சந்திரயான்-3 வெற்றிக்கு பஞ்சாங்கம் தான் காரணமா? உண்மை என்ன?

சந்திரயான்-3 வெற்றிக்கு பஞ்சாங்கம் தான் காரணமா? உண்மை என்ன?

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

காணொளிக் குறிப்பு,

சந்திரயான்-3 நிலாவை முத்தமிட்ட தருணம்

“எந்தவித அறிவியல் உபகரணமும் இன்றி எப்படி இவ்வளவு துல்லியமாக இந்து மதம் கணித்துள்ளது?

இந்துக்களுக்கு கிரகங்களின் சஞ்சாரங்களை பார்க்கவும் கணிக்கவும் இன்றைய அறிவியல் தேவையில்லை.

சந்திரயான் இன்று அதிகாலை எடுத்த படம் இது. ஆச்சர்யம் என்னவென்றால் சந்திரனுக்கு அருகில் சிவப்பாக இருக்கும் படம்தான் செவ்வாய். இதில் என்ன ஆச்சர்யம் என நினைக்கலாம். நேற்றைய கோச்சாரத்தில் சந்திரனும் செவ்வாயும் ஒன்றாக உள்ளது.”

சந்திரயான்-3 வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கிய நேற்று(ஆகஸ்ட் 23) இரவு 8:22 மணிக்கு ட்விட்டரில் ஒரு பயனர் இப்படிப் பதிவிட்டிருந்தார். அவரை சுமார் 3,000க்கும் மேற்பட்டவர்கள் பின்பற்றுகின்றனர்.

மற்றொரு பயனர் இதேபோல் சந்திரயானை குறிப்பிட்டு, “பஞ்சாங்கம் என்பது விஞ்ஞானிகளால் வானியல் அடிப்படையில் செய்யப்படும் அறிவியல் கணிதக் கணக்கீடுகள் ஆகும்,” என்று பதிவிட்டுள்ளார்.

இப்படியான பதிவுகளை ஃபேஸ்புக், ட்விட்டர் ஆகிய சமூக ஊடகங்களில் நேற்று முதல் காண முடிகிறது. ஆனால், உண்மையில் சந்திரயான் திட்டத்திற்கும் பஞ்சாங்கத்திற்கும் ஜோதிடத்திற்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை என்று உறுதியாகக் கூறுகிறார் விஞ்ஞான் பிரசார் அமைப்பின் முதுநிலை விஞ்ஞானி த.வி.வெங்கடேஸ்வரன்.

சந்திரயான்-3 வெற்றிக்குக் காரணம் பஞ்சாங்கமா?

சந்திரயான்-3
படக்குறிப்பு,

சந்திரயான் திட்டத்திற்கும் பஞ்சாங்கத்திற்கும் ஜோதிடத்திற்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை என்று கூறுகிறார் விஞ்ஞானி த.வி.வெங்கடேஸ்வரன்.

இஸ்ரோவின் சந்திரயான் விண்வெளித் திட்டம் மூன்றாவது முறையாக வெற்றி பெற்றுள்ளது.

ஆக்ஸ்ட் 23ஆம் தேதியன்று மாலை 5:46 மணியளவில் தொடங்கிய விக்ரம் லேண்டரின் தரையிறங்கும் செயல்முறை 6:04 மணிக்கு நிறைவடைந்தது.

இந்த 18 நிமிடங்களில் இஸ்ரோ விஞ்ஞானிகள் அனைவரும் நுனி சீட்டில், இதயம் படபடக்க நின்றிருந்தார்கள். இதை உலகமே நேரலையில் பார்த்துக் கொண்டிருந்தது.

சரியாக 6:04 மணிக்கு வெற்றிகரமாக நிலவில் விக்ரம் லேண்டர் கச்சிதமாகத் தரையிறங்கியது. தென் துருவப் பகுதியில் கால் பதித்த முதல் நாடு என்ற புகழையும் இந்தியா இதன்மூலம் அடைந்தது.

ஆனால், இஸ்ரோவின் இந்த வெற்றிக்கும் ஜோதிடத்திற்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை என்று கூறுகிறார் விஞ்ஞானி த.வி.வெங்கடேஸ்வரன்.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

காணொளிக் குறிப்பு,

நிலாவில் தரையிறங்கியது இந்தியா

இந்தளவுக்கு துல்லியமாக சந்திரயான்-3 விண்கலத்தை பூமியிலிருந்து விண்ணுக்கு ஏவி, நிலவிலும் தரையிறக்க இந்து மதத்தின் பஞ்சாங்கம் கணித்து வைத்த விவரங்கள்தான் காரணம் என்று சமூக ஊடங்களில் சிலர் விவாதித்து வருகின்றனர்.

ஆனால், “இது ஜோதிடமோ பஞ்சாங்கமோ இல்லை. முழுக்க முழுக்க அறிவியல். சந்திரயான்-2 தரையிறங்குவதற்காக நியமிக்கப்பட்ட நேரம் செப்டர்ம்பர் 2, 2019. அப்போது சந்திரன் முதல் காலாண்டில் இருந்தது. அது சுக்லபக்ஷ சப்தமி. அதே காலகட்டம் தற்போது ஆகஸ்ட் 23, 2023இல் வந்துள்ளது,” என்று விளக்குகிறார் அவர்.

அது ஏன் அப்படி என்பதற்கும் ஜோதிடத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இது முற்றிலும் அறிவியல்தான் என்கிறார் த.வி.வெங்கடேஸ்வரன்.

விக்ரம் லேண்டர் ஆகஸ்ட் 23ஆம் தேதி தரையிறக்கப்பட்டது ஏன்?

நிலவில் சூரிய ஒளி கிடைக்கும் பகுதிகளையும் இருண்ட பகுதிகலையும் பிரிக்கும் கோடு டெர்மினேட்டர் கோடு என அழைக்கப்படுகிறது.

பூமியில் இருந்து பார்க்கும்போது வளர்பிறையில் நிலவு வளரும். அந்தச் சூழலில் அங்கு பகல் தொடங்கும். அப்போது இரவையும் பகலையும் பிரிக்கும் இந்த டெர்மினேட்டர் கோடு நிலவின் வலதுபுறமிருந்து நகரும்.

அதிலிருந்து அடுத்த ஏழு முதல் எட்டு நாட்களில் முழு நிலவாக மாறும். அதற்குப் பிறகே தேய்பிறை தொடங்கி நிலவில் பகல் நிலவும் நாட்கள் குறையும் கட்டம் தொடங்கும். இந்த நேரத்தில் இரவையும் பகலையும் பிரிக்கும் டெர்மினேட்டர் கோடு நிலவின் இடதுபுறமிருந்து வலது பக்கம் நகரும்.

சந்திரயான்-3

பட மூலாதாரம், ISRO

படக்குறிப்பு,

“நிலவின் இரவு, பகல் இயக்கங்களை அடிப்படையாக வைத்தே ஆகஸ்ட் 23ஆம் தேதியன்று தரையிறக்க தீர்மானிக்கப்பட்டது.”

இந்தக் காலகட்டத்தில் இரவு நிலவும் நாட்கள் நெருங்கத் தொடங்கும். அதிலிருந்து அடுத்த ஏழு நாட்களில் நிலவில் இரவு தொடங்கிவிடும்.

அதாவது, “முழு நிலவுக்கு முன்பு வளர்பிறை காலகட்டத்தில் ஏழு நாட்களும் முழு நிலவுக்குப் பிறகு தேய்பிறை கட்டத்தில் ஏழு நாட்களும் அங்கு பகலாக இருக்கும். மாதத்தின் மற்ற நாட்களில் அங்கு இரவாக இருக்கும்.

இதில், பகலாக இருக்கும் காலகட்டத்தில்தான் சந்திரயானில் மொத்தம் 14 நாட்களுக்கு சந்திரயான்-3 தரையிறங்கிய தளத்தில் சூரிய ஒளி இருக்கும். நிலவின் இந்த இயக்கங்களை அடிப்படையாக வைத்தே ஆகஸ்ட் 23ஆம் தேதியன்று தரையிறக்க தீர்மானிக்கப்பட்டது,” என்கிறார் த.வி.வெங்கடேஸ்வரன்.

