அம்பேத்கரின் முதல் அரசியல் சாசன வரைவில் இல்லாத பாரத் பின்னர் வந்தது எப்படி?

அம்பேத்கரின் முதல் அரசியல் சாசன வரைவில் இல்லாத பாரத் பின்னர் வந்தது எப்படி?

பாரத் பெயர் வந்தது எப்படி?

பட மூலாதாரம், VIJAY SURWADE’S ARCHIVAL COLLECTION NAVAYANA

  • எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
  • பதவி, பிபிசி செய்தியாளர்

இந்தியாவுக்கான அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கும்போது, நாட்டின் பெயர் குறித்து நடந்த விவாதங்களில் என்ன முடிவு செய்யப்பட்டது? அரசியலமைப்புச் சட்டத்தின் முதல் வரைவில் ‘பாரத்’ என்ற பெயர் இருந்ததா?

இரண்டாவது உலகப் போர் முடிந்த பிறகு 1945ல் ஐக்கிய ராஜ்ஜியத்திற்குத் தேர்தல் நடந்தபோது கன்சர்வேட்டிவ் கட்சி, தொழிலாளர் கட்சி ஆகிய இரண்டுமே இந்தியாவுக்கு சுதந்திரம் அளிப்பது தொடர்பான வாக்குறுதிகளை தங்கள் தேர்தல் அறிக்கைகளில் குறிப்பிட்டிருந்தன.

அந்தத் தேர்தலில் தொழிலாளர் கட்சி வெற்றிபெற்றது. 1945 செப்டம்பரில் அப்போதைய இந்திய வைஸ்ராய் லார்ட் வேவல் “இந்தியாவுக்கு முழுமையான சுயாட்சி வழங்கும் திசையில்” செல்வதில் பிரிட்டிஷ் அரசு உறுதியாக இருப்பதாகத் தெரிவித்தார். இதற்குப் பிறகு மிக வேகமாக காரியங்கள் நடக்க ஆரம்பித்தன.

முடிவில் இந்தியா – பாகிஸ்தான் என இரு நாடுகள் பிரிக்கப்பட்டு, 1947 ஆகஸ்ட் 14 – 15 ஆகிய தேதிகளில் சுதந்திரம் அளிக்கப்பட்டது. இதையடுத்து, இந்தியாவின் சட்டமியற்றும் அவையும் மாநிலங்களவையும் ஒன்றாக இணைக்கப்பட்டு, இந்தியாவின் அரசியலமைப்பு அவை உருவாக்கப்பட்டது. இந்த அரசியலமைப்பு அவையில் விவாதிக்கப்பட்ட விவாதங்களின் அடிப்படையில், இந்திய அரசியலமைப்புச் சட்ட வரைவை (draft) டாக்டர் அம்பேத்கர் உருவாக்கினார்.

அரசியல் சாசன முதல் வரைவில் ‘பாரத்’ இல்லை

இந்த வரைவை 1948 நவம்பர் 4ஆம் தேதி டாக்டர் அம்பேத்கர் அரசியலமைப்பு அவையில் சமர்ப்பித்தார். இந்த முதல் வரைவில் நாட்டின் பெயரைப் பற்றிக் கூறும் Article 1ல் ‘பாரத்’ என்ற வார்த்தை இடம்பெறவில்லை. அதில் “India Shall be a Union of States” என்றுதான் குறிப்பிடப்பட்டது.

இதற்கு கிட்டத்தட்ட ஒரு ஆண்டிற்குப் பிறகு அதாவது 1949 செப்டம்பர் 17ஆம் தேதி சில திருத்தங்களை டாக்டர் அம்பேத்கர் முன்வைத்தார். அதில் ஒரு திருத்தமாக, “India, that is, Bharat shall be a Union of States” என்ற திருத்தமும் முன்வைக்கப்பட்டது. அன்றைய தினம் அவை உறுப்பினர்கள் எல்லோருமே ‘Union of States’ என்ற வார்த்தைகள் குறித்துதான் கவலைப்பட்டார்களே தவிர, ‘India that is Bharat’ என்பது குறித்து யாரும் பேசவில்லை. அன்றைக்கே வாக்கெடுப்பு நடத்தப்பட்டு அம்பேத்கர் கொண்டுவந்த அந்தத் திருத்தம் ஏற்பட்டது.

பாரத் பெயர் வந்தது எப்படி?

பெயரில் திருத்தம் கொண்டு முன்மொழிவு

இதற்கு அடுத்த நாள் செப்டம்பர் 18ஆம் தேதி மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த எச்.வி. காமத் இந்தியாவின் பெயரைக் குறிப்பிடும் முதலாவது பிரிவில் இரு திருத்தங்களை கொண்டுவந்தார். அதாவது, நாட்டின் பெயரானது “பாரத், ஆங்கிலத்தில் இந்தியா, மாநிலங்களின் ஒன்றியம்” (Bharat or, in the English language, India, shall be a Union of States’) என்று முதல் திருத்தம் கூறியது. இரண்டாவது திருத்தம், ‘ஹிந்த், ஆங்கிலத்தில் இந்தியா, மாநிலங்களின் ஒன்றியம் (Hind, or, in the English language, India, shall be a Union of States) என்று கூறியது.

ஆனால், இந்த இரண்டு திருத்தங்களும் ஒன்றுக்கொன்று முரணானவை என்று அவையின் தலைவராக இருந்த ராஜேந்திர பிரசாத் சுட்டிக்காட்டினார்.

இந்த விவாதத்தில் பேசிய காமத், “இந்தியக் குடியரசுக்கு என்ன பெயர் வைப்பதென்று பல ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டன. பாரத், ஹிந்துஸ்தான், ஹிந்த், பாரதபூமி, பாரதவர்ஷ் என்பது போன்ற ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டன. புதிதாகப் பெயர் வைக்க வேண்டுமா, இந்தியா என்ற பெயரே போதுமே என்று சிலர் சொல்கிறா்கள். பாரத், பாரதவர்ஷ், பாரத பூமி என்று பெயர் வைக்கலாம் என்பவர்கள் அதுதான் இந்த நிலத்தின் மிகப் புராதனமான பெயர் என்கிறார்கள். பாரத் என்ற பெயரின் தோற்றம் குறித்து பல வரலாற்றாசிரியர்கள் ஆராய்ச்சி செய்திருக்கிறார்கள். அவர்களால் அதன் தோற்றம் குறித்து ஒருமித்த முடிவுக்கு வர முடியவில்லை. சிலர் துஷ்யந்தன் – சகுந்தலையின் மகன் பெயர் என்கிறார்கள். அவனுடைய பெயரால்தான் இந்த நாடு பாரத் என அழைக்கப்படுகிறது என்கிறார்கள். சிலர் வேத காலத்தில் இருந்து இந்தப் பெயர் இருந்ததாகச் சொல்கிறார்கள்…”

காமத் இப்படிப் பேசிக்கொண்டு போகும்போது, டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் குறுக்கிட்டார். “இதையெல்லாம் ஆராய்வது இப்போது தேவைதானா? இதன் நோக்கம் எனக்குப் புரியவில்லை. வேறு இடத்தில் பேசினால் இது சுவாரஸ்யமாக இருக்கலாம். நமது நண்பர் பாரத் என்ற வார்த்தையை ஏற்கிறார். இன்னொரு பெயரும் இருக்கிறது என்பதுதான் அவருக்கு விவாதத்திற்குரியதாக இருக்கிறது. இதையெல்லாம் விவாதிக்க நம்மிடம் நேரம் குறைவாக இருக்கிறது” என்றார்.

மீண்டும் பேசிய காமத், “இந்தியா அதாவது பாரத்” என்று பெயர் வைப்பது நன்றாக இல்லை என்று குறிப்பிட்டார்.

இந்த விவாதத்தில் பேசிய ஜபல்பூரைச் சேர்ந்த சேத் கோவிந்த் தாஸ், இந்தியாவுக்கு பாரத் என்றே பெயர் சூட்ட வேண்டும் என்று தெரிவித்தார். “வேதங்களில் இந்தியா என்ற பெயரே இல்லை, பாரதம் என்ற பெயர்தான் இருக்கிறது. மகாபாரதம், விஷ்ணு புராணம், பிரம்ம புராணம் ஆகியவற்றிலும் பாரதம் என்ற பெயரே இருக்கிறது. யுவான் சுவாங்கும் தன்னுடைய புத்தகத்தில் பாரத் என்றே குறிப்பிடுகிறார். பாரதம் என்று பெயரிடுவதால் நம் நாடு முன்னேறாமல் போய்விடாது” என்றார் அவர்.

பாரத் பெயர் வந்தது எப்படி?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

இடைக்கால அரசில் இடம் பெற்றிருந்த தலைவர்கள்.

சென்னை மாகாண அமைச்சர் கூறியது என்ன?

அப்போது சென்னை மாகாணத்தின் வருவாய்த்துறை அமைச்சராக இருந்த கால வெங்கட் ராவ் என்ற உறுப்பினரும் சேத் கோவிந்திற்கு ஆதரவாகப் பேசினார். “பாரதம் என்ற பெயர் மிகப் பழமையானது. ரிக் வேதத்திலும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. விஷ்ணு புராணத்தில் பாரதத்தின் எல்லைகள் வரையறுக்கப்பட்டிருக்கின்றன. ஆகவே இந்தியாவை பாரத் என்றுதான் குறிப்பிட வேண்டும். ஹிந்தி மொழியின் பெயரை பார்தி என்று குறிப்பிட வேண்டும்” என்றார் அவர்.

இந்த விவாதங்களில் டாக்டர் அம்பேத்கர் சலிப்படைந்தார். “இந்தியா என்ற பெயருக்குப் பிறகு பாரத் என்பது வர வேண்டுமா என்பதைக் குறித்து இவ்வளவு நீளமாக விவாதிக்க வேண்டுமா?” எனக் கேள்வி எழுப்பினார் அம்பேத்கர்.

இந்த விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய ஐக்கிய மாகாணத்தைச் சேர்ந்த காங்கிரஸ் தலைவரான கமலாபதி திரிபாதி, “‘இந்தியா அதாவது பாரத்’ என்பதற்குப் பதிலாக “பாரத் அதாவது இந்தியா” என்று இருக்கலாம். அல்லது காமத் கொண்டுவந்த ‘Bharat as it is known in the English language India’ என்ற திருத்தத்தை ஏற்கலாம்” என்றார்.

மேலும் வேதங்களிலும் புராணங்களிலும் பாரதம் என்ற பெயரே இருக்கிறது. பாரதம் என்று பெயரிட்டால் இந்தியா மகத்தான நாடாக மாறும் என்றும் மானுட குலத்திற்கே சேவை செய்யும் என்று தொடர்ந்து வாதிட்டார்.

திருத்தம் கோரிய தீர்மானம் தோல்வி

ஐக்கிய மாகாண முதல்வரான கோவிந்த வல்லப பந்தும் இந்தியாவை பாரத் அல்லது பாரத் வர்ஷ என்று குறிப்பிட வேண்டும் என்றார். “நாம் நம்முடைய மதக் கடமைகளைச் செய்யும்போது பாரத வர்ஷே, பரத கண்டே என்றுதானே குறிப்பிடுகிறோம்?” எனக் கேள்வி எழுப்பினார்.

இதற்குப் பிறகு, India that is Bharat என்று இருப்பதை “Bharat, or, in the English language, India, shall be a Union of States” என மாற்ற வேண்டும் என்ற காமத் கொண்டுவந்த தீர்மானத்தின் மீது அவைத் தலைவர் வாக்கெடுப்பை நடத்தினார். இதற்கு 38 பேர் ஆதரவாகவும் 51 பேர் எதிராகவும் வாக்களித்தனர். தீர்மானம் தோற்கடிக்கப்பட்டது. ஆகவே, India that is Bharat என்ற பெயரே இறுதி செய்யப்பட்டது.

முடிவுக்கு வராமல் நீடித்த விவாதம்

இருந்தபோதும் இதற்குப் பிறகு அரசியலமைப்பு அவையில் இந்தியாவின் பெயர் தொடர்பாக விவாதங்கள் அவ்வப்போது நடந்தன.

1949 நவம்பர் 17ஆம் தேதி அவையில் பேசிய சேத் கோவிந்த தாஸ், “நாட்டின் பெயரைப் பொருத்தவரை, இந்த அரசியல் சாஸனத்தில் இந்தியா அதாவது பாரதம் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. பாரத் என்ற பெயர் சேர்த்துக்கொள்ளப்பட்டிருப்பது பெரும் திருப்தியை அளிக்கிறது. ஆனால், அது குறிப்பிடப்பட்டிருக்கும் விதம் திருப்தியளிக்கவில்லை. இந்தியா அதாவது பாரத் என்பது விசித்திரமான பெயர்” என்று குறிப்பிட்டார்.

ஒதிஷாவைச் சேர்ந்த லக்ஷ்மிநாராயண் சாஹு பேசும்போது, “நம்முடைய நாட்டுக்கு முதலில் பாரத் என்றுதான் பெயர் சூட்டப்பட்டது. பிறகு, உலகின் பிற நாடுகளால் பாரத் என்பது புரிந்துகொள்ளப்படாது என்பதால், ‘இந்தியா அதாவது பாரத்’ என்று சொல்லப்பட்டிருக்கிறது. என்ன இது?” என்று கேள்வியெழுப்பினார்.

1949 நவம்பர் 18ஆம் தேதி குஜராத்தைச் சேர்ந்த கந்துபாய் தேசாய் பேசும் போது, பெயரில் பெரிய பிரச்சனை இல்லை என்றார். “இந்தியா அதாவது பாரத் என அரசியல் சாஸனத்தில் பெயர் அளிக்கப்பட்டிருப்பதற்கு பல நண்பர்கள் எதிர்ப்புத் தெரிவிக்கிறார்கள். என்னைப் பொறுத்தவரை அதில் பெரிய ஆட்சேபனை ஏதுமில்லை. உலகம் நம்மை இந்தியா என்ற பெயரில்தான் அறியும். நம்மைப் பொறுத்தவரை, நம் ஆன்மாவும் இதயமும் பாரத் என்றே அறியப்படும். உலகம் நம்மை இந்தியா என்று அழைக்கும். நாம் நம்மை பாரத் என்று அழைத்துக் கொள்வோம்” என்றார்.

பாரத் பெயர் வந்தது எப்படி?

அம்பேத்கரை விமர்சித்த தலைவர்கள்

அதே ஆண்டு நவம்பர் 21ஆம் தேதி அவையில் பேசிய அல்கு ராய் சாஸ்திரி, “நாட்டின் பெயரைப் பொறுத்தவரை இந்தியா ஒரு யூனியனாக இருக்கும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. நாம் நம்முடைய அடிமை மனநிலையில் இருந்து வெளிவரவில்லை என்பதையே இது காட்டுகிறது. நம்முடைய நாட்டின் பெயர் என்ன என்பதை வெளிப்படையாகச் சொல்லவில்லை. ‘இந்தியா அதாவது பாரத்’ என இந்த மண்ணுக்கு பெயர் அளித்திருக்கிறோம். உலகில் எந்த ஒரு நாடும் இப்படி ஒரு சிக்கலான பெயரை வைத்திருக்காது. இது ஒரு பெயரே அல்ல. சரியான பெயரை அளிப்பதில் நாம் தோல்வியடைந்துவிட்டோம்” என்று குறிப்பிட்டார். அல்கு ராய் சாஸ்திரி காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் என்றாலும் ஆர்ய சமாஜத்தில் ஈடுபாடு கொண்டவர். இந்தியின் தீவிர ஆதரவாளர்.

1949 நவம்பர் 24ஆம் தேதி நடந்த விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய பிஹாரைச் சேர்ந்த முகமது தஹிர், இந்தியாவுக்கு ஒரு குழப்பமான பெயரை டாக்டர் அம்பேத்கர் அளித்திருப்பதாகக் கூறினார்.

“நம்முடைய அரசியல் சாஸனத்தால் நம் நாட்டிற்கு ஒரு பெயரைச் சூட்ட முடியவில்லை இது அம்பேத்கரின் புத்திசாலித்தனத்திற்கு ஒரு சான்று. ஒரு குழப்பமான பெயரை அவர் அளித்திருக்கிறார். அது ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது. டாக்டர் சாஹிபிடம் யாராவது உங்கள் நாட்டின் பெயர் என்ன என்று கேட்டால், பாரத், இந்தியா அல்லது இந்துஸ்தான் என்று அவர் பதிலளித்திருக்கலாம். ஆனால், மரியாதைக்குரிய டாக்டர் இப்போது, “நான் இந்தியா அதாவது பாரதத்தைச் சேர்ந்தவன் என்று பதிலளிக்க வேண்டும்” என்று குறிப்பிட்டார்.

ஆனால், இந்த விவாதங்கள் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. Article 1ல் “India, that is Bharat, shall be a Union of States” என்றே குறிப்பிடப்பட்டது. 1949ஆம் ஆண்டு நவம்பர் 26ஆம் தேதி இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை அரசியலமைப்பு அவை இறுதிசெய்து ஏற்றுக்கொண்டது. 1950 ஜனவரி 26ஆம் தேதியிலிருந்து இந்தச் சட்டம் அமலுக்கும் வந்தது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Facebook
Facebook
fb-share-icon
Telegram
WhatsApp
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *