சீதா ராம்: இந்திய நிலப்பரப்பை தத்ரூபமாக வரைந்த ஓவியர் வரலாற்றில் காணாமல் போனது ஏன்?

சீதா ராம்: இந்திய நிலப்பரப்பை தத்ரூபமாக வரைந்த ஓவியர் வரலாற்றில் காணாமல் போனது ஏன்?

சீதா ராம் ஓவியங்கள்

பட மூலாதாரம், DAG COLLECTION

படக்குறிப்பு,

ஆச்சர்யப்படத்தக்க வகையில் சீதா ராம் வரைந்த வட இந்தியாவில் உள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பாரா இமாம்பாரா கட்டடத்தின் நீர்ம ஓவியம்.

மேலே உள்ள இந்த ஓவியம் உத்தர பிரதேச மாநிலத்தின் தலைநகர் லக்னௌவில் உள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பாரா இமாம்பரா வளாகத்தைச் சித்தரிக்கிறது.

பஞ்சம் காரணமாக ஏற்பட்ட பாதிப்புகளைக் களைவதற்காக, அவாத்தின் இளவரசர் நவாப் ஆசாஃப்-உத்-தௌலாவால் ஏற்பாடு செய்யப்பட்ட நிவாரணப் பணிகளின் ஒரு பகுதியாக பாரா இமாம்பரா வளாகம் கட்டப்பட்டது. இது முகலாய பாணியில் சிறப்பாகக் கட்டப்பட்ட கடைசி அரண்மனை. இதில், புதிரான பாதையைக் கொண்ட பரந்து விரிந்த மாளிகை, ஆஸ்ஃபி மசூதி உள்ளிட்ட பல அமைப்புகள் உள்ளன.

இந்த ஓவியத்தை மறுபடியும் பாருங்கள். வளாகத்தின் வெளிப்புற நுழைவு வாயிலும் இமாம்பராவும் பார்வைக்கு எட்டாததாக உள்ளன. இந்த நுழைவு வாயிலைக் கடந்து, அதன்பின் இரண்டு பெரிய முற்றங்கள் வழியாக மைய மண்டபத்தை அடைய வேண்டும். இந்த மைய மண்டபம், உலகிலேயே தூண்களின் உதவி இல்லாமல் அமைக்கப்பட்ட மிகப்பெரிய வளைவு கட்டுமானம் ஆகும்.

இந்த ஓவியத்தை நேராக நோக்கினால் தெரிவது ரூமி டார்வாசா, இது பழைய லக்னௌவின் நுழைவு வாயிலாகக் கருதப்படுகிறது. மேலும், ஒற்றை யானையும் அங்கும் இங்குமாக மக்களும் உள்ளனர்.

இப்படி உணர்வுகளைத் தூண்டும் இந்த நீர்ம ஓவியத்தை வரைந்தது பலராலும் அறியப்படாத, நீண்ட காலமாக யார் என்றே தெரியாதவராக இருந்த சீதா ராம். இந்த ஓவியம் டெல்லியில் உள்ள கலை நிறுவனமான டிஏஜி-யால் நடத்தப்படவுள்ள கண்காட்சியில் இடம்பெற உள்ளது.

இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக 1813ஆம் ஆண்டில் நியமிக்கப்பட்டவரும் ஹேஸ்டிங்கில் உயர்மதிப்பு கொண்டவருமான ஃபிரான்சிஸ் ராவ்டன் உடன் 1814 ஜூன் முதல் 1815 அக்டோபர் மாத ஆரம்பம் வரை பரவலாகப் பயணம் செய்துள்ளார் சீதா ராம்.

ஃபிரான்சிஸ் ராவ்டன் இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக பத்து ஆண்டுகள் இருந்துள்ளார். (இதற்கு முந்தைய காலத்திலேயே இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலாக இருந்த வாரென் ஹேஸ்டிங் உடன் இவரை குழப்பிக் கொள்ளக்கூடாது.)

சீதா ராம் ஓவியங்கள்

பட மூலாதாரம், DAG COLLECTION

படக்குறிப்பு,

ரூமி டார்வாசாவை நோக்கி நீண்ட ஊர்வலம் செல்வதைச் சித்தரிக்கும் சீதா ராமின் ஓவியம்.

ஹேஸ்டிங்ஸ் பிரபு பெரிய பரிவாரங்களுடன் தன் மனைவி, பணியாளர்கள் மற்றும் “வங்காள வரைவாளர்” என்று மட்டுமே குறிப்பிடப்பட்ட ஓவியர் உள்ளிட்டோருடன் 220 படகுகளில் 15 மாதங்களாக கொல்கத்தா நகரத்தில் இருந்து (முந்தைய கல்கத்தா) வெகுதொலைவில் தற்போது ஹரியாணாவில் அமைந்துள்ள ஜீண்ட் என்னும் பகுதிக்குச் சென்றதாக, கலை வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

“பிரிட்டிஷ் கட்டுப்பாட்டை விரிவுபடுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆலோசிப்பது, வட இந்தியாவில் உள்ள ஆட்சியாளர்களை சந்திப்பது, நேபாளத்தில் நடந்துகொண்டிருந்த போரை உன்னிப்பாகக் கண்காணிப்பது” ஆகியவை இந்த நீண்ட பயணத்தின் நோக்கமாக இருந்தன என்று கலை வரலாற்று ஆய்வாளரான ஜைல்ஸ் டிலட்சன் குறிப்பிடுகிறார்.

இந்தப் பயணத்தின்போது வழியில் இருந்த கட்டடங்கள் மற்றும் நிலப்பரப்புகளைச் சித்தரிக்கும் பெரியளவிலான 229 நீர்ம ஓவியங்களை சீதா ராம் வரைந்துள்ளார். “அந்தப் பயணம் குறித்த காட்சி விவரிப்புகள் மற்றும் ஹேஸ்டிங்ஸின் எழுத்துச் சான்றுக்கு அவை வலுவூட்டியதாக,” டிலட்சன் கூறுகிறார்.

லண்டனில் உள்ள பிரிட்டிஷ் நூலகத்தின் முன்னாள் காப்பாளர் ஜேபி லோஸ்டி கூறுகையில், “இந்த ஓவியங்களில் ஆற்றுப் பயணத்தைச் சித்தரிக்கும் ஓவியங்கள் இந்திய ஓவியங்களிலேயே மிகவும் சாந்தமான மற்றும் அழகான படைப்புகள்,” எனக் கூறினார்.

சுமார் 40 முதல் 60 செ.மீ. வரையிலான இந்த ஓவியங்கள், சிறுகுறிப்புகள் கொண்ட 10 ஆல்பங்களில் ஒட்டப்பட்டு, பின்னர் இந்தியாவில் தன் பதவிக் காலத்திற்குப் பின் அவற்றை ஹேஸ்டிங்ஸ் தன் வீட்டுக்கு எடுத்துச் சென்றார்.

பின்னர் அந்த ஓவியங்கள் ஹேஸ்டிங்ஸின் சந்ததியினரைச் சென்றடைந்தது. 1820கள் முதல் 1970கள் வரையிலான சுமார் ஒன்றரை நூற்றாண்டு வரை சீதா ராமின் படைப்புகள், “வெளி உலகத்தால் பார்க்கப்படாதவையாகவும் அவருடைய பெயர் அறியப்படாத ஒன்றாகவும் இருந்துள்ளது.”

கடந்த 1974ஆம் ஆண்டில் லண்டனில் உள்ள சதபி-யில் நடைபெற்ற ஏலம் ஒன்றில் சீதா ராமின் 46 ஓவியங்கள் அடங்கிய ஆல்பங்களை ஹேஸ்டிங்ஸின் குடும்பத்தினர் விற்றனர். சீதா ராமின் பெயர் தாங்கப்பட்ட அந்த ஆல்பம் வாயிலாக, அவர் குறித்தும் அவருடைய படைப்புகள் குறித்தும் இந்த உலகத்திற்குச் சிறிது தெரிய வந்ததாக டிலோட்சன் கூறுகிறார்.

சீதா ராம் ஓவியங்கள்

பட மூலாதாரம், BRITISH LIBRARY COLLECTION

படக்குறிப்பு,

ரூமி டார்வாசாவை சித்தரிக்கும் சீதா ராமின் ஓவியம்

“இந்தச் சான்றுகளின் அடிப்படையில் மட்டும் பார்த்தாலே, சீதா ராம் அந்தக் காலத்தின் மிக முக்கியமான இந்திய ஓவியர்களுள் ஒருவராக இருந்திருப்பார் என, இந்திய ஓவியங்கள் குறித்த நிபுணர்கள் கருதுகின்றனர்,” என்று டிலோட்சன் தெரிவிக்கிறார். “ஆனாலும் அவர் குறித்து மிகவும் குறைவான தகவல்களே தெரியவந்துள்ளன,” என்கிறார் அவர்.

இந்த ஓவியங்கள் அநாமதேயமாக விலைக்கு வந்ததால், சீதா ராமை ஹேஸ்டிங்ஸ் உடன் இணைக்க வேறு வழியில்லை.

இருபது ஆண்டுகள் கழித்து, ஹேஸ்டிங்ஸின் குடும்பத்தினர் மீதமுள்ள 8 ஆல்பங்களுடன் வங்காளத்தில் 1817 மற்றும் 1821ஆம் ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட பயணங்களின்போது சீதா ராம் வரைந்த மேலதிக ஓவியங்களையும் விற்க முடிவெடுத்தனர். அந்த ஓவியங்களை பிரிட்டிஷ் நூலகம் வாங்கியது.

“இதிலிருந்து சீதா ராம் ஹேஸ்டிங்ஸிடம் மட்டுமே தன் ஓவியங்களுக்காக ஆதரவு தேடவில்லை எனத் தோன்றுகிறது. ஹேஸ்டிங்ஸ் இந்தியாவிலிருந்து சென்ற பிறகும் சீதா ராம், தான் வைத்துக் கொள்வதற்காகவோ அல்லது மற்றவர்களுக்கு விற்பதற்காகவோ தொடர்ந்து வரைந்துள்ளார் அல்லது தன் ஓவியங்களை வேறு கோணங்களில் படைத்துள்ளார்.”

சீதா ராமின் இந்த வகை கலைப் படைப்புகள் கம்பெனி ஓவியங்கள் என அறியப்படுகின்றன. இந்த ஓவியங்களுக்குப் பயன்படுத்தப்படும் நீர்ம வண்ணங்களால் இது மற்றவற்றிலிருந்து வேறுபடுத்தப்படுகிறது. வழக்கமான கூயிஷ் (gouache) (தண்ணீரில் நிறமிகளைக் கலந்து அவற்றைத் தடிமனாக மாற்ற தேன் போன்ற பொருளைப் பயன்படுத்தும் ஓவிய முறை) வகையில் அல்லாமல் காகிதத்தில் வரையப்பட்டு பின்னர் பெரியளவிலான புத்தகங்கள் போன்று ஆல்பங்களாக தொகுக்கப்படும்.

சீதா ராம்: பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்காக இந்திய நிலப்பரப்பை தத்ரூபமாக வரைந்த இவர் யார்?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

சித்தரிப்புப் படம்

வணிகத்திற்காக 1600இல் நிறுவப்பட்ட ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனியின் பெயரை இந்த ஓவியங்கள் பெற்றன. ஆனால், இந்த அதிகாரமிக்க பன்னாட்டு நிறுவனம் 18ஆம் நூற்றாண்டின் இறுதியில் இந்தியா மீதான தனது கட்டுப்பாட்டை விரிவுபடுத்தியபோது, இந்திய ஓவியர்கள் பலரிடமிருந்து பல குறிப்பிடத்தகுந்த படைப்புகளை வழங்க ஆணையிட்டது. இதில், பாட்னாவின் சேவக் ராம், டெல்லியில் குலாம் அலி கான் உள்ளிட்டோர் குறிப்பிடத்தகுந்தவர்கள். இவர்கள் முன்பு முகலாய ஆட்சியிலும் வேலை செய்துள்ளனர்.

சீதா ராம் குறித்து இன்னும் அதிகமாகத் தெரிய வரவில்லை. வங்காளத்தைச் சேர்ந்தவரான சீதா ராம், வங்காளத்தின் தலைநகராக இருந்த முர்ஷிதாபாத்தில் உள்ள முகல் ஓவியப் பள்ளியில் பயின்றிருக்கலாம் எனத் தெரிகிறது.

“அந்தப் பள்ளி இயங்காதபோது சீதா ராம் போன்ற கலைஞர்கள் பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் வளர்ந்து வந்த புதிய நகரங்களுக்குச் சென்று புரவலர்களை நாடினர்,” என்கிறார் டிலோட்சன்.

சீதா ராம் பயிற்சி பெற்ற ஓவியரா?

லோஸ்டி அப்படித்தான் நினைக்கிறார். ”சீதா ராமின் படைப்புகள் துல்லியமாக வரையும் திறனை வெளிப்படுத்தியதாக” லோஸ்டி எழுதுகிறார். ”தாவரவியல் வரைவாளர் அல்லது கட்டடக்கலை வரைவாளராகப் பயிற்சி பெற்றதன் மூலமும் “ஆங்கிலேயே நிலப்பரப்பு பாணியில் பயிற்சி பெற்றிருப்பதன் மூலமும் அவர் இந்தப் பயிற்சியை பெற்றிருக்கலாம்.”

சீதாராமின் ஓவியங்கள் பல, “புகைப்படக்கலை மற்றும் தொல்லியல் ஆய்வுத் துறையின் வருகைக்கு முன்னரே இந்தியாவின் கடந்த காலத்தைக் கண்டறிவதில் உறுதிபட இருப்பதாக,” லோஸ்டி கூறுகிறார்.

சீதா ராம் “19ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஐரோப்பிய புரவலர்களுக்காகப் பணியாற்றிய இந்திய கலைஞர்களில் மிகவும் பன்திறமை கொண்டவர்,” என டிலோட்சன் கூறுகிறார்.

“லக்னௌவில் உள்ள இமாம்பாராவுக்கு முன்புள்ள முற்றத்தில் நடக்கும் இந்தக் காட்சி விவரிப்புகள் 200 ஆண்டுகளைக் கடந்தும் நமக்குப் பரிச்சயமான ஒன்றாகத் தெரிகிறது. தற்போது ஆக்கிரமிக்கப்பட்டு வரும் அதிகமான நகர்ப்புற நிலப்பரப்புகளே இப்போது மாறியுள்ளன,” என்கிறார் அவர்.

Facebook
Facebook
fb-share-icon
Telegram
WhatsApp
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *