இஸ்ரேல் – ஹமாஸ் மோதலில் இஸ்லாமிய நாடுகள் ஒன்றிணைய முடியாதது ஏன்?

இஸ்ரேல் - ஹமாஸ் மோதலில் இஸ்லாமிய நாடுகள் ஒன்றிணைய முடியாதது ஏன்?

இஸ்ரேல் - ஹமாஸ் மோதல்

பட மூலாதாரம், Getty Images

இஸ்ரேலுக்கும் பாலத்தீனர்களுக்கும் இடையே பலமுறை போர் வெடித்துள்ளது. பாலத்தீனர்களின் சொந்த நாடு என்ற எதிர்பார்ப்பு இஸ்ரேல் பிறந்ததில் இருந்தே நீடித்து வருகிறது. ஆனால் காலப்போக்கில், தீர்வு காண்பதற்கு பதிலாக, நிலைமை தொடர்ந்து மிகவும் சிக்கலாகி வருகிறது.

இஸ்ரேலுக்கு எதிராக அரபு இஸ்லாமிய நாடுகள் குறைந்தபட்சம் தங்களுடன் நிற்கும் என்று பாலத்தீனர்கள் நம்புகிறார்கள். ஆனால் ஒவ்வொருவருக்கும் அவரவர் சொந்த நலன்கள் உள்ளன, ஒவ்வொருவரும் அதற்கேற்ப செயல்படுகிறார்கள்.

ஐக்கிய அரபு அமீரகம், மொராக்கோ, பஹ்ரைன் மற்றும் சூடான் ஆகியவை இஸ்ரேலை அங்கீகரித்து, ஆபிரகாம் உடன்படிக்கையின் மூலம் முறையான உறவுகளை உருவாக்கியபோது, ​​துருக்கி அதிபர் ரெசெப் தையிப் எர்துவான் எதிர்ப்பு தெரிவித்தார். இருப்பினும் துருக்கி இஸ்ரேலுடன் தூதரக உறவுகளைக் கொண்டிருந்தது.

துருக்கியும் இஸ்ரேலும் 1949 முதல் தூதரக உறவுகளைக் கொண்டுள்ளன. இஸ்ரேலை அங்கீகரித்த முதல் முஸ்லீம் பெரும்பான்மை நாடு துருக்கிதான்.

2005 ஆம் ஆண்டில், எர்துவான் ஒரு பெரிய வணிகக் குழுவுடன் இரண்டு நாள் பயணமாக இஸ்ரேலுக்குச் சென்றிருந்தார்.

இந்த சுற்றுப்பயணத்தின் போது, ​​அப்போதைய இஸ்ரேல் பிரதமர் ஏரியல் ஷரோனை சந்தித்து பேசிய அவர், இரானின் அணுசக்தி திட்டம் இஸ்ரேலுக்கு மட்டுமின்றி, முழு உலகிற்கும் அச்சுறுத்தலாக உள்ளது என்றார்.

2010ஆம் ஆண்டு மாவி மர்மர் சம்பவத்துக்குப் பிறகு இரு நாடுகளுக்கும் இடையே கசப்பு ஏற்பட்டது. இந்தச் சம்பவத்தில், துருக்கியைச் சேர்ந்த கப்பலுக்குள் நுழைந்த இஸ்ரேலிய கமாண்டோக்கள், அதில் இருந்த 10 பேரைக் கொலை செய்தனர்.

இருப்பினும், இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தக உறவு தொடர்ந்து நீடித்து வருகிறது. 2019 ஆம் ஆண்டில், இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு வர்த்தகம் 6 பில்லியன் டாலருக்கும் அதிகமாக இருந்தது.

இஸ்ரேல் பிரச்னையில் துருக்கியின் நடவடிக்கைகள் அதன் தேசிய நலன்கள் எந்த அளவிற்கு பாதிக்கப்படவில்லை என்பதைப் பொறுத்தே அமையும்.

ஹமாஸ் தாக்குதலுக்கு முன்னதாகவே எர்துவான் இஸ்ரேலுக்கு செல்லவிருந்தார்.

சௌதி அரேபியாவும் பாலத்தீனர்களின் உரிமைகளைப் பற்றி வெளிப்படையாகப் பேசுகிறது, ஆனால் அந்த நாடும் மேற்கு உலக நாடுகளை கோபப்படுத்தும் அளவுக்கு எதையும் செய்வதில்லை.

இஸ்ரேல் மற்றும் காஸாவில் தற்போது நடைபெற்று வரும் போர் நடவடிக்கைகளுக்கு ஹமாஸ் தான் பொறுப்பு என்று ஐக்கிய அரபு அமீரகம் தெரிவித்துள்ளது. இரான் வெளிப்படையாக ஹமாஸை ஆதரிக்கிறது என்பதுடன் நேரடியாக இஸ்ரேல் மீது குற்றம் சுமத்துகிறது. இரானுக்கு அதன் சொந்த நலன்களின் சமன்பாடு உள்ளது என்பதால் அது அதற்கேற்ப செயல்படுகிறது.

இஸ்ரேல் தாக்குதல் சம்பவம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

இஸ்லாமிய நாடுகள் ஒன்றுக்கொன்று முரணான தேவைகளைக் கொண்டிருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

ஹமாஸ் அமைப்பு தொடர்பாக நிலவும் முரண்பாடுகள்

சௌதி அரேபியாவுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான உறவுகளும் ஏற்ற தாழ்வுகள் நிறைந்தவையாகவே உள்ளன. இருப்பினும் 1980களில் உருவானதில் இருந்து, ஹமாஸ் அமைப்புக்கும், சௌதி அரேபியாவுக்கும் இடையே பெரும்பாலும் நல்லுறவு நீடித்து வந்திருக்கிறது.

2019 ஆம் ஆண்டில், ஹமாஸ் ஆதரவாளர்கள் பலர் சௌதி அரேபியாவில் கைது செய்யப்பட்டனர். இதற்கு ஹமாஸ், சௌதி அரேபியாவுக்கு எதிராக கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருந்தது. சௌதி அரேபியாவில் தனது ஆதரவாளர்கள் சித்திரவதை செய்யப்படுவதாகவும் ஹமாஸ் குற்றம் சாட்டியிருந்தது. 2000ஆம் ஆண்டுகளில் ஹமாஸ் இரானுடன் தனது உறவை நெருக்கமாக வளர்த்தது.

ஹமாஸ் ஒரு சன்னி இஸ்லாமிய அமைப்பு. இரான் ஒரு ஷியா முஸ்லீம் நாடு. ஆனால் அவர்களின் நெருக்கம் இஸ்லாமிய அரசியலை மையப்படுத்தியே உள்ளது. இரானுடன் நெருக்கமாக இருந்தும் ஹமாஸுக்கு எந்தப் பயனும் இல்லை என்கிறார் அஹ்மத்.

இரானுக்கு அருகாமையில் இருப்பதால், சௌதி அரேபியாவிலிருந்து ஹமாஸ் ஒரு இடைவெளியைக் கொண்டிருக்கவேண்டிய நிலை ஏற்பட்டது. ஏற்கெனவே சௌதி அரேபியாவிற்கும் இரானுக்கும் இடையே பகையுணர்வு தொடர்ந்து வருகிறது என்பதால் ஹமாஸ் யாரோ ஒருவருடன் மட்டுமே நெருக்கமாக இருக்க முடியும்.

மத்திய கிழக்கு பகுதியில் இரானைப் போல வெளிப்படையாக யாரும் இஸ்ரேலை எதிர்ப்பதில்லை. இது போன்ற சூழ்நிலையில், ஹமாஸ் மற்றும் இரானுக்கு இடையேயான நெருக்கம் இயல்பானது.

2007 இல், பாலத்தீன அதிகாரத்திற்கான தேர்தலில் ஹமாஸ் வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்குப் பிறகு அதன் செயல்பாடுகள் மேலும் அதிகரித்தன.

ஆனால் ஹமாஸ் மற்றும் சௌதி அரேபியா இடையேயான உறவும் எப்போதும் நிலையானதாக இருந்ததில்லை. அரபு எழுச்சி அல்லது அரபு புரட்சி கடந்த 2011 இல் தொடங்கியபோது, ​​​​சிரியாவில் உள்ள மக்களும் பஷார் அல்-ஆசாத்திற்கு எதிராக தெருக்களில் இறங்கினர். இரான் பஷார் அல்-ஆசாத்துக்கு ஆதரவாக நின்றது, ஹமாஸுக்கு சங்கடமாக இருந்தது.

இந்நிலையில் இரான் மற்றும் ஹமாஸ் உறவில் விரிசல் ஏற்பட்டது. ஆனால் அரபு எழுச்சி தொடர்பாக எகிப்து மீது சௌதி அரேபியாவின் அணுகுமுறையும் ஹமாஸுக்கு பிடிக்கவில்லை.

எகிப்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை சௌதி அரேபியா எதிர்த்தது. அத்தகைய சூழ்நிலையில், ஹமாஸ் மீண்டும் தெஹ்ரானுடன் நெருக்கமாக உறவை வளர்த்தது.

ஜூலை 2019 இல், ஹமாஸ் பிரதிநிதிகள் இரானுக்குச் சென்று மதத் தலைவர் அயதுல்லா அலி கொமேனியைச் சந்தித்தனர். சௌதி அரேபியாவில், ஹமாஸ் தலைவர்களும் முஸ்லிம் மதத்தால் இணைக்கப்பட்டுள்ளனர்.

இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே தற்போது போர் நடந்து வருகிறது. இதில் பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இதற்கிடையே மத்திய கிழக்கு பகுதியில் போட்டி நாடுகளான இரான் மற்றும் சௌதி அரேபியா ஆகிய நாடுகள் ஒற்றுமையாக இருக்கவேண்டும் என ஹமாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளது.

ஹமாஸ் செய்தித் தொடர்பாளர் நியூஸ் வீக்கிடம் பேசியபோது, “அல் அக்ஸா மசூதியை இஸ்ரேல் அவமதித்துள்ளது” என்று கூறினார். அதனால்தான் “ராக்கெட்டுகளை வீசுகிறோம். கிழக்கு ஜெருசலேமிலிருந்து பாலத்தீன குடும்பங்களை வெளியேற்ற விரும்புகிறார்கள். அல் அக்ஸா முஸ்லீம்களின் மூன்றாவது புனித தலம் என்பதுடன் பாலத்தீனத்தின் புனித தலமாகும். சௌதி அரேபியாவும் இரானும் பரஸ்பர வேறுபாடுகளை மறந்துவிடுவார்கள் என்று நம்புகிறோம். இது நடந்தால் பாலத்தீனர்களுக்கு மிகவும் நல்லது,” என்றார்.

இஸ்ரேல் தாக்குதல் சம்பவம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

ஹமாஸ் ஆயுதக் குழுவுக்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவிக்கும் இஸ்லாமிய நாடாக இரான் தனது நிலைப்பாட்டைக் கொண்டுள்ளது.

தாக்குதல் பற்றி இஸ்லாமிய நாடுகள் என்ன சொல்கின்றன?

ஐக்கிய அரபு அமீரகம் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று ஒரு அறிக்கையை வெளியிட்டது. அதில் ஹமாஸ் தாக்குதல் “தீவிரமானவை மற்றும் பதற்றத்தை அதிகரிக்கக் கூடியவை” என்று கூறியது. ஐக்கிய அரபு அமீரகத்தின் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இஸ்ரேலிய குடிமக்கள் தங்கள் வீடுகளில் இருந்து கடத்தப்பட்டு சிறைபிடிக்கப்பட்டதாக வெளியான செய்திகள் அதிர்ச்சியளிப்பதாக” கூறியுள்ளது.

பஹ்ரைனும் ஹமாஸ் தாக்குதல்களை விமர்சித்துள்ளது. பஹ்ரைன், “இந்த தாக்குதல் பதற்றத்தை ஆபத்தான நிலைக்கு உயர்த்தியுள்ளது. பொதுமக்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தியுள்ளது,” எனத் தெரிவித்துள்ளது.

ஒரு காலத்தில் இஸ்ரேலுக்கு எதிராக ஒட்டுமொத்த அரபு நாடுகளும் குரல் கொடுத்த நிலையில், இந்த இரு நாடுகளின் இது போன்ற விமர்சனங்கள் பழைய நிலைப்பாட்டிலிருந்து வேறுபட்டவையாக இருக்கின்றன.

சௌதி அரேபியா சமநிலையில் செயல்பட முயன்றது. ஆனால், ‘இஸ்ரேல் ஆக்கிரமிப்பு’ என்று குறிப்பிட்டு, ஹமாஸின் தாக்குதலைக் கண்டிக்காமல், பாலத்தீனத்துக்கு ஆதரவாக நின்று காட்டியுள்ளது. சௌதி அரேபியா வெளியிட்டுள்ள அறிக்கையில், இருதரப்பிலும் பொதுமக்கள் பாதிக்கப்படுவதைத் தவிர்க்கும் விதத்தில் இருதரப்பும் மோதலை உடனடியாக நிறுத்தவேண்டும் என கோரப்பட்டுள்ளது.

பாலத்தீன மக்களின் நியாயமான உரிமைகளை அடைவதற்கும், கண்ணியமான வாழ்க்கையை நடத்துவதற்கும், அவர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவதற்கும், நியாயமான மற்றும் நீடித்த அமைதியை பெறுவதற்கும் அவர்கள் எடுக்கும் முயற்சிகளில் சௌதி அரேபியா துணை நிற்கும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

குவைத், ஓமன் மற்றும் கத்தார் ஆகிய நாடுகள் இஸ்ரேலுக்கு கடுமையாக பதிலடி கொடுக்கும் அதே வேளையில், கிழக்கு ஜெருசலேமை அதன் தலைநகராக கொண்ட பாலத்தீனத்தை ஒரு நாடாக அங்கீகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை மீண்டும் வலியுறுத்தியுள்ளன. இந்தப் பதற்றத்திற்கு இஸ்ரேல்தான் பொறுப்பு என்று கத்தார் கூறியுள்ளது.

மலேசியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளும் பாலத்தீனர்களுக்கு ஆதரவாக உள்ளன.

ஆபிரகாம் உடன்படிக்கையின் கீழ் இஸ்ரேலுடனான உறவை இயல்பான உறவாக மாற்ற முயலும் நாடுகளில் மொராக்கோவும் ஒன்றாகும். தாக்குதல்கள் குறித்து மொராக்கோ மிகவும் சமநிலையான அறிக்கையை வெளியிட்டுள்ளது, “காஸாவில் நிலைமை மோசமடைந்து வருவதையும் இராணுவ நடவடிக்கை தீவிரப்படுத்தப்படுவதையும் பற்றி மொராக்கோ தனது ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்துகிறது. பொதுமக்களுக்கு எதிரான தாக்குதல்கள் எங்கு நடந்தாலும் அது கண்டிக்கத்தக்கது,” எனத்தெரிவித்துள்ளது.

துருக்கி இஸ்ரேலை விமர்சித்தாலும் அதன் நிலைப்பாடு முன்பு இருந்த அதே ஆக்ரோஷத்தை காட்டவில்லை. துருக்கி அதிபர் ரெசெப் தையிப் எர்துவான் கடந்த காலங்களில் இஸ்ரேலை நாஜி ஜெர்மனியுடன் ஒப்பிட்டுள்ளார். எர்துவான் 2019 இல் ஐக்கிய நாடுகள் சபையில் தனது உரையில் இஸ்ரேலை கடுமையாக தாக்கிப் பேசினார்.

இஸ்ரேல் தாக்குதல் சம்பவம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

இஸ்ரேல் நாட்டுக்கு அமெரிக்கா தனது ஆதரவை உறுதியாகத் தெரிவித்துள்ள நிலையில், இந்த விவகாரத்தில் பிறநாடுகளின் முடிவுகளைப் பாதிக்கும் அம்சமாக உள்ளது.

அமெரிக்காவுடனான பகை அதிக பாதிப்பை ஏற்படுத்தலாம்

அமெரிக்காவுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான நெருங்கிய நட்பு பல ஆண்டுகளாக தொடர்ந்து வருகிறது. இஸ்ரேலை ஒரு நாடாக அங்கீகரித்த முதல் நாடு அமெரிக்கா.

இஸ்ரேல் ஹமாஸுடன் போர் பிரகடனம் செய்த பின்னர், அமெரிக்கா தனது போர்க் கப்பல்களையும் போர் விமானங்களையும் இஸ்ரேலுக்கு அனுப்பியுள்ளது. காசா போருக்கு இடையில் இஸ்ரேலுக்கு ராணுவ மற்றும் அரசியல் உதவிகளை வழங்குவதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உறுதியளித்துள்ளார்.

உலகில் யூதர்கள் பெரும்பான்மையாக வாழும் ஒரே நாடு இஸ்ரேல். இது ஒரு சிறிய நாடு. ஆனால் அதன் ராணுவ பலம் உலகம் அங்கீகரிக்கும் வகையில் உள்ளது.

இஸ்ரேல் என்பது மத்தியதரைக் கடலுக்கு அருகில் உள்ள ஒரு மத்திய கிழக்கு நாடு. அதைச் சுற்றி எகிப்து, ஜோர்டான், லெபனான், சிரியா, இராக், துருக்கி, இரான், குவைத், மொராக்கோ, சௌதி அரேபியா, பாலத்தீனம், சூடான், துனிசியா என பல முஸ்லிம் நாடுகள் உள்ளன.

இவற்றில், இஸ்லாமிய கூட்டமைப்பில் அமைப்பில் உறுப்பினர்களாக உள்ள பல நாடுகளும் அடக்கம். அதாவது இஸ்லாமிய கூட்டமைப்பில் (OIC) உறுப்பினர்களாக உள்ள அதே நேரம் அவை அமெரிக்காவுடன் நட்புறவையும் கொண்டுள்ளன.

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் மேற்காசிய விவகாரங்களின் பேராசிரியரும் ஆசிரியருமான ஏ.கே.பாஷா கூறுகையில், “ஓஐசியில் உறுப்பினர்களாக உள்ள 56 நாடுகளில் பாதிக்கும் மேற்பட்ட நாடுகள் அமெரிக்காவின் நெருங்கிய நட்பு நாடுகளாக உள்ளன. துருக்கி, பாகிஸ்தான், இந்தோனேசியா, வங்கதேசம், ஜோர்டான் அல்லது மொராக்கோ என இது ஒரு நீண்ட பட்டியல். இஸ்ரேல் பிரச்சினையில் ஓஐசி (OIC) இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இரண்டாவது குழு இராக், இரான், அல்ஜீரியா, லிபியா போன்றவை. இந்த நாடுகள் கடுமையான அணுகுமுறையை விரும்புகின்றன. அவை ஹமாஸை ஆதரிக்க விரும்புகின்றன. “

மேற்கு ஆசிய விவகாரங்களில் நிபுணரும், ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக் கழக பேராசிரியருமான சுஜாதா ஐஸ்வர்யா கூறுகையில், மேற்கத்திய நாடுகள் இஸ்ரேலுக்கு ஆதரவாக ஒரே குரலை வெளிப்படுத்தியுள்ளன என்று தெரிவித்தார்.

“துருக்கி பல ஆண்டுகளாக தனிமைப்படுத்தப்பட்ட நாடாக உணர்கிறது. மாறாக, ஆபிரகாம் உடன்படிக்கை மூலம் பல நாடுகளுடனான தனது உறவை இஸ்ரேல் மேம்படுத்தியுள்ளது. பாலத்தீனத்தின் மீது முழுமையான ஆதரவைக் காட்டினால், இஸ்ரேலுக்கு வெளிப்படையாக எதிர்ப்பு தெரிவித்தால், மீண்டும் தனித்து விடப்படும் நிலை ஏற்படும் என்பது துருக்கிக்கு தெரியும். இஸ்ரேலின் நட்பைத் தக்க வைத்துக் கொள்ள, துருக்கி ஒரு சமநிலையான நிலைப்பாட்டை ஏற்றுக்கொண்டுள்ளது,” என்றார் அவர்.

எரிவாயு வினியோகம் தொடர்பாக இஸ்ரேலுடனான துருக்கியின் ஒப்பந்தமும் துருக்கியின் அணுகுமுறைக்கு ஒரு காரணம் என்று சுஜாதா ஐஸ்வர்யா கருதுகிறார்.

ரஷ்யாவைச் சார்ந்திருப்பதைக் குறைப்பதற்காக, துருக்கி வழியாக ஐரோப்பாவிற்கு இஸ்ரேலிய எரிவாயுவைக் கொண்டு செல்வதற்கான எரிவாயுக் குழாய் ஒப்பந்தம் தொடர்பாக விவாதங்கள் நடந்து வருகின்றன . ஆனால், இது குறித்து உறுதியான முடிவு எதுவும் இதுவரை எடுக்கப்படவில்லை.

துருக்கியில் பணவீக்கம் உச்சத்தில் இருப்பதாக அல்-ஜசீரா கூறுகிறது . இத்தகைய சூழ்நிலையில், துருக்கிக்கு பிராந்திய நாடுகளின் முதலீடு தேவைப்படுகிறது.

இது தவிர, பிராந்திய அளவில் பாதுகாப்பு அச்சுறுத்தலும் உள்ளது. சிரியாவில் நிலைமை மோசமாக உள்ளது. அத்தகைய சூழ்நிலையில், துருக்கி இஸ்ரேலை வலுவான வீரராக பார்க்கிறது. அதே நேரத்தில், இஸ்ரேலைப் பொறுத்தவரை, மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஈரானின் ஆதிக்கத்தை சமநிலைப்படுத்த துருக்கி ஒரு பெரிய சக்தியாக உள்ளது.

இஸ்ரேல் தாக்குதல் சம்பவம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

ஹமாஸ் ஆயுதக் குழுவை எதிர்த்து இஸ்ரேல் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ள நிலையில், உலக நாடுகளின் எதிர்வினை எப்படியிருக்கும் என்ற விவாதம் பெரும்பாலான இடங்களில் முக்கிய இடம்பெற்றுள்ளது.

பாலத்தீனர்களைப் பற்றிய பரஸ்பர வேறுபாடுகளை இஸ்லாமிய நாடுகள் உண்மையில் மறக்குமா? இஸ்லாமிய நாடுகளின் ஒற்றுமை இஸ்ரேலை நிறுத்துமா?

2021 இல் பிபிசியிடம் பேசிய அஹ்மத், “1967 க்கு முன்பு, பாலத்தீனம் மற்றும் இஸ்ரேல் பிரச்னை அரபு நாடுகளின் பிரச்னையாக இருந்தது, ஆனால் 1967 இல் அரபு-இஸ்ரேல் போரில் இஸ்ரேல் வெற்றி பெற்ற பிறகு, அது பாலத்தீனப் பிரச்னையாக மாறிவிட்டது. இதில் யாராவது தீர்வை எட்டவேண்டும் என்றால் அது இஸ்ரேலும் பாலஸ்தீனர்களும்தான்,” என்றார்.

“இஸ்லாமிய நாடுகளின் எதிர்வினை ஒரு வழக்கமான நிகழ்வு என்பதைத் தவிர வேறில்லை” என்று தல்மீஸ் அஹ்மத் கூறியிருந்தார். பெரும்பாலான இஸ்லாமிய நாடுகள் மன்னராட்சிகளாக இருப்பதால் அங்குள்ள மக்களின் கோபம் ஜனநாய சக்தி என்ற வடிவில் எழ வாய்ப்பில்லை. இப்படிப்பட்ட நிலையில் பாலத்தீனர்களுக்கு ஆதரவாக ஏதோ சொல்லி அங்குள்ள ஆட்சியாளர்கள் வெறும் சடங்குகளை நடத்துகின்றனர். துருக்கியைப் பொறுத்தவரை, அமெரிக்க அதிபர் பைடனின் வருகைக்குப் பிறகு எர்துவான் இஸ்ரேலுடன் உறவுகளை மேம்படுத்த முயன்றார். அவர்கள் தூதர்களை அனுப்பவும் தயாராக இருந்தனர். ஆனால் இஸ்ரேல் ஆர்வம் காட்டவில்லை. எர்துவான் சமீப நாட்களில் இஸ்ரேலுக்கு எதிராக மிகவும் ஆக்ரோஷமான அறிக்கைகளை வெளியிட்டார்.”

துருக்கி அல்லது சௌதி அரேபியாவினால் இஸ்ரேலுக்கு எதுவும் நடக்காது என்றும், யாரேனும் தலையிட முடிந்தால் அது அமெரிக்கா தான் என்றும் தல்மீஸ் அஹ்மத் நம்புகிறார். ஆனால் அங்குள்ள வலதுசாரி லாபி இஸ்ரேலுக்கு ஆதரவாக வலுவாக நிற்கிறது.

பாலஸ்தீனர்களுடன் சௌதி அரேபியாவின் சாமானிய மக்களின் அனுதாபம் மிகவும் வலுவானது என்று தல்மிஸ் அஹ்மத் நம்புகிறார். இப்படிப்பட்ட சூழ்நிலையில் சௌதி அரேபிய அரச குடும்பத்தின் மீது சாமானியர்களிடம் இருந்து மறைமுக அழுத்தம் ஏற்பட்டு அதன் விளைவாக அங்குள்ள வெளியுறவு அமைச்சகம் ஒரு செய்திக்குறிப்பை வெளியிடுகிறது. இரான் தன்னை ஒரு புரட்சிகர நாடாக கருதுகிறது, எனவே அது பாலத்தீனர்களுக்கு ஆதரவாக பேசுகிறது என்பதுடன் இஸ்லாமிய காரணங்களுக்காக ஹமாஸை ஆதரிக்கிறது. இருப்பினும், ஹமாஸ் அதன் அனைத்து உதவிகளையும் துருக்கி மற்றும் கத்தாரிடம் இருந்து தான் பெறுகிறது.

இஸ்ரேல் தாக்குதல் சம்பவம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

சௌதி அரேபியாவுடனான தூதரக உறவுகளை இரான் முன்னெடுக்கும் நிலையில், இரு நாடுகளுக்கும் இடையில் பல்வேறு முரண்கள் நிலவுகின்றன.

இரான் மிகப்பெரிய காரணம்

பாலத்தீனர்களை ஆதரிப்பது இரானின் வெளியுறவுக் கொள்கையின் ஒரு முக்கிய அம்சமாகும். மேலும் அந்நாட்டின் அறிக்கைகளை நம்பினால், காசாவில் இருந்து இஸ்ரேல் மீதான தாக்குதலுக்குப் பிறகு இரானில் கொண்டாட்ட சூழ்நிலை காணப்பட்டது.

எனினும், காசா தாக்குதல்களில் தங்களின் பங்கு இருப்பதாக கூறப்படும் குற்றச்சாட்டை இரான் நிராகரித்துள்ளது.

சௌதி அரேபியாவுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே தூதரக உறவுகள் எப்போதும் இருந்ததில்லை. ஆனால் இரான் இருவருக்கும் பொதுவான எதிரியாகவே விளங்குகிறது. மத்திய கிழக்கில் இரானின் செல்வாக்கு அதிகரித்து வருவதை இரு நாடுகளும் தடுக்க விரும்புகின்றன. சௌதி அரேபியாவுக்கும் இரானுக்கும் இடையிலான தூதரக உறவுகளை சீனா சமீபத்தில் மீட்டெடுத்த போதிலும், இரு நாடுகளுக்கும் இடையிலான முரண்பாடுகள் முடிவுக்கு வரவில்லை. இரு நாடுகளின் பரஸ்பர நலன்கள் பல பகுதிகளில் பிரச்னையாகவே தொடர்கின்றன.

இரான் மற்றும் சௌதி அரேபியா ஆகிய இரண்டு நாடுகளும் இஸ்லாமிய நாடுகள். ஆனால் இரண்டுமே நாடுகளிலும் சன்னி மற்றும் ஷியா முஸ்லிம்கள் ஆதிக்கம் செலுத்துகின்றனர். இரான் ஷியா முஸ்லீம் பெரும்பான்மை நாடாக இருக்கும் நிலையில், சௌதி அரேபியா சன்னி பெரும்பான்மை நாடாக விளங்குகிறது.

ஏறக்குறைய மத்திய கிழக்கு முழுவதும், சில நாடுகள் இரானையும் சில நாடுகள் சௌதி அரேபியாவையும் ஆதரவு மற்றும் ஆலோசனைக்காக எதிர்பார்க்கின்றன.

ஏ.கே.பாஷா பேசிய போது, “சௌதி அரேபியா தன்னை மெக்கா-மதீனாவின் பாதுகாவலர் என்றும், இஸ்லாத்தில் புனிதமான இடம் என்றும் கூறிவருகிறது. இஸ்லாமிய கூட்டமைப்பின் (OIC) தலைமையகம் ஜெட்டாவிலும் உள்ளது. இரான் மட்டுமே பாலத்தீனத்திற்கு ஆதரவாகவும் இஸ்ரேலுக்கு எதிராகவும் இருக்கும் ஒரே நாடு,” என்கிறார்.

அண்மையில், சௌதி அரேபியா மற்றும் இஸ்ரேல் நாடுகளுக்கு இடையே அமெரிக்காவின் முயற்சியில் ஒரு ஒப்பந்தம் பற்றி நிறைய பேசப்பட்டது. ஆனால் ஹமாஸின் தாக்குதலுக்குப் பிறகு, இந்த ஒப்பந்தம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது.

பாலத்தீன விவகாரத்தில் இரானின் நிலைப்பாடு அதன் பிரபலத்தை அதிகரிக்கக்கூடும் என்று ஏ.கே.பாஷா கூறுகிறார். சௌதி அரேபியாவிற்கு இது தொந்தரவாக இருக்கலாம். ஏனெனில் அது தன்னை இஸ்லாமிய உலகின் தலைவராகக் கருதுகிறது.

தொடர்ந்து பேசிய அவர், “சீனாவின் முயற்சியில் இரு நாடுகளுக்கும் இடையிலான தூதரக உறவுகள் நிச்சயமாக மீட்டெடுக்கப்பட்டுள்ளன. ஆனால் இந்த உறவுகள் முற்றிலும் இயல்பானவை அல்ல. ஏமன் பிரச்னை ஒன்றும் முரண்பாடுகளை ஏற்படுத்தும் விதத்தில் உள்ளது. இடையில் லெபனான் பிரச்னை ஒன்றும் உள்ளது. இது மட்டுமின்றி, இரு நாடுகளுக்கு இடையே லிபியா பிரச்சினையும் முரண்பாட்டை ஏற்படுத்தும் விதத்தில் உள்ளது. இரானின் அணுசக்தித் திட்டத்தை எதிர்கொள்ள சௌதி அரேபியாவுக்கு அமெரிக்காவிடம் இருந்து அணுசக்தி ஒத்துழைப்பு தேவைப்படுகிறது. சௌதி அரேபியா எந்த நிலையிலும் இரானிடம் தனது நிலையை இழக்க விரும்பவில்லை.”

Facebook
Facebook
fb-share-icon
Telegram
WhatsApp
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *