தமிழ்நாடு: இஸ்லாமியர் வாக்குகளின் பக்கம் திரும்புகிறதா அ.தி.மு.க?

தமிழ்நாடு: இஸ்லாமியர் வாக்குகளின் பக்கம் திரும்புகிறதா அ.தி.மு.க?

எடப்பாடி பழனிச்சாமி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

பா.ஜ.க. கூட்டணியைவிட்டு அ.தி.மு.க. வெளியேறிய சில நாட்களிலேயே தமீமுன் அன்சாரி எடப்பாடி கே. பழனிச்சாமியை சந்தித்தார்.

நீண்ட நாட்களாக சிறையில் உள்ள இஸ்லாமியக் கைதிகளின் விடுதலைக்குக் குரல் கொடுத்திருப்பதன் மூலம், பா.ஜ.க. கூட்டணியால் தான் இழந்ததாகக் கருதும் இஸ்லாமியர்களின் வாக்குகளை அ.தி.மு.க. ஈர்க்க முயல்கிறது. இது பலனளிக்குமா?

கடந்த சில வாரங்களுக்கு முன்புதான் பா.ஜ.கவுடனான கூட்டணியை முறித்துக் கொண்டிருந்த அ.தி.மு.க. தான் இழந்ததாகக் கருதும் சிறுபான்மையினரின் வாக்குகளை நோக்கித் திரும்பும் என்பது எதிர்பார்க்கப்பட்டதுதான்.

அந்த நிலையில்தான் மனிதநேய ஜனநாயகக் கட்சியின் பொதுச் செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான தமீமுன் அன்சாரி எடப்பாடி கே. பழனிச்சாமியைச் சந்தித்தார்.

இந்தச் சந்தப்பு அரசியல் வட்டாரங்களில் சலசலப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், செவ்வாய்க்கிழமையன்று சட்டப்பேரவையில் இஸ்லாமியக் கைதிகள் தொடர்பான கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவரப்பட்டது.

அதன் மீது பேசிய அ.தி.மு.க. பொதுச் செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே. பழனிச்சாமி, நீண்ட நாட்களாக சிறையில் உள்ள 36 பேரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமெனக் கோரினார்.

“கோவை குண்டு வெடிப்பு வழக்கில் 16 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. மேலும் 20 பேர் பல்வேறு குற்ற வழக்குகளில் தண்டனைப் பெற்று சிறையில் உள்ளனர். மொத்தம் 36 இஸ்லாமியர்கள் 20 முதல் 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்து வருகின்றனர்.

அவர்களை விடுவிக்க வேண்டும் என தமிழகத்தில் உள்ள பல இஸ்லாமிய அமைப்புகளும் அரசியல் கட்சியினரும் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். இவர்களின் வயது மூப்பு, உடல்நலக்குறைவு, மற்றும் அவர்களது குடும்பத்தினரின் வேண்டுகோள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு அவர்களை விடுதலை செய்ய முன்வர வேண்டும்” என்று பேசினார்.

சிறுபான்மையினர் மீது அதிமுகவிற்கு திடீர் பாசமா ?

அதிமுக

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

சிறுபான்மை மக்களை இவர்கள்தான் (தி.மு.க.) ஆதரிப்பதைப் போலவும் உதவிசெய்வதைப் போலவும் ஒரு தோற்றத்தை உருவாக்கி வைத்திருந்தார்கள் எனப் பேசினார் எடப்பாடி பழனிச்சாமி.

இதற்குப் பிறகு அவையில் முதலமைச்சருக்கும் எடப்பாடி கே. பழனிச்சாமிக்கும் இடையில் நடந்த வாக்குவாதத்தை அடுத்து வெளிநடப்புச் செய்ததது அ.தி.மு.க. அப்போது செய்தியாளர்களைச் சந்தித்தகு எடப்பாடி கே. பழனிச்சாமி அளித்த பேட்டி, பல விஷயங்களைக் கோடிட்டுக் காட்டியது.

“இஸ்லாமியர்கள் மீது அ.தி.மு.கவுக்கு ஏன் திடீர் பாசம் என கேள்வி எழுப்புகிறார் முதலமைச்சர். இதற்கு பதில் சொல்ல எழுந்தால், அதற்கு அனுமதி மறுக்கிறார் சபாநாயகர். இதுநாள் வரை சிறுபான்மை மக்களை ஒரு மாயாஜாலத்தில் வைத்துக்கொண்டிருந்தார்கள்.

சிறுபான்மை மக்களை இவர்கள்தான் (தி.மு.க.) ஆதரிப்பதைப் போலவும் உதவிசெய்வதைப் போலவும் ஒரு தோற்றத்தை உருவாக்கி வைத்திருந்தார்கள். சிறுபான்மையின மக்கள் எங்களை நாடும்போது, அவர்களுக்கு கோபம் வருகிறது. தி.மு.க. இஸ்லாமியர்களுக்கு என்ன செய்தது? நாங்கள் எவ்வளவோ செய்திருக்கிறோம்.

ஏதோ இவர்கள் மட்டும்தான் சிறுபான்மையினரை ஆதரிப்பதைப் போலவும் இவர்கள் ஆட்சிக்கு வந்தால்தான் சிறுபான்மையினரைப் பாதுகாப்பார்கள் என்பதைப் போலவும் மாயத் தோற்றத்தை ஏற்படுத்திவந்தார்கள். அந்தத் தோற்றம் கலையும்போது கவன ஈர்ப்புத் தீர்மானத்திற்கு எதிராகப் பேசுகிறார் முதலமைச்சர்” என்றார் எடப்பாடி கே. பழனிச்சாமி.

பா.ஜ.க. கூட்டணியைவிட்டு அ.தி.மு.க. வெளியேறிய சில நாட்களிலேயே தமீமுன் அன்சாரி எடப்பாடி கே. பழனிச்சாமியை சந்தித்தார். இந்த சந்திப்பை வைத்து, சிறுபான்மையினருக்கு ஆதரவாக தாங்களும் இருப்பதாக காட்டிக்கொள்ள அ.தி.மு.க. முயல்வதாக விமர்சனங்களும் எழுந்தன.

அதிமுக

பட மூலாதாரம், AIADMK TWITTER

படக்குறிப்பு,

அ.தி.மு.க. பொதுச் செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே. பழனிச்சாமி, நீண்ட நாட்களாக சிறையில் உள்ள 36 பேரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமெனக் கோரினார்

‘எந்த அரசியலும் இல்லை’ – தமீமுன் அன்சாரி

ஆனால், அந்தச் சந்திப்பிற்குப் பின்னால் எந்த அரசியலும் இல்லை என்கிறார் தமீமுன் அன்சாரி.

“36 இஸ்லாமிய சிறைக் கைதிகள் விவகாரத்தை நாங்கள் நீண்ட காலமாகப் பேசிவருகிறோம். வரும் சட்டமன்ற கூட்டத் தொடரில் இது தொடர்பாக ஒரு கவன ஈர்ப்புத் தீர்மானத்தைக் கொண்டுவர வேண்டுமெனக் கோரி பா.ஜ.கவைத் தவிர்த்த எல்லாக் கட்சித் தலைவர்களையும் சந்தித்து பேசுவது என முடிவெடுத்தோம்.

அதன்படி முதலாவதாக, தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் பாலகிருஷ்ணன்.

காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் கே.எஸ். அழகிரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் முத்தரசன், தி.மு.கவைச் சேர்ந்த அமைச்சர் ரகுபதி, தொல். திருமாவளவன் ஆகியோரைச் சந்தித்து இந்தக் கோரிக்கையை முன்வைத்தோம்.

இதற்குப் பிறகுதான் எடப்பாடி கே. பழனிச்சாமியை சந்தித்தோம். ஆனால், அந்தச் சந்திப்பு மட்டும்தான் விவாதமானது” என்கிறார் தமீமுன் அன்சாரி.

ஆகவே இனி அ.தி.மு.க. இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக இருக்கும் என நம்புகிறீர்களா எனக் கோட்டபோது, “நாங்கள் கவன ஈர்ப்பு தீர்மானத்தைக் கொண்டுவரக் கோரி சந்தித்தோம். அந்த விவகாரத்தில் அவர்கள் நல்ல முறையில் செயல்பட்டிருக்கிறார்கள், அவ்வளவுதான்” என்கிறார் தமீமுன் அன்சாரி.

ஆனால், வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் சிறுபான்மையினர் வாக்குகள் முழுமையாக தி.மு.க. கூட்டணிக்குக் கிடைக்கக்கூடாது என்பதற்காக அ.தி.மு.க. இதுபோல செயல்படுவதாக குற்றம்சாட்டுகிறார் மனித நேய மக்கள் கட்சியின் தலைவரும் சட்ட மன்ற உறுப்பினருமான எம்.எச். ஜவாஹிருல்லா.

“இந்தியா கூட்டணி தமிழ்நாட்டில் 40 தொகுதிகளிலும் வெற்றிபெறும் சூழல் இருக்கிறது. அதை நடக்காமல் செய்யவேண்டும் என்பதற்காக, பா.ஜ.க. கூட்டணியில் இருந்து விலகியதைப்போல அ.தி.மு.க. சொல்கிறது.

இஸ்லாமியக் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை 2023ல் எழக்கூடிய புதிய கோரிக்கை அல்ல. 2011லிருந்து சட்டமன்றத்தில் எழுப்பப்பட்டுவரும் கோரிக்கைதான். அதற்குப் பிறகும்கூட பல போராட்டங்கள் நடத்தியிருக்கிறோம். அப்போதெல்லாம் அ.தி.மு.க. எதையும் செய்யவில்லை.

சிறுபான்மையினர்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

36 இஸ்லாமியர்கள் பல வருடங்களாக சிறையில் இருக்கிறார்கள்.

தி.மு.க. நடவடிக்கை எடுக்க ஆரம்பித்த பிறகு அ.தி.மு.க. தங்களால்தான் இது நடந்தது என்பதைப் போலக் காட்டுவதற்காக இந்த விவகாரத்தை எழுப்புகிறார்கள். உண்மையான அக்கறை இருந்திருந்தால் முன்பே செயல்பட்டிருக்கலாமே. அவர்களது நோக்கம் தி.மு.க. கூட்டணிக்குச் செல்லக்கூடிய வாக்குகளைப் பிரித்து பா.ஜ.கவுக்கு உதவுவதுதான்.

ஆகஸ்ட் 24ஆம் தேதியே 49 சிறைக் கைதிகளை விடுதலை செய்வதற்கான கோப்புகள் ஆளுநருக்கு அனுப்பப்பட்டுவிட்டன. ஆகவே இவர்கள் கோரிக்கை வைத்து இது நடப்பதாக சொல்ல முடியாது” என்கிறார் எம்.எச். ஜவஹிருல்லா.

தமிழ்நாட்டில் 2011ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, தமிழக மக்கள் தொகையில் 5.86 சதவீதம் பேர் இஸ்லாமியர்கள். ஆனால், 2021ஆம் ஆண்டில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் மொத்தமே 7 இஸ்லாமிய உறுப்பினர்கள்தான் தேர்வுசெய்யப்பட்டனர்.

2019ஆம் ஆண்டின் நாடாளுமன்றத் தேர்தல், 2021ஆம் ஆண்டின் சட்டமன்றத் தேர்தல் ஆகியவற்றில் அ.தி.மு.க., பா.ஜ.கவுடன் கூட்டணி அமைத்ததால், இஸ்லாமியக் கட்சிகளுக்கு தி.மு.கவே ஒரு வாய்ப்பாக இருந்தது. ஆனால், தற்போது அந்தக் கூட்டணி உடைந்ததாக அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், அ.தி.மு.கவும் இன்னொரு வாய்ப்பாக இருக்கலாம்.

தற்போது தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து அ.தி.மு.க. விலகியிருந்தாலும் கூட்டணியில் இருந்தபோது, சிறுபான்மையினர் தங்களுக்கு எதிரானதாகக் கருதிய சிஏஏ சட்டத்திற்கு ஆதரவளித்தது. அந்தச் சட்டம் சிறுபான்மையினருக்கு எதிரானதல்ல என்றும் விளக்கமளித்தது.

ஆனால், எந்தக் கூட்டணியில் இருந்தாலும் அ.தி.மு.க. எப்போதுமே சிறுபான்மையினருக்கு ஆதரவாகவே செயல்பட்டிருக்கிறது; அதன் தொடர்ச்சிதான் தற்போதைய நிலைப்பாடு என்கிறார் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்.

“36 இஸ்லாமியர்கள் பல வருடங்களாக சிறையில் இருக்கிறார்கள். ஆகவே அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று குரல் கொடுத்திருக்கிறோம்.

எம்.ஜி.ஆர். காலத்திலிருந்து அ.தி.மு.க சிறுபான்மையினருக்கு ஆதரவாக செயல்பட்டிருக்கிறது. 1998ல் எல்.கே. அத்வானியைக் குறிவைத்து குண்டுவெடுப்பு நடந்தவுடன் தன் ஆட்சியைக் கலைத்துவிடுவார்கள் என்ற எண்ணத்தில் அவர்கள் மீது அடக்குமுறையை ஏவியது தி.மு.கதான். ஆகவே, இப்போது சிறுபான்மையினர் வாக்குகளுக்காக இதைச் செய்வதாக சொல்லக்கூடாது. அவர்கள் எங்கள் பக்கம்தான் இருக்கிறார்கள். வரும் தேர்தலில் அது தெரியவரும்” என்கிறார் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்.

அதிமுக

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

தமிழ்நாட்டில் 2021ல் நடந்த தேர்தலில் மனித நேய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகியவை தி.மு.க. கூட்டணியில் இணைந்து போட்டியிட்டன

சிறுபான்மையினரை தன் பக்கம் இழுக்கும் முயற்சி அதிமுகவுக்கு பலனளிக்குமா ?

ஆனால், அது அவ்வளவு சுலபமாக இருக்கப்போவதில்லை என்கிறார் மூத்த பத்திரிகையாளரான ஷ்யாம். “சிறுபான்மையினரைத் தன் பக்கம் இழுக்க வேண்டுமென நினைக்கிறார் எடப்பாடி கே. பழனிச்சாமி. அது 2024ஆம் ஆண்டு தேர்தலில் நடக்காது. 2026 தேர்தலில் ஒரு வேலை பயனளிக்கலாம். இனி அ.தி.மு.க. திரும்பவும் பா.ஜ.க. கூட்டணிக்குள் 100 சதவீதம் செல்ல மாட்டார்கள் என்பதையும் இது காட்டுகிறது” என்கிறார் ஷ்யாம்.

தமிழ்நாட்டில் 2021ல் நடந்த தேர்தலில் மனித நேய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகியவை தி.மு.க. கூட்டணியில் இணைந்து போட்டியிட்டன. எஸ்டிபிஐ, அகில இந்திய மஜ்லிஸ் ஏ இட்டேஹதுல் முஸ்ஸிலிமீன் (AIMIM) ஆகிய இரு கட்சிகளும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகக் கூட்டணியில் இணைந்து போட்டியிட்டன.

2004ஆம் ஆண்டுக்குப் பிறகு, பா.ஜ.கவுடன் கூட்டணி கிடையாது என்பதே அ.தி.மு.கவின் முன்னாள் பொதுச் செயலாளரும் மறைந்த முதலமைச்சருமான ஜெ. ஜெயலலிதாவின் நிலைப்பாடாக இருந்தது. அதன் அடிப்படையிலேயே 2014ல் “மோடியா, இந்த லேடியா?” என்ற பிரசித்தி பெற்ற முழக்கத்தை முன்வைத்தார் ஜெயலலிதா.

ஆனால், 2016ல் ஜெயலலிதா மறைந்த பிறகு, 2019ல் பா.ஜ.கவுடன் கூட்டணி அமைத்தது அ.தி.மு.க. அதில் ஒரே ஒரு இடத்தில்தான் வெற்றி கிடைத்தது என்றாலும் 2020ல் நடந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலிலும் அ.தி.மு.க. பா.ஜ.கவுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டது. அதிலும் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. இதற்குப் பிறகு அமைச்சர் ஜெயக்குமாரும் பா.ஜ.கவின் பொன். ராதாகிருஷ்ணனும் வார்த்தை யுத்ததில் ஈடுபடும் அளவுக்கு நிலைமை சென்றது.

பிறகு, 2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலிலும் பா.ஜ.க. – அ.தி.மு.க. கூட்டணி தொடர்ந்தது. அதில் அ.தி.மு.க. ஆட்சியை இழந்தது. இதற்குப் பிறகு வந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பா.ஜ.க. கேட்ட இடங்களை அ.தி.மு.க. வழங்காத நிலையில், இரு கட்சிகளும் தனித்தே போட்டியிட்டன. இருந்தாலும் கூட்டணி தொடரும் என அறிவித்தன.

இந்த நிலையில்தான் சில வாரங்களுக்கு முன்பாக, தே.ஜ.கூவிலிருந்து விலகுவதாக அ.தி.மு.க. அறிவித்தது.

Facebook
Facebook
fb-share-icon
Telegram
WhatsApp
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *