
பட மூலாதாரம், Getty Images
கடலின் ஆழத்தில் கிடக்கும் விண்பொருள் குப்பைகள் பத்திரமாக இருக்கும் என்பதால் அவை எதிர்காலத்தில் தொல்பொருட்களாக மாறும்.
நெமோ புள்ளி நூற்றுக்கணக்கான விண்கலங்களின் இறுதி ஓய்வுக்கான இடமாக மாறியுள்ளது. எதிர்கால தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் இதை எப்படிப் பார்ப்பார்கள்?
தென் பசிபிக் கடலின் மையத்தில் இருந்து, அருகிலுள்ள வறண்ட நிலத்திற்குச் செல்லவேண்டுமானால், சுமார் 2,688 கிமீ (1,670 மைல்கள்) பயணிக்க வேண்டும். அநாமதேய கடலின் கடும் குளிர் மிக்க பகுதியாக உள்ளது அது. அங்கு எப்போதும் பிரமாண்டமாகக் காட்சியளிக்கும் கடல் நீர், மேலே பரந்துகிடக்கும வியத்தகு வானம், புயலைப் போல் வீசும் காற்று என கற்பனைக்கு எட்டாத ஒரு இடமாக அது காட்சியளிக்கிறது.
“தெற்கு பசிபிப் பெருங்கடல் சாம்பல் நிறத்தில் பல வண்ணங்கள் மற்றும் பெரிய அலைகளுடன் பிரமாண்டமாக கொண்டிருக்கலாம். சில சமயங்களில் உற்சாகமூட்டக்கூடிய பகுதியாகவும், சில சமயங்களில் அச்சமேற்படுத்தும் இடமாகவும் அது இருக்கிறது,” என்று பிரிட்டிஷ் மாலுமியும், அந்த இடத்தை நேரில் பார்த்த மிகச்சிலரில் ஒரு சாதனையாளருமான டீ காஃபாரி கூறுகிறார்.
பூமியின் நிலப்பகுதியில் இருந்து வெகுதொலைவில் இருக்கும் இந்தப் பகுதியில், ஒருவர் ஏதாவது சிக்கலில் சிக்கினால் மீட்பதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு. ஆண்டுதோறும் உலகம் முழுவதும் நடைபெறும் படகுப் போட்டியான தி ஓஷன் ரேஸ் போட்டியின் போது அங்கே சென்றால் மட்டுமே தொலைவில் உள்ள நீர்க் கோட்டிற்கு சற்று மேலே முக்கோண வடிவ சுறா துடுப்பு போன்ற பாய்மரங்கள் மட்டுமே அங்கேயும் மனித வாழ்க்கை இருக்கிறது என்பதற்கான அடையாளங்களாக இருக்கும்.
கப்பல் போக்குவரத்து அல்லது மீன்பிடித்தல் போன்ற வேறு எந்த மனித நடவடிக்கைகளுக்கும் இப்பகுதி வழக்கமாகப் பயன்படுத்தப்படுவதில்லை. யாருமே அணுமுடியாத கடல் பரப்பாக உள்ள இப்பகுதிக்கு மிக அருகில் வந்து செல்பவர்கள் யாரென்றால், விண்ணில் மிதக்கும் சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருக்கும் விண்வெளி வீரர்கள் தான். அவர்கள் அப்பகுதியைக் கடக்கும் போது அந்த கடல் பரப்பில் இருந்து வெறும் 415 கிமீ (258 மைல்கள்) ) தொலைவில் இருப்பார்கள். இது யாருமே அணுக முடியாத கடல் துருவம் என்ற நிலையில், பாயிண்ட் நெமோ என்பது இந்த இடத்தின் பெயராக விளங்குகிறது.
பூமியின் வரைபடத்தில் பாயிண்ட் நெமோவைக் கண்டுபிடிக்க , நியூசிலாந்துக்கும் சிலி நாட்டுக்கும் இடையில் தெற்கே உள்ள பரந்த நீல நிற கடல் நீரை ஒருவர் தேடலாம் – அது இந்த இருநாடுகளுக்கும் இடையில் கிட்டத்தட்ட பாதியிலேயே உள்ளது. மிகவும் துல்லியமான இருப்பிடத்தை அறிய, வடக்கில் பிட்கேர்ன் தீவுகளின் ஒரு பகுதியான மக்கள் யாரும் வசிக்காத டூசி தீவு , தெற்கில் அண்டார்டிகாவின் மகேர் தீவு, மேற்கில் சதம் தீவுகள் மற்றும் கிழக்கில் சிலி தீவுகளுக்கு இடையே முக்கோணமாக அமைத்தால் அந்த இடம் கிடைக்கும். இது எல்லா வகையிலும் உச்சத்தைத் தொடும் பகுதியாக இருக்கிறது. கடலின் மிகவும் தனிமையான, தனிமைப்படுத்தப்பட்ட பகுதி, உயிர்ப்பே இல்லாத ஒரு பகுதி, கடலின் அடிப்பகுதி கூட மேற்பரப்பில் இருந்து 13,000 அடி (2.5 மைல்) தொலைவில் உள்ளது.
ஆனால் இந்த பாழடைந்த இடத்தின் பனிக்கட்டியுடன் கூடிய தண்ணீருக்கும், சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிலையத்துக்கும் (ISS) இடையே மற்றொரு தொடர்பு உள்ளது. இது, பூமியின் சுற்றுப் பாதையில் காலாவதியான விண்கலங்களின் உடைந்த பாகங்கள் சிதறிக்கிடக்கும் ஒரு குப்பைக் கிடங்காக இருக்கிறது. பாயிண்ட் நெமோ விண்கலங்களின் சவக் கிடங்காகவே பயன்படுத்தப்படுகிறது.

பட மூலாதாரம், The Ocean Race
நிலப்பகுதியிலிருந்து வெகு தொலைவில் இருப்பதால் கடலின் அந்தப் பகுதிக்கு யாரும் செல்வதில்லை.
1971 மற்றும் 2018 க்கு இடையில், அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான் மற்றும் ஐரோப்பா உள்ளிட்ட உலகளாவிய விண்வெளி நிறுவனங்கள், பாய்ண்ட் நெமோவைச் சுற்றியுள்ள கடலில் மக்கள் வசிக்காத பகுதியில் 263 க்கும் மேற்பட்ட விண்வெளி பொருட்களை அழித்துள்ளன. இந்த பட்டியலில் சோவியத் கால மிர் விண்வெளி நிலையம் மற்றும் அந் நாட்டின் சல்யுட் திட்டத்தின் ஆறு விண் பொருட்கள், அத்துடன் 140 ரஷ்ய மறுவினியோக வாகனங்கள், ஜப்பானால் தொடங்கப்பட்ட ஆறு சரக்கு பரிமாற்ற வாகனங்கள் மற்றும் ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சியின் (ஈசா) ஐந்து விண்பொருட்கள் ஆகியவை அடங்கும். மிக சமீபத்தில், இந்த கடல் குப்பைக் கிடங்கில் ஸ்பேஸ்எக்ஸ் கேப்சூல் ராக்கெட்டின் ஒரு பகுதியும் போடப்பட்டதாக கருதப்படுகிறது. தற்செயலாக, அதன் மிக அருகில் இருக்கும் சர்வதேச விண்வெளி மையம் (ISS), வெறும் எட்டு ஆண்டுகளில் இந்த தொலைவுப் பகுதியில் உள்ள குப்பைக் கிடங்கில் போடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது .
பாயிண்ட் நெமோவில் ஏன் விண் பொருட்கள் போடப்படுகின்றன? என்ன மாதிரியான உடைந்த அவற்றின் எச்சங்கள் தற்போது அதன் ஆழத்தில் போடப்பட்டுள்ளன? எதிர்கால தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் இதையெல்லாம் வைத்து என்ன செய்யவார்கள்?
23 மார்ச் 2001 அன்று, ரஷ்யாவின் மாஸ்கோ நேரப்படி காலை 8:59 மணிக்கு, அந்நாட்டு விண்வெளி வீரர்கள் குழு ஒன்று தெற்கு பசிபிக் கடல் பகுதியில் உள்ள பிஜி தீவில் வானத்தைப் பார்த்துக் காத்திருந்தது. நாட்டின் விண்வெளி நிறுவனம் ஒரு வருடத்திற்கும் மேலாக தயாராகிக் கொண்டிருந்த தருணம் அது. ஆனால் அந்த ஒரு வருடம் விரைவில் முடிந்தது. சில வினாடிகளில், தங்க விளக்குகளின் வரிசை ஒன்று வானத்தில் எரிந்து கொண்டிருந்ததைக் காண முடிந்தது. அவற்றின் பின்னால் புகையாலான ஒரு நீளமான பாதை ஒன்று உருவானது. இந்த காட்சியின் போது ஒலியின் வேகத்தை விட அதிக வேகத்தில் விண்பொருட்கள் பறந்து சென்றதால் ஒலி ஏற்றத்துடன் கூடியதாக இருந்தது.
இந்த நாளில்தான் மிர் விண்வெளி நிலையம் “முடிவுக்கு வந்தது”. உலகைச் சுற்றி, அதன் 190 கோடி கிமீ (120 கோடி மைல்கள்) பயணத்தை முடித்துக்கொண்டது. விண்வெளியில் உருவாக்கப்பட்ட உலகின் முதல் ஆராய்ச்சி மையமான அதன் அனைத்து பொருட்களும் எரிந்த 134 டன் குப்பைகளாக பூமியின் வளிமண்டலத்தில் மீண்டும் நுழைந்தன. இந்த குப்பைத் தொகுதி ஆரம்பத்தில் ஜப்பான் நாட்டு விண்வெளியில் நுழைந்து அதைக் கடந்து சென்றது. பின்னர், தென் பசிபிக் பெருங்கடலில் மக்கள் வசிக்காத பகுதியான பாயிண்ட் நெமோவைச் சுற்றியுள்ள கடல் பிரதேசத்தில் விழுந்தது.

பட மூலாதாரம், @2023 Google INEGI
ஆஸ்திரேலியாவின் தெனிகிழக்கிலும், சிலி நாட்டின் தென்மேற்கிலும் உள்ள இந்த கடல்பகுதி பாய்ன்ட் நெமோ என அழைக்கப்படுகிறது.
ஆனால் மிர் விண்வெளி மையத்தின் சில பொருட்கள் கிடைத்திருப்பதாக அறிவித்த நேர்மையற்ற ஆன்லைன் விற்பனையாளர்கள் சிலர், உடனடியாக அந்த குப்பைகளை விற்கத் தொடங்கினர். இது விந்தையானது மட்டுமல்ல, அது போலியானது என்று வெளிப்படையாக ஒப்புக்கொண்டே இந்த விற்பனை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும் சிலர், மிர் விண்வெளி மையத்தின் சில பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக பல ஆண்டுகளாக வதந்திகளைப் பரப்பிவந்தனர். ஆனால், யாரும் ஒரு பொருளையும் மீட்டெடுக்கவில்லை. மிர் விண்வெளி மையம் முழுவதையும் பசிபிக் பெருங்கடல் விழுங்கியது. அது தொடர்ந்து அங்கேயே உள்ளது. எஞ்சியிருக்கும் எந்த குப்பைத் துண்டுகளும் பல கிலோமீட்டர் தண்ணீருக்கு அடியில் படர்ந்து கிடக்கும்.
கேள்வி என்னவென்றால், பூமியின் வளிமண்டலத்தைக் கடந்து வந்து, திடீரென கடலில் விழுந்து மூழ்கிய மிர் விண்வெளி மையம் மற்றும் இதேபோன்ற பயணங்களை மேற்கொண்ட பிற செயலிழந்த விண் பொருட்கள் தீ பிழம்புடன் பயணம் மேற்கொண்ட பின் எத்தனை பொருட்கள் தப்பியிருக்கும் என்பதே.
விண் பொருள்கள் விண்வெளியில் இருந்து திரும்பி வரும்போது, அவை நமது பூமியைச் சுற்றியுள்ள வாயு மூலக்கூறுகளை உடைத்துப் பயணிக்க வேண்டும். சுமார் 17,500 மைல் (28,164 கிமீ/மணி) வேகத்தில், விண்பொருட்கள் -அவை விண்கற்கள், சிறுகோள்கள், பழைய விண்கலங்கள் அல்லது மனிதர்களைச் சுமந்து வரும் பொருளாக இருந்தாலும் – அத்தகைய வேகத்தில் காற்றைத் துளைக்கும். அப்போது, அவற்றின் காற்று மூலக்கூறுகளின் வேதியியல் ரீதியான பிணைப்புகள் உடைக்கப்பட்டு மின்சாரம் சார்ஜ் செய்யப்படுகிறது. இதனால் அவை “எரிந்து” விடுகின்றன. மேலும் சிறிய பொருட்களை எடுத்துக்கொண்டால் அவை தரையில் படுவதற்கு முன்பே ஆவியாக மறைந்துவிடும். ஆனால் மிகவும் பொருட்கள் இப்படி எரிந்து ஆவியாவதில்லை.
ஆஸ்திரேலியாவின் ஃபிளிண்டர்ஸ் பல்கலைக்கழகத்தின் விண்வெளித் தொல்லியல் துறையின் இணைப் பேராசிரியரான ஆலிஸ் கோர்மனின் கூற்றுப்படி, விண்கலத்தின் பாகங்கள், மீண்டும் பூமியில் நுழைந்த பிறகும் அப்படியே இருக்கும். அவை அவற்றின் உண்மையான தேவைக்காக அதிக வெப்பம் அல்லது அழுத்தத்தைத் தாங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருப்பதால் அவற்றிற்கு பெரிய பாதிப்புகள் ஏற்படாது.
“பெரும்பாலும், எரிபொருள் நிரப்பப் பயன்படும் டேங்குகள் அல்லது ராக்கெட் பூஸ்டர்கள் இது போன்ற தாக்கங்களைக் கடந்தும் பாதிப்படையாமல் இருக்கும். ஏனெனில் அவற்றில் கிரையோஜெனிக் எரிபொருள்கள் [அவை திரவமாக மாறும் வரை குளிரூட்டப்பட்டு ஒடுக்கப்பட்ட வாயு உந்துசக்தியாக இருக்கும் ] உள்ளன. அல்லது அவை உண்மையில் அதிக வெப்பநிலையில் மட்டுமே எரிகின்றன. எனவே எரிபொருள் டேங்குகள் அவற்றைத் தாங்குவதற்கு மிகவும் வலுவாக இருக்க வேண்டும்,” என்கிறார் கோர்மன்.
இவை பொதுவாக பலகை விண்கலம் அல்லது ராக்கெட்டுகளில் உள்ள மிகப்பெரிய திடப் பொருட்களைக் குறிக்கின்றன. மேலும் அவை கூடுதல் காப்பு மூலம் பாதுகாக்கப்படுகின்றன. “எனவே நிறைய துருப்பிடிக்காத எஃகு, அலுமினிய உலோகக்கலவைகள், டைட்டானியம் உலோகக்கலவைகள் போன்றவை பயன்படுத்தப்பட்டிருக்கும்,” என்று அவர் கூறுகிறார். காப்புக்கலன் பெரும்பாலும் கார்பன் ஃபைபர்கள் போன்ற கார்பன் கலவைகளிலிருந்து தயாரிக்கப்படுகிறது. அவை வெப்பமடையும் போது எரிவதில்லை – அவை தயாரிக்கப்படும் போது தொடக்கநிலையில் கூட 287 டிகிரி செல்சியஸ் (549F) வரை வெப்பநிலையைத் தாங்கும்.

பட மூலாதாரம், Alamy
விண்வெளியிலிருந்து பூமிக்குத் திரும்பும் பொருட்களின் குப்பைக் கிடங்காக பாய்ண்ட் நெமோ விளங்குகிறது.
இருப்பினும், பெரும்பாலான சந்தர்ப்பங்களில், விண்கலம் பூமியின் வளிமண்டலத்தில் மீண்டும் நுழைந்தவுடன், அவற்றின் இறுதி விதி என்னவாகும் என்பது பெரும்பாலும் ஒரு யூகமாகவே இருக்கும். “அவை தற்போது எங்கே இருக்கின்றன என்பது எங்களுக்கு அதிகமாகவோ அல்லது குறைவாகவோ தெரியும். ஆனால் நாங்கள் அவற்றைப் பார்க்கவில்லை. யாரும் [பாயிண்ட் நெமோ பகுதியைச் சுற்றி] ஆராய்ச்சிக் கப்பலுடன் சென்று அவற்றின் நிலையை உண்மையில் பார்க்க முயலவில்லை,” என்கிறார் கோர்மன்.
மேற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள எஸ்பெரன்ஸ் அருங்காட்சியகம் சில தகவல்களை அளிக்கிறது. அதே பெயரைக் கொண்ட கடலோர நகரத்தில் அமைந்துள்ள இந்த பிராந்திய அருங்காட்சியகம் ஒரு விசித்திரமான மற்றும் சீரற்ற பொருட்களைக் கொண்டுள்ளது – ஒரு பழைய மோட்டார் சைக்கிள், 19 ஆம் நூற்றாண்டின் ரயில் வண்டி, வகைப்படுத்தப்பட்ட பழங்கால விவசாய இயந்திரங்கள் – ஆனால் இந்த பொருட்களுக்காக அந்த அருங்காட்சியகம் மிகவும் பிரபலமானதாக மாறவில்லை.
இந்த அருங்காட்சியகத்தை முக்கிய இடத்துக்கு எடுத்துச் சென்ற ஒன்றை ஒரு பிளெக்சிகிளாஸ் கேபினட் மற்றும் மெட்டல் பேனாவில் காணலாம். இது லேமினேட் செய்யப்பட்ட காகிதத்துடன் கவனமாக சுற்றப்பட்ட குப்பைகளில் ஒன்றாக மாறுகிறது. உருளை வடிவ எஃகால் செய்யப்பட்ட ஒரு கண்கவர் நொறுங்கிய தண்ணீர் தொட்டி தான் அது. இது ஒரு காலத்தில் நைட்ரஜன், எஃகு உணவு உறைவிப்பான் மற்றும் பல்வேறு அசாதாரண வடிவிலான துருப்பிடித்த உலோகத் துண்டுகள் ஆகியவற்றைக் கொண்டிருக்கும் மர்மமான டைட்டானியக் கலனாகும். மிகப்பெரிய பொருளான இது ஒரு உலோக ஆக்ஸிஜன் தொட்டி ஆகும்- இது அமெரிக்காவின் முதல் விண்வெளி நிலையமான ஸ்கைலாப்பின், இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட மிகப்பெரிய துண்டான இது தெளிவான பிளாஸ்டிக்கில் சுற்றிவைக்கப்பட்டிருக்கும் சுமார் 6 அடி நீளம் (1.8 மீ) கொண்ட தொட்டி.

பட மூலாதாரம், Getty Images
ஸ்கைலாப் விண்வெளி நிலையத்தின் உடைந்த பாகங்கள் ஆஸ்திரேலியாவில் கண்டெடுக்கப்பட்டன.
இது 14 மே 1973 இல் பூமியின் சுற்றுப்பாதையில் செலுத்தப்பட்டது – ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு அது பூமிக்குத் திரும்பியது. நாசா ஆரம்பத்தில் ஸ்கைலாப் தனது பணியை மேலும் சில காலத்துக்குத் தொடர முடியும் என்று நம்பியது. ஆனால் அதன் சுற்றுப்பாதை எதிர்பார்த்ததை விட வேகமாக சிதைந்தது. மேலும் மனிதகுலம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் 1979 இன் தொடக்கத்தில் இந்த 77 டன் விண்வெளி நிலையம் விண்ணில் தனது பணிகளைத் தொடர முடியாது என்பது தெளிவாகியது.
அனைத்து பெரிய விண்வெளிப் பொருட்களைப் போலவே, ஸ்கைலாப்பை பத்திரமாக பூமியில் தரையிறக்குவது மிகவும் இன்றியமையாத பணியாகக் கருதப்பட்டது. இதன் காரணமாகவே அது மனித நடவடிக்கைகளுக்கு அப்பாற்பட்ட வெகு தொலைவில் கடலில் மூழ்கடிக்கப்பட்டது. ஆனால் அதை அங்கிருந்து மீட்கவோ, அகற்றவோ யாரும் திட்டமிடவில்லை. மேலும் பூமிக்கு திரும்பும் பயணத்தின் போது அந்த மிகப்பெரிய விண்வெளி நிலையத்தை வழிநடத்த நாசா பொறியாளர்களால் சிறிய அளவில் துல்லியமாக எதையும் செய்ய முடியவில்லை. அதன் இறுதி நாளில், ஸ்கைலாப் ஒரு மோசமான பாதிப்பை எதிர்கொண்டது. அதன் இயந்திரங்களின் வேகத்தைக் குறைத்துக்கொண்டு அது வானத்திலிருந்து கீழே வந்து ஆஸ்திரேலியாவின் தென்மேற்கே இந்தியப் பெருங்கடலில் மூழ்கிவிடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அது திட்டமிட்டபடி நடக்கவில்லை.
ஜூலை 11, 1979 அன்று அதிகாலையில், மத்திய ஆஸ்திரேலியா முழுவதும் ஸ்கைலாப்பின் குப்பைகள் விழுந்து கிடந்தன. தொலைநோக்கியின் உடைந்த உதிரிபாகங்கள், எரிபொருள் தொட்டிகளின் சிறிய பகுதிகள், ஒரு காரீயத்திலான பட பெட்டகம், 22 அடி நீளம் கொண்ட (6.7 மீ) ஏர்லாக் அறையைப் பாதுகாக்கும் ஒரு கவசம் – மற்றும் ஒரு பெரிய ஆக்ஸிஜன் தொட்டி உள்ளிட்டவை விவசாய நிலங்களில் பரவிக் கிடந்ததாக உள்ளூர்வாசிகள் தெரிவித்தனர். மொத்தத்தில், ஒவ்வொன்றும் 454 கிலோவுக்கும் (1,000lb) அதிகமான எடையுள்ள குறைந்தது 38 உடைந்த உதிரிபாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக நாசா தெரிவித்துள்ளது.

பட மூலாதாரம், Getty Images
ஸ்கைலாப்பின் ஆக்ஸிஜன் தொட்டி இன்றும் ஒரு காட்சிப் பொருளாக இருந்துவருகிறது.
இறுதியில், இந்த விண்வெளிக் கழிவுகளில் பெரும்பாலானவை ஷைர் ஆஃப் எஸ்பெரன்ஸில் விழுந்தன. மேலும் இந்த விண்பொருள் குப்பைகள் அங்கே விழுந்ததற்காக நாசாவிற்கு $400 (£329) அபராதம் விதிக்க ஆஸ்திரேலியா ஒரு புதிய சட்டத்தை இயற்றியது. ஆனால் இந்த சம்பவம் நாசா விண்வெளி நிறுவனத்திற்கு சங்கடமாக இருந்தாலும், விண்ணிலிருந்து பூமிக்குத் திரும்பிய ஒரு பெரிய பொருளை ஆய்வு செய்ய உதவியது. உலோகத்தின் உறைந்த ஒரு பெரும் பொருள் விழுந்தது என்று மட்டும் இதை நாம் சுருக்கிவிடமுடியாது. ஒரு ஹாட்ச் கதவு உட்பட, வியக்கத்தக்க சிக்கலான கட்டமைப்புகள் தப்பிப்பிழைத்தன என்பதையும் காட்டியது.
எனவே பாயிண்ட் நெமோவில் உள்ள விண்பொருட்களின் உடைந்த பாகங்கள் எவ்வளவு பெரியதாக இருக்கும்?
மிர் விண்வெளி நிலையத்தைப் பொறுத்தளவில், அது மீண்டும் பூமியின் வளிமண்டலத்தில் நுழையும் நேரத்தில், இந்த மாபெரும் விண்வெளி நிலையம் – சுமார் 13 மீ (43 அடி) நீளமுள்ள ஒரு மைய அடுக்கையும், ஐந்து ஆய்வக தொகுதிகளையும் கொண்டது – 1,500 துண்டுகளாக உடைந்துவிடும் என்று கணிக்கப்பட்டது. பெரிய பகுதிகள் ஒரு சிறிய காரின் அளவு கூட இருக்கலாம் என்று நிபுணர்கள் பரிந்துரைத்தனர் . இவற்றில் எரிபொருள் தொட்டிகள் , பேட்டரிகள், பல்க்ஹெட்கள் மற்றும் சேமிப்பு பெட்டிகள் ஆகியவை அடங்கும். இவை அனைத்தும் பாயிண்ட் நெமோவைச் சுற்றி கடலுக்கு அடியில் ஆழமாக விழுந்துகிடக்கின்றன. அலுமினியத்தாலான சில பொருட்களும்கூட பத்திரமாக பாதிப்பின்றி இருந்திருக்கலாம்.
2031 இல் சுமார் 400 டன் எடை கொண்ட சர்வதேச விண்வெளி நிலையம் மீண்டும் பூமிக்கு திரும்பும் போது, பாயிண்ட் நெமோ போன்ற மக்கள் வசிக்காத பகுதியின் மீது உடைந்த பாகங்கள் விழுவது முன்னெப்போதையும் விட முக்கியமானது. அதை பத்திரமாகக் கடலில் விழச் செய்யும் திட்டம் ஏற்கனவே தயாரிக்கப்பட்டுள்ளது. “அந்த விண்வெளி மையத்தை அதன் சுற்றுவட்டப் பாதையில் இருந்து பிரிக்கும் இயந்திரம் செய்தவற்கான திட்டங்களை பல்வேறு தொழில் நிறுவனங்களிட்ம் இருந்து பெற்று அவற்றை நாசா வெளியிட்டுள்ளது,” என்று ஜான்சன் விண்வெளி மையத்தின் பிரதிநிதி ஒரு மின்னஞ்சலில் விளக்கினார்.
சுற்றுவட்டப் பாதையிலிருந்து பிரிக்கும் இயந்திரம் அந்த விண்வெளி மையம் திட்டமிட்டவாறு வளிமண்டலத்தில் நுழைவதற்கு ஒரு வருடத்திற்கு முன்பே விண்வெளி நிலையத்துக்கு அனுப்பிவைக்கப்படும். பின்னர் அந்த நிலையத்தின் இறுதி நாட்களில் செயல்படத் தயாராக இருக்கும். இந்த சிறப்பு விண்கலம், சர்வதேச விண்வெளி நிலையம் பூமியின் வளிமண்டலத்தில் எங்கு கடக்கிறது, எந்தப் பாதையில் பயணிக்கிறது என்பதைக் கட்டுப்படுத்தும். சர்வதேச விண்வெளி நிலையத்தின் சில பகுதிகள் எரிந்து போகும் போது, அடர்த்தியான அல்லது அதிக வெப்பத்தை எதிர்க்கும் பகுதிகள் எரியாமல் இருக்க வாய்ப்புள்ளது என்று நாசா கணித்துள்ளது. இதில் விண்வெளி நிலையத்தின் முதுகெலும்பாக இருக்கும் 18 மீட்டர் நீளமுள்ள எஃகு கட்டமைப்புகளும் அடங்கும்.

பட மூலாதாரம், Getty Images
விண்ணுக்கு அனுப்பிவைக்கப்படும் பொருட்கள் மீண்டும் பூமிக்கு திரும்பும் போது அவற்றின் உறுதியான பாகங்கள் பாதிப்பின்றி இருப்பதைக் காணமுடிகிறது.
இவையனைத்தும், பாயிண்ட் நெமோ எதிர்கால தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களுக்கு ஒரு தங்கச் சுரங்கமாக இருக்கும் என்பதைக் காட்டுகிறது. “எதிர்கால சந்ததியினர் அவற்றை ஆராய முடியும். அந்தக் குப்பைகளில் ஏதோ ஒன்றை நிச்சயமாக அவர்கள் ஆய்வு செய்வார்கள்,” என்று கோர்மன் கூறுகிறார். நூற்றுக்கணக்கான அல்லது ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு மனிதர்களால் தூக்கி எறியப்பட்ட கழிவுகள், கடந்த காலத்தில் மக்கள் எப்படி வாழ்ந்தார்கள், அவர்கள் என்ன சாப்பிட்டார்கள் மற்றும் எதை மதிப்பிட்டார்கள் என்பதை அறிய தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களால் அடிக்கடி பயன்படுத்தப்படுகிறது.
கடலோரம் கிடைத்த பழம்பொருட்களை ஆய்வு செய்வதன் மூலம் ஆராய்ச்சியாளர்கள் பண்டைய கடலோர வேட்டைக்காரர்களின் நடத்தையை நன்றாக புரிந்துகொள்ளமுடிந்தது. அவர்கள் உயிர்வாழ எந்தெந்த கடல் உணவுகளை நம்பியிருந்தனர் என்பதும் கண்டறியப்பட்டது. ஒரு விண்கலம் இப்படிக் குப்பையாகக் கிடந்தாலும் அதன் உடைந்த பாகங்கள் நிச்சயமாக எதிர்காலத்தில் கலைப்பொருட்களாக இருக்கும் என்று கோர்மன் கூறுகிறார். “அவர்கள் என்ன செய்வார்கள் என்றால், காலப்போக்கில் அது எவ்வாறு மாறியது என்பதையும் ஆய்வு செய்வார்கள்” என்று அவர் கூறுகிறார். “எது முந்தையது, அண்மைக்காலத்தியவை எவை, இடைப்பட்ட ஆண்டுகளில் பயன்படுத்தப்பட்ட தொழில்நுட்பம் போன்றவற்றில் இருக்கும் மாற்றங்களை அவர்கள் கண்டறியமுடியும்”
1,000 ஆண்டுகளில், மீண்டும் பயன்படுத்தக்கூடிய ராக்கெட்டுகளை நோக்கிய மாற்றம் கூட பாயிண்ட் நெமோவில் உள்ள குப்பைகளால் கிடைக்கலாம். “ஒரு கட்டத்தில், பூமியைச் சுற்றியுள்ள கடலில் என்ன இருக்கிறது என்பதைப் பற்றிய உலகளாவிய கணக்கெடுப்பை நாம் செய்து கொண்டிருக்கும் நிலையில், 2013 க்குப் பிறகு கடலில் குப்பைகள் கொட்டப்படுவது மிகவும் குறைந்துள்ளது என்பதைக் கவனிக்கமுடியும்,” என்கிறார் கோர்மன். “மக்கள் மறுசுழற்சி, மறுபயன்பாடு மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பைக் குறைப்பதை மதிக்கத் தொடங்குகின்றனர்,” என்று அவர் கூறுகிறார்.

பட மூலாதாரம், The Ocean Race
பசிபிக் பெருங்கடலின் தென்பகுதியில் இருக்கும் இந்த கடல் பரப்பு மனிதர்களால் பயன்படுத்தப்படாத பகுதியாக விளங்குகிறது.
உண்மையில், கோர்மன் பாயிண்ட் நெமோவில் உள்ள கலைப்பொருட்களை ஆரம்பகால விண்வெளி ஆய்வின் முக்கியமான பதிவாகக் கருதுகிறார். மற்றும் அதிர்ஷ்டவசமாக, அது அநேகமாக எங்கும் போகவில்லை. தென் பசிபிக் முழுவதும் சிதறிக்கிடக்கும் எச்சங்கள் குறிப்பிடத்தக்க வகையில் அப்படியே இருப்பது மட்டுமல்லாமல், அவை பாதுகாப்பாக இருக்கத் தேவையான சிறந்த இடங்களில் கிடக்கின்றன.
பாயிண்ட் நெமோவைச் சுற்றியுள்ள நீர் பூமியில் யாரும் பயன்படுத்தாத பகுதியில் உள்ள தண்ணீராகக் கருதப்படுகிறது. அதனால், அந்தத் தண்ணீர் விண்பொருட்களைப் பத்திரப்படுத்திவைக்க ஒரு சிறந்த உதவியை அளிக்கிறது. அந்த பொருட்கள் நிலப்பகுதியிலிருந்து வெகு தொலைவில் உள்ளன. அந்த தண்ணீர் தான் கடலுக்கு ஊட்டச்சத்துக்களை அளிக்கும் நீராகக் கருதப்படுகிறது. மேலும், ஆழ்கடலில் நிலவும் ஆக்ஸிஜன் பற்றாக்குறை, உறைபனி-வெப்பநிலை மற்றும் சூரிய ஒளியின் மொத்த பற்றாக்குறை ஆகியவற்றுடன் இணைந்து, துருப்பிடிக்காத நிலையில் பத்திரமான நிலையில் அந்தப் பொருட்கள் இருக்கும்.
“இதில் முக்கிய விஷயம் என்னவென்றால், இந்தப் பொருட்கள் உப்புநீரின் இரசாயன எதிர்வினைகளைக் கடந்தும் பத்திரமாக இருக்கும் என்பதே,” என்கிறார் கோர்மன். பல முக்கியமான விண்கல பாகங்கள் துருப்பிடிக்காத எஃகு, டைட்டானியம் மற்றும் அலுமினிய கலவைகள் போன்ற உலோகங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளன. இதனால் அவை பத்திரமாக இருக்கும்,” என்று அவர் கூறுகிறார்.
1,000 ஆண்டுகளில், பாயிண்ட் நெமோவில் உள்ள விண்கலம் ஒப்பீட்டளவில் நல்ல நிலையில் இருக்கும் என்று கோர்மன் யூகிக்கிறார். “இது வரலாற்று சிறப்புமிக்க கப்பல் விபத்துக்களுடன் நீங்கள் காணக்கூடிய ஒன்று – அவை தண்ணீருக்கு அடியில் நன்றாகப் பாதுகாக்கப்படுகின்றன. மேலும் அவை மேற்பரப்புக்கு கொண்டு வரப்படும் போது சிதைவு ஏற்படத் தொடங்குகிறது.”
எனவே, பாயிண்ட் நெமோவில் உள்ள புதிரான விண்வெளி கலைப்பொருட்களை இதுவரை யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை என்றாலும், கடற்பரப்பில் முழு இருளில் பதிந்துகிடக்கும் ஏராளமா பொருட்கள் இருக்கலாம். குறைந்தபட்சம் இப்போதைக்கு, அந்தப் பொருட்கள், விண்வெளியின் இருண்ட வெறுமையிலிருந்து மீண்டு மற்றொரு தனிமையான வெற்றிடத்திற்கு இடம் மாறியுள்ளன
நன்றி
Publisher: பிபிசிதமிழ்