரீநிவாசன், பிரதமர் நரேந்திர மோதி தலைமையிலான அரசு சட்டபூர்வமான நடவடிக்கைகளை எடுத்ததாகவும் கர்நாடகத்தை ஆட்சி செய்யும் காங்கிரஸ் கட்சியைப் பற்றி தீர்மானத்தில் ஏதும் சொல்லாமல் மத்திய அரசை மட்டும் இந்தத் தீர்மானம் வலியுறுத்துவதாக குற்றம்சாட்டினார். மேலும் விவசாயிகளுக்கு சரியான இழப்பீடு வழங்கவில்லை என்றும் குறிப்பிட்டார்.

இதற்குப் பிறகு வானதி ஸ்ரீநிவாசன் பேசிய வார்த்தைகளை அவைக் குறிப்பிலிருந்து நீக்குவதாக சபாநாயகர் அறிவித்தார். வானதி ஸ்ரீநிவாசன் பேசிய சில விஷயங்களுக்கு பதிலளித்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தாங்கள் இருவர் பேசியதையும் அவைக் குறிப்பிலிருந்து நீக்கும்படி கேட்டுக்கொண்டார்.

இதற்குப் பிறகும் வானதி ஸ்ரீநிவாசன் நதிகளை தேசியமயமாக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்களைப் பேச முயன்றார். ஆனால், இந்த தீர்மானத்தை அவர் ஆதரிக்கிறாரா, இல்லையா என்று திரும்பத்திரும்பக் கேட்டார் சபாநாயகர் அப்பாவு. அப்போது குறுக்கிட்ட அமைச்சர் துரைமுருகன், நதிகளைத் தேசியமயமாக்குவதை தாங்கள் ஆதரிப்பதாகத் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய வானதி, இந்தத் தீர்மானம் முழுமையாக இல்லை என்றார். இதையடுத்து “வானதி ஸ்ரீநிவாசன் காவிரி நீர் பெறுவதை விரும்பவில்லை” என்று கூறினார் சபாநாயகர். இதையடுத்து பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்புச் செய்தனர்.

காவிரி தொடர்பான தீர்மானம்: தேசிய அளவிலான கூட்டணிகளில் இருப்பது மாநிலக் கட்சிகளுக்கு பாதிப்பா?

பட மூலாதாரம், Facebook

படக்குறிப்பு,

காவிரி நீர் தொடர்பான தீர்மானத்தின் போது பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்புச் செய்தனர்.

தீர்மானத்தை திருத்த எடப்பாடி கே. பழனிச்சாமி கோரிக்கை

தொடர்ந்து பா.ம.க., காங்கிரஸ் கட்சிகளின் உறுப்பினர்கள் பேசிய பிறகு எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே. பழனிசாமி பேசினார். காவிரி நீர் தொடர்பாக அ.தி.மு.க. அரசு எடுத்த நடவடிக்கைகளைப் பட்டியலிட்ட எடப்பாடி கே. பழனிச்சாமி, “காவிரி நீர் தொடர்பாக உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி கர்நாடக அரசு காவரியில் தண்ணீரைத் திறக்க வேண்டும் அதை வலியுறுத்த வேண்டும்” என்பதையும் தீர்மானத்தில் சேர்க்க வேண்டும் என்று சொன்னார். இதற்குப் பதிலளித்த சபாநாயகர் அப்பாவு, “அதுதானே தீர்மானமே” என்று கேட்டார்.

இதற்குப் பதிலளித்த எடப்பாடி கே. பழனிசாமி, “தண்ணீரைத் திறக்க வேண்டும் என கர்நாடக அரசையும் வலியுறுத்த வேண்டும் என்ற வரிகளைச் சேர்க்க வேண்டும்” என்றார். இதற்குப் பதிலளித்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தீர்மானத்தை மீண்டும் வாசித்து, தான் தெளிவாகவே தீர்மானத்தை வாசித்திருப்பதாகச் சொன்னார்.

இதற்குப் பிறகு பேசிய எடப்பாடி கே. பழனிசாமி, இந்த ஆண்டு அணையில் நீர் குறைவாக இருப்பது குறித்து தான் முன்கூட்டியே எச்சரித்ததாகவும் அதையும் மீறி நீர் திறக்கப்பட்டதால், விவசாயிகள் அதனை நம்பி பயிரிட்டு பாதிக்கப்பட்டிருப்பதாகக் கூறினார். மேலும் கர்நாடக முதல்வருடன் பேசியிருக்கலாம் என்றும் தெரிவித்தார் எடப்பாடி கே. பழனிச்சாமி.

இதற்குப் பதிலளித்த நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், “இதைத்தான் கர்நாடக அரசு எதிர்பார்க்கிறது. பேசினால் என்ன ஆகும் என்பதும் உங்களுக்குத் தெரியும். பல ஆண்டுகாலம் பேசிப் பார்த்து முடியாத காரணத்தால் நீதிமன்றம் சென்றோம். அவர்களோடு பேசுவது தற்கொலை செய்வதற்குச் சமம். நம் உரிமையை அடகு வைப்பதற்குச் சமம்” என்றார். கர்நாடக அரசோடு பேசவது தற்கொலைக்குச் சமம் என்றால், அங்கு ஆளும் அரசோடு கூட்டணி வைத்திருப்பது ஏன் எனக் கேள்வியெழுப்பினார் எடப்பாடி கே. பழனிசாமி.

காவிரி தொடர்பான தீர்மானம்: தேசிய அளவிலான கூட்டணிகளில் இருப்பது மாநிலக் கட்சிகளுக்கு பாதிப்பா?

பட மூலாதாரம், Facebook

படக்குறிப்பு,

காவிரி நீர் தொடர்பான தீர்மானத்துக்கு அதிமுக ஆதரவு அளித்துள்ளது.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் VS எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி

பா.ஜ.கவை ஆட்சியிலிருந்து அகற்ற வேண்டுமென்பது மட்டுமே அந்தக் கூட்டணியின் நோக்கம் என்றும் கூட்டணியில் இதுபோன்ற விஷயங்களையெல்லாம் பேச முடியாது என்றும் குறிப்பிட்டார் அமைச்சர் துரைமுருகன். தொடர்ந்து பேசிய எடப்பாடி கே. பழனிசாமி, “காவிரி நீர் விவகாரம் தொடர்பாக 22 நாட்கள் நாடாளுமன்றம் எங்களால் முடக்கப்பட்டது. நாங்கள் போராடினோம். நீங்கள் ஒரு நாள்கூட போராடவில்லையே” என்று கேள்வியெழுப்பினார். அப்போது குறுக்கிட்ட சட்ட அமைச்சர் ரகுபதி, “அது பா.ஜ.கவை காப்பாற்ற எடுக்கப்பட்ட நடவடிக்கை” என்றார். “நீங்கள் போராடியதை நாங்கள் மறுக்கவில்லை” என்றார் நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன்.

அந்தத் தருணத்தில் குறுக்கிட்டுப் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “காவிரி விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் பேசவில்லை என்கிறார் எதிர்க்கட்சித் தலைவர். நாங்கள் பேசியதை நிரூபிக்கவா? இல்லாததையெல்லாம் பேசக்கூடாது. ஆதாரமில்லாதவற்றைப் பேசக்கூடாது. இதுதான் மரபா?” என்று கேள்வியெழுப்பினார்.

தொடர்ந்து பேசிய துரைமுருகன், எதிர்க்கட்சித் தலைவருக்கு இந்தத் தகவல்கள் எல்லாம் தெரியும் என்றாலும் குழப்பத்தில் மறந்துபோயிருப்பார் என்று குறிப்பிட்டார். இதையடுத்துப் பேசிய எடப்பாடி கே. பழனிசாமி, “பேசினால் போதுமா? போராட வேண்டாமா? நாங்கள் மத்திய அரசின் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கைத் தொடர்ந்தோம். அந்தத் துணிச்சல் உங்களிடத்தில் இல்லையே?” என்றார்.

அதற்குப் பதிலளித்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “துணிச்சலைப் பற்றி எதிர்க்கட்சித் தலைவர் எங்களுக்குச் சொல்ல வேண்டிய அவசியமில்லை. துணிச்சல் என்றால் என்ன என்பது எங்களுக்குத் தெரியும். அதைப் பற்றிச் சொல்லி அவையின் மரபை மீற வேண்டியதில்லை. பல முறை நாடாளுமன்றத்தில் பேசியிருக்கிறோம். நாடாளுமன்றத்தை முடக்கியிருக்கிறோம். இந்தத் தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக அமைதியாக இருக்கிறோம்” என்றார்.

இதற்குப் பிறகு, காவிரி நீர் வராததால் ஏற்படவிருக்கும் பல்வேறு பிரச்சனைகளைக் குறிப்பிட்ட எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிச்சாமி, தீர்மானத்தை ஆதரிப்பதாகத் தெரிவித்தார்.

இதற்குப் பிறகு பேசிய துரைமுருகன், “கா்நாடக அணைகளில் ஒரு கையளவு தண்ணீர் இருந்தாலும் அதிலும் தமிழகத்திற்குப் பங்குண்டு. உச்ச நீதிமன்றத்தை மதிக்காத போக்கு நிலவுமானால் ஒன்றிய அரசு அதைப் பார்த்துக்கொண்டிருந்தால், இது எங்கே போய் நிற்கும்?” என்று கேள்வியெழுப்பினார். மேலும், எவ்வளவு அழுத்தம் கொடுத்தாலும் இந்த விவகாரத்தில் எதுவும் நடப்பதில்லை என்றும் கூறினார்.

இதற்குப் பிறகு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கொண்டுவந்த தீர்மானம் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. அத்துடன் இன்றைய பேரவை நிகழ்வுகள் முடிவுக்கு வந்தன.

‘இந்தியா’ கூட்டணியில் தி.மு.க. பங்குவகிப்பதை வைத்து எடப்பாடி கே. பழனிச்சாமி கேள்வியெழுப்பிய விவகாரம், தேசியக் கூட்டணியில் மாநிலக் கட்சிகள் பங்கேற்பதால் ஏற்படக்கூடிய சிக்கல்களைச் சுட்டிக்காட்டுகிறது என்கிறார் மூத்த பத்திரிகையாளரான ஷ்யாம்.

“தேசிய கூட்டணிகளில் மாநிலக் கட்சிகள் பங்கேற்பது குறித்து மாநிலக் கட்சிகள் முடிவெடுக்க வேண்டிய தருணம் வந்திருக்கிறது. காங்கிரஸை தி.மு.க.வால் வற்புறுத்த முடியவில்லை. ஜெயலலிதாவாக இருந்திருந்தால் வேறு முடிவு எடுத்திருப்பார். இம்மாதிரியான தேசியக் கூட்டணிகளில் வலுவான மாநிலக் கட்சிகள் பங்கேற்பது அந்தக் கட்சிகளுக்கும் மாநிலத்திற்கும் இழப்பாகத்தான் முடிகிறது. அந்த வகையில் பார்க்கும்போது ஒதிஷாவில் பிஜு ஜனதா தளமும் தெலங்கானாவில் பிஆர்எஸ்சும் எடுத்த முடிவுகள் சரிதான் எனத் தோன்றுகிறது” என்கிறார் ஷ்யாம்.

ஆனால், இன்றைய விவாதத்தில் பா.ஜ.க. வைத்த கருத்துகள் சரியானவையல்ல என்கிறார் அவர். “பா.ஜ.கவும் தமிழ்நாட்டில் ஒரு நிலைப்பாடும் கர்நாடகத்தில் ஒரு நிலைப்பாடும்தான் எடுக்கிறார்கள். காங்கிரசை மட்டும் எப்படி அப்படிச் சொல்ல முடியும்?” என்கிறார் ஷ்யாம்.

காவிரி தொடர்பான இந்தத் தீர்மானம் மக்களின் உணர்வுகளை ஒட்டுமொத்தமாகத் தொகுத்துக் காட்டியிருக்கிறதே தவிர, இதனால் எதுவும் நடக்கப்போவதில்லை என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும் என்கிறார் அவர்.

தமிழ்நாடு சட்டப்பேரவையின் இந்தக் கூட்டத் தொடர் புதன் கிழமையுடன் நிறைவுக்கு வரும் என்று அவையின் அலுவல் ஆய்வுக் குழுக் கூட்டத்திற்குப் பிறகு அறிவிக்கப்பட்டிருக்கிறது. கூட்டத் தொடர் இன்னும் இரு நாட்கள் இருக்கும் நிலையில், இஸ்லாமியக் கைதிகள் விடுதலை உட்பல பல விவகாரங்களை எதிர்க்கட்சியான அ.தி.மு.க. எழுப்பக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Facebook
Facebook
fb-share-icon
Telegram
WhatsApp
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *