நிலவுக்கு விண்கலத்தை அனுப்ப இஸ்ரோவுக்கு உதவியவர்கள் ஊதியம் கிடைக்காமல் டீ விற்கும் அவலம்

நிலவுக்கு விண்கலத்தை அனுப்ப இஸ்ரோவுக்கு உதவியவர்கள் ஊதியம் கிடைக்காமல் டீ விற்கும் அவலம்

டீ, இட்லி விற்கும் அவலம்

பட மூலாதாரம், ANAND DUTT

படக்குறிப்பு,

பொதுத் துறை நிறுவனத்தில் பணியாற்றுபவர்களுக்கு 18 மாதங்களாக ஊதியம் அளிக்கப்படாத காரணத்தால் அவர்கள் இட்லி கடை நடத்தும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

சந்திரயான் -3 விண்கலம் நிலவின் தென் துருவத்தின் மேற்பரப்பில் மெதுவாக தரையிறங்கி நிலவின் தென்துருவத்தில் ஒரு விண்கலத்தை வெற்றிகரமாகத் தரையிறக்கிய முதல் நாடு இந்தியா என்ற சிறப்பை பெற்றது.

சந்திரயான் – 3 நிலவில் தரையிறங்கிய நேரத்தில், பிரதமர் நரேந்திர மோதி தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற பிரிக்ஸ் (BRICS) மாநாட்டில் பங்கேற்பதற்காக அங்கு சென்றிருந்தார். விண்கலம் நிலவில் வெற்றிகரமாகத் தரையிறங்கிய போது, ஜோகன்னஸ்பர்க்கிலிருந்தே அவர் இஸ்ரோ (ISRO) விஞ்ஞானிகள் மற்றும் நாட்டு மக்களிடம் உரையாற்றினார்.

அதே நேரத்தில் பிரதமர் மோதி உரையாற்றிய போது, ​​சந்திரயான் விண்கலத்துக்கான ஏவுதளத்தை உருவாக்கிய ஊழியர்கள், தங்களுக்கு 18 மாதமாக நிலுவையில் உள்ள ஊதியம் கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ராஞ்சியில் இருக்கும் துர்வாவில் உள்ள ஹெவி இன்ஜினியரிங் கார்ப்பரேஷன் லிமிடெட் (எச்இசி) நிறுவனத்தில் பணிபுரியும் 2,800 ஊழியர்களுக்கு கடந்த 18 மாதங்களாக சம்பளம் கிடைக்கவில்லை என்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் கூறுகின்றனர்.

எச்இசி (HEC) ஒரு மத்திய பொதுத்துறை நிறுவனமாகும் (CPSU). 810 டன் ஏவுதளத்தை உருவாக்கியதைத் தவிர, எச்இசி சந்திரயானுக்கான மடிப்பு தளம், நெகிழ் கதவு உள்ளிட்டவற்றையும் உருவாக்கியுள்ளது.

மேலும், இஸ்ரோவுக்காக மற்றொரு ஏவுதளத்தையும் ஹெச்இசி தற்போது உருவாக்கி வருகிறது.

டீ, இட்லி விற்கும் அவலம்

பட மூலாதாரம், ANAND DUTT

படக்குறிப்பு,

2,800 ஊழியர்களுக்கு கடந்த 18 மாதங்களாக சம்பளம் கிடைக்கவில்லை என்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் கூறுகின்றனர்.

ஒருவர் டீ விற்கிறார், மற்றொருவர் இட்லி விற்கிறார்

ஹெச்இசியில் தொழில்நுட்ப வல்லுனராகப் பணியாற்றும் தீபக் குமார் உபராரியா கடந்த சில நாட்களாக இட்லி விற்பனை செய்து வருகிறார்.

இவரது கடை ராஞ்சியில் இருக்கும் துர்வா பகுதியில் உள்ள பழைய சட்ட மன்ற கட்டடத்துக்கு நேர் எதிரில் உள்ளது.

காலையில் இட்லி விற்றுவிட்டு மதியம் அலுவலகம் செல்கிறார். மாலையில் மீண்டும் இட்லிகளை விற்றுவிட்டு வீட்டுக்குச் செல்கிறார்.

தீபக் குமார் உபராரியா பிபிசியிடம் பேசுகையில், “முதலில் நான் கிரெடிட் கார்டு மூலம் எனது வீட்டை நிர்வகித்து வந்தேன். அதில் இருந்து 2 லட்சம் ரூபாய் கடன் அளவை முழுமையாகப் பெற்ற பின், அதைத் திரும்பக் கட்டுவது இயலாமல் போனது. இதனால் நான் கடனைத் திருப்பிச் செலுத்தாதவனாக வங்கியால் அறிவிக்கப்பட்டேன். அதன்பிறகு, உறவினர்களிடம் பணம் வாங்கிக்கொண்டு என் வீட்டை நிர்வகிக்கத் தொடங்கினேன்,” என்றார்.

“இதுவரை நாலு லட்சம் ரூபாய் கடன் வாங்கி இருக்கிறேன். வாங்கிய கடனை திருப்பித் தராததால், அதன் பின் எனக்கு யாரும் கடன் கொடுக்கவில்லை. இதன் காரணமாக, மனைவியின் நகைகளை அடமானம் வைத்து சில நாட்கள் வீட்டை நிர்வகித்தேன்.” என்றார்.

தனது குடும்பத்தின் ஆதரவற்ற நிலையை விளக்கும் தீபக், “நான் பசியால் உயிர் விடுவதைத் தவிற வேறு வழியில்லை என்ற நிலைக்கு வந்த போது, சிறிய அளவில் ஒரு இட்லி கடையைத் திறந்தேன். என் மனைவிக்கு நன்றாக இட்லி செய்யத் தெரியும். இந்தக் கடையில் நான் தினமும் 300 முதல் 400 ரூபாய் வரை இட்லிகளை விற்று வருகிறேன். இதில் சில சமயம் ரூ 50 அல்லது ரூ. 100 லாபம் கிடைக்கும். இதை வைத்துக்கொண்டு எனது குடும்பத்தை நிர்வகித்து வருகிறேன்,” என்றார்.

டீ, இட்லி விற்கும் அவலம்

பட மூலாதாரம், ANAND DUTT

படக்குறிப்பு,

அலுவலகம் செல்லும் முன்பும், அலுவலகத்தில் இருந்து வந்த பின்பும் சிறுசிறு தொழில்களைச் செய்து பணியாளர்கள் குடும்பத்தை நிர்வகித்து வருகின்றனர்.

தீபக் குமார் உபராரியா மத்திய பிரதேச மாநிலம் ஹர்தா மாவட்டத்தைச் சேர்ந்தவர். 2012 ஆம் ஆண்டில், தனியார் நிறுவனத்தில் மாதம் ரூ.25,000 சம்பளத்தில் வேலை செய்துகொண்டிருந்த போது, அந்த வேலையை விட்டுவிட்டு எச்இசி-யில் ரூ.8,000 சம்பளத்தில் வேலைக்குச் சேர்ந்தார். அரசு நிறுவனம் என்பதால் எதிர்காலம் பிரகாசமாக இருக்கும் என்ற நம்பிக்கையில் தான் அவர் அவ்வாறு செய்திருக்கிறார். ஆனால் இப்போது எல்லாமே தலைகீழாக மாறிவிட்டது.

தொடர்ந்து பேசிய அவர், “எனக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இருவரும் பள்ளிக்குச் செல்கிறார்கள். இந்த வருடம் அவர்களுடைய கல்விக் கட்டணத்தை என்னால் இன்னும் கட்ட முடியவில்லை. பள்ளிகளில் இருந்து தினமும் நோட்டீஸ் அனுப்புகின்றனர். குழந்தைகள் படிக்கும் வகுப்பில் கூட எச்இசி-யில் பணியாற்றும் பெற்றோரின் குழந்தைகள் யார் என்று ஆசிரியர் கேட்டு, அவர்களை எழுந்து நிற்கச் சொல்கிறார்,” என்றார்.

“இதற்குப் பிறகு அவர்கள் அவமானப்படுத்தப்படுகிறார்கள். என் மகள்கள் இருவரும் அழுதுகொண்டு வீட்டிற்கு வருகிறார்கள். அவர்கள் அழுவதைப் பார்க்கும் போது, என் இதயம் உடைகிறது. ஆனால் நான் அவர்கள் முன் அழுவதில்லை,” என்று அவர் உருக்கமாகக் கூறினார்.

இதைச் சொல்லும் போதே அவருடைய கண்களில் கண்ணீர் வடிந்தது.

இது தீபக் குமார் உபராரியாவின் நிலை மட்டுமல்ல. அவரைப் போலவே, எச்இசியுடன் தொடர்புடைய வேறு சிலரும் இதேபோன்ற வேலையைச் செய்து தங்கள் வாழ்க்கையை ஓட்டிவருகின்றனர்.

உதாரணமாக, மதுர் குமார் என்பவரை எடுத்துக்கொண்டால், அவர் மோமோஸ் விற்பனை செய்துவருகிறார். பிரசன்னா என்பவர் டீ விற்கிறார். மிதிலேஷ் குமார் ஒளிப்பதிவு செய்கிறார். சுபாஷ் குமார் கார் வாங்குவதற்காக வங்கியில் கடன் பெற்று திரும்பச் செலுத்தாததால், கடன் செலுத்தாதவர் என வங்கி நிர்வாகம் அறிவித்துள்ளது.

சஞ்சய் டிர்கி என்பவருக்கு ரூ.6 லட்சம் கடன் சுமை ஏற்பட்டுள்ளது. பணம் இல்லாத காரணத்தாலும், உரிய சிகிச்சை கிடைக்காததாலும் சசிகுமார் என்பவரின் தாய் உயிரிழந்தார்.

இவர்களைப் போல் மொத்தம் 2,800 பணியாளர்கள் உள்ளனர். ஒரு குடும்பத்தில் சராசரியாக ஐந்து பேரை எடுத்துக் கொண்டாலும், 14,000க்கும் மேற்பட்டோர் நேரடியாக இந்த துயர நிலையில் வாழ்ந்துகொண்டிருக்கின்றனர்.

டீ, இட்லி விற்கும் அவலம்

பட மூலாதாரம், ANAND DUTT

படக்குறிப்பு,

அரசு நிறுவனம் என்பதால் எதிர்காலம் பிரகாசமாக இருக்கும் என நம்பி வேலைக்குச் சேர்ந்தவர்கள் தற்போது பெரும் பொருளாதார சிக்கலில் சிக்கித் தவிக்கின்றனர்.

போராட்டக்காரர்களுக்கு ‘இந்தியா’ கூட்டணியின் ஆதரவு

செப்டம்பர் 14 அன்று, ‘இந்தியா’ கூட்டணி தலைவர்கள் எச்இசி பணியாளர்களின் துயரம் தொடர்பாக ராஜ்பவன் முன் போராட்டம் நடத்தினர்.

இது குறித்து மாநில காங்கிரஸ் தலைவர் ராஜேஷ் தாக்கூர் கூறுகையில், “எச்இசி என்பது பண்டிட் ஜவஹர்லால் நேரு உருவாக்கிய ஒரு நிறுவனம். அந்த நிறுவனம் இது போன்ற ஒரு சூழ்நிலையில் தத்தளிக்கிறது என்பதைக் காட்டிலும், அதைக் காப்பாற்றுவது நமது பொறுப்பு. வியர்வை காய்வதற்குள் தொழிலாளர்களுக்கு சம்பளம் கிடைக்க வேண்டும் என்று போராடி வருகிறோம்,” என்றார்.

காங்கிரஸ் மூத்த தலைவர் சுபோத் காந்த் சஹாய் கூறுகையில், “எச்இசி ஊழியர்களின் குழந்தைகள் பள்ளியிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். கடைக்காரர் அவர்களுக்கு ரேஷன் பொருட்களைத் தருவதில்லை. மத்திய அரசின் கொள்கை எச்இசியின் கழுத்தை நெரித்துவிட்டது. அதை தனியார் முதலாளிகளுக்கு வழங்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இன்று, நிதி ஆயோக் 48 பொதுத்துறை நிறுவனங்களின் பட்டியலை விற்பனைக்கு மத்திய அரசிடம் சமர்ப்பித்துள்ளது,” என்றார்.

ஜார்கண்ட் முக்தி மோர்ச்சாவின் மத்திய பொதுச் செயலாளர் சுப்ரியோ பட்டாச்சார்யா, “நாட்டை வடிவமைக்க உழைத்த தாய் தான் இந்த (எச்இசி) நிறுவனம். அதை தனியார் முதலாளிகளிடம் ஒப்படைக்க மோதி அரசு முடிவு செய்துள்ளது. இந்நிறுவனத்தைக் காப்பாற்றப் போராடுகிறோம்,” என்றார்.

‘எனக்கு ஏன் சம்பளம் கிடைக்கவில்லை?’

மாநிலங்களவை உறுப்பினர் பரிமல் நத்வானி கடந்த மழைக்கால கூட்டத்தொடரில் (ஆகஸ்ட், 2023) கனரக தொழில்துறை அமைச்சகத்திடம் எச்இசி தொடர்பாக சில கேள்விகளைக் கேட்டிருந்தார்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக, எச்இசி என்பது நிறுவனங்கள் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட ஒரு தனி மற்றும் சுதந்திரமான நிறுவனம் என்று அரசு கூறியது. அதன் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க அதன் சொந்த வளங்களை உருவாக்க வேண்டியுள்ளது என்பதுடன் தொடர்ச்சியான நஷ்டங்களால் பெரும் கடன்களை எதிர்கொள்கிறது என்றும் அரசு கூறியது.

இந்த பதிலில், கடந்த ஐந்து ஆண்டுகளாக எச்இசி தொடர்ந்து நஷ்டத்தை சந்தித்து வருவதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதன்படி, 2018-19ஆம் ஆண்டில் ரூ.93.67 கோடியும், 2019-20ஆம் ஆண்டில் ரூ.405.37 கோடியும், 2020-21ஆம் ஆண்டில் ரூ.175.78 கோடியும், 2021-22ஆம் ஆண்டில் ரூ.256.07 கோடியும், 2022-23 ஆம் ஆண்டில் ரூ.283.58 கோடியும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக அரசு கூறியுள்ளது.

அதாவது, கடந்த ஐந்து ஆண்டுகளில் விற்றுமுதல் ரூ.356.21 கோடியில் இருந்து ரூ.87.52 கோடியாக குறைந்துள்ளது. 2018-19 ஆம் ஆண்டில், இந்நிறுவனம் அதன் மொத்த திறனில் 16 சதவீதத்தைப் பயன்படுத்தியிருக்கிறது. அதேசமயம் 2022-23 ஆம் ஆண்டுக்கான தணிக்கை செய்யப்படாத அறிக்கையின்படி, தற்போது இந்நிறுவனம் அதன் மொத்த திறனில் 1.39 சதவீதத்தை மட்டுமே பயன்படுத்தியிருக்கிறது.

ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதற்கு மட்டும் எச்இசிக்கு உடனடியாக சுமார் ரூ.153 கோடி தேவைப்படுகிறது.

எச்இசி அதிகாரிகள் சங்கத்திடம் இருந்து பெறப்பட்ட தகவலின்படி, இந்நிறுவனத்தின் மொத்த கடன் சுமை சுமார் ரூ.2,000 கோடியாக உள்ளது.

டீ, இட்லி விற்கும் அவலம்

பட மூலாதாரம், ANAND DUTT

படக்குறிப்பு,

நவீனமயமாக்கப்படாததாலேயே எச்இசி நிறுவனம் தொடர்ந்து நஷ்டத்தில் இயங்குவதாக அங்கு பணியாற்றுபவர்கள் தெரிவிக்கின்றனர்.

எல்லாவற்றிற்கும் மேலாக, ஏன் எச்இசி தொடர்ந்து நஷ்டத்தில் இயங்குகிறது?

எச்இசி அதிகாரிகள் சங்கத் தலைவர் பிரேம்சங்கர் பாஸ்வான் கூறுகையில், கடந்த நான்கு ஆண்டுகளாக நிரந்தர நிர்வாக இயக்குனர் (சிஎம்டி) நியமிக்கப்படவில்லை என்றும், தயாரிப்பு துறைக்கான இயக்குனர் நியமிக்கப்படவில்லை என்றும், இயந்திரங்கள் நவீனப்படுத்தப்படவில்லை என்றும் தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து பேசிய போது, ”நிரந்தர தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் (சி.எம்.டி.,) இல்லாததால், கோப்புகள் பல மாதங்களாக சுற்றி வருகின்றன. தற்போதைய எங்கள் பொறுப்பு நிர்வாக இயக்குனர் நளின் சிங்கால் முதன்மையாக பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட் (BHEL) இன் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் ஆவார். அவர் எச்இசிக்கு கடந்த நான்கு ஆண்டுகளில் நான்கு முறை மட்டுமே வந்துள்ளார். பிறகு எப்படி நிர்வாகம் சரியாக நடக்கும்?” எனக் கேட்கிறார்.

பிரேம்சங்கர் தொடர்ந்து பேசிய போது, “ஹெவி மெஷின் பில்டிங் பிளாண்ட் (HMBP), ஹெவி மெஷின் டூல்ஸ் பிளாண்ட் (HMTP), ஃபவுண்டரி ஃபோர்ஜ் ஆலை (FFP) மற்றும் திட்டப் பிரிவு ஆகிய மூன்று ஆலைகள் உள்ளன. உற்பத்தித் துறை இயக்குனர்களாக இருப்பவர்கள் மூன்று ஆலைகளில் பெறப்பட்ட ஆர்டர்கள் மற்றும் வேலைகளை ஒருங்கிணைக்கிறார்கள்,” என்றார்.

அதாவது இயக்குனர் மட்டத்தில் செய்ய வேண்டிய வேலைகளுக்கு நிர்வாக இயக்குனரிடம் போக வேண்டிய நிலை காணப்படுகிறது. இதுவே உற்பத்தி பாதிக்கப்படுவதற்கு முக்கிய காரணம் என்கிறார்.

டீ, இட்லி விற்கும் அவலம்

பட மூலாதாரம், ANAND DUTT

படக்குறிப்பு,

புதிய தொழில்நுட்பத்தின்படி தயாரிப்பைத் தொடங்கினால் தான் லாபகரமாகச் செயல்படமுடியும் என எச்இசி மஸ்தூர் யூனியனின் பொதுச் செயலாளர் ராமசங்கர் பிரசாத் கூறுகிறார்.

நவீன இயந்திரங்கள் இல்லாததே பெரும் பிரச்னை

பிரேம்சங்கர் மேலும் பேசிய போது, “எச்இசி நிறுவனத்தில் 6,000 டன் ஹைட்ராலிக் பிரஸ் இருக்கிறது. ஆனால், அது மோசமான நிலையில் உள்ளது. இந்த பிரஸ்ஸில் தான் பாதுகாப்புத் துறைக்கான உபகரணங்கள் தயாரிக்கப்படுகின்றன. பாபா அணு ஆராய்ச்சி மையத்திடம் (BARC) தற்போது அணு உலைக்கான ஆர்டருக்கு 300 கோடி ரூபாய் மதிப்பிலான ஆர்டரைப் பெற்றுள்ளது. இப்போது இந்த ஆர்டரை தனியார் நிறுவனமான எல் அண்ட் டி நிறுவனத்திடம் கொடுத்துள்ளோம். எங்கள் ஹைட்ராலிக் பிரஸ் நன்றாக இருந்திருந்தால், எல் அண்ட் டிக்கு ஆர்டரை வழங்க வேண்டிய அவசியமில்லை, நாங்கள் லாபகரமாக இருந்திருப்போம்,” என்றார்.

எச்இசி மஸ்தூர் யூனியனின் பொதுச் செயலாளர் ராமசங்கர் பிரசாத், இதற்குப் பின்னால் உள்ள மற்றொரு காரணத்தைச் சுட்டிக்காட்டினார், “நிறுவனம் மிகக் குறைவான மொத்த ஆர்டர்களைக் கொண்டுள்ளது. உதாரணமாக, ஒரு ஏவுதளத்தை உருவாக்க வேண்டும் என்றால், ஒன்று மட்டுமே கட்டப்படும். அதேசமயம் ஒன்றுக்கு மேல் சம்பாதித்தால் லாபம் அதிகமாக இருக்கும். ஏனெனில் அதே அளவு பணத்திற்கு ஒரு உபகரணத்தை தயார் செய்யலாம். சற்றே அதிக செலவில் அதிக உபகரணங்களை தயார் செய்யலாம்,” என்றார்.

“ஒரு சாதனத்திற்காக நாம் தயாரிக்கும் அச்சு பத்து ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பயன்படுத்தப்படுகிறது. அந்த நேரத்தில் அந்த அச்சும் கெட்டுவிடும். இதைத் தவிர, ஐம்பது வருடங்களாக வேலை செய்யும் அதே இயந்திரத்தில் வேலை செய்ய முடியுமா? இல்லை என்பதே பதில். புதிய தொழில்நுட்பத்தின்படி தயாரிப்பைத் தொடங்கினால் தான் லாபகரமாகச் செயல்படமுடியும்,” என்றார்.

டீ, இட்லி விற்கும் அவலம்

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு,

சந்திரயான் விண்கலங்களை நிலவுக்கு அனுப்பியதில் எச்இசி நிறுவனத்தின் உதவி பெரும் அளவில் பயன் அளித்துள்ளது.

ராமசங்கர் பிரசாத் தொடர்ந்து பேசிய போது, “31 டிசம்பர் 1958 இல் நிறுவப்பட்ட நேரத்தில், சோவியத் ரஷ்யா மற்றும் செக்கோஸ்லோவாக்கியாவின் ஒத்துழைப்புடன் எச்இசி தயாரிக்கப்பட்டது. அப்போது நிறுவப்பட்ட இயந்திரங்கள் இன்று வரை மாற்றப்படவில்லை என்பது மட்டுமல்லாமல், மாறிவரும் தொழில்நுட்பத்திற்கு ஏற்ப தயாரிக்கப்படவில்லை,” என்றார்.

அதிகாரிகள் சங்கத்தின் பிரதிநிதிகள், கனரக தொழில்துறை அமைச்சர் மகேந்திர நாத் பாண்டேவை 2023 பிப்ரவரி 7ஆம் தேதியும், மீண்டும் ஜூன் 26ஆம் தேதியும் சந்தித்தனர். இந்த சந்திப்பின் போது, ​​நிறுவனத்தை மீண்டும் லாபநோக்கில் செயல்படும் விதமாகக் கொண்டு வர நிரந்தர தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் இயக்குனர்களை நியமிப்பது மட்டுமின்றி கூடுதலாக 3000 கோடி ரூபாய் மானியமாக அரசு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதற்கான முயற்சிகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது என மத்திய அமைச்சர் உறுதி அளித்ததாக சங்கம் தெரிவித்துள்ளது.

பிரதமர் மோதி அப்பதவிக்கு வருவதற்கு முன், எச்இசி தொழிற்சாலையை விரிவுபடுத்த வேண்டும் என்று கடுமையாக வாதிட்டார்.

2013ஆம் ஆண்டு தேர்தல் பிரசாரத்தின் போது ராஞ்சியில் உள்ள பிரபாத் தாரா மைதானத்தில் பிரதமர் மோதி பேசுகையில், “ஒரு காலத்தில் பெருமையுடன் இருந்த எச்இசி தொழிற்சாலை இப்போது அந்த நிலையில் இல்லை,” எனப்பேசினார்.

அவர் தனது உரையில், “இந்தியாவில் உருவாகும் பொதுத்துறை நிறுவனங்கள் விரைவில் தடுமாறி வீழ்ச்சியடைகின்றன. ஒன்று அதை விற்க வேண்டிய அவசியம் உள்ளது. அல்லது அதை மூடவேண்டிய தேவை ஏற்படுகிறது. இது போன்ற நிலையில், அந்நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள் வேலையை இழக்கும் நிலை ஏற்படுகிறது,” என்றார்.

டீ, இட்லி விற்கும் அவலம்

பட மூலாதாரம், ANAND DUTT

படக்குறிப்பு,

நிர்வாக இயக்குனர் உள்ளிட்ட பல பணிகள் நிரப்பப்படாமல் இருப்பது நிறுவனத்தின் முன்னேற்றத்தில் பெரும் பின்னடைவை ஏற்படுத்துவதாக எச்இசி பணியாளர்கள் கூறுகின்றனர்.

‘சந்திரயான்-3யில் எச்இசி பங்களிப்பு இல்லை’

ராஜ்யசபா எம்பி பரிமல் நத்வானி, சந்திரயான்-3க்கான ஏவுதளம் மற்றும் பிற உபகரணங்களை உருவாக்க எச்இசிக்கு அங்கீகாரம் உள்ளதா என்றும் மத்திய அரசிடம் கேட்டிருந்தார்.

இதற்கு பதிலளித்த கனரக தொழில்துறை இணையமைச்சர் கிருஷ்ணபால் குர்ஜார், சந்திரயான்-3க்கான எந்த உபகரணத்தையும் தயாரிக்க எச்இசிக்கு அதிகாரம் இல்லை என்று கூறினார்.

இருப்பினும், 2003 மற்றும் 2010 ஆம் ஆண்டுகளுக்கு இடையில், எச்இசி மொபைல் லாஞ்சிங் பெடஸ்டல், ஹாமர் ஹெட் டவர் கிரேன், ஈஓடி கிரேன், ஃபோல்டிங் கம் ரிபொஸிஸனபிள் பிளாட்ஃபார்ம், ஹொரிசாண்டல் ஸ்லைடிங் டோர்ஸ் போன்றவற்றை இஸ்ரோவுக்கு வழங்கியதாக அவர் தனது பதிலில் ஒப்புக்கொண்டார்.

எச்இசியில் மேலாளராகப் பணிபுரியும் புரேந்து தத் மிஸ்ரா கூறுகையில், “சந்திரயான்-3க்கு தனி ஏவுதளம் எதுவும் உருவாக்கப்படாததால் தொழில்நுட்ப ரீதியாக மத்திய அரசு சரியாக இருக்கலாம். ஆனால் உண்மை என்னவென்றால், எங்களைத் தவிர, இந்தியாவில் வேறு எந்த நிறுவனமும் ஏவுதளங்களை உருவாக்கவில்லை,” என்றார்.

“வெளிப்படையாக, நாங்கள் முன்பு தயாரித்து இஸ்ரோவுக்கு வழங்கிய ஏவுதளம் மற்றும் பிற உபகரணங்கள் சந்திரயான் -2 மற்றும் சந்திரயான் -3 ஐ விண்ணில் செலுத்த பயன்படுத்தப்பட்டுள்ளன. இத்தகைய சூழ்நிலையில், இந்த பணியில் எச்இசியின் பங்களிப்பு இல்லை என்று அரசாங்கம் கூறினால், அது எப்படி?” எனக்கேட்கிறார் அவர்.

இந்த நேரத்தில், விண்கலங்கள் ஏவப்பட்ட போது, எச்இசியின் இரண்டு பொறியாளர்ள் இஸ்ரோவுக்கு எச்இசி வழங்கிய உபகரணங்களை நிறுவச் சென்றனர் என்றும் அவர் கூறுகிறார்.

டீ, இட்லி விற்கும் அவலம்

பட மூலாதாரம், ANAND DUTT

படக்குறிப்பு,

அரசு உதவினால் மட்டுமே எச்இசி நிறுவனம் அடுத்த கட்டத்தை நோக்கி நகர முடியும் என தொழிற்சங்கப் பிரதிநிதிகள் கூறுகின்றனர்.

அரசு ஏன் உதவவில்லை?

இந்த நிறுவனத்தை காப்பாற்றி முன்னேற்றுவதற்கு மத்திய அரசால் சில நூறு கோடி ரூபாய் மட்டும் உதவ முடியாதா?

இதுகுறித்து ராஞ்சி பாஜக எம்பி சஞ்சய் சேத் கூறுகையில், கனரக தொழில்துறை அமைச்சகத்திடம் தொடர்ந்து இந்த பிரச்னையை எழுப்பி வருவதாகத் தெரிவித்தார்.

பிபிசியிடம் பேசிய அவர், “இந்தப் பிரச்னையை சம்பந்தப்பட்ட அமைச்சகத்தின் அமைச்சரிடம் பலமுறை எழுப்பியுள்ளேன். பிரகாஷ் ஜவடேகர், அர்ஜூன் ராம் மேக்வால், மகேந்திர நாத் பாண்டே ஆகியோர் அமைச்சராக இருந்த போதெல்லாம் அவர்களை சந்தித்து இது தொடர்பாகப் பேசினேன்,” என்றார்.

ஜூலை 19, 2022 அன்று, சஞ்சய் சேத் மக்களவையில் எச்இசியை சீராக மறுதொடக்கம் செய்ய மத்திய அரசு என்ன திட்டம் வைத்துள்ளது என்று கேட்டிருந்தார்.

இதற்கு பதில் அளித்த அரசு, இதற்கான திட்டம் ஏதும் இல்லை என்று தெளிவாக கூறியிருந்தது.

எச்இசி பிரச்னைகளில் குரல் கொடுக்கும் முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் தலைவருமான சுபோத்காந்த் சஹாய், துறை அமைச்சர் மகேந்திர நாத் பாண்டேவை மூன்று முறை சந்தித்ததாகவும் ஆனால் எந்த உதவியும் கிடைக்கவில்லை என்றும் பிபிசியிடம் கூறுகிறார்.

சுபோத் காந்த் சஹய் கூறுகையில், “எச்இசி மூடப்பட்டால் யாரும் ஜார்கண்டில் முதலீடு செய்ய வர மாட்டார்கள். பிரதமர் மோடி எச்இசிக்கு உதவவில்லை. இதுபோன்ற சூழ்நிலையில், மாநிலத்தின் அடையாளத்தை காப்பாற்ற அவர் முன்வர வேண்டும் என்று முதல்வர் ஹேமந்த் சோரனிடம் கேட்டுக்கொள்கிறேன்,” என்றார்.

எச்இசி ஏன் முக்கியமானது?

இந்நிறுவனம் தற்போது ரூ.1,356 கோடி மதிப்பிலான ஒர்க் ஆர்டரை வைத்துள்ளது. அதன் வாடிக்கையாளர்களில் ISRO, BARC, DRDO உட்பட நாட்டின் பல பெரிய அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்கள் அடங்கும். ஆனால், போதிய மூலதனம் இல்லாததால் இவற்றிற்கான பணிகள் முடிக்கப்படாமல் உள்ளன.

நம் சாதனைகளைப் பார்த்தால், எச்இசி ஒரு சூப்பர் கண்டக்டிங் சைக்ளோட்ரானை உருவாக்கியுள்ளது. இவை அணு மற்றும் எரிசக்தித் துறை தொடர்பான ஆராய்ச்சியில் பயன்படுத்தப்படுகின்றன.

இவை தவிர, போர்க்கப்பல்களில் பயன்படுத்தப்படும் உயர் தாக்க எஃகு அமைப்புகளைத் தயாரிக்கும் தொழில்நுட்பத்தையும் கொண்டுள்ளது. ஐஎன்எஸ் விக்ராந்தின் கட்டுமானத்தில் பயன்படுத்தப்படும் ஏபிஏ தர எஃகு மற்றும் நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷன் இந்தியா லிமிடெட் நிறுவனத்திற்காக குறைந்த அலாய் ஸ்டீல் போர்ஜிங் செய்யும் இயந்திரம் ஆகியவற்றை இந்நிறுவனம் தான் உருவாக்கியது.

இதுமட்டுமின்றி, இஸ்ரோவுக்காக சிறப்பு தர மென்மையான ஸ்டீல் தயாரிக்கப்பட்டுள்ளது. பிஎஸ்எல்வி மற்றும் ஜிஎஸ்எல்வி ராக்கெட்டுகளை ஏவும் பணிகளுக்கு உதவும் ஆறு அச்சு சிஎன்சி இயந்திரமும் இங்குதான் தயாரிக்கப்பட்டுள்ளது.

இது தவிர, 105 மிமீ துப்பாக்கி, டி72 டேங்கின் கோபுர வார்ப்பு, இந்தியன் மவுண்டன் கன் மார்க்-2, அர்ஜூன் பிரதான போர் டாங்கியின் கவச எஃகு வார்ப்புகள் ஆகியவை பாதுகாப்புத் துறையில் தயாரிக்கப்பட்டுள்ளன.

இந்திய கடற்படையின் நீர்மூழ்கிக் கப்பல்களுக்கான ப்ரொப்பல்லர் ஷாஃப்ட் அசெம்பிளி, ரேடார் ஸ்டாக் அசெம்பிளி மற்றும் மெரைன் டீசல் என்ஜின் பிளாக் ஆகியவை எச்இசியால் தயாரிக்கப்படுகின்றன. மேலும் இந்திய கடற்படைக் கப்பல் ராணாவுக்கான ஸ்டெர்ன் கியர் அமைப்பின் PYB எந்திரம், 120 மிமீ துப்பாக்கி போன்றவையும் இங்கு தான் தயார் செய்யப்பட்டன.

அணுசக்தி தர எஃகு தயாரிப்பதன் மூலம், எச்இசி, அத்தகைய தொழில்நுட்பத்தைக் கொண்ட உலகின் ஆறு நாடுகளில் இந்தியாவை இடம்பெறச் செய்துள்ளது.

எச்இசி என்பது ஒரு தொழில்துறை அமைப்பாகக் கருதப்படுகிறது. அதாவது மற்ற தொழில்களுக்கு தேவையான கனரக இயந்திரங்களும் இங்கு உற்பத்தி செய்யப்பட்டுள்ளன.

இந்நிறுவனம் நடைமுறைக்கு வந்ததிலிருந்து, எச்இசி நாட்டின் பல்வேறு தொழில் நிறுவனங்களுக்கு 550 ஆயிரம் டன்களுக்கும் அதிகமான உபகரணங்களை தயாரித்து வழங்கியுள்ளது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Facebook
Facebook
fb-share-icon
Telegram
WhatsApp
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *