கோரிக்கைகளுக்குப் பதிலளித்த முதல்வர் ஸ்டாலின், “தமிழ்நாட்டுச் சிறைவாசிகளில் பத்து ஆண்டுகள் மற்றும் இருபது ஆண்டுகள் தண்டனை முடித்த ஆயுள் தண்டனை சிறைவாசிகள், வயது முதிர்ந்த சிறைவாசிகள், பல்வேறு இணைநோய்கள் இருக்கக்கூடிய உடல்நலம் குன்றிய சிறைவாசிகள், தீராத நோயுற்ற மற்றும் மனநலம் குன்றிய சிறைவாசிகள், மாற்றுத்திறனாளி சிறைவாசிகள் ஆகியோரின் நிலையை மனிதாபிமான அடிப்படையில் கருத்தில்கொண்டு ஆராய வேண்டுமென்பதற்காக, சென்னை உயர் நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதியரசர் என்.ஆதிநாதன் தலைமையின்கீழ் 6 பேர் அடங்கிய ஒரு குழு 22.12.2021-ல் அரசால் அமைக்கப்பட்டது. உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள் மற்றும் இது தொடர்பாக தற்போது நடைமுறையிலுள்ள சட்டம் மற்றும் விதிகளின் அடிப்படையில், இவர்களின் வழக்குகளை ஆராய்ந்தும், அவர்களின் முன்விடுதலைக்கு உரிய பரிந்துரை வழங்க ஏதுவாகவும் இந்தக் குழு அரசால் அமைக்கப்பட்டது.


இந்தக் குழு தன்னுடைய அறிக்கையினை 28.10.2022 அன்று அரசுக்கு அளித்தது. அந்த அறிக்கையில் 264 ஆயுள்தண்டனை சிறைவாசிகள் மட்டுமே குழுவால் முன்விடுதலைக்கு அரசுக்குப் பரிந்துரைக்கப்பட்டனர். அதனடிப்படையில் பேரறிஞர் அண்ணா அவர்களின் 115-வது பிறந்தநாளை முன்னிட்டு, ஆயுள் தண்டனை சிறைவாசிகளை முன்விடுதலை செய்வதற்குப் பரிசீலனை செய்யும் பொருட்டு, 11.08.2023 அன்று முதற்கட்டமாக தகுதியுள்ள 49 ஆயுள்தண்டனை சிறைவாசிகளின் நேர்வுகள் அரசால் பரிசீலனை செய்யப்பட்டு, தொடர்புடைய கோப்புகள் 24.08.2023 அன்று ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டிருகின்றன. அவர்களில் 20 சிறைவாசிகள் இஸ்லாமிய சிறைவாசிகள். ஆளுநரின் ஒப்புதல் பெறப்பட்டவுடன், அனைத்து சிறைவாசிகளும் விடுதலை செய்யப்படுவார்கள். உயர் நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி ஆதிநாதன் குழுவால் பரிந்துரைக்கப்பட்ட மீதமுள்ள ஆயுள்தண்டனை சிறைக்கைதிகள் விடுதலை குறித்து அடுத்தகட்ட நடவடிக்கைகளை இந்த அரசு எடுக்கும்.
நன்றி
Publisher: www.vikatan.com