
பட மூலாதாரம், Getty Images
உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியாவை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வீழ்த்தி 6வது முறையாக உலகக்கோப்பையை கைப்பற்றியது. இந்திய அணி உலகக்கோப்பையை கைப்பற்றும் என்று எதிர்பார்த்திருந்த கோடிக்கணக்கான ரசிகர்கள் மனமுடைந்துள்ளனர்.
ஆமதாபாத்தில் இன்று நடந்த உலகக்கோப்பை இறுதி ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி சற்று தடுமாற்றத்துடனே ஆடியது. 100 ரன்களை எட்டுவதற்குள்ளாக 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இந்திய அணியை கோலி – லோகேஷ் ராகுல் ஜோடி காப்பாற்றியது. ஆனாலும் அந்த ஜோடியும் நீண்ட நேரம் நிலைக்கவில்லை. இந்திய அணி 240 ரன்களில் ஆல் அவுட்டானது. அதனைத் தொடர்ந்து அணி பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 43 ஓவர்களில் இலக்கை எட்டி வெற்றி பெற்றது.

பட மூலாதாரம், Getty Images
இந்திய அணி கோட்டை விட்டது எங்கே ?
இந்த உலகக்கோப்பை முழுக்க ஒரு போட்டியில் கூட இந்திய அணி தோற்கவில்லை. இறுதிப்போட்டியைத் தவிர.
அனைத்து அணிகளின் பலம் பலவீனங்களை அறிந்து தொடர்ந்து ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி வெல்லவே முடியாத அணியாக வலம் வந்தது. அத்தகைய வலுவான அணி இறுதிப்போட்டியில் எப்படி தோற்றது என்ற கேள்வி எழுந்துள்ளது. இறுதிப்போட்டியில் இந்திய அணி எந்தப் புள்ளியில் ஆட்டத்தை கைவிட்டது என்ற கேள்வியும் எழுந்துள்ளது. நிச்சயமாக இந்தத் தோல்வி குறித்து இந்திய அணியின் ட்ரெஸ்ஸிங் ரூமில் ஆலோசனை மேற்கொள்ளப்படும்.
- இந்தியாவிற்கு இது சுலபமான போட்டியாக இருக்காது என்பது டாஸ் தோற்றபோதே தெரிந்துவிட்டதாக கூறப்பட்டது. ஏனென்றால் இரண்டாவது இன்னிங்ஸில் பந்தில் ஈரப்பதம் படிந்து பவுலிங்கிற்கு கடினமான சூழலாக அமையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. 300 ரன்களுக்கு மேல் இலக்கு நிர்ணயிக்க வேண்டிய நிலையில் இந்திய அணி வலுவான பார்ட்னர்ஷிப் இல்லாதது தோல்விக்கு பெரிய காரணமாக அமைந்துள்ளது. இதற்கு இந்திய அணி வீரர்களின் ஷாட் தேர்வே உதாரணமாக பார்க்கப்படுகிறது.
- ஆஸ்திரேலிய அணி வீரர்கள் பிட்சை நன்றாக பயன்படுத்தி வேகம் குறைந்த பந்துகளை வீசி இந்திய அணி வீரர்களை திக்குமுக்காடச் செய்தனர். உதாரணமாக, கம்மின்ஸ் வீசிய பந்தில் எதிர்பார்த்த அளவிற்கு பவுன்ஸ் இல்லாததால் கோலி இன்சைட் எட்ஜ் ஆகி அவுட்டானார். அதே போல ஹேசில்வுட் வீசிய ஸ்லோ பாலில் மிகவும் மோசமான ஷாட் ஆடி சூர்யகுமார் யாதவ் அவுட்டானார்.
- கில் மற்றும் ரோஹித் அடுத்தடுத்து அவுட்டான நிலையில் ஸ்ரேயாஸ் ஐயரும் அவுட்டான நிலையில் கடைசி பேட்ஸ்மேனாக களத்தில் இருந்த சூர்யகுமார் யாதவ் பொறுப்பாக ஆடாதது இந்தியா அணி இந்தப் போட்டியை கைவிட்ட ஒரு இடம்.
- மற்றொன்று, இரண்டாவது இன்னிங்ஸில் அடுத்தடுத்து 3 விக்கெட்டுகள் விழுந்த நிலையில் ட்ராவிஸ் ஹெட் மற்றும் லபுஷானே ஆகிய இருவரையும் வலுவான பார்ட்னர்ஷிப் கட்டமைக்க விட்டது.

பட மூலாதாரம், Getty Images
இந்திய அணிக்கு தொடக்கத்திலேயே காத்திருந்த அதிர்ச்சி!
ஆமதாபாத்தில் இன்று நடக்கும் உலகக்கோப்பை இறுதி ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சைத் தேர்ந்தெடுத்தது.
ரோஹித் சர்மா, சுப்மான் கில் ஆட்டத்தைத் தொடங்கினர். இந்த தொடரின் மற்ற ஆட்டங்களில் ஆடியது போலவே ரோஹித் ஷர்மா அதிரடியாக தனது இன்னிங்ஸை தொடங்கினார். ஆனால், ஸ்டார்க் வீசிய 5வது ஓவரின் 2வது பந்தை மிட்-ஆன் திசையில் ஸம்பாவிடம் கேட்ச் கொடுத்து கில் 4 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றினார்.
ஆனால், மறுமுனையில் கேப்டன் ரோகித் சர்மா வழக்கம் போல் அதிரடியில் மிரட்டினார். இதனால், இந்திய அணி 6.3 ஓவர்களில் 39 பந்துகளில் 50 ரன்களை எட்டியது.
ஸ்டார்க் வீசிய 7வது ஓவரில் லென்த்தில் வீசப்பட்ட பந்தை கோலி பவுண்டரிக்கு விரட்டினார். 2வது பந்திலும் அவுட்சைட் ஆஃப்சைடில் வீசப்பந்தை கட் செய்து பவுண்டரிக்கு அனுப்பினார். ஸ்டார்க் வீசிய 3பந்தை மிட் ஆஃப் திசையில் தட்டிவிட்டு கோலி ஹாட்ரிக் பவுண்டரி விளாசினார். இந்திய அணி 7-வது ஓவரில் 50 ரன்களை எட்டியது.
மேக்ஸ்வெல் 10வது ஓவரை வீசினார். அந்த ஓவரின் 4வது பந்தை ரோகித் கவர் திசையில் அடித்த பந்தை ட்ராவிஸ் ஹெட் ஓடிச்சென்று கேட்ச் பிடித்தார். ரோகித் சர்மா 31 பந்துகளில் 47 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். 10 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 2 விக்கெட் இழப்புக்கு 76 ரன்கள் சேர்த்திருந்தது.
11வது ஓவரில் பேட் கம்மின்ஸ் துல்லியமாக வீசிய பந்தில் கேட்ச் கொடுத்து 4 ரன்களில் ஸ்ரேயாஸ் ஐயர் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தார். அதன்பின்பு கே எல் ராகுலும் விராத் கோலியும் நிதானமாக ஆடி பார்ட்னெர்ஷிப்பை கட்டமைத்தனர்.

பட மூலாதாரம், Getty Images
ஏமாற்றம் அளித்த சூர்யகுமார் யாதவ்!
விராட் கோலி 54 ரன்கள் அடித்திருந்த நிலையில் பேட் கம்மின்ஸ் வீசிய 29வது ஓவரில் விராட் கோலி இன்ஸைட் எட்ஜ் ஆகி ஆட்டமிழந்தார். அதன் பின்பு வந்த ஜடேஜா 6 ரன்களுக்கு அவுட்டானார். 41வது ஓவரில் மிட்சல் ஸ்டார்க் வீசிய பந்தில் கேஎல் ராகுல் 66 ரன்களுக்கு விக்கெட்டை பறிகொடுக்க இந்திய ரசிகர்களின் எதிர்பார்ப்பு சூர்யகுமார் யாதவ் மீது விழுந்தது.
அடுத்து வந்த பவுலர்களான ஷமி மற்றும் பும்ரா 6 மற்றும் 1 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். கடைசியில் இந்திய அணியின் ஸ்கோரை சூர்யகுமார் யாதவ் 250க்கு மேல் கொண்டுசெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது ஆனால் ஹேசில்வுட் வீசிய பந்தில் 18 ரன்களுக்கு அவுட்டானார்.
இறுதியில் இந்திய அணி இன்னிங்ஸின் கடைசி பந்தில் 240 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்த தொடரிலேயே இந்திய அணி ஆல் அவுட் ஆவது இதுதான் முதல் முறை.

பட மூலாதாரம், Getty Images
தொடக்கத்தில் நம்பிக்கை அளித்த இந்திய பவுலர்கள்
ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டேவிட் வார்னரும் ட்ராவிஸ் ஹெட்டும் களமிறங்கினர். அதிரடி ஃபார்மில் இருக்கும் முகமது ஷமியின் ஆதிக்கம் இந்தப் போட்டியிலும் ஆரம்பத்தில் வெளிப்பட்டது. டேவிட் வார்னரை முகமது ஷமி 7 ரன்களுக்கு ஆட்டமிழக்கச் செய்தார். அடுத்து வந்த மிட்சல் மார்ஷை பும்ரா 15 ரன்களுக்கு வெளியேற்றினார். அதற்கடுத்து வந்த ஸ்டீவ் ஸ்மித் பும்ராவிடம் 4 ரன்களுக்கு வீழ்ந்ததையடுத்து ஆஸ்திரேலிய அணி தடுமாறியது.
ஆனால், ட்ராவிஸ் ஹெட்டும் லபுஷானேவும் சேர்ந்து ஆஸ்திரேலிய அணியை நிலை நிறுத்தினர். சிறப்பாக விளையாடிய ட்ராவிஸ் ஹெட் 95 பந்துகளில் சதம் விளாசினார்.
இதனையடுத்து 4 விக்கெட்டுகள் மட்டுமே இழந்து 43 ஓவர்களில் ஆஸ்திரேலிய அணி இலக்கை எட்டி வெற்றி பெற்றது.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்