
பட மூலாதாரம், ISRO
இந்தியாவின் விண்வெளி ஆய்வு வரலாற்றில் முதல்முறையாக இஸ்ரோ சூரியனை ஆய்வு செய்ய ஆதித்யா எல்1 விண்கலத்தை நாளை (செப்டம்பர் 2) விண்ணில் ஏவுகிறது.
நிலா, செவ்வாய் ஆகியவற்றை ஆய்வு செய்து சாதனை படைக்கும் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம், தற்போது சூரியன் மீதும் தடம் பதிக்க முயல்கிறது.
இந்தியாவின் விண்வெளி ஆய்வு வரலாற்றில் முதல்முறையாக இஸ்ரோ சூரியனை ஆய்வு செய்ய ஆதித்யா எல்1 விண்கலத்தை நாளை விண்ணில் ஏவுகிறது.
இந்த விண்கலம் சூரியனை எப்படி நெருங்கப் போகிறது, எவ்வளவு தொலைவில் இருந்து தனது பணிகளை இது மேற்கொள்ளும்? எல்1 என்றால் என்ன? முதலில், நாம் ஏன் சூரியனை ஆய்வு செய்ய வேண்டும்?
இப்படிப் பல கேள்விகள் நமக்குள் இருக்கலாம். அவையனைத்திற்கும் விடை காண முயல்கிறது இந்தக் கட்டுரை.
சூரியன் இல்லையென்றால் பூமி என்ன ஆகியிருக்கும்?
சூரியனின் வயது 450 கோடி ஆண்டுகள். அதில் ஹைட்ரஜன், ஹீலியம் வாயுக்கள் நிறைந்துள்ளன.
பூமியில் இருந்து சூரியன் 15 கோடி கி.மீ தொலைவில் இருக்கிறது. சூரிய மண்டலத்தின் நடுவே கொப்பளித்துக் கொண்டிருக்கும் இந்த வாயுப் பந்துதான் இங்குள்ள அனைத்து கோள்களுக்குமான ஆற்றல் ஆதாரமாகச் செயல்படுகிறது.

பட மூலாதாரம், ISRO
சூரியனில் இருந்து அளவற்ற ஆற்றல் வெளிப்படுகிறது. நம்மால் கற்பனைகூடச் செய்ய முடியாத அளவுக்கு அதன் திறன் உள்ளது.
அந்த ஆற்றல் இல்லாமல் போயிருந்தால் பூமியில் உயிர்களே தோன்றியிருக்க முடியாது. பூமி மட்டுமின்றி, சூரிய மண்டலத்தில் உள்ள அனைத்து கோள்களையும் வான் பொருட்களையும் சூரியனின் ஈர்ப்புவிசையே இறுகப்பற்றி வைத்துள்ளது.
இத்தகைய அதிமுக்கியத்துவம் வாய்ந்த சூரியனின் மையக்கரு 1.5 கோடி டிகிரி செல்ஷியஸ் வெப்பம் கொண்டது. அந்த மையக்கருவில் அணுக்கரு இணைவு செயல்முறையின் மூலம் இந்த அதீத ஆற்றல் உற்பத்தியாகிறது.
சூரியனில் நமது கண்களுக்குத் தெரியும் அதன் மேல் பகுதியில் வெப்பம் குறைந்தபட்சம் 5000 டிகிரி செல்ஷியஸ் இருக்கும்.
சூரியனை ஏன் ஆய்வு செய்ய வேண்டும்?
பூமிக்கு மிக அருகில் நம்மால் நெருங்கி கவனிக்கக்கூடிய தொலைவில் இருக்கும் ஒரே நட்சத்திரம் சூரியன் மட்டுமே.
ஆதித்யா எல்1 திட்டம் குறித்து இஸ்ரோ வெளியிட்டுள்ள கையேட்டின்படி, சூரியனை ஆய்வு செய்வதன் மூலம் நம்மால் நமது கேலக்ஸியில் உள்ள மற்ற நட்சத்திரங்களின் தன்மையைப் புரிந்துகொள்ள முடியும்.

பட மூலாதாரம், Getty Images
பூமியில் இருந்து சூரியன் 15 கோடி கி.மீ தொலைவில் இருக்கிறது.
பால்வீதி மண்டலத்தில் மட்டுமின்றி, மற்ற கேலக்ஸிகளில் இருக்கும் நட்சத்திரங்களைப் பற்றிய புரிதலும் இதன்மூலம் கிடைக்கும். சூரியனில் இருந்து அளவற்ற ஆற்றல் வெளிப்படுகிறது. நம்மால் கற்பனைகூடச் செய்ய முடியாத அளவுக்கு அதன் திறன் உள்ளது.
இதுபோன்ற பிரமாண்ட சூரிய நிகழ்வுகள் பூமியை நோக்கியிருந்தால், அது பூமியைச் சுற்றியுள்ள விண்வெளிப் பகுதியில் பல தொந்தரவுகளை ஏற்படுத்தக்கூடும். இதனால் பல்வேறு விண்கலங்களும் தொலைத்தொடர்பு அமைப்புகளும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.
இதனோடு கூடவே, ஒரு விண்வெளி வீரர் இத்தகைய நிகழ்வுகளை நேரடியாக எதிர்கொண்டால் அவர்களும் அபாயத்தில் சிக்கக்கூடும்.
ஆகவே அத்தகைய நிகழ்வுகளைப் பற்றிய முன்னறிவிப்பு கிடைப்பது, அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க ஏதுவாக இருக்கும்.
சூரியனின் பல்வேறு வெப்ப மற்றும் காந்த நிகழ்வுகள் இயற்கையில் அதிதீவிரமாக உள்ளன. ஆகவே ஆய்வுக்கூடங்களில் ஆராய்ச்சி செய்ய முடியாத இத்தகைய நிகழ்வுகளை நேரடியாக சூரியனில் ஆய்வு செய்வது பயனுள்ளதாக இருக்கும்.
ஆதித்யா எல்1: இதில் எல்1 என்றால் என்ன?

பட மூலாதாரம், Getty Images
சூரியனின் பல்வேறு வெப்ப மற்றும் காந்த நிகழ்வுகள் இயற்கையில் அதிதீவிரமாக உள்ளன.
ஆதித்யா எல்1. இந்தப் பெயரில் இருக்கும் எல்1 என்பதற்கு என்ன அர்த்தம் என்பதைத் தெரிந்துகொள்ள நாம் லக்ராஞ்ச் புள்ளிகளைப் பற்றித் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும்.
விண்வெளியில் உள்ள இரண்டு வான்பொருட்களுக்கு நடுவே மையநாட்ட விசை மற்றும் ஈர்ப்பு விசை சமமாக இருக்கும் ஒரு புள்ளிதான் லக்ராஞ்ச் பாயின்ட் எனப்படும் இந்த எல்1. இதில் மொத்தம் எல்1, எல்2, எல்3, எல்4, எல்5 என ஐந்து புள்ளிகள் உள்ளன.
நீங்கள் உங்கள் விண்கலத்தில் ஒரு விண்வெளிப் பயணம் மேற்கொள்வதாக கற்பனை செய்துகொள்ளுங்கள். அந்தப் பயணத்திற்கு நடுவே உங்கள் விண்கலத்தை தனியாக ஓரிடத்தில் நிறுத்தி வைக்க வேண்டும்.
அகண்ட இந்த விண்வெளியில் அப்படி நீங்கள் நினைத்த இடத்திலெல்லாம் விண்கலத்தை நிறுத்திவிட முடியாது. அப்படி நிறுத்தினால், அது மெல்ல மெல்ல நகர்ந்து எங்காவது சென்றுவிடும். அந்த இடத்திற்கு நீங்கள் திரும்பிச் செல்லும்போது அங்கு உங்கள் விண்கலமே இருக்காது. அது சில ஆயிரம் அல்லது சில லட்சம் கிலோமீட்டர்களுக்கு அப்பால் சென்றிருக்கும்.
இப்படியான சூழலைத் தவிர்க்க விண்வெளியில் உள்ள இந்த லக்ராஞ்ச் புள்ளியை நீங்கள் பயன்படுத்தலாம். இந்தப் புள்ளியில் ஈர்ப்புவிசை சமமாகப் பேணப்படும்.
எல்1 புள்ளியில் விண்கலம் தடம் மாறாமல் நிற்பது எப்படி?

பட மூலாதாரம், ISRO
விண்வெளியில் உள்ள இரண்டு வான்பொருட்களுக்கு நடுவே மையநாட்ட விசை மற்றும் ஈர்ப்பு விசை சமமாக இருக்கும் ஒரு புள்ளிதான் லக்ராஞ்ச் பாயின்ட் எனப்படும் இந்த எல்1 புள்ளி.
பூமியோடு சேர்ந்து மற்றொரு பொருள் சூரியனைச் சுற்றி வருவதாக வைத்துக்கொள்ளுங்கள். அந்தப் பொருள் பூமி சூரியனைச் சுற்றி நகரும் அதே வேகத்தில் நகர்கிறது.
இப்போது சூரியனும் பூமியும் ஒரு நேர்க்கோட்டில் விண்வெளியில் இருப்பதாக கற்பனை செய்துகொள்ளுங்கள்.
இதில் சூரியனுக்கு ஒரு ஈர்ப்பு விசையும் மையநாட்ட விசையும் உண்டு, பூமிக்கும் அதேபோல் ஈர்ப்பு விசையும் மையநாட்ட விசையும் உண்டு.
சூரியனின் ஈர்ப்பு விசையில் பிடிபட்டு சுற்றி வரும் பூமிக்கும் சூரியனுக்கும் இருக்கும் ஈர்ப்புவிசை சந்திக்கும் இந்தப் புள்ளியில் ஈர்ப்புவிசை சமநிலையைக் கொண்டிருக்கும். அத்தகைய புள்ளி சூரியன் மற்றும் பூமியைச் சுற்றி மொத்தம் ஐந்து இடங்களில் உள்ளன.
சூரியன், பூமியைச் சுற்றி அவற்றுடைய அளவுக்கும் திறனுக்கும் ஏற்ற ஈர்ப்பு விசையும் இருக்கும். இந்த இரண்டும் சந்திக்கும் பகுதிகளே லக்ராஞ்ச் புள்ளிகள்.

பட மூலாதாரம், NASA
சூரியனின் ஈர்ப்பு விசையும் பூமியின் ஈர்ப்பு விசையும் சந்திக்கும் ஒரு புள்ளி பூமிக்கு அருகில் இருக்கிறது. அதுதான் முதல் லக்ராஞ்ச் புள்ளி.
மேலே காட்டப்பட்டுள்ள நாசாவின் விளக்கப் படத்தில் L1, L2, L3, L4, L5 என ஐந்து புள்ளிகள் குறிக்கப்பட்டுள்ளன. அந்தப் புள்ளிகள் அமைந்துள்ள பகுதிகளைக் கவனியுங்கள்.
சூரியனின் ஈர்ப்பு விசையும் பூமியின் ஈர்ப்பு விசையும் சந்திக்கும் ஒரு புள்ளி பூமிக்கு அருகில் இருக்கிறது. அதுதான் முதல் லக்ராஞ்ச் புள்ளி. எல்1 என அழைக்கப்படும் இந்தப் புள்ளி பூமிக்கும் வெள்ளி கோளுக்கும் நடுவில் இருக்கிறது.
அந்தப் புள்ளியில் தொடங்கி, சூரியனைச் சுற்றி ஒரு வட்டம் போட்டால், சரியாக எல்1 புள்ளிக்கு நேர் எதிரே இருக்கும். ஆனால், அதேபோன்ற சம ஈர்ப்புவிசை கொண்ட புள்ளியாக இருக்கும்.
இத்தகைய புள்ளிகள் சூரியன், பூமியைப் போலவே அனைத்து கோள்களுக்கும் நடுவில் இருக்கும். இவற்றில் இருக்கும் பொருட்கள் அகண்ட விண்வெளியில் பாதையின்றித் தொலைந்து போகாமல் அதே இடத்தில் சுற்றிக் கொண்டிருக்கும். அதாவது விண்வெளியில் இருக்கும் ஒரு பார்க்கிங் வசதியைப் போல இந்தப் புள்ளிகளைக் கருதலாம்.

பட மூலாதாரம், ISRO
ஆதித்யா எல்1 விண்கலம் நாளை ஏவப்படும் நாளிலிருந்து சுமார் 4 மாதங்கள் பயணித்து எல்1 புள்ளியை அடைந்து அங்கு நிலைகொள்ளும்.
விண்கலங்களுக்கான விண்வெளி பார்க்கிங் வசதியாகச் செயல்படும் இந்த ஐந்து புள்ளிகளில் ஒன்றான எல்1 புள்ளியில்தான் ஆதித்யா எல்1 தன்னை பார்க் செய்துகொண்டு சூரியனை ஆய்வு செய்யப் போகிறது.
ஆதித்யா எல்1 எப்படி எல்1 புள்ளியை நெருங்கும்?
ஆதித்யா எல்1 விண்கலம் நாளை ஏவப்படும் நாளிலிருந்து சுமார் 4 மாதங்கள் பயணித்து அத்தகைய ஒரு புள்ளியான எல்1-ஐ அடைந்து அங்கு நிலைகொள்ளும்.
பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் உள்ள இந்த எல்1 புள்ளி பூமியில் இருந்து 15 லட்சம் கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இந்தத் தொலைவு பூமிக்கும் நிலாவுக்கும் இடையிலான தொலைவைவிட நான்கு மடங்கு அதிகம்.
முதல்கட்டமாக, இஸ்ரோவின் பிஎஸ்எல்வி எக்ஸ்.எல் ராக்கெட்டில் ஆதித்யா விண்கலம் நாளை விண்ணில் ஏவப்படும். இரண்டாவதாக இந்த விண்கலம் பூமியின் குறைந்தபட்ச சுற்றுவட்டப்பாதையில் நிறுத்தப்படும்.
பிறகு சந்திரயான்-3 விண்கலம் பயணித்தது போலவே பூமியின் சுற்றுவட்டப் பாதையில் கொஞ்சம் கொஞ்சமாக பூமியிலிருந்து தொலைவாக நகர்ந்துகொண்டே போகும்.

பட மூலாதாரம், ISRO
இந்த நீண்ட பயணத்திற்கான முதல் படி செப்டம்பர் 2 காலை 11:50 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து தொடங்குகிறது.
அப்படியே பூமியின் நீள்வட்டப் பாதையில் தொலைவாகச் செல்லும் விண்கலம். இறுதி நீள்வட்டப் பாதையில் இருக்கும்போது எல்1 புள்ளியை நோக்கி விண்ணிலிருந்தே உந்துவிசை கொடுத்து ஏவப்படும்.
அதைத் தொடர்ந்து, பூமியினுடைய ஈர்ப்புவிசை ஆட்சிக் கோளத்தில் இருந்து விடுபட்டு எல்1 புள்ளியை நோக்கி ஆதித்யா விண்கலம் பயணப்படும்.
விண்ணில் ஏவப்பட்ட பிறகு, பூமியின் நீள்வட்டப் பாதையில் சுற்றி, இறுதியாக விண்ணிலிருந்தே மீண்டும் ஏவப்பட்டு, பூமியின் ஈர்ப்புவிசைப் பிடியிலிருந்து விலகி என நான்கு கட்டங்களைக் கடந்து எல்1 புள்ளியில் இருக்கும் ஹேலோ சுற்றுப்பாதையை அடையும்.
இப்படியாக எல்1 புள்ளியை அடையும் ஆதித்யா விண்கலம், மேலிருந்து கீழாக எல்1 புள்ளியில் சுற்றிக்கொண்டே சூரியன் குறித்த தனது ஆய்வுகளை மேற்கொள்ளத் தொடங்கும்.
இந்த நீண்ட பயணத்திற்கான முதல் படி நாளை (செப்டம்பர் 2) காலை 11:50 மணிக்கு சென்னையில் இருந்து வடக்கே 100 கி.மீ தொலைவிலுள்ள ஸ்ரீஹரிகோட்டாவில் இருக்கும் சதீஸ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து தொடங்குகிறது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
நன்றி
Publisher: பிபிசிதமிழ்