
பட மூலாதாரம், TNNLU
திருச்சியில் உள்ள தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக் கழகத்தில் 22 வயது பட்டியல் சாதி மாணவருக்கு குளிர்பானத்தில் சிறுநீர் கலந்து கொடுத்ததாக எழுந்த புகாரில், இரண்டு மாணவர்களை பல்கலைக்கழக நிர்வாகம் இடைநீக்கம் செய்துள்ளது.
பல்கலைக்கழகத்தில் இளநிலை சட்டப்படிப்பில் இறுதியாண்டு படித்து வரும் 22 வயது பட்டியல் சாதி மாணவர் கடந்த 10ஆம் தேதி கொடுத்த புகாரின் அடிப்படையில் பல்லைக்கழக நிர்வாகம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
மேலும், மாணவரின் புகார் குறித்து விசாரிக்க குழு அமைத்து, விரிவான அறிக்கை தாக்கல் செய்யவும் பல்கலைக்கழக துணை வேந்தர் உத்தரவிட்டுள்ளார்.
இளநிலை சட்டப் படிப்பில் இறுதியாண்டு படித்து வரும் பட்டியல் சாதி மாணவருக்கு நடந்தது என்ன? விசாரணைக் குழு எப்போது அறிக்கையை சமர்ப்பிக்கும்?
என்ன நடந்தது?

பட மூலாதாரம், Getty Images
மாணவர் கொடுத்த புகாரின்படி, ஜனவரி 6ஆம் தேதி மாலை முதல், பாதிக்கப்பட்ட பட்டியல் சாதி மாணவரும் அவருடன் இளநிலை இறுதியாண்டு சட்டப்படிப்பு படிக்கும் வேறு சில மாணவர்களும் கல்லூரி வளாகத்தில் உள்ள விடுதியில் சந்தித்துள்ளனர்.
அவர்கள் தங்களின் தேர்வுகள் தொடர்பாக சந்தித்து பேசிக் கொண்டிருந்ததாகப் புகாரில் கூறியுள்ளார். பல்கலைக்கழக நிர்வாகத்தின்படி, வழக்கமான தேர்வுகள் முடிவடைந்தன, ஜனவரி 7ஆம் தேதி முதல் மறுதேர்வுகள் நடந்துள்ளது.
மாணவருடைய புகாரின்படி, பாதிக்கப்பட்ட பட்டியல் சாதி மாணவரும், மற்ற மாணவர்களும் இணைந்து தங்களது படிப்பு குறித்து ஆலோசித்துக் கொண்டிருந்தனர். அப்போது, மாணவர்கள் குளர்பானம் அருந்தியுள்ளனர். அதில், பாதிக்கப்பட்ட பட்டியல் சாதி மாணவர் குடித்த குளிர்பானத்தில் சிறுநீர் கலந்து கொடுக்கப்பட்டதாகவும், அதைத் தாம் தெரியாமல் குடித்துவிட்டதாகவும் மாணவர் தனது புகாரில் கூறியுள்ளார்.
சம்பவம் ஜனவரி 6ஆம் தேதி இரவு சுமார் 12 மணியளவில் நடந்ததாக மாணவர் தனது புகாரில் குறிப்பிட்டுள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகிகள் பிபிசியிடம் கூறினர். இந்தச் சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட பட்டியல் சாதி மாணவர் ஜனவரி 10ஆம் தேதி பல்கலைக்கழக பதிவாளர் பாலகிருஷ்ணனிடம் புகார் மனுவைக் கொடுத்துள்ளார்.
இந்தச் சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட மாணவரிடம் பிபிசி தமிழ் பேச முயன்றது. ஆனால், அவர் இதுதொடர்பாக கருத்து கூற விரும்பவில்லை.
பல்கலைக்கழக நிர்வாகம் என்ன சொல்கிறது?

பட மூலாதாரம், TNNLU
பாதிக்கப்பட்ட மாணவர், தன்னுடன் படிக்கும் இரண்டு மாணவர்கள் மீது புகார் கொடுத்துள்ளார். புகார் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை குறித்த பல்கலைக்கழகத்தின் பதிவாளர் பாலகிருஷ்ணனிடம் பிபிசி பேசியது.
அப்போது அவர், “விதிகளின்படி மாணவர் புகார் வந்தவுடனேயே, அது பல்கலைக்கழக துணை வேந்தருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அவர் அதே நாளில், குற்றம்சாட்டப்பட்ட இரண்டு மாணவர்களையும் இடைநீக்கம் செய்து உத்தரவிட்டார். மேலும், இது தொடர்பாக விசாரணை நடத்த மூன்று பேர் கொண்ட குழுவை அமைத்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார்,” என்றார் பாலகிருஷ்ணன்.
துணை வேந்தர் அமைத்துள்ள மூன்று பேர் கொண்ட விசாரணைக் குழுவில் பல்கலையின் உதவிப் பேராசிரயர்கள் உள்ளனர். அவர்கள், ஜனவரி 11ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரை, பாதிக்கப்பட்ட மாணவர், குற்றம் சாட்டப்பட்ட மாணவர்கள், இருப்பிட விடுதி காப்பாளர் மற்றும் உடன் படிக்கும் மாணவர்களிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.
புகாரை திரும்பப் பெற முயன்ற பட்டியல் சாதி மாணவர்

பட மூலாதாரம், Getty Images
இதற்கிடையில், இந்த விவகாரம் தொடர்பாக பல்கலைக்கழகம் அமைத்த குழு விசாரணை நடத்திக்கொண்டிருக்கும்போதே பாதிக்கப்பட்ட பட்டியல் சாதி மாணவர் புகாரை திரும்பப்பெற முயன்றுள்ளார். ஆனால், ராகிங் தொடர்பான சட்ட விதிகளின்படி மாணவர் புகாரை திரும்பப் பெற முடியாது என்றார் பல்கலைக்கழக பதிவாளர் பாலகிருஷ்ணன்.
“பாதிக்கப்பட்ட மாணவர் புகாரை திரும்பப் பெற முயன்றது உண்மைதான். ஆனால், ராகிங் தொடர்பான புகாரை அப்படி திரும்பப் பெற முடியாது. அதேபோல அதுகுறித்து முடிவெடுக்க நான் உரிய நபரும் அல்ல என பாதிக்கப்பட்ட மாணவரிடம் கூறினேன். அவர் திரும்பப் பெற வந்த பிறகும், மாணவரிடம் விசாரணைக்குழு விசாரணை நடத்தினர்,” என்றார் பாலகிருஷ்ணன்.
மாணவர் புகார் தொடர்பாக விசாரணை நடத்திய மூன்று பேர் கொண்ட குழுவினர், வரும் 18ஆம் தேதி அல்லது 19ஆம் தேதி அறிக்கையை சமர்ப்பிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. சட்டவிதிகளின் படி, அதில் மாணவர் துன்புறுத்தப்பட்டுள்ளது உறுதியாகும்பட்சத்தில், அறிக்கை கிடைத்த 24 மணிநேரத்தில் பல்கலைக்கழக நிர்வாகம் போலீசில் புகார் தெரிவிக்க வேண்டும்.
மாணவர் புகார் கொடுக்க தாமதித்ததற்கான காரணம் மற்றும் தற்போது புகாரை திரும்பப் பெறுவதற்கான காரணம் குறித்து விசாரணை நடந்துள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகம் தரப்பில் தெரிவித்தனர்.
ராகிங் நடந்தால் என்ன செய்ய வேண்டும்?
இந்திய பல்கலைக்கழக மானியக் குழு, ராகிங் குற்றங்களைத் தடுக்கவும் பாதிக்கப்படுவோரை காக்கவும், ஒவ்வொரு கல்லூரியிலும் முதல்வர் அல்லது தலைவரின் தலைமையில், துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள் அடங்கிய ராகிங் தடுப்புக் குழுவை (Anti-ragging) அமைக்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளது.
ராகிங் குற்றத்தால் பாதிக்கப்படுவோர் கல்லூரிகளில் உள்ள இந்தக் கமிட்டியில் புகாரளிக்கலாம்.
ஆன்லைன் அல்லது நேரில் புகாரளிப்பது தொடர்பாக, இந்திய பல்கலைக்கழக மானியக் குழுவான UGCயின் இலவச எண்ணான 1800 – 180 – 5522 என்ற எண்ணுக்கு அழைத்து ஆலோசனை பெறலாம் என இந்திய பல்கலைக்கழக மானியக்குழு அறிவித்துள்ளது.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்