
பட மூலாதாரம், Reuters
பாதிப்புக்கு உள்ளாகும் பகுதிகளிலிருந்து மக்களை முன்கூட்டியே வெளியேற்றுவது உயிர் இழப்புகளை தவிர்க்க உதவும்.
மொராக்கோவில் சில தினங்களுக்கு முன் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 2000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இம்மாதிரியான் நிலநடுக்கங்களை முன்கூட்டியே ஏன் கணிக்க முடியவில்லை?
நிலநடுக்கத்தை தடுக்கும் அல்லது அதனால் ஏற்படக்கூடிய உயிரிழப்புகளைத் தடுக்கும் வீடுகள் மற்றும் கட்டடங்களைக் கட்டுவது தான் நாம் உயிர் மற்றும் பொருள் சேதங்களைத் தவிர்ப்பதற்கான சிறந்த உத்தியாக இருக்கும்.
பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளிலிருந்து மக்களை முன்கூட்டியே வெளியேற்றுவதும் உயிர் இழப்புகளை தவிர்க்க உதவும்.
இருப்பினும், பாதிப்புக்கு உள்ளாகும் பகுதிகளிலிருந்து மக்களை விரைவாக வெளியேற்றுதல் என்பது நடைமுறையில் சாத்தியமில்லாதவை. ஏனெனில், நிலநடுக்கத்தை சில நிமிடங்களுக்கு முன்பு தான் கணிக்க முடியுமே தவிர, முன்னதாகவே கணிக்க இயலாது.
நிலநடுக்கம் எப்போது ஏற்படும் என்று விஞ்ஞானிகளால் சொல்ல முடியாதது ஏன்?

பட மூலாதாரம், Reuters
நடைமுறையில் சொல்ல வேண்டும் என்றால், நிலநடுக்கம் என்பது முற்றிலும் கணிக்க முடியாத ஒன்று என்கிறார் லக்கெட்.
பெரும்பாலான நிலநடுக்கங்கள் பூமியின் மேல் பகுதியில் திடீரென வெளிப்படும் அழுத்தத்தால் ஏற்படுகின்றன.
டெக்டோனிக் இயக்கங்களின் காரணமாக இந்த பதற்றம் படிப்படியாக உருவாகிறது. பெரும்பாலும் இது புவியியல் ரீதியாக பாதிப்பில் உள்ள பகுதியில் நடைபெறுவதாகக் விளக்குகிறது பிரிட்டனின் புவியியல் சங்கம்.
“ஆனால் அது எப்போது நிகழும் என்று கணிக்க இயலாது. ஏனெனில், பூமியில் மேற்பகுதியில் ஏற்படும் அழுத்தத்தின் தன்மை வெளிப்படும் விதம் நமக்கு தெரியாது,” என பிரிட்டிஷ் புவியியல் ஆய்வின் நில அதிர்வு நிபுணர் ரிச்சர்ட் லக்கெட் பிபிசி முண்டோ சேவையிடம் விளக்கினார்.
“பெரிய அழுத்தங்களால் பதற்றம் உருவாகிறது என்பதை நாங்கள் அறிவோம், அவை எங்கு ஏற்படகிறது என்றும் எங்களுக்குத் தெரியும், ஆனால் அந்த அழுத்தத்தின் வெளிப்பாடு எப்போது இருக்கும் என்று எங்களுக்குத் தெரியாது,” என்கிறார் ரிச்சர்ட்.
அதாவது குறைந்தபட்சமாக அதி தீவிரமான நிலநடுக்கம் எங்கு நிகழக்கூடும் என்பதை மட்டும்தான் வல்லுநர்களால் அறிய முடியும் என்கிறார் லக்கெட். “இதுவும் பூமிக்கு அடியில் இருக்கும் பாறைகளில் ஏற்பட்டுள்ள விரிசல்களின் அளவைப் பொருத்தே கூற முடிகிறது,” என தெளிவுபடுத்துகிறார் லக்கெட்.
அதிதீவிர நிலநடுக்கம் எங்கு ஏற்படும் என அறிய முடிந்தாலும், ஏற்பட இருக்கும் நிலநடுக்கத்தின் தீவிரத்தை கணிக்க இவை உதவாது என்கிறார் லக்கெட்.
“ஏனேனில், பூமிக்கு அடியில் ஏற்படும் அழுத்தங்களை தொடர்ச்சியான சிறிய நிலநடுக்கங்களாகவும் வெளிப்படுத்தலாம் அல்லது ஒரு பெரிய நிலநடுக்கமாகவும் வெளிப்படுத்தலாம். அதனை உறுதிப்படுத்த முடியாது,” என்கிறார் அவர்.
நம்மை எச்சரிக்கக்கூடிய விலங்குகள்

பட மூலாதாரம், Getty Images
நிலநடுக்கங்களுக்கும் வானிலைக்கும் எந்த தொடர்பும் இல்லை
மேலும், காலநிலை மாற்றம் அல்லது விலங்குகளின் நடத்தை போன்ற வேறு அறிகுறிகள் நிலநடுக்கத்தை கணிக்க உதவுமா ?
“நிலநடுக்கங்களுக்கும் வானிலைக்கும் எந்த தொடர்பும் இல்லை. காலநிலை மாற்றத்துடனும் நிச்சயமாக எந்த தொடர்பும் இல்லை. இவை இரண்டுமே முற்றிலும் வேறுபட்டவை.” என தெளிவுபடுத்துகிறார் விஞ்ஞானி லக்கெட்.
ஆனால், விலங்குகளின் நடந்து கொள்ளும் விதம் மிகவும் சுவாரஸ்யமானது என்கிறார் அவர்.
“நிலநடுக்கம் வருவதற்கு முன் சில விலங்குகள் எப்படி வித்தியாசமாக நடந்துகொள்கின்றன என்பதைப்பற்றி பல்வேறு தகவல்கள் வெளிவந்துள்ளன. பொதுவாக நாய்கள் அதிகமாக குரைக்கின்றன அல்லது விலங்குகளின் சத்தம் அதிகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
ஏனென்றால், அதிக தூரத்தில் பெரிய நிலநடுக்கம் ஏற்படும் போது, அது பூமியில் பல்வேறு அலைகளை உண்டாக்குகிறது. முதல் அலைகள் மிகச் சிறியவை, அவை எந்தத் தீங்கும் செய்யாது.
அதனால், பல சமயங்களில் நாம் அவற்றைக் கண்டுகொள்வதே இல்லை. ஆனால், விலங்குகளால் அவற்றை உணர முடிகிறது, அவை அதனை கவனிக்கின்றன” என்கிறார் லக்கெட்.

பட மூலாதாரம், Getty Images
விலங்குகளால் உணர முடிந்தாலும், அதனை வைத்துக்கொண்டு நம்மால் பூகம்பத்தை முன்னதாக கணிக்க முடியாது.
“விலங்குகள் இந்த அதிர்வுகளை உணர்கின்றன. ஆனால், அவை உணரும்போது, நிலநடுக்கம் ஏற்கனவே நிகழ்ந்துவிட்டது. அதனால், நிகழ்வதற்கு முன்னதாக கணிக்க இயலாது ஒன்று,” என்கின்றனர் நிபுணர்கள்.
“விலங்குகள் சற்று முன்னதாகவே நமக்கு ஏற்பட உள்ள ஆபத்தை எச்சரிக்கின்றன. அந்த நேரம் என்பது நிலநடுக்கம் ஏற்படும்போது வரும் சிறிய மற்றும் பெரிய அலைகளுக்கு இடையில் ஏற்படும் சிறிய இடைநிறுத்தத்தைப் பொறுத்தது. அதே பாணியில்தான் நிலநடுக்கம் குறித்து குறைந்த நேரத்திற்கு முன் எச்சரிக்கும் அபாய ஒலி எழுப்பும் இயந்திரங்களும் செயல்படுகின்றன. ஆனால், இந்த சாதனங்கள் விலங்குகளைவிட அதிக உணர்வுத்திறன் கொண்டவை,” என்கிறார் லக்கெட்.
சுருங்கச் சொன்னால், பூகம்பங்களை முன்னறிவிப்பது இப்போது மட்டுமின்றி, எப்போதும் சாத்தியமில்லை என நிபுணர்கள் நம்புகிறார்கள்.
“என்ன மாதிரியான நிகழ்வுகள் ஏற்பட வாய்ப்புள்ளது என்பதை கண்டறிவதற்கான வழிகளை செம்மைப்படுத்துவது மட்டுமே இப்போதைக்கு முடியும்,” என்கிறார்கள் நிபுணர்கள்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
நன்றி
Publisher: பிபிசிதமிழ்