
பட மூலாதாரம், Getty Images
மிக்ஜாம் புயலின் போது ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளால் 17 பேர் உயிரிழந்துள்ளனர். ஆனால் பல ஆயிரக்கணக்கானோர் தங்கள் வீடு உள்ளிட்ட உடைமைகளை இழந்து பொருளாதார ரீதியில் கிட்டத்தட்ட ஐந்து வருடங்கள் பின்னால் சென்றுள்ளனர். அதுவும் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் 2015ம் ஆண்டு பெரு வெள்ளத்தினால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்புகளிலிருந்து மீண்டு வந்திருக்கும் நேரத்தில், மீண்டும் ஒரு வெள்ள பாதிப்பை அவர்கள் சந்திக்க நேரிட்டுள்ளது. இந்த நிலையில் அவர்கள் இந்த சிக்கலில் இருந்து மீள்வதற்கு காப்பீடு திட்டங்களை அதிகம் நம்பியுள்ளனர்.
வாழ்நாள் காப்பீடு, மருத்துவ காப்பீடு, வாகன காப்பீடு ஆகியவையே மக்கள் பெரும்பாலும் பயன்படுத்தக் கூடிய காப்பீடு திட்டங்களாக இருக்கின்றன. ஆனால், வீடு காப்பீடு திட்டம் குறித்த விழிப்புணர்வு பலருக்கு இருப்பதில்லை. சென்னையில் வெள்ளம் போன்ற பேரிடர்கள் நிகழ தொடங்கியுள்ளதால், வீடு காப்பீடு திட்டம் உரிமையாளர்களுக்கும், வாடகைதாரர்களுக்கும் பயனுள்ளதாக அமையலாம்.
வீடுகளுக்கான காப்பீடு வழங்கும் திட்டம், பாரத் கிரஹ சுரக்ஷா என்ற திட்டமாக கடந்த ஆண்டு மத்திய அரசால் புதுப்பிக்கப்பட்டது. இந்த திட்டத்தின் படி, வீட்டின் உரிமையாளர்கள் தங்கள் வீடுகளுக்கும் உடைமைகளுக்கும் காப்பீடு எடுத்து வைத்துக் கொள்ளலாம். வாடகைதாரர்களும் வீட்டில் உள்ள பொருட்களுக்கு காப்பீடு எடுத்துக் கொள்ள இந்த திட்டம் வழி வகுக்கிறது.
வாழ்நாள் காப்பீடு நிறுவனங்கள் அல்லாத பிற காப்பீடு நிறுவனங்கள் பெரும்பாலானவற்றில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்தியாவில் உள்ள நான்கு பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்களான யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ், நியூ இந்தியா அசூரன்ஸ், ஓரியண்டல் இன்சூரன்ஸ் கம்பெனி, நேஷ்னல் இன்சூரன்ஸ் ஆகியவற்றிலும் தனியார் காப்பீட்டு நிறுவனங்களிலும் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

பட மூலாதாரம், Getty Images
வீட்டை காப்பீடு செய்வது எப்படி?
வீட்டுக்கான காப்பீடு, எந்த கட்டுமான பொருளினாலும் கட்டப்பட்ட வீட்டுக்கும் வழங்கப்படும். வீட்டில் உள்ள பார்க்கிங் பகுதி, வராண்டா, வீட்டு உபயோகத்துக்கான அவுட் ஹவுஸ், சுற்றுச்சுவர், சோலார் பேனல், தண்ணீர் தொட்டிகள், சுற்றுச்சுவருக்குள் இருக்கும் சாலைகள் இந்த காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பாதுகாக்கப்படும்.
வழங்கப்படும் காப்பீட்டுத் பணத்தின் 5% தொகை, கட்டுமான பொறியாளர் மற்றும் வடிவமைப்பாளருக்கான கட்டணமாக வழங்கப்படும். கட்டட இடிபாடுகளை அகற்றுவதற்கு, காப்பீட்டு பணத்தின் 2% தொகை வழங்கப்படும். வெள்ளம் போன்ற இயற்கை பேரிடர்களால், தங்கள் வீட்டில் குடியிருந்தவர்கள் வெளியேறியதால் ஏற்பட்ட வாடகை இழப்பு, அல்லது இயற்கை பேரிடரால் உங்கள் சொந்த வீடு சேதமடைந்து நீங்கள் வாடகைக்கு வேறு வீட்டுக்கு செல்ல வேண்டியிருந்தால் அதற்கான தொகையும் வழங்கப்படும்.
ஆனால், வீடுகளுக்கான காப்பீடு திட்டம் குறித்த விழிப்புணர்வு பலரிடம் இல்லை என்கிறார் தமிழ்நாடு நுகர்வோர் சங்கத்தின் சென்னை செயலாளர் பாலசுப்ரமணியன் தெரிவிக்கிறார். அவர் கூறுகையில், “இப்படியொரு காப்பீடு திட்டம் இருப்பதே பலருக்கு தெரிவதில்லை. அப்படியே தெரிந்தாலும், நமது ஊரில் அப்படி என்ன நிகழ்ந்து விடப் போகிறது என்ற அலட்சியப் போக்கு உள்ளது. வீடு காப்பீடு திட்டத்துக்கு விண்ணப்பிக்கும் போது, அதில் உள்ள பல அம்சங்களில் எது வேண்டும் என சரியாக தேர்வு செய்வது முக்கியம்” என்றார்.
ஓரியண்டல் இன்சூரன்ஸ் கம்பெனியின் நிர்வாகி ஜி.ஆனந்த் பிபிசி தமிழிடம் பேசும்போது, “2015 வெள்ளத்துக்கு பிறகு சிலர் வீடு காப்பீடு திட்டம் எடுக்க முன்வந்தனர். ஆனால் அதன் பிறகு அதில் ஆர்வம் குறைந்து விட்டது. வாழ்நாள் காப்பீட்டுக்கு பிரிமீயம் கட்டினால், ஒருவர் உயிரோடு இருந்தாலும் பிரிமீயத்தின் ஒரு தொகை மீண்டும் கிடைக்கும். ஆனால் வீடு காப்பீட்டுத் தொகையில் அப்படி இல்லை. எனவே இது தேவையற்ற செலவு என பலர் நினைக்கின்றனர். 2015 பெரு வெள்ளத்தில் ஒரு குடும்பம் இந்த காப்பீட்டை பெற்றிருந்தால், ஓராண்டுக்கு சுமார் ரூ.2,000 பிரிமீயம் கட்டியிருந்தாலும் அதிகபட்சம் ரூ.16 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை தான் செலவு ஆகியிருக்கும். அந்த செலவில், பல லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்களை தற்போது காப்பாற்றியிருக்கலாம்” என்றார்.

பட மூலாதாரம், Getty Images
யாரெல்லாம் இந்த காப்பீட்டை பெறலாம்?
உங்கள் சொந்த வீட்டில் நீங்கள் இருந்தால், உங்கள் வீட்டுக்கும் வீட்டில் உங்கள் டிவி, ஃபிரிட்ஜ், வாஷிங் மெஷின், சோஃபா, டைனிங் டேபிள் உள்ளிட்ட பொருட்களுக்கு காப்பீடு எடுத்துக் கொள்ளலாம். நீங்கள் வாடகை வீட்டில் இருந்தால், வீட்டு கட்டத்துக்கான காப்பீடு எடுத்துக் கொள்ள முடியாது. எனினும் நீங்கள் குடியிருக்கும் வீட்டில் உள்ள உங்களின் பொருட்களுக்கு காப்பீடு எடுத்துக் கொள்ளலாம். உங்களுக்கு சொந்தமான கட்டடத்தில் கடைகள் நடத்தப்பட்டாலோ, வேறு தொழில்கள் நடத்தப்பட்டு வந்தாலோ, இந்த காப்பீட்டுத் திட்டம் பொருந்தாது. (கடைக்காரர்களுக்கு வேறு காப்பீட்டுத் திட்டம் உள்ளது).
தோராயமாக 30 லட்சம் மதிப்புள்ள வீட்டுக்கு ஓராண்டுக்கு ரூ.2 ஆயிரம் முதல் ரூ.3 ஆயிரம் வரை பிரீமியம் தொகை கட்ட வேண்டியிருக்கும். வீட்டின் மதிப்பு குறைவாகவோ அதிகமாகவோ இருந்தால், அதற்கு ஏற்றவாறு பிரீமியம் தொகை மாறுபடும்.
இந்த காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் உள்ள பல்வேறு அம்சங்களில், எதெற்கெல்லாம் காப்பீடு வேண்டும் என்பதை வாடிக்கையாளரே தேர்வு செய்து கொண்டு, அதற்கான காப்பீட்டுத் தொகையை மட்டும் செலுத்தலாம்.
மழை வெள்ளம், புயல், பூகம்பம் போன்ற இயற்கை பேரிடர் காலங்களில் வீடுகளுக்கோ, வீட்டில் உள்ள பொருட்களுக்கோ ஏதேனும் சேதம் ஏற்பட்டால், அல்லது தீ விபத்து போன்ற வேறு ஆபத்தான சூழல்களில் வீட்டுக்கு சேதம் ஏற்பட்டால், காப்பீட்டுத் தொகையை பெற்றுக் கொள்ளலாம். அதாவது வீட்டை மீண்டும் கட்டுவதற்கு, காப்பீடு எடுத்த போது கட்டுமானப் பணிகளுக்கான செலவு என்னவாக இருந்ததோ, அதுதான் உங்கள் வீட்டுக்கான மொத்த காப்பீட்டுத் தொகை (sum insured).

பட மூலாதாரம், Getty Images
காப்பீடு எதற்கெல்லாம் உண்டு? எவ்வளவு கிடைக்கும்?
இந்த காப்பீட்டுத் திட்டத்தில் நான்கு பிரிவுகள் உள்ளன. கட்டப்பட்ட வீட்டுக்கான காப்பீடு, வீட்டில் உள்ள பொருட்களுக்கான காப்பீடு மற்றும் வீட்டில் உள்ள விலையுயர்ந்த பொருட்கள் மற்றும் தனிப்பட்ட விபத்துகளுக்கான காப்பீடு.
1.வீட்டு கட்டடம்
வீட்டின் பகுதி சேதமடைந்திருந்தால், அதை சரி செய்வதற்காக செலவு, கட்டட பொறியாளர், கட்டட வடிவமைப்பாளருக்கான கட்டணம், இடிபாடுகளை அகற்றும் செலவு, வாடகை இழப்பு, மாற்று இடத்தில் கட்ட வேண்டிய வாடகை ஆகியவை வழங்கப்படும்.
வீடு முழுவதுமாக சேதமடைந்தால், கட்டடம் மீண்டும் கட்டுவதற்கான தொகை வழங்கப்படும்.
2. வீட்டில் உள்ள பொருட்கள்
வீட்டில் உள்ள மின்சாதனப் பொருட்கள், வீட்டு சாதனப் பொருட்கள் பகுதியாக சேதமடைந்திருந்தால் அதை சீர் செய்வதற்கான செலவு காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும்.
வீட்டில் உள்ள பொருட்கள் முழுவதுமாக சேதமடைந்திருந்தால், அதே பொருள் அல்லது அதுபோன்ற வேறு ஒரு பொருள் வாங்குவதற்கான செலவுத் தொகை வழங்கப்படும்.
3. வீட்டில் உள்ள மதிப்புமிக்க பொருட்கள்
நகை, விலையுயர்ந்த சிலை, ஓவியம் போன்ற கலைப் பொருட்கள் ஆகியவை பகுதியாக சேதமடைந்திருந்தால், அதை சீர் செய்வதற்கான செலவு வழங்கப்படும்.
விலையுயர்ந்த பொருட்கள் முழுவதுமாக சேதமடைந்திருந்தால், காப்பீடு எடுக்கும் போது அந்த பொருளின் மதிப்புக்கான தொகை வழங்கப்படும்.
4. இது மட்டுமல்லாமல், இந்த காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், குறிப்பிடப்பட்டுள்ள ஆபத்தான சூழல்களினால் உங்கள் வீடு, உடமைகள் பாதிக்கப்பட்டு, தாங்களோ தங்களது இணையரோ உயிரிழக்க நேர்ந்தால், ஒருவருக்கு தலா ரூ.5 லட்சம் வழங்கப்படும்.
இந்த திட்டத்தின் கீழ், வீட்டு கட்டடத்துக்கான காப்பீடு எடுத்திருந்தால், வீட்டுப் பொருட்களுக்கான காப்பீட்டை தனியாக எடுக்க வேண்டாம். வீட்டு காப்பீட்டுத் தொகையில், 20% வீட்டில் உள்ள பொருட்களுக்கான காப்பீட்டுத் தொகையாக வழங்கப்படும். அதாவது 50 லட்சத்துக்கான காப்பீடு எடுத்திருந்தால், வீட்டில் உள்ள பத்து லட்சம் மதிப்பிலான பொருட்களுக்கான காப்பீடு அதில் வழங்கப்படும். வீட்டில் உள்ள பொருட்களின் மதிப்பு 10 லட்சத்துக்கும் மேல் இருந்தால், அவற்றுக்கு தனியாக காப்பீடு எடுத்துக் கொள்ள வேண்டும்.

பட மூலாதாரம், Getty Images
எந்தெந்த சூழல்களில் வீடு காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் பணம் பெற முடியும்?
இந்த திட்டத்தில் உள்ள தேவையான அம்சங்களை மட்டுமே வாடிக்கையாளர் தேர்வு செய்து கொள்ளலாம். உதாரணமாக சென்னையில் வசிப்பவர் தீ விபத்து மற்றும் வெள்ளத்தினால் ஏற்படும் பாதிப்புகளுக்கான காப்பீடு எடுத்துக் கொள்ளலாம், நிலச்சரிவின் போது ஏற்படும் சேதத்துக்கான காப்பீடு எடுப்பது அவசியமாக இருக்காது. எந்தெந்த காப்பீடு எடுக்கப்பட்டுள்ளதோ, அதற்கான பிரிமீயம் தொகை மட்டும் செலுத்தலாம்.
வீடும் உடைமைகளும் தீயினால் சேதமடையும் போது இந்த காப்பீட்டை பயன்படுத்தலாம், எனினும் ஏதாவது அரசு உத்தரவின் பெயரில் தீ வைக்கப்பட்டிருந்தால், அப்போது இந்த காப்பீட்டு திட்டம் செல்லாது.
குண்டு வெடிப்பு, மின்னல் வெட்டு, நிலநடுக்கம், எரிமலை சீற்றம் , புயல் சூறாவளி, வெள்ளம், சுனாமி, வெள்ளநீர் தேக்கம் போன்ற இயற்கை பேரிடர்களால் ஏற்படும் சேதத்துக்கு இந்த காப்பீட்டுத் தொகையை பெற முடியும்.
நிலச்சரிவு அல்லது பாறைகள் சரிவில், காப்பீடு எடுக்கப்பட்ட வீடு சேதம் அடைந்தால் இந்த காப்பீட்டின் கீழ் பணம் வழங்கப்படும். எனினும் வீடுகளில் ஏற்பட்ட இயல்பான விரிசல், மனிதர்களால் ஏற்படும் நில சரிவு அல்லது நகர்வு, கடல் அல்லது ஆற்று நீர் அரிப்பு, வடிவமைப்பு குறைபாடு அல்லது கட்டுமான குறைபாடு, தரமில்லாத பொருட்களின் பயன்பாடு காரணமாக ஏற்படும் சேதங்களுக்கு இந்த காப்பீட்டின் மூலம் பணம் பெற முடியாது.
காட்டுத்தீ காரணமாக ஏற்படும் பாதிப்புகள், வாகனங்களால் இடிக்கப்பட்டு ஏற்பட்ட சேதம், மரங்கள் விழுந்ததால் ஏற்பட்ட சேதத்துக்கும் பணம் பெறலாம். எனினும், விமானம் அல்லது பிற வான்வழி அல்லது விண்வெளி சாதனங்களின் மோதலால், சூப்பர்சோனிக் வேகத்தில் பயணிக்கும் ஊர்திகளால் ஏற்படும் சேதத்துக்கு காப்பீடு கிடைக்காது.

பட மூலாதாரம், Getty Images
ஏவுகணை சோதனைகளால் ஏற்படும் பாதிப்புகள், கலவரம், போராட்டம் மற்றும் தீய எண்ணத்துடன் ஏற்படுத்தப்படும் சேதம், பயங்கரவாதச் செயல்களால் ஏற்படும் பாதிப்புகளுக்கும் இந்த காப்பீட்டின் கீழ் பணம் பெற்றுக் கொள்ளலாம். எனினும், சட்டப்பூர்வ அதிகாரத்தின் மூலம் உங்கள் வீடு கையகப்படுத்தப்பட்டிருந்தாலோ, சட்டவிரோத ஆக்கிரமிப்பு மூலம் உங்கள் வீட்டை தற்காலிகமாக அல்லது நிரந்தரமாக யாராவது கையகப்படுத்தியிருந்தாலோ, இந்த காப்பீட்டின் பலன்களை பெற முடியாது.
இது மட்டுமல்லாமல் வீட்டில் ஏற்படும் சிறுசிறு பாதிப்புகளுக்கு கூட இந்த காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பணம் பெறலாம். உதாரணமாக, தண்ணீர் தொட்டி உடைப்பு, குழாய்களின் வெடிப்பு போன்றவை காரணமாக ஏற்படும் சேதங்கள், தானியங்கி தண்ணீர் பீய்ச்சும் இயந்திரங்களில் நீர் ஒழுகுதலால் உருவாகும் சேதம் ஆகியவற்றுக்கும் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பணம் பெறலாம். எனினும் வீட்டில் நீங்கள் மேற்கொள்ளும் பழுதுபார்ப்பு பணிகள் காரணமாக குழாய்கள் உடைந்தாலோ, தண்ணீர் பாய்ச்சும் இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டாலோ, காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பணம் பெற முடியாது.
மேலே உள்ள காப்பீடு செய்யப்பட்ட நிகழ்வுகளில் ஏதேனும் ஒரு சேதம் நிகழ்ந்த 7 நாட்களில் ஏதாவது திருட்டு நடந்தால் காப்பீடு கிடைக்கும். உதாரணமாக வெள்ளம் ஏற்பட்டு சேதமடைந்த வீட்டில் ஏழு நாட்களுக்குள் திருடு போனால் அதற்கான பணம் வழங்கப்படும். ஆனால், உங்கள் வீட்டிற்கு வெளியே உள்ள எந்தவொரு பொருளோ திருடு போயிருந்தால் அதற்கு காப்பீடு கிடைக்காது. வீட்டின் வெளிப்புற சுவர்களில் அல்லது கூரையிலிருந்து பொருத்தப்பட்ட எந்தவொரு பொருளும் உறுதியாக பொருத்தப்பட்டாமல் அதனால் திருட்டு நேர்ந்தால் அதற்கும் காப்பீடு கிடைக்காது.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்