ஆதித்யா எல்1: சூரியனை நோக்கி 1% தூரத்துக்கு செல்வதை இஸ்ரோ சாதனையாகக் கருதுவது ஏன்?

ஆதித்யா எல்1: சூரியனை நோக்கி 1% தூரத்துக்கு செல்வதை இஸ்ரோ சாதனையாகக் கருதுவது ஏன்?

ADITYA

பட மூலாதாரம், ISRO

நிலவின் தென் துருவத்திற்கு அருகே விண்கலம் ஒன்றை வெற்றிகரமாகத் தரையிறக்கிய முதல் நாடு என்ற பெருமையைப் பெற்ற ஒரு வாரத்திற்குப் பிறகு, இந்தியா சூரியனை நோக்கிச் செல்லத் தயாராக உள்ளது.

பூமிக்கு மிக அருகில் உள்ள நட்சத்திரமான சூரியனைக் கண்காணிக்கவும் சூரியக் காற்று (solar wind) போன்ற விண்வெளி வானிலை அம்சங்களை ஆய்வு செய்யவும் இந்தியாவின் முதல் விண்வெளி ஆய்வகத்தை தொடங்குவதே இந்தத் திட்டம்.

சூரியன் ஆய்வு செய்யப்படுவது இது முறை அல்ல. நாசா மற்றும் ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் (ESA) ஏற்கனவே இந்த நோக்கத்திற்காக ஆர்பிட்டர்களை வைத்துள்ளது. ஆனால் இந்தியாவின் திட்டம் சில தனித்துவமான அம்சங்களைக் கொண்டுள்ளது.

ஆதித்யா-எல்1 என்றால் என்ன? இதைப்பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும் இங்கே தரப்பட்டுள்ளன.

சூரியன், ஆதித்யா-எல்1, இஸ்ரோ

பட மூலாதாரம், ISRO

படக்குறிப்பு,

ஆதித்யா என்றால் சமஸ்கிருதம் மற்றும் ஹிந்தியில் சூரியன் என்று பொருள்.

ஆதித்யா-எல்1 எப்போது விண்ணில் ஏவப்படும்?

ஆதித்யா என்றால் சமஸ்கிருதம் மற்றும் ஹிந்தியில் சூரியன் என்று பொருள்.

அனைத்தும் திட்டமிட்டபடி சென்றால், செப்டம்பர் 2-ஆம் தேதி சனிக்கிழமை காலை 11:50 மணிக்கு சென்னைக்கு வடக்கே 100கி.மீ. தொலைவில் உள்ள ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இந்தியாவின் முக்கிய விண்வெளி நிலையத்திலிருந்து விண்கலம் புறப்படும்.

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) வெளியிட்டுள்ள படங்கள், விண்கலத்தை சுமந்து செல்லும் ராக்கெட் ஏவுதளத்தில் முழுமையாக இணைக்கப்பட்டிருப்பதைக் காட்டுகிறது.

சூரியன், ஆதித்யா-எல்1, இஸ்ரோ
படக்குறிப்பு,

இந்த விண்கலம் மொத்தம் ஏழு பேலோடுகளை சுமந்து செல்லும்.

ஆதித்யா சூரியனை அடைய எவ்வளவு நேரம் ஆகும்?

உண்மையில், இந்த விண்கலம் சூரியனைச் ‘சென்று அடையாது’.

இதன் இலக்கு பூமியிலிருந்து 15லட்சம் கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இது பூமிக்கும் சந்திரனுக்கும் இடையிலான தூரத்தை விட கிட்டத்தட்ட நான்கு மடங்கு அதிகம். ஆனால் 15 கோடி கிலோமீட்டர் தொலைவில் உள்ள சூரியனுக்கான தூரத்தில் ஒரு சிறிய பகுதியே (1%).

ஒப்பிடுகையில், நாசாவின் பார்க்கர் விண்கலம், ஒரு வாரத்திற்கு முன்பு வெள்ளிக் கிரகத்தைக் கடந்தது. இது இறுதியில் சூரியனின் மேற்பரப்பில் இருந்து 61 லட்சம் கிலோமீட்டர் தொலைவில் பறக்கும்.

ஆதித்யா-எல்1 அதன் இலக்கை அடைய சிலகாலம் ஆகும்.

“ஏவியதில் இருந்து எல்-1 (லாக்ரேஞ்ச் பாயிண்ட்) வரையிலான மொத்த பயணத்திற்கு ஆதித்யா-எல்1க்கு சுமார் நான்கு மாதங்கள் ஆகும்,” என்று இஸ்ரோ, தனது எக்ஸ் பக்கத்தில் (முன்னர் ட்விட்டர்) ஒரு பதிவில் தெரிவித்துள்ளது.

லக்ராஞ்ஜ் புள்ளி என்றால் என்ன?

ஆதித்யா திட்டத்தின் பெயரில் உள்ள ‘L1’ என்பது ‘லக்ராஞ்ஜ்’ புள்ளியைக் குறிக்கிறது.

இது சூரியன் மற்றும் பூமி போன்ற இரண்டு பெரிய கோள்களின் ஈர்ப்பு விசைகள் சமநிலையில் இருக்கும் புள்ளி. இங்கு ஒரு விண்கலம் குறைவான எரிபொருளைப் பயன்படுத்தி சமநிலையில் இருக்க முடியும்.

18 ஆம் நூற்றாண்டில் முதன்முதலில் இதனை ஆய்வு செய்த பிரெஞ்சு கணிதவியலாளர் ஜோசப்-லூயி லக்ராஞ்ஜின் பெயரில் இது அழைக்கப்படுகிறது.

சூரியன், ஆதித்யா-எல்1, இஸ்ரோ

பட மூலாதாரம், NASA/WMAP SCIENCE TEAM

படக்குறிப்பு,

இது சூரியன் மற்றும் பூமி போன்ற இரண்டு பெரிய கோள்களின் ஈர்ப்பு விசைகள் சமநிலையில் இருக்கும் புள்ளி

ஆதித்யா-எல்1 மிஷனின் குறிக்கோள் என்ன?

இந்த விண்கலம் மொத்தம் ஏழு உபகரணங்களைச் சுமந்து செல்லும். ஃபோட்டோஸ்பியர் மற்றும் குரோமோஸ்பியர் என அறியப்படும் சூரியனின் வெளிப்புற அடுக்குகளை, மின்காந்த மற்றும் துகள் புலங்களைக் கண்டறியும் கருவிகளைப் பயன்படுத்திக் கண்காணிக்கும்.

இது விண்வெளி வானிலையை நிர்வகிக்கும் காரணங்களை ஆராயும். எடுத்துக்காட்டாக, சூரியக் காற்றின் இயக்கவியலைப் பற்றி நன்றாகப் புரிந்துகொள்ள முயற்சிக்கும்.

அதன் சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டவுடன், இந்த விண்கலம் ‘தடங்கல இல்லாமல் சூரியனைப் பார்க்க’ வேண்டும்.

“இது சூரியச் செயல்பாடுகள் மற்றும் விண்வெளி வானிலையில் அதன் தாக்கத்தை கவனிக்க உதவும்,” என்று இஸ்ரோ கூறியிருக்கிறது.

நமது வளிமண்டலத்தால் தடுத்து நிறுத்தப்படும் கதிர்வீச்சையும் இது ஆய்வு செய்யும். இதனை பூமியிலிருந்து ஆய்வு செய்ய முடியாது.

அதன் இடத்திலிருந்து விண்கலத்தின் நான்கு பேலோடுகள் சூரியனை நேரடியாகப் பார்க்கும். மீதமுள்ள மூன்று பேலோடுகள் லாக்ராஞ்ஜ் பாயிண்ட் L1-இல் உள்ள துகள்கள் மற்றும் புலங்களை அந்த இடத்திலேயே ஆய்வு செய்யும். இது கிரகங்களுக்கு இடையிலான விண்வெளியில் சூரிய இயக்கவியலின் விளைவு பற்றிய முக்கியமான தகவல்களை நமக்கு வழங்கும்.

சூரியனின் இயற்பியல் செயல்பாடுகள் மற்றும் அவற்றின் பண்புகள், விண்வெளி வானிலையின் இயக்கவியல் போன்ற சூரிய அம்சங்களைப் புரிந்துகொள்ள உதவும் முக்கியமான தகவல்களை இந்த விண்கலம் வழங்கும் என்று இஸ்ரோ நம்புகிறது.

சூரியன், ஆதித்யா-எல்1, இஸ்ரோ
படக்குறிப்பு,

ஆதித்யா விண்கலம் ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக விண்வெளியில் இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது

ஆதித்யா-எல்1 திட்டத்துக்கான செலவு என்ன?

இந்திய அரசாங்கம் 2019-இல் சுமார் 380 கோடி ரூபாய் செலவில் இந்தத் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தது.

இஸ்ரோ இந்தத் திட்டத்திற்கான உண்மையான செலவின் விவரங்களை இன்னும் வெளியிடவில்லை. மேலும் இந்த விண்கலம் ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக விண்வெளியில் இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இஸ்ரோ விண்வெளியில் ஆழமாகச் செய்ய வேண்டியப் பயணங்களுக்கு குறைந்த சக்தி வாய்ந்த ராக்கெட்டுகளைப் பயன்படுத்துகிறது. மேலும், அதிக தூரம் பயணிக்க ஈர்ப்பு விசையைப் பயன்படுத்துகிறது. இது சந்திரன் மற்றும் செவ்வாய் போன்ற இடங்களை அடைய எடுக்கும் நேரத்தை அதிகரிக்கிறது, ஆனால் இது கனரக ராக்கெட்டுகளுக்கு ஆகும் செலவைக் கணிசமாகக் குறைக்கிறது.

இஸ்ரோ ஒப்பீட்டளவில் குறைவான பட்ஜெட்டில் இயங்கி, சமீபத்திய காலங்களில் பெரிய வெற்றிகளை அடைந்திருக்கிறது.

ஆளில்லா விண்கலமான சந்திரயான்-3, கடந்த வாரம் நிலவின் மேற்பரப்பில் தரையிறங்கியபோது, அமெரிக்கா, ரஷ்யா, மற்றும் சீனாவுக்குப் பிறகு நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கிய நான்காவது நாடாக இந்தியா ஆனது.

2014-ஆம் ஆண்டில், செவ்வாய் கிரகத்தின் சுற்றுப்பாதையில் ஒரு விண்கலத்தைச் செலுத்திய முதல் ஆசிய நாடு என்ற பெருமையை இந்தியா அடைந்தது.

அடுத்த ஆண்டுக்குள் பூமியின் சுற்றுப்பாதையில் மனிதர்களை அனுப்பும் மூன்று-நாள் திட்டத்தைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Facebook
Facebook
fb-share-icon
Telegram
WhatsApp
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *