தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் இறந்தவர்களுக்கு நீதி கிடைக்குமா? திமுக என்ன செய்யப்போகிறது?

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் இறந்தவர்களுக்கு நீதி கிடைக்குமா? திமுக என்ன செய்யப்போகிறது?

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: ஆண்டுகளானலும் நீங்காத வடு-  என்ன செய்யப் போகிறது திமுக அரசு?

பட மூலாதாரம், MK STALIN/Getty Images

“என் கண்முன் மூன்று பேர் செத்து மடிந்தார்கள். ஆனால், என் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை போலீசாரை பார்க்க முடியவில்லை. எந்தத் தவறும் செய்யாத என் நண்பன் ரஞ்சித்தும் துப்பாக்கிச்சூட்டில் துடிதுடிக்க இறந்தான். மற்ற இருவரின் பெயர்கூட எனக்கு அப்போது தெரியவில்லை. இதை எப்படி எங்களால் மறக்க முடியும்?”

தூத்துக்குடியில் செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தின் நூறாவது நாளான மே 22, 2018 அன்று நடந்த துப்பாக்கிச் சூட்டை இப்படித்தான் நினைவு கூர்ந்து பேசினார் தூத்துக்குடியை சேர்ந்த மைக்கேல் அன்டோ ஜீனியஸ்.

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின் நூறாவது நாளில், அப்பகுதி மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் பேரணியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கிச் சென்றனர். அப்போது பேரணியாகச் சென்ற பொது மக்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே மோதல் ஏற்பட, அது கலவரமானது.

இந்தச் சம்பவத்தின்போது, போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில், 13 பேர் உயிரிழந்தனர். இதுதொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்கு, சிபிஐ.,க்கு மாற்றப்பட்டது. இதற்கிடையே, அப்போது ஆட்சியில் இருந்த அதிமுக, அரசு துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்து உத்தரவிட்டது.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு

பட மூலாதாரம், Getty Images

இந்த நிலையில், இந்தச் சம்பவம் தொடர்பாக சிபிஐ பதிவு செய்த வழக்கு மற்றும் குற்றப் பத்திரிகைக்கும், ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசனின் விசாரணை ஆணையத்தின் அறிக்கைக்கும் பல்வேறு முரண்பாடுகள் காணப்படுகின்றன.

முரண்பாடுகள் ஒருபுறம் இருக்க, விசாரணை ஆணையம் தனது அறிக்கையை சமர்ப்பித்து ஓராண்டுக்கு மேலாகியும் இன்று வரை அரசு அதிகாரிகள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று பாதிக்கப்பட்ட மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

விசாரணை அறிக்கை கூறுவது என்ன?

விசாரணையை முடித்த ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன், ஐந்து பாகங்கள் கொண்ட, 3000 பக்க விசாரணை அறிக்கையைக் கடந்த ஆண்டு மே மாதம் 18 ஆம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் சமர்ப்பித்தார். அது சட்டமன்றத்திலும் சமர்ப்பிக்கப்பட்டது.

அந்த விசாரணை அறிக்கையில், அப்போதைய மாவட்ட ஆட்சியர் வெங்கடேஷ், தெற்கு ஐஜி சைலேஷ் குமார், டிஐஜி கபில் குமார் சி சராட்கர், தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி மகேந்திரன், டிஎஸ்பி லிங்கதிருமாரன் ஆகிய உயரதிகாரிகளின் அலட்சியம் மற்றும் பொறுப்பற்ற தன்மையால்தான் இந்தத் தூப்பாக்கிச்சூடு நடந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு

பட மூலாதாரம், Getty Images

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நூறு நாள் நடந்த போராட்டத்தின்போது, ஒருமுறை கூட மாவட்ட ஆட்சியர் பொது மக்களிடம் அமைதிப் பேச்சு வார்த்தையில் ஈடுபடவில்லை என அந்த விசாரணை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மேலும், துப்பாக்கிச்சூடு நடந்த அன்று, மாவட்ட ஆட்சியர், தனது அலுவலகத்தில் இல்லாமல், அந்தச் சம்பவத்தை சார் ஆட்சியர் பிரசாந்த்தை கையாள விட்டுச் சென்றுள்ளார்.

விசாரணை ஆணையத்திடம் வாக்குமூலம் அளித்த வெங்கடேஷ், 100வது நாள் நடத்த போராட்டத்தில் அசம்பாவிதங்கள் நடக்க வாய்ப்பிருப்பதாக எந்தவொரு உளவுப்பிரிவும் தனக்குத் தகவல் தெரிவிக்கவில்லை எனக் கூறியுள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மாவட்ட ஆட்சியரைத் தவிர, துப்பாக்கிச்சூடு தொடர்பாக ஐஜி.,யிடம் இருந்து எந்தவொரு உத்தரவையும் பெறாமலேயே, துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

விசாரணை அறிக்கையில், மாவட்ட ஆட்சியர் உட்பட நான்கு வருவாய்த் துறையினர் மீதும், ஐஜி, டிஐஜி, எஸ்பி உட்பட 17 காவல்துறையினர் மீதும் நடவடிக்கை எடுக்கக் கூறி தனது விசாரணை அறிக்கையில் பரிந்துரைத்துள்ளார் ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன்.

விசாரணை அறிக்கையில், போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்துவதற்கான சூழலே ஏற்படவில்லை என்றும், பொதுமக்கள் யாரும் எந்த ஆயுதங்களைக் கொண்டும் போலீசாரை தாக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

சிபிஐ குற்றப் பத்திரிகையில் என்ன உள்ளது?

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு

பட மூலாதாரம், Getty Images

துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக சிபிஐ சார்பில் இதுவரை இரண்டு குற்றப்பத்திரிகை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆனால், இந்த இரண்டு குற்றப் பத்திரிகையிலும், எந்த காவல்துறை அதிகாரிகள் மீதும் வழக்குப் பதிவு செய்யப்படவில்லை.

துப்பாக்கிச் சூட்டிற்காக, “சம்பவ இடத்தில் இருந்த துணை வட்டாட்சியர் சேகர் என்பவர்தான் ஒப்புதல் கொடுத்துள்ளார். அவர் இந்த உத்தரவை பிறப்பிக்க உகந்த அதிகாரி இல்லை என்றாலும், நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வரவே அவர் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார். அதனால், அவர் மீது எந்தத் தவறும் இல்லை,” என சிபிஐ தாக்கல் செய்த இரண்டாம் குற்றப்பத்திரிகையில் தெரிவித்துள்ளனர்.

போலீசாரின் நடவடிக்கை குறித்து குறிப்பிட்டுள்ள சிபிஐ, துப்பாக்கிச்சூடு நடத்த வேண்டும் என போலீசார் முன்கூட்டியே திட்டமிட்டுச் செல்லவில்லை என்றும், நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வரவே துப்பாக்கிச்சூடு நடத்தியதாகவும் கூறியுள்ளனர்.

நூறாவது நாள் அன்று 144 தடை உத்தரவு பிறப்பிப்பதில் தாமதம் இருந்ததாகவும், அதில் பல்வேறு துறை அதிகாரிகளுக்குள் ஒருங்கிணைப்பு இல்லாததால், அந்த உத்தரவு மிக மோசமாக அமல்படுத்தப்பட்டதாக இருவரும் கூறியிருக்கின்றனர்.

மக்கள் என்ன சொல்கிறார்கள்?

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு

பட மூலாதாரம், Getty Images

தமிழ்நாடு அரசின் விசாரணை ஆணையமும், மத்திய அரசின் புலனாய்வு அமைப்பான சிபிஐ.,யும் முரணான அறிக்கைகளைத் தாக்கல் செய்துள்ளன. இருப்பினும், விசாரணை ஆணையத்தின் பரிந்துரைகளை ஏற்று தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்கும் என நம்பியிருந்ததாக தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் இறந்தவர்களின் குடும்பத்தினர் பிபிசி தமிழிடம் கூறினர்.

“சிபிஐ எங்களை ஏமாற்றிவிட்டது. ஆனால், தற்போதைய முதல்வர் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது, எங்களுக்கு நீதியை பெற்றுத் தருவதாகக் கூறியிருந்தார். ஆனால், அவர் ஆட்சிக்கு வந்து 30 மாதங்கள் ஆகிவிட்டது. விசாரணை ஆணையத்தின் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு ஓராண்டுக்கு மேல் ஆகியுள்ளது. இன்று வரை அவர், காவல்துறையினர் மீதோ, வருவாய்த் துறையினர் மீதோ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது மிகுந்த வருத்தத்திற்குரியது,” என்றார் மைக்கேல்.

தனது மகளின் இறப்பிற்கான நீதி கிடைக்கும் வரை போராடுவேன் என்கிறார் ஸ்னோலினின் தயார் ஜெ.வனிதா.

“அவள் உயிருடன் இருந்திருந்தால், இந்நேரம் வழக்கறிஞராகியிருப்பாள். ஆனால், இந்த அரசாங்கம் என் மகளை சுட்டுக்கொன்றுவிட்டது. எங்களுக்கு அரசு வேலையும், நிதி உதவியும் கொடுத்தால், மறந்துவிடுவோம் என அரசு நினைக்கிறதோ என்னவோ, ஆனால், நாங்கள் நிச்சயம் நீதி கிடைக்கும் வரை போராடவோம்,” என்கிறார் வனிதா.

ரஞ்சித் இறந்து நான்கு ஆண்டுகளுக்கு வீட்டைவிட்டு வெளியேறாமல் இருந்துள்ளார் அவரது தயார் முத்துலட்சுமி. “அவன் சாகும்போது, அவனுக்கு வயசு 22. அந்த வயதெல்லாம் சாகவேண்டிய வயதா என நீங்களே சொல்லுங்கள்,” எனக் கேட்கிறார் வனிதா.

பத்திரிகையாளர் மீது வழக்கு

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு

பட மூலாதாரம், Getty Images

பாதிக்கப்பட்ட மக்கள் நீதி கேட்கும் அதேவேளையில், விசாரணை ஆணையத்தின் அறிக்கை முதல்வரிடம் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர், அதில் இருக்கும் தகவல்களை பொதுவெளியில் வைப்பதற்கு முன்னதாக செய்தி வெளியிட்ட ‘ஃப்ரென்ட்லைன்’(Frontline) இதழின் பத்திரிகையாளர் இளங்கோவன் ராஜசேகர் மீது தமிழ்நாடு போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய இளங்கோவன், “தமிழ்நாடு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்ததே, அவர்கள் விசாரணைக்காக எங்கள் அலுவலகத்திற்கு வந்தபோதுதான் தெரியும். அப்போது நான் இந்தியாவில் இல்லை என்பதால், அதை எங்கள் அலுவலக சட்ட ஆலோசகர்களே அதைக் கையாண்டனர். செய்தி வெளியிட்டதில் எந்தத் தவறும் இல்லை என்றும், அதில் எந்த விதிமீறல் இல்லை என்றும் பதிலளித்து அனுப்பினர்,” என்றார்.

ஆனால், அந்த வழக்கை இப்போது வரை முடித்து வைக்கவில்லை என்றும் இளங்கோவன் கூறினார்.

“வழக்கு தமிழ்நாடு அரசு சார்பில் போடப்படவில்லை. ஒரு தனிநபர் புகார் கொடுத்து, அந்த புகார் மீது நடவடிக்கை வேண்டும் என நீதமன்ற உத்தரவு பெற்று வந்ததால்தான் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஆனால், அப்படி பதிவு செய்யப்பட்ட வழக்கை விசாரித்த பிறகும் முடித்து வைக்காததுதான் பிரச்னையாகத் தெரிகிறது,” என்றார்.

இதுகுறித்து தமிழ்நாடு காவல்துறையினர் யாரும் பதிலளிக்க முன்வரவில்லை.

அதிகாரிகள் மீது என்ன நடவடிக்கை எடுத்துள்ளது தமிழ்நாடு அரசு?

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு

பட மூலாதாரம், Getty Images

தமிழ்நாடு அரசு இந்த விவகாரத்தில் இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து நீதிமன்றத்தில் அளித்துள்ள விளக்கத்தின்படி, அப்போதைய மாவட்ட ஆட்சியர் வெங்கடேஷ் மீது துறைரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும், அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை அவர் நிராகரித்துள்ளார் எனவும் தெரிவித்துள்ளது.

அதேபோல, வெங்கேடஷ் மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்க தீரஜ் குமார் ஐஏஎஸ் அதிகாரியை விசாரணை அதிகாரியாக நியமித்துள்ளது தமிழ்நாடு அரசு.

காவல்துறையில் குற்றம் சாட்டப்பட்டுள்ள மூத்த அதிகாரிகளான ஐஜி சைலேஷ் குமார் யாதவ், டிஐஜி கபில் குமார் சி சராட்கர், எஸ்பி மகேந்திரன், டிஎஸ்பி லிங்கதிருமாறன் ஆகியோரிடம் விளக்கம் பெறப்பட்டு, அது பரிசீலனையில் உள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

Facebook
Facebook
fb-share-icon
Telegram
WhatsApp
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *