அரசு மரியாதையுடன் நல்லடக்கம்:
மேலும், “கேப்டன் எனத் தமிழ் மக்களால் அன்புடன் அழைக்கப்படும் அன்பு நண்பர் விஜயகாந்த் அவர்களின் மறைவு தமிழ்நாட்டிற்கும் திரையுலகிற்கும் பேரிழப்பாகும். இந்த மிகத் துயரமான சூழலில், என்னை நானே தேற்றிக் கொண்டு, கேப்டன் விஜயகாந்த்தை இழந்து தவிக்கும் சகோதரி பிரேமலதா விஜயகாந்த் உள்ளிட்ட அவரது குடும்பத்தினருக்கும், தேசிய முற்போக்கு திராவிடக் கழகத் தொண்டர்களுக்கும், திரையுலகத்தினருக்கும், ரசிகர்களுக்கும் என் ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன். திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். திரு. விஜயகாந்த் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அவரது இறுதிப் பயணத்திற்கு முழு அரசு மரியாதை வழங்கப்படும்!” என அறிவித்தார்.


இட நெருக்கடி, தீவுத்திடலில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்த ஏற்பாடு:
அந்த நிலையில், சாலிகிராமம் வீட்டிலிருந்து பொதுமக்கள் அஞ்சலிக்காக கோயம்பேடு தே.மு.தி.க தலைமை அலுவலகத்துக்கு விஜயகாந்த்தின் உடல் கொண்டுவரப்பட்டது. ஆனால், கட்டுக்கடங்காத மக்கள் கூட்டத்தால் அந்த இடம் கொஞ்சமும் போதாத சூழல் ஏற்பட்டது. மேலும், கோயம்பேடு முழுக்க மக்கள் வெள்ளத்தால் ஸ்தம்பித்து பிரதான சாலைகளில் போக்குவரத்து முற்றிலும் தடைபட்டது. பெரும்பாலானோர் அஞ்சலி செலுத்தமுடியாத நிலை நீடித்தது. அந்த நிலையில், எந்தவித தடங்கலும் இல்லாமல் சென்னை தீவுத்திடலில் விஜயகாந்த்தின் இறுதி அஞ்சலி நடத்துவதற்கான உத்தரவை சென்னை மாநகராட்சிக்கு முதல்வர் ஸ்டாலின் அதிரடியாகப் பிறப்பித்தார். அதைத் தொடர்ந்து, தீவுத்திடலில் எல்லா ஏற்பாடுகளும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு துரிதமாக முடிக்கப்பட்டன. அதுமட்டுமல்லாமல், இறுதி ஊர்வலத்துக்கான வாகனத்தின் மலர் அலங்காரத்துக்காக செலவு 6 லட்சத்தை சென்னை மாநகராட்சியே ஏற்றது. தொடர்ந்து, விஜயகாந்த்தின் உடலை தே.மு.தி.க தலைமை அலுவலகத்திலேயே நல்லடக்கம் செய்வதற்கான அனுமதியையும் சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் தீர்மானமாக கொண்டுவரப்பட்டு, அனுமதியும் வழங்கப்பட்டது. இவை எல்லாவற்றுக்கும் காரணமாக இருந்தவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
நன்றி
Publisher: www.vikatan.com