
பட மூலாதாரம், Getty Images
துருவ் ஜூரெல் என்ற பெயர் இங்கிலாந்துக்கு எதிரான ராஞ்சி டெஸ்ட் போட்டியில் இந்தியாவின் வெற்றிக்குப்பின் சமூக வலைத்தளங்களில் வைரலாகி இருக்கிறது.
- எழுதியவர், க.போத்திராஜ்
- பதவி, பிபிசி தமிழுக்காக
-
“14 வயதில் ஒரு சிறுவன் யாருடைய உதவியும் இல்லாமல், பாதுகாவலர் இல்லாமல் நொய்டாவில் உல்ள என் கிரிக்கெட் அகெடமியில் என்னைச் சேர்த்துக் கொள்ளுங்கள் என்று என் முன்வந்து நின்றபோது திகைத்துவிட்டேன். கிரிக்கெட் பயிற்சிக்காக வீட்டை விட்டு, குடும்பத்தைவிட்டு ஓடிவந்த முதல் நபராக இவரைப் பார்க்கிறேன்”
துருவ் ஜூரெல் குறித்து அவரின் சிறுவயது பயிற்சியாளர் பூல் சந்த் ஆங்கில நாளேடு ஒன்றுக்கு அளித்த பேட்டி இது.
கிரிக்கெட்டின் காதலர், கிரிக்கெட்டுக்காக குடும்பத்தை விட்டு பிரிந்தவர், தந்தையின் கனவை வெறுத்து கிரிக்கெட்தான் வாழ்க்கை என விளையாடிவரும் இளம் வீரர் துருவ் ஜூரெல் என்று அவரைப் புகழ்கிறார்கள்.

பட மூலாதாரம், Getty Images
துருவ் ஜுரேலிடம் தோனியின் பண்புகள் இருப்பதாகக் கூறுகிறார் கவாஸ்கர்
வைரலாகும் பெயர்
துருவ் ஜூரெல் என்ற பெயர் இங்கிலாந்துக்கு எதிரான ராஞ்சி டெஸ்ட் போட்டியில் இந்தியாவின் வெற்றிக்குப்பின் சமூக வலைத்தளங்களில் வைரலாகி இருக்கிறது. ஏனென்றால், முதல் இன்னிங்ஸில் இந்திய அணியை மிகப்பெரிய சரிவிலிருந்து மீட்டு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தவர் துருவ் ஜூரெல்.
துருவ் ஜூரெலின் ஆழ்ந்த பேட்டிங் நுட்பம், தேர்ந்தெடுத்த ஷாட்கள், ஸ்வீப் ஷாட், கவர் டிரைவ் ஷாட்கள் இங்கிலாந்து பந்துவீச்சாளர்களுக்கு உண்மையில் சவாலாக இருந்தது என்றுதான் சொல்ல முடியும்.
துருவ் ஜூரெல் களமிறங்கிய போது இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ஆனால் டெய்லெண்டர் குல்தீப் யாதவை வைத்துக் கொண்டு 76 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த துருவ் ஜூரெல் பேட்டிங் உண்மையில் பாராட்டுக்குரியது என்று கிரிக்கெட் ஜாம்பவான்கள் கூறுகிறார்கள்.
ஏனென்றால், குல்தீப் யாதவ், ஆகாஷ் தீப் ஆகிய இரு பேட்டிங்கில் திறமையில்லாத வீரர்களை களத்தில் வைத்துக் கொண்டு அவர்களை ஸ்ட்ரைக்கில் நிற்கவிடாமல், ஸ்ட்ரைக்கை தக்கவைத்துக் கொண்டு பேட்டிங் செய்து ஜூரெல் ஸ்கோர் செய்தது எளிதான செயல் அல்ல.
தேர்ந்த, அனுபவமான பேட்டர்களுக்கு இருக்கும் புத்திகூர்மை, எந்த நேரத்தில், யார் வீசும் பந்தை அடித்து ஸ்ட்ரைக்கை தக்கவைப்பது என்று தெரிந்து இங்கிலாந்து பந்துவீச்சாளர்களை லாவகமாக ஜூரெல் கையாண்டு ரன்களைச் சேர்த்தார்.
அதிலும் ஒரு கட்டத்துக்கு மேல் இந்திய அணி ரன் நெருக்கடிக்குள் தள்ளப்பட்டபோது, விஸ்வரூமெடுத்து அதிரடியாகவும் பேட் செய்ய முடியும் என்பதை நிரூபித்த ஜூரெல் சிக்ஸர், பவுண்டரி என விளாசினார்.

பட மூலாதாரம், Getty Images
ஆஸ்திரேலிய முன்னாள் வீரரும், பயிற்சியாளருமான டாம் மூடி ஜூரேலை பாராட்டியிருக்கிறார்.
அடுத்த தோனியா?
ஜூரெலின் பேட்டிங், விக்கெட் கீப்பிங் நுட்பம், நேரத்துக்கு ஏற்ப முடிவெடுக்கும் திறன் ஆகியவற்றைப் பார்க்கும்போது இந்தியாவுக்கு அடுத்த தோனி கிடைத்துவிட்டார் என்று முன்னாள் ஜாம்பவான்கள் புகழ்கிறார்கள்.
முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் தொலைக்காட்சி வர்ணனையின்போது ஜூரெல் குறித்து கூறுகையில் “ துருவ் ஜூரெலின் அமைதி, பொறுமை, சமயோசித பேட்டிங் நுட்பம், முடிவு ஆகியவற்றைப் பார்க்கும்போது, அடுத்த தோனி உருவாகிறார் என்பதை எனக்கு காண்பிக்கிறது” எனத் தெரிவித்தார்.
ரத்தினத்தை கண்டுபிடித்துவிட்டது இந்தியா
அதேபோல ஆஸ்திரேலிய முன்னாள் வீரரும், பயிற்சியாளருமான டாம் மூடி எக்ஸ் தளத்தில் கூறுகையில் “ துருவ் ஜூரெல் வேறுவிதமான பேட்டர். இந்திய அணி ஒரு விலைஉயர்ந்த ரத்தினத்தை கண்டுபிடித்துவிட்டது” எனப் புகழ்ந்துள்ளார்.
இதேபோல, முன்னாள் வீரர்கள் விவிஎஸ் லட்சுமண், பத்ரிநாத், இர்பான் பதான், வீரேந்திர சேவாக், ராபின் உத்தப்பா, மைக்கேல் வான் என பலரும் துருவ் ஜூரெலின் பேட்டிங்கை பாராட்டியுள்ளனர்.

பட மூலாதாரம், Getty Images
எம்.எஸ். தோனி ஓய்வுக்குப்பின் சிறந்த விக்கெட் கீப்பர் இன்றி தடுமாறி வந்தது இந்திய அணி
முதல் தேர்விலேயே தேர்ச்சி
இந்திய அணி எம்.எஸ். தோனி ஓய்வுக்குப்பின் சிறந்த விக்கெட் கீப்பர் இன்றி தடுமாறி வந்தது. கேஎல் ராகுல், ரிஷப் பந்த், தினேஷ் கார்த்திக், கேஎஸ்பரத், விருதிமான் சாஹா, இசாந்த் கிஷன், சஞ்சு சாம்ஸன் என பல வீரர்களை பரிசோதித்துப் பார்த்தது. இதில் முதல் பரிட்சையிலேயே தேறி, அனைவரின் பாராட்டையும் பெற்றவர் துருவ் ஜூரெலாகத்தான் இருக்க முடியும்.
தனது 2வது சர்வதேச டெஸ்ட் போட்டியில் பங்கேற்ற துருவ் ஜூரெல் 17 முதல் தரப் போட்டிகளிலும், 10 லிஸ்ட்ஏ போட்டிகளிலும்தான் விளையாடியுள்ளார். குறைவான போட்டிகளில் துருவ் ஜூரெல் விளையாடி இருந்தாலும், சராசரியை 50 ரன்களுக்கு மேல் வைத்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
யார் இந்த துருவ் ஜூரெல்?
உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில் கடந்த 2001ம் ஆண்டு, ஜனவரி 21ம் தேதி பிறந்தவர் துருவ் ஜூரெல். ஜூரெலின் தந்தை நீம் சிங் ஜூரெல் ராணுவத்தில் ஹவில்தாராக பணியாற்றியவர். கடந்த 1999ம் ஆண்டு நடந்த கார்கில் போரில் பங்கேற்றபின் நீம் சிங் ஓய்வு பெற்றார். தன்னைப் போல் தனது மகனும் ராணுவத்தில் பணியாற்ற வேண்டும், தேசத்துக்காக சேவை செய்ய வேண்டும் என்று நீம் சிங் ஆர்வமாகவும் இருந்தார்.
இதற்காக துருவ் ஜூரெலை தேசிய ராணுவ அகாடெமி பயிற்சித் தேர்வுக்காக நீம் சிங் தயார் செய்தார். ஆனால், துருவ் ஜூரெலுக்கு எண்ணம், ஆர்வம் அனைத்தும் கிரிக்கெட் மீதுதான் இருந்தது. ஜூரெலுக்கு கிரிக்கெட் மீது அவ்வளவு தீராத காதல், வெறி இருந்தது , கிரிக்கெட்டில் ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது.

பட மூலாதாரம், Getty Images
வீட்டை விட்டு புறப்பட்டார்
இதனால் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனது 14வயது வயதில் ஆக்ராவில் இருந்து ரயில் ஏறி நொய்டாவில் உள்ள கிரிக்கெட் அகாடெமியில் சேர்வதற்காக ஜூரெல் புறப்பட்டார்.
நொய்டாவில் செக்டர் 71 பகுதியில் கிரிக்கெட் அகாடெமி நடத்திவரும் பூல் சந்த் என்பவரிடம் கிரிக்கெட் பயிற்சிக்காக ஜூரெல் சேர்ந்தார். யாருடைய துணையும் இல்லாமல் பாதுகாவலர் இல்லாமல் 14வயதில் ஜூரெல் கிரிக்கெட் அகாடெமியில் சேர்வதற்காக வந்திருப்பதைப் பார்த்த பூல் சந்த் சற்று வியப்படைந்தார். இருப்பினும் ஜூரெலின் கிரிக்கெட் ஆர்வத்தைப் பார்த்து அவரை கிரிக்கெட் அகாடெமியில் சேர்த்து, முறைப்படி அவரின் தந்தைக்கு தகவல் அளித்தார்.
“இப்படியொரு சிறுவனை பார்த்தது இல்லை”
ஜூரெலின் கிரிக்கெட் ஆர்வம் குறித்து அவரின் பயிற்சியாளர் பூல் சந்த் ஆங்கில நாளேடு ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில் “14 வயதில் ஒரு சிறுவன் யாருடைய உதவியும் இல்லாமல், பாதுகாவலர் இல்லாமல் என் கிரிக்கெட் அகெடமிக்கு வந்து “சார் நான்தான் துருவ் ஜூரெல். என்னை உங்கள் கிரிக்கெட் அகாடெமியில் சேர்த்துக் கொள்ளுங்கள்” என்று என் முன்வந்து நின்றபோது திகைத்துவிட்டேன்.
கிரிக்கெட் பயிற்சிக்காக வீட்டை விட்டு, குடும்பத்தைவிட்டு ஓடிவந்த முதல் நபராக இவரைப் பார்க்கிறேன், ஸ்பெஷல் வீரராகவும் பார்க்கிறேன். ஜூரெல் நடுத்தர ஏழ்மைக் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதால் தொடக்கத்தில் பல பணச்சிக்கல்களைச் சந்தித்தார், தங்குவதற்கு இடம் கூட கிடைக்காமலும், அதற்கு வாடகை கொடுக்க முடியாமலும் சிரமப்பட்டார். ஆனாலும் மகனின் கனவு ராணுவத்தில் சேர்வதைவிட, கிரிக்கெட் மீதுதான் ஆர்வம் இருப்பதை உணர்ந்த ஜூரெலின் தந்தைக்கு அதை வரவேற்பதைத் தவிர வழியில்லை” என்று தெரிவித்தார்.

பட மூலாதாரம், Getty Images
“‘கிட்’ வாங்க தாயின் நகையை விற்றோம்”
ஜூரெல் கிரிக்கெட் பயிற்சி எடுக்க அகாடெமியில் சேர்ந்தபோது, அவரால் பேட்டி, பேட் உள்ளிட்ட கிரிக்கெட் கிட் வாங்குவதற்குகூட கையில் பணமில்லை என்று அவரின் தந்தை நீம் சிங் ஆங்கில நாளேடு ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில் “கிரிக்கெட் கிட் வேண்டும் என்று ஜூரெல் என்னிடம் கேட்டபோது அதன் விலை 6 ஆயிரம் ரூபாயாக இருந்தது. என்னிடம் அவ்வளவு பணம் இல்லை. பணம் இல்லாத எனக்கு கிரிக்கெட் எதுக்கு நான் விலகிவிடுகிறேன் என்று ஜூரெல் கண்ணீர் விட்டதைப் பார்த்தபோது அவரின் தாய்க்கு மனது இடம் கொடுக்கவில்லை. உடனடியாக ஜூரெலின் தாய் தனது கழுத்தில் இருந்த தங்கநகையை கழற்றிக்கொடுத்து, அதை விற்று ஜூரெலுக்கு கிரிக்கெட் கிட் வாங்கிக் கொடுக்கக் கூறினார். அதுதான் ஜூரெலுக்கு கிடைத்த முதல் கிரிக்கெட் கிட்” என்று தெரிவித்தார்.
அரைசதத்தை கொண்டாடாத ஜூரெல்
துருவ் ஜூரெல் கிரிக்கெட் மீது ஆர்வமாக இருந்தாலும், சர்வதேச அரங்கில் தனது முதல் டெஸ்ட் அரைசதத்தை அடித்தபோது, பேட்டை உயர்த்தி தனது மகிழ்ச்சியைத் தெரிவிக்கவில்லை. மாறாக, அரங்கில் அமர்ந்திருந்த தனது தந்தைக்கு ராணுவத்தில் அடிக்கும் சல்யூட் அடித்து தனது நன்றியைத் தெரிவித்தார்.
ஜூரெலின் வளர்ச்சி
துருவ் ஜூரெல் சிறப்பாக கிரிக்கெட் விளையாடியதையடுத்து, உ.பி.யின் 14வயது, 16வயது, 19வயதுக் குட்பட்டோருக்கான அணியில் விளையாட இடம் கிடைத்தது. அதைத் தொடர்ந்து 19வயதுக்குட்பட்டோருக்கான அணியில் தேர்வாகிய ஜூரெல், 2020ம் ஆண்டு உலகக் கோப்பையில் இந்திய அணிக்காக விளையாடினார். அப்போது துணைக் கேப்டனாக ஜூரெல் நியமிக்கப்பட்டார்.
இதையடுத்து, 2021ம் ஆண்டு உத்தரப்பிரதேச அணிக்காக, முதல்முறையாக சயீத் முஸ்தாக் அலி கோப்பையில் ஜூரெல் களமிறங்கினார். குறைந்த அளவு போட்டிகளே ஜூரெல் விளையாடி இருந்தாலும் இவரின் ஸ்ட்ரைக் ரேட், பேட்டிங் சராசரி அனைவரையும் ஈர்த்தது.
ஐபிஎல் அறிமுகம்
இதையடுத்து, 2022ம் ஆண்டு ஐபிஎல் ஏலத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஜூரெலை ஏலத்தில் எடுத்தது. இதைத் தொடர்ந்து, 2022, பிப்ரவரி 17ம் தேதி ஜூரெல் தனது முதல்தரப் போட்டியில் ரஞ்சிக் கோப்பையில் உ.பி அணிக்காக அறிமுகமாகினார். 2023ம் ஆண்டு, ஜூலை 14ம் தேதி, லிஸ்ட் ஏ தரப் போட்டிகளில் ஜூரெல் அறிமுகமாகி ஐக்கிய அரபு அமீரகம் அணிக்கு எதிராக விளையாடினார்.
என்பெயர் இருப்பது எனக்கே தெரியாது
இந்திய அணியில் தனது பெயர் சேர்க்கப்பட்டது கூட ஜூரெலுக்குத் தெரியாது. திடீரென்று பிசிசிஐ தொலைக்காட்சியை பார்த்தபோது தனது பெயர் இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தாக ஜூரெல் தெரிவித்துள்ளார்.
அவர் அளித்த பேட்டியில் “ நான் பயிற்சி முடித்துவிட்டு, இரவு தூங்கச் செல்லும்போது தற்செயலாக பிசிசிஐ டிவி செயலியைப் பார்த்தேன். அப்போது இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு என் பெயர் சேர்க்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தேன். கிரிக்கெட் விளையாடும் ஒவ்வொரு வீரரும் இந்திய அணிக்காக விளையாடுவது கனவாகும். என் பெயரைப் பார்த்தபோது, நான் கனவில் இருப்பதாகவே உணர்ந்தேன்.”
“என்னைப் போன்ற நடுத்தரக் குடும்பத்தில் இருந்து வரும் வீரருக்கு, இ்ந்திய அணியில் இடம் கிடைப்பது என்பது அரிதானது, கனவு. அது நிறைவேறியது கண்டு என் தந்தை, சகோதரி, தாய் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். கடின உழைப்பு என்பது மிகப்பெரிய விஷயம். அதிலும் கனவு காண்பதும் அதைக் காட்சிப் படுத்துப் பார்ப்பதும், அதை உருவாக்கும் விஷயத்துக்கும் நான் ரசிகன்” எனத் தெரிவித்தார்.

பட மூலாதாரம், Getty Images
தோனியின் அறிவுரை
ஐபிஎல் விளையாடும்போது, சிஎஸ்கே கேப்டன் தோனியைச் சந்தித்து அறிவுரை பெற்றதுதான் கிரிக்கெட் மீது இன்னும் ஈர்ப்பு ஏற்படக் காரணம் என ஜூரெல் தெரிவித்துள்ளார். பிசிசிஐ வெளியிட்ட வீடியோவில் ஜூரெல் அளித்த பேட்டியில் “ நான் தோனியின் மிகப்பெரிய ரசிகன். ஐபிஎல் போட்டியின்போது தோனி என் முன் வந்து நின்றபோது எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. முதன் முதலில் தோனியுடன் நான் பேசியபோது,
நான் உண்மையில் பூமியில்தான் நிற்கிறேனா அல்லது கனவா என்பதை உறுதி செய்து பேசினேன். அப்போது அவரிடம் உங்களுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ளவா என்று கேட்டேன். அதற்கு தோனி சிரித்துக்கொண்டே என்னுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
அப்போது தோனியிடம், நீங்கள் 6-வது அல்லது 7வது வீரராக களமிறங்கியும் சிறப்பாக பேட் செய்வது எப்படி ரகசியம் என்ன என்று கேட்டேன். அதற்கு தோனி என்னிடம் “ கைமாறு கருதாத பணி. வெற்றியைவிட தோல்வி அதிகம் இருக்கும். அதைப்பற்றி கவலைப்படக் கூடாது. நம்முடைய பணி ஃபினிஷ் செய்வது மட்டும்தான். மோசமானதை எதிர்பார்த்துதான் எப்போதும் நாம் தயாராக வேண்டும். ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு போட்டியையும் ஃபினிஷ் செய்ய முடியாது. களத்தில் பந்தை மட்டும் பார்க்க வேண்டும், விளையாடுவதில் மட்டும் கவனம் இருந்தால்போதும்” எனத் தெரிவித்தார்.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்