இந்த 14 நாட்களில் மட்டுமே லேண்டர், ரோவரால் செயல்பட முடியும், ஆய்வுகளைச் செய்ய முடியும் என்பதாலேயே இந்தக் காலகட்டம் முடிவு செய்யப்பட்டது.

ஏனெனில், அவை செயல்படுவதற்கு சூரிய ஒளி தேவை என்பது மட்டுமின்றி, இரவு நிலவும் நாட்களில் மைனஸ் 200 டிகிரி வரைக்கும் உறைபனிக் குளிர் நிலவும். அந்தச் சூழ்நிலையில் சந்திரயான்-3 கருவிகளின் உலோகங்கள் சேதமடைந்துவிடும் என்கிறார் த.வி.வெங்கடேஸ்வரன்.

பஞ்சாங்கம் கிரகணத்தை துல்லியமாகக் கணிக்குமா?

பஞ்சாங்கம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

கிரகணம் போன்ற வெறும் கண்களால் எளிதில் காணக்கூடிய நிகழ்வுகள் மட்டும் எப்படி பஞ்சாங்கத்தில் சரியாக உள்ளன என்ற கேள்வி இங்கே எழுகிறது.

பஞ்சாங்கம் கிரகணத்தை துல்லியமாகக் கணிக்காது எனக் கூறுகிறார் விஞ்ஞான் பிரசார் அமைப்பின் முதுநிலை விஞ்ஞானி த.வி.வெங்கடேஸ்வரன்.

எடுத்துக்காடாக, பூமியின் நேரப்படி ஜனவரி 14ஆம் தேதியன்று உத்தராயணம் நிகழ்வதாகக் கொண்டாடி வருகிறோம். ஆனால், டிசம்பர் 21 அல்லது 22ஆம் தேதியிலேயே உத்தராயணம் நிகழ்ந்துவிடுகிறதாக அவர் கூறுகிறார்.

அதுமட்டுமின்றி, தை முதல் தேதியை மகர சங்கராந்தி, அதாவது சூரியன் மகர ராசியில் புகுவதாக பஞ்சாங்கம் கூறுகிறது. ஆனால், “தற்போதைய காலகட்டத்தில் தை முதல் தேதியன்று சூரியன் தனுசு ராசியில் உள்ளது. எனவே தை 1 மகர சங்கராந்தி எனக் கொண்டாடுவது பிழையானது.”

கிரகணம் போன்ற வெறும் கண்களால் எளிதில் காணக்கூடிய நிகழ்வுகள் மட்டும் எப்படிச் சரியாக பஞ்சாங்கத்தில் உள்ளன என்ற கேள்வி இங்கே எழுகிறது.

பஞ்சாங்கம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

பஞ்சாங்கம், ஜோதிடம் ஆகியவற்றை அடிப்படையாக வைத்து விண்வெளி ஆய்வுகள் நடப்பதில்லை.

அதற்கு, “கிரகணம் போன்ற வெறும் கண்களால் எளிதில் காணக்கூடிய நிகழ்வுகள் பிழையாக இருந்தால் ஊர் மக்கள் கேலி செய்வார்கள் அல்லவா!

அதனால் பஞ்சாங்கத்தில் தங்களுடைய கணிப்புகளை ஒதுக்கி வைத்துவிட்டு, கொல்கத்தாவில் உள்ள அறிவியல் நிறுவனமான வான்பொருள் நிலை கணிப்பு மையம் என்ற ஆய்வு மையம் கணிக்கும் தரவுகளை அப்படியே தங்களுடைய பஞ்சாங்கத்தின் பதிப்பில் சேர்த்து பிரசுரம் செய்துவிடுகிறார்கள்,” என்று த.வி.வெங்கடேஸ்வரன் தெரிவித்தார்.

ஆகவே, பஞ்சாங்கம், ஜோதிடம் ஆகியவற்றை அடிப்படையாக வைத்து விண்வெளி ஆய்வுகள் நடப்பதில்லை என்று கூறும் அவர், சந்திரயான்-3 உட்பட இத்தகைய விண்வெளித் திட்டங்கள் அனைத்துமே அறிவியல்பூர்வமாகவே நடக்கின்றன என்றார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Facebook
Facebook
fb-share-icon
Telegram
WhatsApp
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *