சென்னை ஷெனாய் நகரில் தி.மு.க தகவல் தொழில்நுட்ப அணி கூட்டமும், நீட் விலக்குக்கு ஆதரவான கையெழுத்து இயக்கம் தொடங்கும் நிகழ்ச்சியும் இன்று நடந்தது. இதில் முதல்வர் ஸ்டாலின் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது, “எல்லா விதமான ஊடகங்களிலும் வேலை பார்த்தவன் நான். தற்போது சமூக வலைத்தள ஊடங்களிலும் பயணிக்கிறேன். அதில், நமது கருத்துக்கு என்ன எதிர்வினை என்பதை உடனே பார்க்க முடிகிறது. இந்த வசதியையும், வாய்ப்பையும் சரியாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். சிலரை திடீரென உயரத்தில் கொண்டு போகும். சிலரின் ஆழமான கொள்கைகளையும் சடாரென சாய்த்துவிடும். என்னைப் பொருத்தவரை நெகட்டிவ் பிரசாரத்தை விட பாசிடிவ் பிரசாரத்தின் மூலமே நம்மை வளர்த்துக்கொள்வதே சரியான முடிவு.

தன்னை யாரெல்லாம் எதிர்த்தார்கள் என்று தந்தை பெரியாரே பட்டியல் போட்டு சொல்லி இருக்கிறார். வாழ்க வசவாளர்கள் என அண்ணாப் பேசினார். கூட்டில் இருக்கும் புழுவைப் போலக் கொட்டப்பட்டு, கொட்டப்பட்டு வளர்ந்தவன் நான். விமர்சனங்களுக்குப் பெரிதாகக் காதுகொடுக்காமல் மக்களுக்காக செயலாற்றினேன். அதனால்தான் மக்கள் என்னைத் தேர்ந்தெடுத்தார்கள். விமர்சனங்களுக்குப் பதில் சொல்ல வேண்டும் என்பதை விட யாருடைய விமர்சனத்துக்குப் பதில் சொல்ல வேண்டும் என்பதில் கவனமாக இருக்க வேண்டும்.
அவதூறு பரப்புபவர்கள் எல்லா காலத்திலும் இருக்கிறார்கள். மருந்தைக் கண்டுபிடித்துவிட்டால் நோயின் தன்மை ஒழிந்திடுமா என்ன… அதுபோலத்தான் அவதூறு பரப்புபவர்கள். சமூகத்தைப் பின்னோக்கி இழுக்கும் நோய்க்கான மருந்துதான் நமது திராவிடக் கழக இயக்கம். இன்று சமூக வலைதளங்கள் அவர்கள் கரங்களில் இருக்கிறது. அதனால், அவதூறு பரப்பவோ, பொய் சொல்லவோ அவர்கள் தயங்கவோ, கூச்சப்படவோ, வெட்கப்படவோ இல்லை. எனவே, அவதூறுகளுக்கு நாம் பதில் சொல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

இந்த இயக்கத்தை அழித்துவிடலாம் என்று நினைத்தவர்கள் தான் அழிந்தார்கள், பின்னாளில் நம்மிடமே வந்து சேர்ந்தார்களே தவிர தி.மு.க-வை யாராலும் அழிக்க முடியாது. ராஜாஜி, ம.பொ.சி-யும் இந்த இயக்கத்தை ஆரம்பத்தில் கடுமையாக எதிர்த்தார்கள். ஆனால், அவர்களே பின்னாட்களில் ஆதரித்தார்கள். இதுதான் வரலாறு. இன்று, பாசிசத்துக்கு எதிராக நாம் களமாடிக்கொண்டிருக்கிறோம். சாதி, மதத்தின் பெயரால் நாட்டை நாசமாக்கத் துடிக்கும் ஒரு கூட்டத்துக்கு எதிராகப் போராடுகிறோம்.
பா.ஜ.க-வின் சாதி, மதப் பிளவு இந்தியாவுக்கே எதிரான கொள்கை. அவர்களின் பாதத்தில் அ.தி.மு.க-வை அடகு வைத்த அடிமைகள் என தமிழ்நாட்டை அழிக்க நினைக்கும் நாணயமில்லாத நாணயத்தின் இருபக்கங்களான இந்த இரண்டு கூட்டத்தையும் எதிர்த்து அரசியல் பேச வேண்டிய சூழலில்தான் இருக்கிறோம். மிசா, தடா, பொடா என அனைத்தையும் பார்த்துவிட்டோம். மிரட்டல் எல்லாம் கடந்து வந்துவிட்டோம்.

அவர்களின் தற்போதைய முக்கிய வேலை, துர்கா ஸ்டாலின் எந்தக் கோயிலுக்குப் போகிறார் என்பதைப் பார்த்து, அதைப் புகைப்படம் எடுத்துப் பதிவிடுவதுதான். துர்கா ஸ்டாலின் தமிழ்நாட்டின் அனைத்துக் கோயில்களுக்கும்தான் செல்கிறார். அது அவர்கள் விருப்பம். அதைத் தடுக்க நான் விரும்பவில்லை, அது எனக்குத் தேவையுமில்லை. நாங்கள் ஆரிய ஆதிக்கத்துக்குத்தான் எதிரானவர்களே தவிர ஆன்மிகத்துக்கு எதிரானவர்களல்ல. கோயில் செல்வது அவரவர் விருப்பம். ஏராளமான கோயில் நுழைவு போராட்டம் நடத்தி வழிபாட்டு உரிமை வாங்கி கொடுத்தது திராவிட இயக்கம்.
பராசக்தி திரைப்பட வசனம் தான் அவர்களுக்குப் பதில். கோயில் கூடாதென்பதல்ல, கோயில் கொடியவர்களின் கூடார்மாகிவிடக் கூடாது. கோயிலையும், பக்தியையும் தனக்குச் சாதகமான அரசியலாக்க பா.ஜ.க தொடர்ந்து முயன்றுவருகிறது. கோயிலை இடித்து விட்டதாக வதந்தி பரப்புகிறார்கள்.

ஆனால் உண்மை என்ன… 1000 கோயில்களுக்குக் குடமுழுக்கு நடத்தியது, கோயில் நிலங்களை மீட்டு மீண்டும் கோயிலுக்கே சேர்ந்ததும் தான் திராவிட மாடல் அரசு. விளக்கு எரிவது திருடர்களுக்குப் பிடிக்காது. கோயில் பராமரிப்பது அதைத் தவறாகப் பயன்படுத்துபவர்களுக்குப் பிடிக்காது. எனவே மக்களுக்கு உண்மையை எடுத்துச் செல்ல வேண்டும்” எனத் தெரிவித்திருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk
நன்றி
Publisher: www.vikatan.com