இதற்கிடையில், சென்னை ரிப்பன் மாளிகையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய முதல்வர் ஸ்டாலின், “வெள்ள நீர் வடிகால் குறித்து ஆய்வு செய்ய குழு ஒன்று அமைக்கப்பட்டு, ஆய்வு செய்யப்பட்டது. அந்த ஆய்வின் அடிப்படையில், சுமார் 4,000 கோடி ரூபாய் செலவு செய்து, வெள்ள நீர் வடிகால் திட்டம் செயல்படுத்தப்பட்டது. அதன் காரணமாகத்தான் வரலாறு காணாத இந்த வெள்ளத்தை நாம் எதிர்கொண்டபோதும், அதன் தாக்கம் கடந்த காலத்தைவிட குறைவாகவே இருந்தது. அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால், உயிரிழப்பு போன்ற சிக்கல்கள் பெருமளவு குறைக்கப்பட்டிருக்கின்றன.


2015-ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தில் 199 பேர் இறந்தார்கள். ஆனால், தற்போது 2015 மழையைவிட மிக அதிக மழை பெய்தும், 7 பேர் மட்டுமே இறந்திருக்கிறார்கள். இந்த உயிரிழப்பும் நிகழ்ந்திருக்கக் கூடாதுதான். 9 மாவட்டங்களில் ஏற்படுத்தப்பட்ட முகாம்களில் மக்கள் தங்கவைக்கப்பட்டிருக்கிறார்கள். இதுவரை 11 லட்சம் உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. காலையிலிருந்து 1 லட்சம் பால் பாக்கெட்டுகள் விநியோகம் செய்யப்பட்டிருக்கின்றன. மழைநீர் வடிகால் நல்ல முறையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தாலும், ஆறுகளின் நீர் கடலில் சேர்வதில் சிக்கல் இருந்ததால்தான், நீர் வடிதல் வேகம் குறைவாக இருக்கிறது.
நன்றி
Publisher: www.vikatan.com